‘ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம்’ என்று தீர்த்தங்கரர் சிலைகளை காவல்கோட்டம் வர்ணிக்கிறது. அற்புதமான வரிகள். யானைமலையிலுள்ள சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகளுக்கும் இந்த வரி அழகாய் பொருந்தும். யானைமலை எண்பெருங்குன்றங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகிலுள்ள பெருங்குன்றங்களிலும் ஒன்று. யானைமலை பசுமைநடையின் போது அங்கிருந்த சமணக்குகைகளையும், சிற்பங்களையும், படுகைகளையும் போய் பார்த்தோம். நரசிங்கம் பெருமாள்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தோரணவாயிலைத்தாண்டி செல்லும் போது வலதுபக்கத்தில் சிறுகுன்றின் மீது சமணச்சிற்பங்களை இயற்கையாக அமைந்த குகைத்தளத்தின் முகப்பில் அமைத்துள்ளனர். அங்கு செல்வதற்கு படிகள் உள்ளன. வழக்கம்போல பராமரிப்பின்றி இந்த இடம் உள்ளது.
யானைமலையில் சமணம் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா சொல்லச்சொல்ல கேட்டு எல்லோரும் சமணப்பள்ளி மாணவர்களானோம். அந்தத் தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
யானைமலையில் முதலாம் நூற்றாண்டிலேயே சமணர்கள் தங்கியிருந்திருக்கின்றனர். மலையின் மேல் முகப்பிலுள்ள படுகையின் குகைமுகப்பில் ‘இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்’ என்ற பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. இவகுன்றம் என்று வடமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவம் என்றால் யானை என்று பொருள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மலை யானை போல் இருந்தது என்பதற்கு இந்தக் கல்வெட்டே சான்று. இங்குள்ள படுகைகளில் சமணமுனிவர்கள் தங்கி நோன்பிருந்துள்ளனர். யானைமலையில் சமணர்கள் இருந்ததை திருஞானசம்பந்தர் தன்னுடைய பதிகத்தில் பாடியிருக்கிறார். அக்காலத்தில் சமணர்கள் மதுரையில் சிறப்போடு இருந்துள்ளனர். பக்தி இயக்கத்தின் எழுச்சி சமணத்தை வலுவிழக்கச்செய்தது.
நரசிங்கப் பெருமாள் கோயில் செல்லும் வழியிலுள்ள இந்த குகைத்தளத்தில் உள்ள சமணச்சிற்பங்கள் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. குகைமுகப்பில் பல சிற்பங்கள் உள்ளன. தீர்த்தங்கரர் சிற்பங்கள், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகாயட்சி, மாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள சிற்பங்களில் மிக அழகாக வண்ணம் பூசி சித்திரங்களைத் தீட்டியுள்ளனர். இதே போன்று சித்தன்னவாசலிலும் அழகாக சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக்கதைகளை விளக்குகின்றன. பார்சுவநாதரின் சிலையைப் பார்க்கும் போது அவருக்கு மேலே தர்ணேந்திரன் என்பவன் ஐந்துதலைப்பாம்பாக மாறி குடைபிடித்துக்கொண்டிருக்கிறான். தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப்பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது. கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத்தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது. கமடன் பின் பணிந்து பார்சுவநாதரை வணங்குவது போலவும் அதே சிலையின் அடியில் வடித்துள்ளனர்.
பார்சுவநாதருக்கு அருகில் பாகுபலி சிலை காணப்படுகிறது. பாகுபலி ஆதிநாதரின் மகன். ஆதிநாதர் தீர்த்தங்கரர்களுள் ஒருவர். பாகுபலிக்கு இருபுறமும் நிற்பவர்கள் பிராமி மற்றும் சுந்தரி. இருவரும் பாகுபலியின் சகோதரிகள். பிராமியின் பெயரில்தான் கல்வெட்டுக்களுக்கு பிராமி எனப் பெயர் வந்தது.
மகாவீரரின் சிற்பத்தின் மீது வண்ணம் பூசி இருபுறமும் விளக்குகள் மற்றும் சாமரம் வீசுவோரின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்திரங்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் அழியாமல் உள்ளது. அதன் அருகில் அம்பிகா இயக்கியின் சிற்பம் காணப்படுகிறது. அம்பிகா இயக்கியின் கதையும், காரைக்கால் அம்மையாரின் கதையும் ஒன்று போலவே சொல்லப்படுகிறது. இறைபக்தி அதிகம் கொண்ட பெண்கள். கணவன் கொடுத்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை இறையடியாருக்கு கொடுத்துப் பின் கணவன் கேட்டதும் ஒன்றை தன் பக்தியின் வலிமையால் கொடுத்ததை கணவன் உணர்ந்து அவளை வணங்குவது. இந்தக் கதைகள் சைவசமயத்திலும், சமணசமயத்திலும் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.
இங்குள்ள சிலைகளை அச்சணந்தி என்ற அடியார் செய்ததாக குறிப்புள்ளது. இங்குள்ள வட்டெழுத்துக்கல்வெட்டுக்களில் ஒன்று இச்சிலைகளை பாதுகாக்கும் பொறுப்பை நரசிங்கத்து சபையாரிடம் விட்டிருந்ததை குறிப்பிடுகிறது. அந்தக் காலத்தில் சபையாராகயிருந்த பிராமணர்களே இதை பாதுகாக்க முன்வந்திருக்கிறார்கள். யானைமலை சமயநல்லிணக்க மலையாக இருந்து வருகிறது.
குகையின் வடக்கு பகுதியில் மேலிருந்த தீர்த்தங்கரர் சிற்பத்தை கீழிருந்து படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். இங்குள்ளதை போன்று நிறைய சிற்பங்கள் கீழ்குயில்குடி பேச்சிப்பள்ளத்தில் காணப்படுகிறது. அங்கும் இதுபோல சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
பசுமைநடை முடிந்ததும் சிலநண்பர்கள் மலைமீது ஏறலாம் என்றனர். நானும், சகோதரனும், பசுமைநடைக்கு வந்திருந்த என் பள்ளி நண்பனும், மற்ற நண்பர்களும் சேர்ந்து மொத்தம் ஏழு பேர் யானை மலைமீது ஏறத்திட்டமிட்டோம். நரசிங்கம் பிரிவில் வளைந்ததும் ஊரின் தொடக்கத்திலேயே ஒரு தெருவின் வழியாக சென்றால் மலை ஏறுவதற்கான பாதையைக் காணலாம். தெரு முகப்பிலேயே தொல்லியல்துறையால் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
மலை ஏறும் இடத்தில் அங்கு தங்கியிருந்த சமணமுனிவர்களின் பெயர்கள் மற்றும் அங்கு பொறிக்கப்பட்டுள்ள பிராமிக்கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த சிறுவன் நாங்கள் மலைமீது செருப்போடு ஏறுவதைப்பார்த்து ‘செருப்பு போட்டு ஏறக்கூடாது சாமிமலை’ என்றான். இவர்களைத்தான் நாளை காசுக்காகப் போராடுபவர்கள் என அரசு சொல்லும். யானைமலை மீது ஏறி மதுரையின் அழகை பார்த்தோம். தொலைவில் நான்குகோபுரங்களும், திருப்பரங்குன்ற மலை, நாகமலை, சமணமலை, அழகர்மலை, சிறுமலை எல்லாம் தெரிந்தது.
யானையின் துதிக்கை போன்ற பகுதியில்தான் ஏறினோம். அங்கிருந்து பார்க்கும் போது யானையின் காதுபோன்ற பாறை, அதில் யானைமுடி போல முளைத்திருந்த புற்கள், கண்போன்ற வளைவு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. சமணப்படுகையைப் பார்த்தோம். நிறையப்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. குகைமுகப்பில் தமிழ் பிராமிக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. படுகையினுள் புதிதாக சிவலிங்கத்தையும், சிறிய நந்தி சிலையும் வைத்திருக்கிறார்கள்.
எல்லோரும் அங்கு அமர்ந்தோம். மதுரையில் சமணம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.
பிறகு சற்று தள்ளி மேலேயுள்ள யானைக்கண்ணீர் ஊற்று என்ற இடத்திற்கு செல்வோம் என்றனர். எனக்கு பார்க்க ஆசை என்றாலும் பயம். உடன்வந்த நண்பர்கள் நம்பிக்கையூட்ட மெல்ல அந்த இடத்திற்கு சென்றேன்.
அற்புதமான இடம். யானையின் கண் போன்ற இடத்தில் அமைந்துள்ளது. சமமான இடம். அங்கு அமர்ந்திருந்த போது சிலுசிலுவென அடித்த காற்று மேனியை சிலிர்க்கச்செய்தது. சிறிய குகையொன்றில் தண்ணீர் ஊற்று உள்ளது. யானைமலை இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. யானைமலையைச் சுற்றி நிறைய குளங்கள், கண்மாய்கள் உள்ளன. இங்கெல்லாம் வந்து தங்கிய சமணர்களை வாழ்த்தினோம். பிறகு மெல்ல கவனமாக இறங்கி வந்தோம். அற்புதமான பயணமும், புதிய நட்பும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
தொடர்புடைய பிற பதிவுகள்:




அன்பின் சித்திர வீதிக்கார, பசுமை நடை – நன்கு செல்கிறது – சாந்தலிங்கம் கூறியதௌ மனதில் உள் வாங்கி அழகாகப் பதிவிட்டது நன்று. ஆயிரம் / இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றியயானை மலையும் – சமணர்கள் அங்கு வாழ்ந்ததும் – பராமரிப்பினிறி இப்பொழுது இருப்பதும் குறிப்பிட்டமை நன்று. காவல் கோட்டத்தில் இருந்து எடுத்துக்காட்டியமை ந்ன்று. வட்டெழுத்துக் கல்வெட்டினைப் படித்து – இங்கு எழுதியமை நன்று. அங்கு கண்ட ஒவ்வொரு சிற்பத்திற்கும் விளக்கம் எழுதியமை நன்று. சைவ சமண மதத்தில் பொதுவான கதைகள் – நரசிங்கத்து சபையார்களான பிராமானர்கள் மலையைக் காத்தது பற்றிக் குறிப்பிட்டிருப்பதும் நன்று. சாமி மலையில் செருப்புப் போட்டு ஏறக்கூடாது – அங்குள்ள மக்கலீன் பக்தி பாராட்டுக்குரியது. மலையின் மீதிருந்து மதுரையின் அழகினை இரசித்தது பாராட்டுக்குரியது. துதிக்கை – காது – அதில் முடி – கண்னில் ப்ட்டதை எல்லாம் மனதில் உள்வாங்கி எழுத்தில் வடித்தமை நன்று. யானைக்கண்ணூற்று அப்பகுதி மக்களூக்கு நீராதரமாக விளங்குவது குறிப்பிடத்தக்க ஒன்று. – அற்புதமான பயணம் – புதிய நட்பு – நேரத்தினை மகிழ்வுடன் – ஒரு நோக்கத்துடன் – கழித்ததற்குப் பாராட்டுகள் – அமைப்பாளர்களுக்கு நன்றி – நல்வாழ்த்துகள் சுந்தர் – நட்புடன் சீனா
நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! படங்கள் அருமை !
super… maduraikku pokugum pothu partha malai…
http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi
//யானையின் துதிக்கை போன்ற பகுதியில்…யானையின் காதுபோன்ற பாறை… யானைமுடி போல முளைத்திருந்த புற்கள், கண்போன்ற வளைவு…//
யானைச்சாணமும் இருப்பதாகக் கேள்விப்பட்ட நினைவு?!
பரவாயில்லை, மேலிருந்து பார்க்கும்போது மதுரை நகரம்போலவே தெரிகிறது!?
இந்த மலைக்கு பக்கத்தில் சடைச்சி அம்மன் கோயிலில் படை, சொறி, தேமலுக்கு மந்திரிக்கிறார்கள். உச்சந்தலையில் பிரம்பை வைத்து பின்னிஎடுத்துவிட்டார்கள். இந்த வைத்தியத்தை சிற்ப நகர அமைப்புப் படைக்கு பரிந்துரைக்கிறேன்.
மிக அருமையாக உள்ளது.
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
சுவாரசியமான கட்டுரை. சரித்திர ஆழம் கொஞ்சம் அசர வைக்கிறது. எதையும் அறியாமலே இருந்திருப்பேன் – படிக்காதிருந்தால்.
தொடர்கிறேன்.
படங்களும் பிரமாதம்.
சீனா ஜயா வழங்கிய பாராடுரைகளுக்கு மேல் என்னகூ றுவது? அருமையான, ஆர்வத்தைத் தூண்டும் பதிவு மிகவும் சிரத்தையுடன் கொடுக்கப் பட்டுள்ளது.
அள்ளிப் பருக என்ன தடை? வாழ்த்துக்கள்.நண்பரே