சமணம் குறித்து மயிலை.சீனி.வே எழுதிய ‘சமணமும் தமிழும்’ நூலின் முன்னுரையை கீழே காண்போம்.
‘சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ஊழ் இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!.
பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்? என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள் காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக்குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். இப்படிக்கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக்குன்றத்தில் இருப்பது புத்தர்கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்கு சமண சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரியவில்லையென்றால், பாமர மக்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லையே.
முற்காலத்திலே, ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டில் தலைசிறந்திருந்த சமண சமயம் இப்போது மறக்கப்பட்டுவிட்டது. சமண சமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின் மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதி முடிக்க வேண்டும் என்னவென்றால், தமிழ் நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமண சமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டு போல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டிருந்தது, தமிழ் மொழியை வளப்படுத்திய சமண சமய வரலாற்றை எழுத வேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந்நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு.ச.த.சற்குணர் அவர்கள் ஆவர். அப்பெரியாரின் ஆன்மா சாந்தியுறுவதாக.
வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று. ஒவ்வொன்றையும் துருவித்துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுத வேண்டும். அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காணவேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காண வேண்டும். இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும். வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டிய வரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, ஊழ் இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூற விரும்பவில்லை. ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமரர்களைப் பற்றியும் படியாத பணக்காரர்களைப் பற்றியும் கூறவில்லை நான். கல்லாத பேர்களே நல்லவர்கள். கல்வித் துறையிலே மிகவுயர்ந்த நிலைபெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லையென்றால், இந்நூல்களை ஏன் எழுத வேண்டும், ஏன் வெளிப்படுத்த வேண்டும்?
பத்து ஆண்டுகள் கடந்தன. இந்நூல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப் பற்றிக் கேட்டார்கள். இலங்கையிலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம், வெளிவரும், வெளிவரும் என்று கூறினேனேயல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.
உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெளியிடுமாறு வற்புறுத்தினார்கள். கிருஸ்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும் எழுதியது தமிழ்நாட்டின் சமய வரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அது போலவே, சமணமும் தமிழும் வெளிவர வேண்டும். அது மட்டுமன்று. இஸ்லாமும் தமிழும், இந்து மதமும் தமிழும் என்னும் நூல்களையும் எழுத வேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன். அந்தோ நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைத்துவிட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப் போயிற்று. மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப்பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில் தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப்பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.
வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறு சிறு ஓய்வுக்காலத்தைப் பயன்படுத்தி இந்நூல் எழுதி முடிக்கப் பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங்களைந்து குணங்கொள்வராக.
இந்நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ்வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இந்நூலின் பின்னிணைப்பில் சேர்த்துள்ள ‘’சமண சமயப் புகழ்பாக்கள்’’ பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை உரைகள் மேற்கோள் காட்டப்பட்டவை.
பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந்நூல் இப்போது முதன்முதலாக வெளிப்படுகின்றது. இந்நூல் வெளிவருவதற்குக் காரணராயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியதாகும்.
மலரகம், மயிலாப்பூர் மயிலை.சீனி.வேங்கடசாமி
சென்னை, 1-11-54
சமணமும் தமிழும் நூல் செண்பகா பதிப்பகம் வெளியீடாக தற்போது வந்துள்ளது. விலை.75 ரூபாய். இந்நூல் குறித்து மேலும் மதுரையில் சமணம் பகுதியில் இன்னொரு பதிவில் காண்போம். இருபதாம் நூற்றாண்டின் தமிழின் முக்கிய அறிஞர்களுள் மயிலை.சீனி.வேங்கடசாமியும் ஒருவர். இவரது படைப்புகளை வாங்கி வாசியுங்கள்.
“தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”
-பாவேந்தர் பாரதிதாசன் (தமிழ் நிலம் – 14.10.1952)
இக்கவிதையிலிருந்து மயிலை.சீனி.வேங்கடத்தின் பெருமையை அறியலாம்.
தொ. பரமசிவனைப் பற்றி இணையத்தில் தேடியபோதுதான் தற்செயலாக உங்கள் தளத்துக்கு வந்து சேர்ந்தேன். மிகவும் பயனுள்ள தகவல்களாக நிறைத்து உள்ளீர்கள், நன்றிகள்.
[…] இது இப்போது உருவாகியிருக்கும் ஒரு விஷயமல்ல. ஐம்பதாண்டுக்கால தமிழ் இலக்கிய வரலாற்றை, ஆராய்ச்சி வரலாற்றை எடுத்துப்பார்த்தால் தெரியும். இங்கே ஐந்துபேர் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். ஐம்பதுபேர் அவர்களை வசைபாடிக்கொண்டே இருப்பார்கள். ஆகமொத்தம் ‘பண்பாட்டு’ச்சூழலில் ஐம்பத்தைந்துபேர் ‘செயல்பட்டு’க்கொண்டிருப்பார்கள் என்பது கணக்கு. சமீபத்தில் தமிழின் தலைசிறந்த ஆய்வாளரான மயிலை சீனி வெங்கடசாமி இதைப்பற்றி எழுதியிருந்த ஒரு பழைய கட்டுரையை வாசித்தேன். […]
நல்ல கட்டுரை நன்றி!
அன்பின் சித்திர வீதிக்க்கார – அருமையான தகவல் பகிர்வினிற்கு நன்றி – புத்தகம் மதுரையில் கிடைக்கிறதா ? நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
அறிஞர்களின் தகவல்களைத் தேடுவோருக்கு மிகவும் உதவிகரமான பக்கம்..! பாராட்டுக்கள்..!