சிறுதெய்வங்களை சுலபத்தில்
வசியப்படுத்தி விடலாம்.
பெருந்தெய்வங்கள் தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது
நாட்டுப்புறத்தெய்வங்கள் எளிமையானவை. நம்மை போலவே இருப்பதால் இன்னும் நெருக்கமானவையும் கூட. முனி என்றாலே அச்சம் தரும் சாமியாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், முறுக்கிய மீசையும், சடாமுடியும் நம்மைப் பிடித்த அச்சம் போக்கும்.
பாண்டிமுனி, சண்டிமுனி, சடாமுனி, மொட்டகோபுரமுனி, அலங்காநல்லூர் முனி என எல்லா முனியும் மக்களின் தெய்வமாக நம்மைக் காக்க முன் நிற்கிறார்கள். அவர் முன் போய் நாம் நின்றால் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.
கோபுரம், கோட்டை, கொத்தளம், கண்மாய்க்கரை, வயல்வெளி என எல்லா இடங்களிலும் மக்களைக் காக்கும் காவல் தெய்வமாக முனி இருக்கிறார்.
இந்திரா சௌந்திரராஜனின் நாவலொன்றில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் முனிப்பாட்டு கொஞ்சம் கொஞ்சமாக இருந்ததை மொத்தமாக தொகுத்துள்ளேன். இந்திரா சௌந்திரராஜனுக்கு நன்றிகள் பல. அவர் மதுரைக்காரர் என்பது கூடுதல் பெருமையும் கூட.
நான் நாடறிஞ்ச சாமி; குடிசை வீடறிஞ்ச சாமி…
மனசார நினைப்பதே – எனக்கான மந்திரம்!
நான் காவக்கார சாமி
ரொம்ப கோவக்கார சாமி
கும்புட்டு நின்னாக்கா
கூடவே துணையிருப்பேன்
எம்புட்டு பெரியவனும்
எதிர்த்தாக்கா தலை எடுப்பேன்!
நடுச்சாமம் என் நேரம்!
வெள்ளக் குதிர – என் வாகனம்
ஒரு பாட்டில் சாராயம்
ஒருகட்டு பெரும் சுருட்டு
இதெல்லாம் எனக்கு சாதாரணம்!
மாடு கட்டி போரடிச்சு
மஞ்ச நெல்ல குவிச்சு வெச்சு
கூடி நின்னு குலவை போட்டு
காடு கரை வாழும் கூட்டம்
தேடி வரும் சாமி நான்; யாரும்
வாடிப்போக விட மாட்டேன்!
மாடுகன்னு மஞ்சக்காணி
காடுகரை கட்டாந்தரை ஏதுமின்றி
ஓட்டுவீடு உடைஞ்ச பானை
கட்டுச்சோறு கடனுக்குக் காசுன்னு
விதிகெட்ட மனுசனுக்கும்
கதிமோட்சம் தருவேன் நான்!
துண்ணூறே பிரசாதம்
எலுமிச்சை என் வாசம்
அருவாளே ஆயுதம்
கரிச்சோறே என் விருந்து!
எனக்குன்னு மந்திரமில்ல
எனக்குன்னு யந்திரமில்ல
தனக்குன்னு ஒருத்தன்
தாள் பணிஞ்சிட்டா அதுதான்
என் கணக்குன்னு நினைப்பேன்!
முட்டமுளி எனக்கு
கெட்டவன் தான் கணக்கு!
பட்டம் போல பறந்தே
பார்ப்பதும் என் வழக்கம்!
வேலைப் போல கூர்மை – என் பார்வை!
தேளைப் போல தப்புக்கு தருவேன் – ஒரு தீர்வை!
சோலைப்பூ போல மனசிருந்தா
வாலாட்டி நாயா காவ இருப்பேன்!
ஆடு கோழி பலி கொடுத்து
பாடுபட்டு படையல் போட்டு
கூடி ஜனம் பொங்க வைக்க
நாடி வந்து நிக்கும் நான்
கேடுன்னா விடமாட்டேன்!
கோபுரமில்ல – கூரையுமில்ல
என் உருவமே கோபுரம்
ஏழையில்ல பணக்காரனில்ல
முனியாண்டி உங்கள் மனதிலும் வந்து குடியேறியிருப்பார் என நம்புகிறேன். மொட்டகோபுரமுனிக்கு முன்பதிவு இந்தப் பதிவு. பதிவுகளில் உள்ள படங்களில் மதுரையைக் காக்கும் முனி வீற்றிருக்கிறார்.
ஆஹா… அருமையான பதிவு… படங்கள் சூப்பர்…
பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…
சுவாரசியமான முனிப்பாட்டு.
பாட்டில் சாராயம், சுருட்டு – முனி முன்னூறு ஆண்டுகட்குட்பட்டவர்.