பத்மஸ்ரீ விருது வாங்கச் சென்று திரும்பிய தனது அனுபவம் பற்றி ஓவியர் மனோகர் தேவதாஸ் சாந்தோம் தென்னிந்திய திருச்சபை தேவாலய செய்திமடல் ஒன்றில் எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து சகோதரர் அனுப்பியிருந்தார். நன்றியுணர்வு, மனநிறைவு, தந்தைமை, நெகிழ்ச்சி போன்றவை வெற்றுவார்த்தைகளல்ல, இன்றும் பொருளுள்ளவை என்று தோன்றச் செய்யும் கட்டுரை என்பதால் மனோகர் தேவதாஸ் அவர்களுக்குப் பிரியாவிடை தரும் இந்த தருணத்தில் பதிவேற்றுகிறேன்:
பத்மஸ்ரீ விருது பெற்ற அனுபவம் – மனோகர் தேவதாஸ்
எனக்கு 2020 ஜனவரியில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. விருதளிப்பு விழா ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருந்தது. மார்ச் மாத மத்தியில் மடகாஸ்கரிலிருந்து சுஜா மெட்ராசுக்கு (சென்னைக்கு) வந்தாள். அவள் வந்த மூன்று நாட்களில் பெருந்தொற்று காரணமாக விழாவை அரசு காலவரையின்றி ஒத்திவைத்தது.
2021 அக்டோபர் மத்தியில் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. நவம்பர் 8-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முறைப்படி விருதை வழங்குவார் என்று கண்டிருந்தது. எனக்கும் உடன் வருபவருக்கும் விமானக் கட்டணம் திருப்பியளிக்கப்படும். ஓட்டல் அசோக்கில் நவம்பர் ஏழாந்தேதி பிற்பகலில் இருந்து ஒன்பதாந்தேதி முற்பகல் முடிய நாங்கள் சேர்ந்து தங்கிக்கொள்ளலாம். கைச்செலவுக்கும் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அக்கடிதம் சொன்னது.
என் உடன் வந்தது இளம் கட்டிடக்கலைஞனான முகிலன். முந்தைய நாள் விடிய விடிய மழைகொட்டியது. எனவே விமான நிலையத்திற்கு சற்று முன்னதாகவே போய்விடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். மழை சட்டென்று வெறித்துவிட்டதால் விமானத்தில் ஏறும் நேரத்துக்கு மூன்று மணிநேரம் முன்னதாகவே போய்ச்சேர்ந்துவிட்டோம். மீண்டும் மழைகொட்டத் தொடங்கியதால் விமானம் தாமதமாக வந்தது. மாலை ஆறுமணிவாக்கில் தில்லியில் ஓட்டலை அடைந்தோம். அசதியூட்டுகிற பயணம் என்றாலும் இயல்புபோலவே இருந்தேன்.
அமைச்சகத்தில் தொடர்புடைய மூன்று அலுவலர்களில் ஒருவரான பத்மா என்ற தமிழருடன் விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தொடர்பில் இருந்தேன். அவர் தமது இரு நண்பர்களுடன் எனது அறைக்கே வந்து பார்த்தது மகிழ்ச்சி அளித்தது. ஒன்றாம் வகுப்பில் இருந்து சுஜாவுடன் கூடப்படித்த ஜனகா எனக்கு மயில் பச்சை நிறத்தில் ஒரு குர்தாவைப் பரிசளித்தார். ஒரு மாதம் முன்பு SCILET பிரெமிளா பரிசாகக் கொடுத்திருந்த பட்டு வேட்டியோடு இந்தக் குர்தாவை அணிந்துகொண்டேன்.
விருது வழங்கும் நாளில் 2.30 மணிக்கு ஒத்திகையும் அதைத் தொடர்ந்து முறையான வைபவமும் குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடந்தேறின. முகிலனுக்கு அழைப்பு இருந்தாலும் குடியரசுத் தலைவரிடம் என்னைக் கூட்டிச் செல்ல அனுமதி இல்லை. ஒரு ராணுவ வீரரே என்னை அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் முகிலன் உடன்வந்த பிறருடன் அமர்ந்திருந்தார். குடியரசுத் தலைவர்க்கு ‘நமஸ்கார்’தான் செய்யவேண்டுமேயொழிய கைகுலுக்கக் கூடாது என்று விருதுபெறுபவர்களிடம் வலியுறுத்திச் சொல்லப்பட்டது. எனது முறை வந்தது. பார்வையாளர்கள் சற்று கூடுதல் உற்சாகத்துடன் கைதட்டியதாக முகிலன் சொன்னார். விருது வாங்க எந்தப் பக்கம் திரும்பவேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் எனக்குச் சொல்லவேண்டியிருந்தது. நிழற்படம் எடுக்கப்பட்டது. அவர் ‘எக்ஸலண்ட்’ என்று சொன்னார். பின் கை குலுக்கியபடி ‘காட் பிளஸ் யூ’ என்றார்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு பிரம்மாண்டமான அரங்கொன்றில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பிரதமர் என்னிடம் வந்தார். என்னிடம் உற்சாகமாகக் கைகுலுக்கி மதுரை பற்றிய எனது நூல் நாட்டுக்கு ஒரு கொடை என்று சொன்னார். திருமதி நிர்மலா சீதாராமன் நுட்பமான எனது கோட்டோவியங்கள் அவரது மாமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டன என்றார். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அவர் பிறரையும் சந்திக்கவேண்டியிருந்ததால் விடைபெற்றார். பிறகு குடியரசுத் தலைவர் எனக்கு கைகொடுத்தார். எங்கள் முதலமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது எனது புத்தகத்தைத்தான் கொடுத்தார் என்று சொல்லத் துவங்கினேன். “ஆம், அந்தச் சிறந்த புத்தகத்தை திரு ஸ்டாலின் எனக்குக் கொடுத்தார்” என்று உடனே சொன்னார். விருதுபெற்ற வேறு சிலரையும் சந்தித்தேன்.
சென்னையில் கனமழை பொழிந்துகொண்டிருந்ததால் திரும்பி வரும் விமானம் தாமதாகலாம் என்று பயந்துகொண்டிருந்தேன். ஆனால் சரியான நேரத்தில் மழை நின்றது. பயணம் சௌகர்யமாகவே இருந்தது.
தில்லியில் நாங்கள் காலை 8.15 மணிக்கெல்லாம் ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்துவிட்டோம். விமானத்தில் ஏறிய முதல் ஆட்கள் நானும் முகிலனும்தான். விமானத்தின் கதவருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி தன்னை துணை விமானி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு பெண் இந்த விமானத்தைச் செலுத்தவிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னேன். ரோசி என்ற விமான பணிப்பெண் என்னைப் பற்றி நிறையத் தெரிந்துவைத்திருந்தார். கொஞ்ச நேரத்திலேயே என்னை ‘மனோகர் அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானி டி’சில்வா – அவர் ஒரு தமிழர் – ஒரு அறிவிப்பைச் செய்தார். “ ஓவியரும், எழுத்தாளரும், இசைக்கலைஞரும், அறிவியலாளரும், இன்ன பிறவுமான திரு மனோகர் தேவதாஸ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டு நம்முடன் இவ்விமானத்தில் ஊர்திரும்புகிறார் ” என்றார். நான் எழுந்து நின்றேன். பயணிகள் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் கூச்சமாகவும் உணர்ந்தேன். 2020-இல் விருது அறிவிக்கப்பட்டபோது தி இந்து நாளிதழில் ஃபேபியோலா எழுதியிருந்த கட்டுரையின் அறிமுக வரிகளைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். முகிலனும் நானும்தான் முதல் ஆளாக வெளியேறி ஏரோபிரிட்ஜில் கால்வைத்தோம். விமானிகள் இருவரும் நேரில் வந்து வாழ்த்தி விடைதந்தார்கள்.
மாலை 4.30 மணிவாக்கில் வீடுதிரும்பினோம். பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பும் என்னை வரவேற்குமுகமாக தமிழ்த் திரைப்படப் பாடல் சரணம் ஒன்றை சற்றே மாற்றிப்பாடி எனது உதவியாளரான கிரேஸ் வரவேற்றார்.
பாதுகாப்பான பயணத்திற்காகவும், அற்புதமான இந்த அனுபவத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி.
-மனோ
நன்றி: EānMé (December 2021), CSI St. Thomas English Church, Santhome, Chennai