கலை வழி வாழ்வு: சி.மோகன் 70

Posted: ஜனவரி 3, 2023 in பார்வைகள், பகிர்வுகள்

கலை விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சி.மோகனின் 70வது பிறந்தநாளையொட்டி ஒரு விழா எடுத்து அவருக்கு பணமுடிப்பு வழங்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. சி.மோகனின் படைப்புகளை வாசித்திருந்த வேளையில் அவரை சந்திக்க வேண்டும், இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஒருநாள் சி.மோகன் அவர்கள் அலைபேசியில் அழைத்து அவரது கட்டுரைத் தொகுப்புகள் குறித்து பேசுமாறு கேட்டார். இதுபோன்ற நிகழ்வுகளில் பேசிப் பழக்கமில்லை என்று தயக்கத்துடன் கூற தைரியமாகப் பேசுங்கள் என்று சொன்னார்.

சி.மோகனின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்த அண்ணனிடம் எனக்கு கிட்டிய வாய்ப்பைச் சொன்னேன். சி.மோகனின் கட்டுரைகள் குறித்து பேசுவதற்கான உரையைத் தயாரிக்க சில யோசனைகள் சொன்னார். ஏற்கனவே வாசித்து எழுதிய குறிப்புகளை வைத்து, மீண்டுமொருமுறை வாசித்து ஒரு உரையைத் தயார் செய்தேன். சி.மோகனின் எழுத்துக்கள் மிகவும் செறிவானவை. அவற்றை நம் விருப்பம்போல் சுருக்கியோ, வேறுவிதமாகத் தொகுத்தோ பேசுவது கடினமான விசயம்.

டிசம்பர் 17 அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்குப் போய் முகலிவாக்கம் பகுதியிலுள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து புறப்பட்டு மைலாப்பூர் சென்றேன். கபாலீஸ்வரரை வணங்கினேன். அங்கிருந்து கவிக்கோ மன்றம் செல்ல கூகுள் மேப்பில் தேடி லஸ் சர்ச் ரோடு செல்வதற்கு பதிலாக மாறி வேறு வழியில் சென்றேன். அதுவும் நல்லதிற்குத்தான். எனக்குப் பிடித்த மனோகர் தேவதாஸ் வாழ்ந்த சாந்தோம் சர்ச் பகுதியை அடைந்தேன். அங்கு சென்று இயேசுநாதரை வணங்கினேன். பின் வந்தபாதையிலேயே திரும்பி சரியான பாதையை அடைந்தேன்.

கவிக்கோ மன்றத்தில் எனக்கு முன்னதாக வந்திருந்த எழுத்தாளர் காலபைரவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லத்துரையும், டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பனும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சி.மோகன் அவர்களை முதன்முதலாக நேரில் பார்த்தேன். அன்பாக அரவணைத்துக் கொண்டார். மதுரையிலிருந்து நந்தசிவம் புகழேந்தி வந்திருந்தார். நிறைய நண்பர்களைப் பார்க்க முடிந்தது. நிகழ்விற்கு சென்னையிலுள்ள இன்னொரு அண்ணன் குடும்பத்தோடு வந்திருந்தார்.

கருத்தரங்கம், வாழ்த்துரைகள், பணமுடிப்பு வழங்குதல், சிறப்புரை, ஏற்புரை என விழா திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெற்றது. சி.மோகனின் கட்டுரைகள் குறித்து நான் தயார் செய்து வைத்திருந்த உரையைப் பார்த்து கொஞ்சம் வாசித்தும், கொஞ்சம் பேசியும் முடித்தேன்.

அங்கிகரீக்கப்படாத கனவின் வலி என்ற நேர்காணல்கள் தொகுப்பும், சி.மோகனின் படைப்புகள் (நாவல்கள்-சிறுகதைகள்) தொகுப்பும் வெளியிடப்பட்டது.

தன் வாசகனை மேடையேற்றி அழகு பார்த்த சி.மோகனுக்கும், விழாவிற்கு வருவதாக சொன்ன பொழுதே எனக்காகப் பயணச் சீட்டை முன்பதிவு செய்த சகோதரர் தமிழ்செல்வத்திற்கும், நிகழ்விற்கு குடும்பத்தோடு வந்த சகோதரர் பழனிக்குமாருக்கும், மதுரையிலிருந்து வந்திருந்த நந்தசிவம் புகழேந்திக்கும், ஷ்ருதி டிவி சுரேஷ் அவர்களுக்கும், விழா முடிந்ததும் ரயில்நிலையத்தில் கொண்டுவந்து சேர்த்த தோழர் முத்துவிற்கும் நன்றி! நன்றி! நன்றி!

படங்கள் உதவி : நந்தசிவம் புகழேந்தி, சரவணன், ஈஸ்வர் (ஒளிப்படக்காதலன்)

பின்னூட்டமொன்றை இடுக