பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ – அ.கா.பெருமாள்

Posted: மார்ச் 5, 2023 in பார்வைகள், பகிர்வுகள்

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை ‘பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ’ என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுவையான பல்வேறு ஆய்வுச் செய்திகள் அடங்கிய நூல் இது.

கோபுரத்திலிருந்து குதித்தவர்கள்

கோவில் கோபுரங்களில் ஏறி உயிர்துறந்தவர்களைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுக்கள் வாயிலாக கிடைக்கின்றன. திருப்பரங்குன்றம், திருவரங்கம் கோவிலைக் காக்க கோபுரமேறி உயிரை விட்டவர்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல சாமி தூக்குபவர்களான ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் மீது வரி விதித்ததை எதிர்த்து மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் ஏறி உயிர்துறந்தவர், கொதிக்கும் நெய்யில் கைவிடும் சோதனையை எதிர்த்து சுசீந்திரத்தில் உயிர்துறந்தவரைப் பற்றிய குறிப்புகளும் கிடைத்துள்ளன. தலைவனுக்காக உயிர்நீத்தவர்களைக் குறித்தும் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

பெண் தெய்வங்கள்

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெண்தெய்வங்கள் உள்ளன. அவற்றின் கதைகளை ஆராய்ந்தால் ஆணவக்கொலைக்கு பழியான பெண்கள், உடன்கட்டை ஏறிய (ஏற்றப்பட்ட) பெண்கள் என சில ஒற்றுமைகளைக் காணலாம். அ.கா.பெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் களஆய்வு வாயிலாக முன்னூற்றுக்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் பெயர்களைச் சேகரித்திருக்கிறார்.

கணவன் இறந்தபோது அவனது மனைவியர்களையும் உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கம் இந்தியா முழுவதிலும் இருந்திருக்கிறது. விதவையான பெண்களுக்கு இச்சமூகத்தில் மதிப்பு இல்லாத காரணத்தால் உடன்கட்டை ஏறுவதே மேல் என பூதப்பாண்டியன் மனைவி பாடிய சங்கப்பாடலை சான்றாகச் சொல்லலாம். வில்லியம் பெண்டிங் பிரபு 1829இல் இக்கொடிய பழக்கத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவந்தும் அது முற்றிலுமாக அகல பல காலம் எடுத்தது. நாம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்த இக்கொடுமை குறித்து விரிவாக பல கதைப்பாடல்கள், நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விரிவாக எழுதியிருக்கிறார் அ.கா.பெருமாள்.

பழமரபுக் கதைகள்

நம்முடைய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பழமரபுக் கதைகள் பாடல்களில் ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சிவன், திருமால், அகலிகை, மன்மதன் பற்றிய கதைகள் இருந்தாலும் அவை தமிழகத்திலிருந்த வாய்மொழி கூறுகளுடன் இணைந்தவை. முருகன் வள்ளி கதைகள், கண்ணன் நப்பின்னை கதைகளை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம் என எடுத்துரைக்கிறார் அ.கா.பெருமாள்.

பீமனைக் கொல்ல காந்தாரி எடுத்த முயற்சிகளை வைத்து ‘நெட்டூரி காந்தாரி’ என கன்னியாகுமரிப் பகுதியில் சொல்லப்படும் கதையை பதிவு செய்திருக்கிறார்.

கண்ணகியின் கதை

கேரளத்தில் வழிபடப்படும் பகவதியம்மன் வழிபாடு சிலப்பதிகார கண்ணகியின் வழிபாட்டின் நீட்சியே என்பதை கொடுங்கோளூர் பகவதியம்மன் கோவில் வழிபாட்டில் கண்ணகி வழிபாட்டை வெளிப்படையாகவே காண முடியும் என்றும், ஆற்றுக்கால் பகவதி தொடங்கி கேரளத்தில் வணங்கப்படும் பகவதியம்மன் வழிபாடு கண்ணகி வழிபாடு என்பதை மூத்த மலையாள அறிஞர்கள் ஏற்கத் தயங்கவில்லை என்றும் கூறுகிறார் அ.கா.பெருமாள்.

அகத்திய முனி

அகத்தியன் குறித்த கதைகள் ஏராளம். தமிழ்த்திரைப்படங்கள் வாயிலாகவும் அவர் தமிழ் முனி, சைவ முனி போன்ற தோற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மணிமேகலை நூல்தான் அகத்தியன் குறித்த புராணக்கதைகளை முதலில் கூறுகிறது. பின்னால் சேக்கிழார் அகத்தியர்தான் காவிரியைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தார் போன்ற கதைகளை எழுதினார். தமிழ் பண்பாட்டோடு அகத்தியன் குறித்த கதைகளும் நிறைய கலந்துவிட்டன.

நிகழ்த்துகலை

மக்கள் கூடியிருந்த தருணங்களில் நிகழ்த்தப்பட்ட ஆட்டத்தில் ஆண்களும் பெண்களும் பங்குகொண்டனர். பண்டைய இலக்கியங்களில் ஆட்டம் குறித்த செய்திகள் குறைவாகவும், அதில் பெண்கள் பங்கேற்ற செய்திகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து, வெறியாட்டு, போன்ற கூத்துக்களை பெண்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். இன்று கயிற்றில் மீது ஆடும் ஆட்டம் தமிழர்களிடம் முன்பிருந்திருக்கிறது என்பதை அ.கா.பெருமாள் சங்கப்பாடல் வழியாக எடுத்துரைக்கிறார். பழந்தமிழர் கலைகள் குறித்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இரட்டை காப்பியங்கள் ஆகிய நூல்களில் நிகழ்த்துகலைகள் குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற கதைகள் நிகழ்த்தப்படும்போது நிலைத்த பனுவல் இடத்திற்கேற்ப மாறுபடுவதைக் குறிப்பிடுகிறார்.

அ.கா.பெருமாள் எழுதிய இந்நூலிலுள்ள கட்டுரைகளை வாசிக்கையில் நம்முடைய மரபு, தொன்மம், கலைகள், கதைகள், சங்கப்பாடல்கள், வாய்மொழி மரபுகள், நாட்டார் தெய்வங்கள், கல்வெட்டுச் சான்றுகள் என பலவிசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s