பிறர்க்கென முயலுநர் – அ.முத்துக்கிருஷ்ணன் 50

Posted: மார்ச் 16, 2023 in பார்வைகள், பகிர்வுகள்

எழுத்து வழியாக அறிந்த பலரை நேரில் காணும் வாய்ப்புகள் தந்தது மதுரைப் புத்தகத்திருவிழா. அதில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுடனான சந்திப்பு என் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு நாவல்கள், சிறந்த நூறு புத்தகங்கள் பட்டியலை சகோதரரின் உதவியுடன் ஆயிரம் பிரதிகள் எடுத்து மதுரை புத்தகத் திருவிழாவில் வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பட்டியலை வாங்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், என்னிடம் அவரது அலைபேசி எண்ணையும் வழங்கினார்.

புத்தகத் திருவிழா நிறைவடைந்த பிறகு நூலகத்தில் உயிர்மை மாத இதழில் பசுமை நடை குறித்த தகவலை பார்த்தேன். முத்துக்கிருஷ்ணனோடு அலைபேசி வழியாகப் பேசலாம் என்றால் உள்ளுக்குள் எப்போதும்போல ஒரு தயக்கம். நகருக்குள் சென்று பேசலாம் என நினைத்தேன். டவுன்ஹால்ரோடு பிரேமவிலாஸ் அருகே நண்பருக்காக காத்திருந்த வேளையில் பேசலாமா என்று யோசித்தேன். வாகன இரைச்சலில் சரியாகப் பேசமுடியாதோ என யோசித்து சித்திரை வீதிப்பக்கம் சென்று பேசலாம் என தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.

நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கருகில் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் குரல் அங்கு ஒலிப்பதுபோல தோன்ற திரும்பிப் பார்த்தால் அவர் நண்பர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு நானும் பசுமை நடையில் இணைவது குறித்து பேசினேன். எனது எண்ணை வாங்கிக்கொண்டு குறுந்தகவலும் அனுப்பினார். அதன்பின் நவம்பர் 14, 2010ல் சமணமலையில் பசுமை நடை என்ற தகவலும் அவரது எண்ணிலிருந்து வந்தது. அதே சமயத்தில்தான் மதுரை வாசகன் வலைப்பூவும் அக்டோபர் 23ல் சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் உதவியுடன் தொடங்கினேன். பசுமை நடையில் இணைந்ததையும் வலைப்பதிவு எழுதத் தொடங்கியதையும் 2010இல் என் வாழ்வில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளாக பார்க்கிறேன்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அறிவுப்புலங்கள் மட்டுமே சொந்தமென வைத்திருந்த வரலாறு, தொல்லியலை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனையே சேரும். ஒவ்வொரு நடையும் தொடங்கியதிலிருந்து, முடியும்வரை எல்லோரையும் வழிநடத்துவார். காலை உணவை பசுமைநடைக்கு வந்தவர்களுக்கெல்லாம் வழங்கிய பின்னரே அவர் சாப்பிடுவார். கொலபசி எழுதியவர், பிறர்பசி அறிந்தவர். பஞ்சாபி ரெஸ்டாரென்ட்டில் பட்டர்நாண் – பன்னீர் டக்காடக் என நான் தேடி உண்ண வழிகாட்டியவர்.

பசுமைநடையில் இணைந்து மதுரையின் தொல்தலங்கள், மலைகள், மதுரை வீதிகள், கல்மண்டபங்கள், நீர்நிலைகள் என எழுத்தின் வழியாக அறிந்த இடங்களிலெல்லாம் நடமாடும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு நடையையும் வலைப்பூவில் தொடர்ந்து ஆவணப்படுத்திவந்தேன். பசுமைநடை குழுவில் இணைந்து கற்றவை ஏராளம், ஏராளம்.

நான் எழுதிய திருவிழாக்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணத்தை தூண்டியதோடு அதை தொகுக்கச் சொன்னார். நான் வலைப்பூவில் எழுதியதை அப்படியே எடுத்துக் கொடுக்க இன்னும் மேம்படுத்தச் சொன்னார். மேம்படுத்திய பிரதியை பின்னாளில் தொல்லியல் திருவிழாவில் திருவிழாக்களின் தலைநகரம் நூலை வெளியிட்டு என்னை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

மதுரை குறித்து அவர் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூலின் வாயிலாக அவரது மதுரை அனுபவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. மதுரையின் பல அறியப்படாத விசயங்களை, மறந்துபோன விசயங்களை தம் எழுத்துக்கள் வாயிலாக அதில் மீட்டெடுத்திருக்கிறார். அதேபோல, அவர் பயணித்த ஊர்களும், நாடுகளும் ஏராளம். தனது பயண அனுபவங்களை அவர் நூலாக விரிவாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப்பதிவின் வாயிலாக வைத்துக்கொள்கிறேன்.

இயற்கை பேரிடரின் போதெல்லாம் நிவாரணப் பணிகளை பசுமைநடை குழு மேற்கொள்ளும். சமீபத்திய கொரோனா ஊரடங்கின்போது அவர் வேலையின்றி வாடும் ஒவ்வொருவராகத் தேடித்தேடி நிவாரணப் பொருட்கள் வழங்க தேர்ந்தெடுத்த பட்டியல் குறிப்பிட வேண்டிய விசயம். டிரைசைக்கிள் ஓட்டுபவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், சாலையோரத்தில் பொம்மை செய்யும் பிறமாநிலத்தவர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள், கரும்புச்சாறு கடைபோடுபவர்கள், பறையாட்டக்கலைஞர்கள் என ஒவ்வொருவரையும் தேடிச்சென்று பொருட்களை வழங்கிய விதம் குறிப்பிடத்தகுந்தது. நான் பார்த்த தனிநபர் நூலகத்தில் தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் நூலகம் தனித்துவமானது. பல அரிய நூல்களைக் கொண்டது. பல நாடுகளுக்குப் பயணித்து சில அழகிய கலைப்பொருட்களையும் நூலகத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்.

அ.முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களில், உரையாடல்களில் ஒலிக்கும் சமூக அக்கறையை அவரது செயல்களிலும் பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன் தனியார் வங்கியொன்றில் பெருங்கடனில் சிக்கவிருந்த என்னை அதிலிருந்து மீட்டு நல்வழி காட்டினார். உடல்நிலை சரியில்லாதபோது தகுந்த மருத்துவரைப் பார்க்க எனக்கு மட்டுமல்லாது, எனக்கு தெரிந்தவர்களுக்குக் கூட அவரது உதவியை பெற்றிருக்கிறேன். பல நண்பர்களுக்கு இதுபோல இக்கட்டான தருணங்களில் அவர் உதவியிருக்கிறார்.

சங்கச்சுரங்கத்திலிருந்து ஒரு பாடலெடுத்து அ.முத்துக்கிருஷ்ணனைப் பற்றிச் சொன்னால் ‘பிறர்க்கென முயலுநர்’ என்ற புறநானூற்றுப் பாடலைச் சொல்லலாம்.

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

பிறர்க்கென முயலும் தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s