
தொ.பரமசிவன் அய்யாவின் உரையைக் கேட்பதும், அவருடன் உரையாடுவதும் வரம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்தெல்லாம் அவர் சொல்வதைக் கேட்பது நம் பாக்கியம். அய்யாவிடம் பெரியாழ்வார் குறித்தும் பேசலாம், பெரியார் குறித்தும் பேசலாம் என்பது தனிச்சிறப்பு. சமீபத்தில் பூவுலகு முதுவேனிற்கால இதழில் தொ.பரமசிவன் அய்யாவுடன் எடுத்த நேர்காணல் வந்துள்ளது. அந்தச் செவ்வியை படிக்கலாம். பூவுலகு இதழுக்கும், எழுத்தாக்கம் செய்தனுப்பிய நண்பர் தயாளனுக்கும் நன்றிகள் பல.
நேர்காணல் – சங்கர்ராம், குட்டிரேவதி, ஆர்.ஆர்.சீனிவாசன்.
தொகுத்து எழுதியவர்கள் – தெய்வு, தயாளன், சங்கர்
தமிழர்கள் பொருளிலக்கணத்தில் காலத்தை ஆறாக வகுக்கிறார்கள். அது என்னவிதமான பொருத்தப்பாடு?
தொ.ப: உலகத்துல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான வானியல் இருக்கு. இந்த வானியல் சோதிடத்தை பேஸ் பண்ணி இருக்கு. இத முதன்முதல்ல சொன்னவன் கிரேக்கர்கள். அப்புறம் சங்க இலக்கியத் தமிழர்களும், சங்க காலத்துல வாழ்ந்த ஆரியர்களும் ஒரு கால்குலேஷன் வச்சிருந்தாங்க. காலத்தை வகுத்த முன்னோடி தமிழனே. நாள் காட்டியை கண்டுபிடிச்சது, ஆடு மாடு மேய்க்கிறவங்கதான். ஆடு மாடுகளைப் பத்தி விட்டு, திறந்த வெளியில படுத்துக்கிட்டு ஆகாயத்தைப் பார்க்கிறபோது, இந்த நட்சத்திரத்த இங்கன கண்டா மழைவரும். இந்த நட்சத்திரத்த இங்கன கண்டா அடுத்த மாசம் பொறந்தாச்சு அப்படின்னு கண்டுபிடிச்சுட்டான்.
தமிழின் ஐவகை நிலங்களில் அதிகம் பாடப்பட்ட நிலம் என்று குறிப்பாக ஏதாவது உள்ளதா?
தொ.ப : முல்லைதான். அதுதான் நாகரிகத்தின் தொட்டில். அவன் தான் வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல் தெருவில் நின்று இயற்கையை வாசித்தவன். இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் அப்பழக்கம் தொடருகிறது. கறி, மீன் சாப்பிட்ட இலைகளில் மோர் ஊற்றி சோறு சாப்பிடுவதில்லை. காரணம் இறைச்சி சாப்பிட்ட இலையில் புனிதமான பசுவின் மோரை ஊற்றக்கூடாது என்கிற கோட்பாடு. மற்ற உயிர்களை மதிப்பதுதான் இதற்கு அடிப்படை. தலைசீவினால் முடி கழியும், அது மாட்டின் வயிற்றுக்குள் போய்விடக்கூடது என்பதற்காக தூரத்தில் சென்று போடுவார்கள். எதற்கும் ஒரு சார்பு நிலை இருக்குல்ல. இது எல்லாம் ஏங்கல்ஸ் படிச்சு வரல. தானா வந்தது. வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயரக் கோன் உயர்வான், ஒன்னுக்கொண்னு சார்ந்துதான இருந்துது. இத அவன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளி அப்படின்னு சாதரணமாச் சொன்னான். மழை நல்லா இருந்தா மாங்கா நல்லா காய்க்கும். மழை இல்லேண்ணா புளி நல்லா காய்க்கும். புளி நல்லா காய்ச்சிருந்தாலே மற்ற பயிர்கள் மழை இல்லாம பட்டுப்போகும்ணு அர்த்தம், நம்பிக்கை. நம்பிக்கைங்கறது பலகாலம் பார்த்துப்பார்த்து வர்றதுதானே.
தொல்காப்பியத்துக்கு முன்னால நமக்கு பனுவல் இருக்கா?
தொ.ப : திடீர்னு ஒருநாள் ஒரு பனுவல் வர முடியாதில்லயா? என் வீட்டிற்கு வருகிறீர்கள், என் புகைப்படங்களைக் கால வரிசையில் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள், 18 வயதில் ஒரு புகைப்படம் இருக்கு. 18 வயதுக்கு முந்தின ஃபோட்டோ இல்லை. அப்ப நான் இல்லண்ணு அர்த்தமா? என்னோட 5 வயசு ஃபோட்டோவும் மூணு வயசு ஃபோட்டோவும் இல்ல அப்ப நான் இல்லேண்ணு அர்த்தமா, இருந்திருக்கேன். ஃபோட்டோ எடுக்கலண்ணுதான அர்த்தம். அப்போ இவ்வளவு பெரிய வளர்ச்சி திடீர்னு வந்திருக்க முடியாதில்ல. இருந்திருக்கனும்ல, இதத்தான் தொல்காப்பியர் முந்தியோர் மரபு, மேலை மரபு, ஏனை மரபுண்ணு வேறு சில வர்த்தைகள்ல சொல்றாரு.
அந்த தொல்காப்பியம் இயற்கையை எப்படி விளக்குது? தொல்காப்பியத்தில இயற்கை, சுற்றுச்சூழல் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
தொ.ப : ”செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி” தொல்காப்பியம் எழுதப்பட்ட விதம்னு முன்னுரையில் சொல்றான். செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் தமிழ்மக்கள் இயற்கையோடு பொருந்திய வரலாறு, அதுதான் தொல்காப்பியப்பாயிரம், பாயிரம் என்றால் முன்னுரை.
தொல்காப்பியமே இயற்கை சார்ந்த விஷயமா?
தொ.ப : இயங்குகிற எல்லா உயிர்களும் இயற்கை சார்ந்தவைதான், நானும், நீங்களும் உட்பட. செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்பட எண்ணி புலந் தொகுத்தேனே போக்கறு… வரிசையா ஒன்னொண்ணா சொல்லிட்டு வருவான். தொல்காப்பியம் வேதம் மாதிரி ஒரு பூரணமான டெக்ஸ்ட் இல்ல. தொல்காப்பியத்துல கம்ப்யூட்டர் பத்தி சொல்லப்பட்டிருக்கான்னா இல்ல, ஆனா வேதத்துல இருக்குண்ணு பாப்பான் ஏதாவது ஆதாரத்தைக் கொண்டுவந்து காட்டுவான்.
ஐந்திணைகளை வகுத்தது யார்?
தொ.ப : : திணைகளை வகுத்தது இயற்கைதான். திணைகள் என்பது நிலவெளி. பஸ்ல போகும்போது பாத்துக்கிட்டே போவேன். நான் காளையார்கோவில் போகிறவழியில் பார்த்தேன். வெள்ளை வெள்ளையா ஒரு மரம். இது என்ன மரம் நாம பாத்ததேயில்லையேண்ணு ரொம்பநாளா யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அப்புறம் ஒருமுறை தெரிஞ்ச நண்பரோடு போகும்போது அவர் சொன்னார் அது வெவ்வேலா அப்படிண்ணு. ஏதோ க்ரீக் பெயர் மாதிரி இருக்கேண்ணு யோசிச்சேன். அப்புறம்தான் புரிஞ்சது அது வெள்வேலமரம். அடிமரம் வெள்ளையா இருக்கும். வேல மரம் மாதிரி வெள்வேல மரம். வெட்டி உரத்துக்குப் போடுவாங்க. அதே மாதிரி ஒவ்வொரு வட்டாரமும் ஒரு பொருளாதார மண்டலம். சங்கரன்கோவில்ல விளையுற தினை மானூர்ல விளையாது. மானூர்ல விளையுற மிளகாய் வற்றல் திருநெல்வேலி டவுனுக்குள் விளையாது. சின்னச்சின்ன பொருளாதார மண்டலங்களா வகுத்திருந்தாங்க.
எப்படி பொருளாதார மண்டலம்னு சொல்றீங்க? சூழலியல் மண்டலம்னு சொல்லாமல்?
தொ.ப : சூழலியலா உள்ளதுதான். அதிகப்படியா ஒண்ணு வரும்போது விக்கறதுக்குப் போறான்ல. அவன் வயல்ல விளைஞ்ச மிளகாய் மிகையாகும்போது விக்கணும்ல. விக்கப்போறப்பொ அவன் அது எப்படி இருந்திச்சுன்னா ஒன்றையொன்று சார்ந்து இருந்திச்சு. நான் ஒரு வட்டம் போட்டுக் காட்டுறேன் (ஒரு தாளில் வட்டம் வரைந்து விளக்குகிறார்) ஒரு மண்டலம் ஒரு மண்டலத்தை தொட்டடுத்து இருக்கும். ஒன்னுக்கொன்னு உறவு இருக்கும். இடையில ஒரு ஆறு ஓடும் அவ்வளவுதான். வணிக வழிகள் எப்படி இருக்கும்னா ஒரு ஊரணி, ஒரு தாவளம் இருக்கும். தாவளம்னா இப்ப நீங்க சொல்ற மோட்டல்தான். விநாயகருக்கு தாவள விநாயகர்ணு பேரு. ஒவ்வொரு தாவளத்திலும் ஒரு விநாயகரை வச்சிருப்பான். வியாபாரிகளுக்குத் தேசிகள்னு பேரு. நாலு திசைகளுக்கும் பயணம்செய்வதால் நானாதேசிகள் என்றும் பெயர். தேசிக விநாயகம்ணு பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பான். இந்த தங்க நாற்கரச் சாலையால அழிந்துபோன கல்மண்டபங்கள் எக்கச்சக்கம்.
கல்மண்டபம்ணா தங்குற இடம் இல்லையா?
தொ.ப : ஆமாம். அங்க ஒண்ணும் இருக்காது. பெரிய கல் மண்டபம் பெரிய தங்குற இடம்னா பக்கத்துல ஒரு கிணறு இருக்கும். கிணறு இல்லாம இருக்காது. சங்கரன்கோவில் போகும்போது பாத்திருக்கேன். குற்றலம் போறப்பவும் நிறைய பாக்கலாம்.
பசுமைப்புரட்சிக்கு அப்புறம் நிறைய பூச்சிகள் எல்லாம் அழிஞ்சு போச்சுல்ல. பி.எல்.சாமி சங்க இலக்கியத்தில் பூச்சிகள்ணு ஒரு புத்தகம் எழுதியிருக்காருல்ல. பசுமைப்புரட்சிக்கு முன்னால இயற்கை சார்ந்த ஒரு சுழற்சி இருந்திருக்குல்ல அந்த சுழற்சி எப்படி பதிவாகியிருக்கு? கண்ணிண்ணு நம்ம எல்லோரும் சொல்றோம். அந்த கண்ணி எப்படி பதிவாகியிருக்கு?
தொ.ப : மழையச் சொல்றான். மேகத்தை சொல்றான். பெய்கிற மழையச் சொல்றான். பாய்கிற தண்ணிய சொல்றான். வரப்பைச் சொல்றான். வயலைச் சொல்றான். வயல்ல விளைகிற நெல்லச் சொல்றான். மீனைச் சொல்றான். அப்புறம் வயல்ல பாட்டுப்பாடி நெல் வாங்கிட்டுப்போற பாணர்களைச் சொல்றான். பாணர்கள் களம்பாடுறது நெல்லைப் பக்கத்துல இல்ல. அங்கே விளைச்சல் அதிகம், அதனால களம் பாடுறது இல்ல. மதுரை மாவட்டத்துல நெல் அறுவடைக்காலத்துல களத்துலபோய் பாணர் சமூகத்தை சார்ந்தவங்க களம்பாடுவாங்க. அறுவடைக்காலத்துல நெல்களத்துல போய் ’பட்டிபெருக, பால பானை பொங்க, எட்டு லெச்சுமியும் ஏறிவிளைய’ அப்டீண்ணு பாட்டு பாடுவான். பொலிக பொலிக பொலிகண்ணு நெல் பொலி தூற்றும்போது பாடுவான். பொலிகண்ணா பெருகண்ணு அர்த்தம் – பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்ண்ணு நம்மாழ்வார் பாட்டு ஒண்ணு இருக்கு. அதுபோல நெல்லு வாங்கிட்டுப்போவாங்க. விளையுறதுல பாணர்களுக்கு ஒரு பங்கு இருந்தது. ஆனா இந்த மந்திரவாதி வாயைக்கட்டுறவன், அவங்களுக்கு ஏதும் இல்ல.
பூச்சிக்கொல்லி மருந்துன்னு எதையும் பயன்படுத்தல. பூச்சிக்கொல்லி மருந்தாக பூச்சிகளையேதான் பயன்படுத்தியிருக்காங்க. மாற்றுப் பயிர்முறை பயன்படுத்தியிருக்காங்க. உதாரணமா ஒரு வயலை மேடாக்கணும்னா கம்படிகம்பா வச்சா வயல் மேடாயிரும்பாங்க. திரும்பத்திரும்ப கம்பு பயிரிட்டா வயல் மேடாயிரும்னு. இல்லேண்ணா அந்த ஒரு ஏக்கர் நிலத்துக்கும் சமமா மண்ணடிச்சு நிரப்பி மேடாக்க முடியாது. வயல் மேடாக மேடாக என்னாகும். எறும்புக்கு நல்ல இடம் கிடைக்கும். பூச்சிகளுக்கும் நல்ல இடம் கிடைக்கும். மாற்றுப்பயிர வச்சுத்தான் பூச்சிகளக் கட்டுப்படுத்தினாங்க. இல்லேண்ணா சங்க காலத்துல விவசாயம் பண்ணதுக்கு இந்நேரம் பூச்சிகள் எல்லாத்தியும் அழிச்சு முடிச்சிருக்குமே. ஆகலையே எப்படீன்னா மாற்றுப் பயிர்கள் மாற்று உயிர்களை வச்சுத்தான். மாற்று உயிர்களை வச்சு உயிரினப் பன்மைய சமப்படுத்தியிருக்கான். இயற்கையாகவே உயிர்களிடத்துல இருக்குற ஒரு விஷயம் என்னன்னா பல்லுயிர் பெருக்கத்துக்காக செய்து கொள்ற காம்ப்ரமைஸ். திருநெல்வேலி நகரத்து நாய்கள் பத்து, பாளையங்கோட்டை நாய்கள் பத்து. இரண்டு தரப்புக்கும் சரியான சண்டை பாலத்துல நடக்கும். பாளையங்கோட்டை நாய் தோத்துத்போகுது. தலைமை தாங்கின நாய் திரும்புது. எல்லா நாய்களும் திரும்பிப்போகுதுங்க. ஜெயிச்ச நாய் நகரத்து நாய்கள் பெருமிதத்தோட கொஞ்சநேரம் பாத்துக்கிட்டு நின்னுட்டு அதுகளும் திரும்பிப்போகுதுங்க. இங்க (பத்து நாய்களில்) எட்டு நாய் சாகுறது. அந்தப் பக்கத்தில் எட்டு நாய் சாகுறதுன்னெல்லாம் இல்ல. சமரசம். ஜாதிக்கலவரம்னாலும் அதுதான். ஜாதிக்கலவரம் எங்கேயாவது 200 நாளைக்குமேல நீடிச்சிருக்கா?. 200 நாளைக்குள்ள 2 கொலை விழும் அவ்வளவுதான். ஒரு எல்லைக்குமேல அந்த பண்பாட்டுச் சமரசம் பன்மைத்தன்மைக்கு ஒருவித சமரசவாதத்தைக் கொண்டுவந்துவிடும். அந்த சமரசவாதம் இயற்கையிலேயும் இருக்கு. செயற்கையிலே மனிதன் கிட்டயும் இருக்கு. கலவரத்துல உயிர்களப் பலிகொடுத்த பிறகு சமரசம் பண்ணிக்கிறது தோல்வி இல்ல. அது புத்திசாலித்தனம். திருக்குறளே ஒரு சமரசவாதம்பேசுற நூல்தான்.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
பக்கத்துநாடு சின்ன நாடா இருந்தா ஒரு தட்டு தட்டி வைக்கணும். ஒரு பயம் இருக்கணும்ல அதுதான்.
திணை என்பது ஒரு சூழலியல் ஒழுங்கமைவுதான் (ECO SYSTEM) என்று பாமயன் சொல்றாரு. அது ஒரு சுற்றுச்சூழல் பிரிவு என்கிறார் அதுபற்றி உங்க கருத்து என்ன?
தொ.ப : இருக்கலாம். ஒவ்வொரு 10 மைலுக்கும் இடையில மழைப் பொழிவு வித்தியாசப்படுதில்ல. இளையான்குடியில் இருந்து காளையார்கோவில் போறவழியில மறவமங்கலம்ணு ஒரு ஊர். அந்த ஊர்ல ஒரு தெப்பக்குளம். ராமநாதபுரம் மாவட்டத்தில மற்ற ஊர்கள்ல 200 அடிதோண்டி தண்ணி இல்லாம போகும்போது அந்த ஊர் கிணத்துல சாதாரணமா தண்ணி எடுத்து மக்கள் குளிச்சிகிட்டு இருப்பாங்க. அந்த ஊர்ல மட்டும் மழை பெய்யும். அந்த ஊரின் வான் இயற்பியல் தன்மை (astro physics) இப்படித்தான் இருக்கு. இத அனுபவத்தில கண்டு பிடிச்சான். ஆனிமாசம் 13ந் தேதி நெல்லையப்பர்கோவில் கொடியேத்தணும்னு யாரு முடிவு பண்ணினா? இயற்கைதான் முடிவு பண்ணிச்சு. ஆனி 13 கொடியேத்தற அண்னிக்குதான் சாரல் தொடங்கும். சங்கரன்கோவில்ல திருவிழாத்தொடங்கும். சங்கரன்கோவில்ல சாமி கும்பிட்டுவிட்டு இங்கவந்து மாம்பழம் வாங்கிகிட்டு போனா அது மாம்பழ சீஸன். பாளையங்கோட்டையில் மாம்பழச்சங்கம்ணு ஒரு சங்கம் வைச்சிருந்தான். நூற்றாண்டு மண்டபத்துக்கு வெளியில ஒரு 50 கடை போட்டிருப்பான். மாம்பழச்சங்க விழா நடக்கும். இயற்கையோடு இணைஞ்சு வருதில்ல.
திணைக் கோட்பாடுங்கறது தமிழர்களுடைய தனித்துவமான கோட்பாடா?
தொ.ப : அப்படித்தான் இன்னைக்கு உலகம் முழுக்க சொல்லுது. ஐரோப்பிய சமூகம் முழுக்க குறிப்பா ஆங்கில இலக்கியம் படிக்கிறவங்க இதைத்தான் ஆய்வு பண்ணிக்கிட்டிருக்காங்க. கனடாவுக்கு நான் போயிருந்தப்ப அவங்க திணைக்கோட்பாடு பற்றித்தான் ஆர்வமாக் கேட்டாங்க. எல்லை மீறினதில்லையா இயற்கை. இயற்கைக்கு நாம கட்டுப்படணுமில்ல. எதிலயும் எப்படியும் இல்ல. கட்டுப்படலேண்ணா நான் நட்டப்படுவேன். பாதிப்பு வரும். மழைவரும்போல இருக்குன்னா ஒரு குடையை எடுத்துக்கிட்டு கிளம்பறேன். குடை இல்லேன்னாலும் இரவல் வாங்கிக்கறேன். அப்ப மனித உயிர் வாழ்வதற்குத்தான் இருக்கு, சாகறதுக்கு இல்ல. வாழும்போது நிறைய சமரசம் பண்ணிக்கிட்டுதான் வாழுது. அந்த சமரசங்களுக்கு சில பகுதிகள்ல திருவிழாச்சாயம் பூசி விட்டுருவாங்க. அவ்வளவுதான். புள்ள குடுக்கலேன்னாலும் சாமி கருணை காட்டலேன்னுடுவான். புள்ள வந்தாலும் சாமி அருளால புள்ள வந்துதுன்னுடுவான். அது ஒரு வகையான சமரசம்தான்.

தொல்காப்பியர் காலத்துல கடவுள் வழிபாடு இயற்கை வழிபாடு இதுல எது இருந்தது?
தொ.ப : பொதுவா சொன்னா இயற்கை வழிபாடுதான் இருந்திச்சு. கடவுள் வழிபாடு இல்ல. இயற்கையோட விளைபொருட்களில் ஒன்னுதான மனுஷன். மனுஷன் தாயை மட்டும் பாக்கல, தாய் மண்ணையும் பாத்திருக்கான். என் உணவுக்கான ஆதாரம் இந்த நிலம்தான். வீட்டுக்குப்பின்னால ஒரு 3 செண்ட் நிலத்துல காய்கறி போட்டிருக்கீங்க. அந்த இடத்தை பின் வீட்டுக்காரன் கேட்கிறான் கொடுப்பீங்களா? காய்கறி விளைஞ்ச அந்த நிலத்தினுடைய மதிப்பும் மரியாதையும் கூடிரும். அந்த மாதிரிதான். அதுதான் உணவளிக்கும் தாய்ண்ணு புரிஞ்சுகிட்டான்.
தொல்காப்பியத்துல நெல் இருந்துதா? நெல்லோட வரலாறு என்ன?
தொ.ப : பொருந்தல்னு சங்க இலக்கியத்துல இருந்த ஒரு ஊரைக் கண்டுபிடிச்சிருக்காங்க அங்க நெல் இருந்திருக்கு. ஆதிச்சநல்லூர்ல நெல் இருந்திருக்கு. அது அதிகமா தண்ணீர் சாப்பிடுகிற ஒரு பணக்காரப்பயிர். வீட்டுக்கு சில விருந்தாளிங்க வந்தா நெல்லு சமைச்சுப்போடணும். சிலபேர் வந்தா பழையசோறு போட்டாப்போதும். நெல்லு ரொம்ப காஸ்ட்லியான பயிர். நீர் மேலாண்மை தேவைப்படுகிற பயிர். நாம கெட்டுப்போனதற்கு அதுவும் ஒரு காரணம். புஞ்சை நிலங்கள நஞ்சை நிலங்களா மாத்தறோம்ணு சொல்லி இது நடந்தது.
எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது?
தொ.ப : விஜயநகரத்துக்காரன் வாரானில்லையா? அப்ப நடந்தது. அதுக்கு முன்னால ரெண்டு நிலத்துக்கும் சம மதிப்புதான் இருந்தது. நெல் விளையலேன்னா புல் விளையும்ண்ணு இருந்தது. கம்பு, கேப்பை போன்ற உணவுகள்தான் புல்லுணவுகள். விஜயநகரப்படைகள் மூலமா புதுக்குடியேற்றங்கள் நடந்தது. அவங்க ஆந்திராவில நல்லா நெல் விளையுற பகுதியிலிருந்து கிருஷ்ணா, கோதவரி பாய்கிற நிலப்பகுதியிலிருந்து வந்தவங்க. நெல்சோறு கேட்டாங்க. அதுக்காக புதிய பயிர் நிலங்களை உண்டாக்கினான். அதுக்கு முன்னால இதே தண்ணிதான இருந்தது. நெல்லு ஒரு 5000 வருஷத்துக்கு முந்தி வியட்நாம்ல சம்பாங்கற இடத்தில இருந்து வந்ததுண்ணு ஒரு தியரி இருக்கு. சம்பாங்கற சொல்லே தென் வியட்நாமைக் குறிக்கும் என்கிற ஒரு வரலாறெல்லாம் இருக்கு. நெல் என்கிற சொல்லே மிகப் பழமையானது. நெல் என்றாலே சம்பாண்ணு ஆகிப்போச்சே. சம்பா தொடர்பான சொற்களையெல்லாம் சேகரிங்க. சம்பா+ அளம்= சம்பளம். நெல்லும் உப்பும் கூலியாகக் கொடுத்தா சம்பளம். சம்பளத்துக்கு ஒரு மாற்றுச் சொல் கண்டுபிடிங்க. வியட்நாம்ல எவ்வளவு மழைவீச்சு இருக்கு எவ்வளவு தாவரம் இருக்கு. வருஷம் முழுக்க நெல்லுக்கு தண்ணீர் நிக்கணும்ல. மற்ற தானியங்களுக்கு அப்படி இல்லியே. ஆதிவாசிகள் சொல்றான்ல கிழங்கும் தேனும் சாப்பிட்டுக்கிட்டிருந்த எங்களுக்கு அரிசியைக் கொடுத்து கெடுத்திட்டீங்களேன்னு. அவனவனுக்குப் பிடிச்ச சாப்பாட்டுக்கு அரசு உத்திரவாதம் அளிக்கணுமே தவிர அரசுக்கு பிடிச்ச சாப்பாட்ட அவன் தலையில கொண்டு கட்டக்கூடாது.
இயற்கை குறித்த விஷயங்கள் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியத்திலிருந்து எவ்வளவு மேம்பட்டுள்ளது?
தொ.ப : எல்லாமே தொல்காப்பியத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூடாது. பார்ப்பனர்களிடம் கேட்டால் கம்ப்யூட்டரும் வேதத்துல இருக்கு, யூரிக்காரின் பேரும் வேதத்துல இருக்கும்பான். ரொம்ப ஆழமான கேள்வி. இரண்டுக்கும் இடையில ஒரு நூறு விஷயங்களுக்கான டாக்குமெண்ட் நம்மகிட்ட இல்ல. அதுபத்தி நாம பேச முடியாது. வணிகம் பற்றியே தொல்காப்பியம் நிறைய பேசவில்லை.
அப்படியென்றால் அந்த அளவுக்கு வணிகம் ஆழமானதாக இல்லயா?
தொ.ப ; வணிகம் எப்போது பெருகும்ணா அரசு பேரரசாக உருவாகும்போதுதான் வணிகம் பெருகும். இப்ப இருக்கிற கார்ப்பொரேட் கம்பெனிகள் மாதிரிதான். பெருவணிகர்கள் உள்ளே நுழைகிறபோதுதான் வணிகம் பெருகும். அது தொல்காப்பியத்திற்கு பிறகு. ஆரியர் நிறைய வணிகக் குழுக்களோட வர்றாங்க. அஞ்சு வண்ணம், மணிக்கிராமம், நகரத்தார், பதினெண்விசயத்தார் என்று நிறைய குறிப்புகள் இருக்கு. இந்த அரசாங்கம் கொள்முதல் பண்ணனும்னா வீரவநல்லூர் தாலுகாவிலேயிருந்து (அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி தாலுகாவிலேயிருந்து) நெல்லை வெளியே கொண்டுபோகக்கூடாதுண்ணு வைத்திருந்தார்கள் இல்லையா, அந்த மாதிரி.
சங்க இலக்கியத்துல உள்ள நீர்மேலாண்மை, இயற்கை, மரங்கள், பூச்சிகள் இதப்பத்தி சொல்லுங்க.
தொ.ப : பெரிய பெரிய குளத்துக்கு வாட்டர் கார்டு இருந்திருக்கான். பெருங்குளக்காவலன் போலண்ணு அது போட்டுருக்காங்க. அது எப்படி ஆச்சு பெருங்குளக்காவலன்போல எங்கம்மா தூங்காமலேயே திரியுறா நான் வெளியே ஓடிப்போயிருவேன்னுட்டு’ (அகநானூறு)

சங்க இலக்கியம்னாலேயே அது மேலோர் இலக்கியம் வளமா வாழ்ந்தவங்களோட இலக்கியம் அப்படீன்னு ஒரு கருத்து நிலவுதே?
தொ.ப : இல்ல இல்ல. அதில் பேசப்படுகிற உணவுகளைப்பத்தி பார்க்கிறபோது அது மேலோர் இலக்கியம் மாதிரியா தோணுது?. ஆனா உண்மை அது இல்ல. அது மக்கள் இலக்கியம். மேலோர் இலக்கியமா இருந்தா இதுக்குள்ள காணாமப்போயிருக்கும். ஐங்குறுநூறு பத்தி எழுதும்போது நான் எழுதியிருக்கேன். ‘நெல் பல பொலிக பொன்பெரிது சிறக்க’ண்ணு பாடுவா. நம்ம ஊர்ல ராப்பாடி பாடிக்கிட்டுப்போவான் பட்டி பெருக பால்பானை பொங்க என்று, காலங்காலமா அதுதான நடக்குது. பட்டின்னா மாடு அடைக்கிற பட்டி, பட்டின்னா வேலின்னு ஒரு அர்த்தம், பட்டிய காவல்காக்கிற நாய்க்கு பட்டிநாய்ன்னு பேரு. அப்புறம் மலையாளத்துல பட்டின்னாலே நாயைக் குறிக்கிற சொல்லாயிருச்சு. பட்டிகள் பெருகுகிற இடத்திலிருந்துதான் கிராமங்கள் உருவாகுது. ஏன்னா கால்நடைகளைப் பாதுகாக்கனும். அதைத்தான் வேலிபோட்ட கிராமங்கறான். மதுரையிலிருந்து காரைக்குடி போகிற வழியில பாத்தீங்கன்னா பஸ்ல உக்காந்தே ஒரு 200 பட்டிவரை எண்ணலாம். பட்டியில மக்கள் குடியிருந்து அது ஊராக மாறும்போது அந்த பட்டியின் பெயர்கொண்ட ஊராகுது. அம்மங்கோயில்பட்டின்னு ஒரு ஊரு. அம்மன்கோவில் பக்கத்துல பட்டி போட்டுருக்காங்க அதுதான் பின்னால அம்மங்கோவில்பட்டின்னு மாறிடுச்சு. பட்டிபெருக பால்பானை பொங்கன்னா, நாடு செழிக்கனும்னா பட்டிபெருகன்னுதான் அர்த்தம்.
முல்லை இல்லாத மற்ற திணைகளெல்லாம் எப்படி இருந்தன?
தொ.ப : நம்மகிட்ட அதைப்பத்தி அதிகமா குறிப்பு இல்ல. மற்ற திணையெல்லாம் ரொம்ப புவர் லிவிங்தான். மருதத்துலதான் நல்ல சோறு உண்டு இருக்காங்க. பெருந்தடி வரால் மீன்கள்ங்கறான். விடியக்காலம் பழையசோறும் வரால்மீனும் சேர்த்து சாப்பிட்டுட்டு வயலுக்குப்போயிருக்கான். மருத நிலத்தத் தவிர மத்தவுங்க எல்லாம் புவர் லிவிங்தான். காய்ந்த இறைச்சிய குறுநில மக்கள் சாப்பிடறாங்க. செந்நாய் அடிச்சுப்போட்டுட்டுப்போன காய்ந்த இறைச்சிய சாப்பிடறாங்க. முல்லைநில மக்கள் விதை தானியங்கள தின்பாங்க. விதைதானியங்கள் தானா வளரக்கூடியவை இல்லிய. எப்பவோ சிந்திவைத்த தினை ஒரு மழைபேஞ்சவுடனே 60 வருஷம் கழிச்சு முளைக்கும். அதற்கு உள்ளே இருக்கிற விதை, உறைநிலையில தன்னைப் பாதுகாத்துக்கொண்டு கிடக்கும். அதன் மேல இருக்கிற உறை உடையாம இருக்கனும். அது ஒரு ஃப்ரோசன் ஸ்டேஜ். இயற்கையிலேயே இருக்கு. இந்த எலுமிச்சம் பழத்தை சர்பத் போடறதுக்குப் புழிஞ்சுட்டு தூர எறியுவாங்க. ஆஃபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்துபாத்தா அந்த நாலுவிதையும் தன்னைசுத்தி ஒரு உறையை ஃபார்ம் பண்ணிட்டு அங்கேய கிடக்கும்.
விதைத்தானியங்களுக்கு தோல் ரொம்ப முக்கியம். வரகுக்கு 7 அரண்மனைகளுக்குள் இருக்கிற இந்திராணிண்ணு பேரு. தொலி அதைச்சுத்தி இருக்கும். அவ்வளவு பாதுகாப்போட அது இருக்கும்.
தொ.ப : தானே ஒரு உறை உருவாகி விடும். அதை எடுத்துவந்து போட்டீங்கன்னா அந்த உறை கழன்று அந்த விதை முளைக்கும். இப்படி உறைநிலையில எல்லாத் தாவரங்களும் இருக்கும். மாங்கா தேங்கால்லாம்கூட இருக்கும். மூளையிலேயும் அப்படி நிறைய விஷயங்க உள்ள கிடக்குது. அது வெளிப்படுகிறபோது வெளிப்படும். புறச்சூழ்நிலைகள் கூடிவருகிறபோது அதாவது நல்ல மண்ணு, நல்ல மழை, நல்ல வெயில்னு இருக்கிற இடத்துல அந்த விதை கிடைச்சுதுன்னா நல்லா முளைச்சிரும்.
ஜ்யோக்ரஃபிக் சானல்ல பார்த்தேன். மீன் வந்து நீர்வற்றிப்போகும்போது அப்படியான ஒரு உறைநிலைக்குப்போறதும் அப்புறம் ஒரு வருஷம் கழித்து மழை பெய்த பிறகு அதற்கு உயிர் வருவதும். அதை அறிவியல்பூர்வமா விளக்குறாங்க.
தொ.ப : ஆமா, நம்ம வயல்லயும் அப்படித்தானே. வயல்ல அறுவடை முடிஞ்சு தாள் அறுத்தப்புறம் வயல் காய்ஞ்ச கருங்கல் பாறை மாதிரி ஆயிடுது. அப்புறம் மழை பெய்தபிறகு மீண்டும் முளைக்குதில்ல, அது மாதிரிதானே.

அப்போ நெய்தல் பற்றி…
தொ.ப நெய்தல்ல விவசாயம் பற்றி அதிகமில்லை. இந்த பேக்வாட்டர்ஸ் பத்தி நிறைய பேசியிருக்கான். ’இருங்கழி நெய்தல்’ங்கிறது நன்னீரும் உப்புநீரும் சந்திக்கிற இடம். அந்த இடத்துல எக்கோ சிஸ்டம் வேற. அதுல உள்ள மரம் வேற.
இயற்கைய நெய்தல் நிலத்துல எப்படிப் புரிந்து கொண்டாங்க, இந்தக் காற்றோட அளவு பற்றியெல்லாம்?
தொ.ப ; காற்று மழை இத வச்சுதான் சொல்லியிருக்கான். இந்த வருஷம் இந்த மீன் செழிப்பா இருக்கும். அவங்க காற்றப் பத்திச் சொல்லுவான். ஒரு காத்தை கச்சா’ம்பான், இன்னொன்னை மச்சா’ம்பான். இந்தக் காத்து இங்க அடிக்குற சீஸன்ல தோணி கொண்டுப் போறவனுக்கு இந்த பாய்மரத்தை வச்சு சொல்லுவான்ல. வலையில படுகிற மீனை வச்சு சொல்லுவான்ல. இந்த வருஷம் மத்தி நிறையப்படும், ஏன் இந்த மீன் நிறைய படலை, ஏன் இந்த மீன் நிறைய பட்டுச்சுன்னு சொல்வான். இதெல்லாம் அவங்களுக்கு அனுபவத்துல வர்றதுதான். நீங்க கடற்கரையில போய் பேசுனீங்கன்னா எந்தக் கடற்கரையில எந்த மீன் கிடைக்கும்ணு சொல்லுவான். நான் பாண்டிச்சேரி போயிருந்தப்போ அங்கயிருந்தவங்க பாண்டிச்சேரியில நீங்க என்ன பாக்கணும்னு கேட்டாங்க. மீன் மார்க்கெட்ன்னு சொன்னேன். இவர் சரியான மீன் சாப்பிடுறவர்ணு நெனைச்சுருப்பாங்க. காலைல போனா மீன் மார்க்கெட் அவ்வளவு சுத்தமா இருக்கு. கறுப்பு மீன் செவப்பு மீன், கறுஞ்சிவப்பு மீன், நீளமீன்னு வகை வகையா மீன்கள். கடல்ல ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு ஏரியா இருக்கு போல. சுருக்கமா சொன்னா ஒரு சீஸனுக்கு நம்மகிட்ட 20 வகையான மீன் கிடைச்சுதுன்னா, அவன்கிட்ட 40 வகையான மீன் கிடைக்கும். வகை வகையா இருக்கும், அழகழகா இருக்கும். அந்த அழகப்பாத்து ஒருநாள் நான் சாப்பிடனும்ணு நெனைச்சேன். அதே மாதிரி கேரளாவுல ஒரு சீஸனுக்கு போயிருந்தேன். வாழைக்காய் மாதிரி சீவிற்றான். சீவி இந்த முட்டைபஜ்ஜி மாதிரி போடுறான். சின்ன சைஸ்லேருந்து பெரிய சைஸ் வரைக்கும். சின்ன அப்பளத்தில இருந்து பெரிய அப்பளம் வரைக்கும் வகைவகையா. நடுவுல வெட்டுனா பெரிய அப்பளம், நுனியில வெட்டுனா சிறுசு. வகைவகையா வெட்டிப்போட்டான். அதுக்கு மத்தின்னு ஏதோ பேர் சொன்னான்.
குறிஞ்சி நிலம் குறித்து
தொ.ப. : அவனுக்குத்தான் உணவு சேகரிப்பு ரொம்ப எளிமையான விஷயம். ஒரு மானை ஒருநாளைக்கு அடிச்சுட்டான்னா ஒரு கிராமத்துக்கே ரெண்டு நாளைக்கு அது போதும். அவன்கிட்ட மீன் பிடித்தலும் உண்டு. அவங்க தூண்டில் வச்சிருப்பாங்க. அப்புறம் கிழங்கு.
சங்கர்ராம் :இன்னிக்கும் கேரள மக்கள் கிழங்கைத்தானே விரும்பிச் சாப்பிடறாங்க.
தொ.ப : மீனவ மக்கள்கிட்ட பேசிப்பாக்கனும் நீங்க. சாப்பாட்டப்பத்தி அவ்வளவு சொல்லுவான். பாளையங்கோட்டைக்காரன் போய்த்தான் வட்டிக்கு பணம்கொடுத்து கெடுத்துட்டான். தொழிலோட சீரழிவுக்கு அதுதான் காரணம்.
சங்க இலக்கியத்துல மரங்களோட பெயர்கள், பறவைகள் பெயர்கள் எல்லாமே தொகுக்கப்பட்டிருக்கு. அப்போ இலக்கியம் என்பதே ஒரு அதிகபட்ச உயிர்ச்சூழலை புவியியல் ரீதியா வந்து அடையாளப்படுத்தக்கூடிய விஷயமாத்தனே இருந்திருக்கு. அது பத்தி.
தொ.ப : சங்க காலத்துப் பெயர் இன்னும் சிலது இருக்கு. பெயரிடு மரபுண்ணு. குமரன் அப்படிங்கிற பெயர் இன்னும் இருக்கு. குறவர்கள்கிட்ட நிறைய இருக்கு தெரியுமா? நாமாதான் நவீனம் அப்படிங்ற பேர்ல விடமாட்டேன்கிறோம். நீலன். சாத்தன், கபிலன் இது மாதிரி நிறைய பெயர்கள குறவர்கள்கிட்ட நீங்க பார்க்கலாம்.
இப்போ சங்க இலக்கியம் பத்தி பாத்தோம். சிலப்பதிகாரத்துல இயற்கை பத்தி என்ன சொல்லியிருக்கு?
தொ.ப : அது பெரிய விஷயம். பெருமளவுக்கு சார்ந்திருக்கு. தலைகீழ் மாற்றங்கள் மாதிரி. அத தனியா பேசணும். சிலப்பதிகாரத்துலதான் நிறைய பூ பெயர்கள், தாவரங்கள், பெயர்கள் பதிவாகியிருக்கிறது.
கண்ணகிய மதுரையில இருந்து கூட்டிட்டு வரும்போது, என்னெல்லாம் இருக்கும் என்ன கிழங்குகள் இருக்கும், என்ன பூக்கள் எல்லாம் இருக்கும், முள்சார்ந்த பூக்கள் இருக்கும்கற விவரமெல்லாம் இருக்கு. இன்னின்ன மிருகங்கள்லாம் இருக்கும், நீ வரமாட்ட, பயப்படுவாய் அப்படின்னெல்லாம். அது பெருங்கடல், அதற்குள்ள நுழையறதுக்கே நம்மள தயார் படுத்திக்கணும்.
தொ.ப : மக்கள் வாழ்க்கைய தெளிவா பதிவு பண்ணியிருக்கு, நம்மால கண்டெடுக்கவும், கண்டுபிடிக்கவும் முடியாம இருக்கு. கண்ணகி கதை எல்லோருக்கும் தெரியும். 50 வருஷத்துக்கு முன்னயே அதை தெருக்கூத்தா ஆடியிருக்காங்க. அதே மாதிரி மணிமேகலை முழுக்க முழுக்க பவுத்தம்தான். அது பவுத்தக்கோட்பாட்டை விளக்குறதுதான். எல்லோருக்கும் சோறுகொடு, எல்லோருக்கும் கல்விகொடு எல்லோருக்கும் மருந்து. அதுதான் WHO உலக சுகாதார அமைப்பின் அடிப்படை முழக்கமும் கூட. அனைவருக்கும் சோறு அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் மருத்துவம்.
பூவுலகு, மார்ச் – ஏப்ரல் 2015
படங்கள் உதவி – பாமரன், அ.பெ.மணி, செல்வபிரகாஷ், இளஞ்செழியன்.