ஒரு பெரிய நிலப்பரப்பிற்கான நீர்ப்படுகையை, தன் வேரடிவாரத்தில் கொண்டுள்ள மலையை வெட்டி – வாகனச் சக்கரங்களில் தேயும் சிறுகல்லாகவும் நடைபாதைகளின் ஓரத்து கால்தூசியாகவும் ஆக்கிவிட நினைத்து நிகழ்ந்தது யானை மலையை அழிக்கும் முயற்சி. அதை எதிர்த்து மலையைக் காக்க சேர்ந்த எண்ணற்ற கரங்களில் தம்மையும் இணைத்துக் கொண்டதோடு துவங்கியது பசுமைநடை இயக்கம்.
பிறகு, வரலாற்றின் பூர்வகாற்றும் வாசமும் மிச்சமிருக்கும் மலைகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், இடங்களையும் காண ஒவ்வொரு முறையும் நூற்றக்கணக்காண நண்பர்களோடு பயணித்தது பசுமைநடை.
அன்றாடக்கூலி உழைப்பாளி முதல் விவசாயி, அலுவலர், ஆய்வு மாணவர், வல்லுனர்கள் வரை விரிந்தது பசுமைநடையில் பங்கேற்போர் வட்டம். தனது 25வது நடையை விருட்சத்திருவிழாவாகக் கொண்டாடியது. இது பசுமை நடை நடந்து வந்த பாதை.
மொழி, மதம், சாதி என்ற எல்லைகளைக் கடந்து இயற்கை, வரலாறு பற்றிய புரதலையும் விழிப்பையும் பொதுசமூகத்தில் உருவாக்க நினைப்பது பசுமைநடை நடக்க நினைக்கும் பயணம்.
காற்றின் சிற்பங்களிலிருந்து
இயற்கையையும், வரலாற்றையும் நோக்கிய பசுமைநடைப் பயணத்தில் 25வது நடை விருட்சத்திருவிழாவாகவும், 40வது நடைப் பாறைத்திருவிழாவாகவும் கொண்டாடினோம். 50 வது நடையை நீரை மையமாகக் கொண்டு கொண்டாட முடிவெடுத்த போது தமிழில் நீர் குறித்த தலைப்புகள் ஆச்சர்யம் ஊட்டியது. நீர் குறித்து ஏராளமான சொற்கள். நல்ல நீரைப் போல அவைகளையும் இன்று தொலைத்து விட்டோம் என்று அப்போதுதான் தெரிந்தது. 49வது பசுமைநடையில் அழகர்மலை கிடாரிப்பட்டி குன்றில் 50வது நடை குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அன்று மாலை சங்கம் ஹோட்டலில் 50வது நடையின் இலட்சினை வெளியீடும், இருஉரை நிகழ்வும் நடைபெற்றது. நூற்றைம்பதிற்கும் மேலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரையும், அதைத் தொடர்ந்து விஜயகுமார் அவர்கள் பாண்டியர் குடைவரையும் ஒற்றைக் கற்றளியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அரங்கிலிருந்த அனைவரையும் வடநாட்டில் தொடங்கி கழுகுமலை வரை அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார். அவரது இருஉரை நிகழ்வையும் தனியாக பதிவிட வேண்டும்.
இன்னீர் மன்றல் இலட்சினையை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயில் இணைஆணையர் நா.நடராஜன் அவர்கள் வெளியிட அஞ்சலி நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டார். அதற்கடுத்தாற் போல் ஆங்கிலத்தில் WATER FEST என இருந்த இலட்சினையை துர்கா முத்துக்குமார் வெளியிட பிரியா அவர்கள் பெற்றுக்கொண்டார். வந்திருந்த அனைவருக்கும் இலட்சினை வழங்கப்பட்டது.
பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் 50வது நடைக்கான தலைப்பை தேடிய அனுபவங்களைச் சொன்னார். நீர், வாவி, அடவி, சுனை, பொய்கை, தடாகம், தெப்பம், கண்மாய், குளம் என நீண்டுகொண்டே போன தமிழில் நீர் குறித்த சொற்களை அறிந்த போது ஏற்பட்ட வியப்பை குறிப்பிட்டார். முந்நீர் விழவு என பூவுலகின் நண்பர்கள் வைத்தது போல தலைப்பை தேடிய போது திருமங்கலத்தில் வசிக்கும் சூழலியல் அறிஞர் பாமயன் சொன்ன தலைப்புகளில் இன்னீர் மன்றல் நன்றாகயிருந்ததாகக் குறிப்பிட்டார். இன்னீர் மன்றல் விழாவில் நீர் மேலாண்மை மற்றும் நீராதாரங்கள் குறித்த உரை நிகழ்வும் இருக்குமென குறிப்பிட்டார். மேலும், பசுமை உங்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கும், விருந்தினர்களுக்கும் மதுரையிலுள்ள ஷாப்பிங்மால்களை சுற்றிக்காட்டாமல் தொன்மையான மலைகளுக்கும், இடங்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள் என்பதுதான்.
மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் அவர்கள் பசுமைநடை குழுவின் செயல்பாடுகளை வாழ்த்தினார். மேலும், அந்தக் காலத்தில் நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியதைக் குறிப்பிட்டார். தான் பிறந்த பழனிக்கருகில் சண்முகநதியில் நீர் பங்கீடை உதாரணமாகக் கொண்டு பேசினார். ஒரு பெரிய ஏரியில் ஆறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி ஒவ்வொரு தடுப்பனையிலிருந்து வெளியேறும் நீரும் நாலைந்து கண்மாய்களுக்குச் செல்லும். ஒரு கண்மாய் நிறைய மறுகண்மாய்க்கு நீர் செல்லும்படியிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார். நாம் மேற்கத்திய தொழில்நுட்பங்களை மட்டும் நம்பாமல் பாரம்பரிய முறைகளையும் கற்க வேண்டும்.
அஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்நாதன் அவர்கள் பசுமைநடை குறித்தும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். முன்னெல்லாம் மாதம் குறைந்தபட்சம் ஒரு புத்தகம் படித்ததாகவும், வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்ததாகவும் சொன்னார். வாட்ஸ்அப் வந்த பிறகு வாசிப்பு பழக்கமே சில மாதங்களாக அருகிவிட்டதைக் குறிப்பிட்டார். ஒன்றிருக்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து அலைபேசிக்கு வரும் நூற்றுக்கணக்கான தகவல்களைப் பார்க்கவே இப்போதெல்லாம் நேரமில்லை என்றார். அதனால், இன்றைய தலைமுறையைக் கவரும் வண்ணம் புத்தகங்களைவிட ஒலியும் ஒளியுமாக ஒரு விசயத்தை எடுத்து எல்லோருக்கும் அனுப்பினால் அதைக்குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றார். நயாகரா நீர் வீழ்ச்சிக்கு போன போது அதன் வரலாறை அவர்கள் சொல்லும் போது நம்ம ஊர் அருவிகள் குறித்து அறியாதது சங்கடமாக உள்ளது என்றார். உள்ளூர் வரலாற்றை அனைவருக்கும் பகிரும் பசுமைநடை மேன்மேலும் வளர வாழ்த்தி விடைபெற்றார்.
எல்லோரும் குழந்தையைத் தத்தெடுப்பார்கள் நாங்கள் ஒரு ஞானத் தந்தையையே தத்தெடுத்திருக்கிறோம் என சாந்தலிங்கம் அய்யா குறித்த அறிமுகத்துடன் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். சாந்தலிங்கம் அய்யா தமிழரின் அன்றைய நீர் மேலாண்மைக்கு நல்லதொரு உதாரணம் சொன்னார். கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே கூன்பாண்டியன் என்ற நீர்சீர் நெடுமாறன் வைகை நதிக்கு நடுவே (மதுரை குருவிக்காரன் பாலத்துக்கு அருகில்) ஒரு அணையைக் கட்டி நீரை திருச்சுழி வரை கொண்டு சென்றதாக ஒரு கல்வெட்டு மதுரை மீனாட்சியம்மன்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளதாகச் சொன்னார். அதில் அரிகேசரி மதகு எனப் பெயர் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பசுமைநடை நண்பர்கள் அவருடைய ஓய்வு காலத்தில் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாக குறிப்பிட்டார். வடநாட்டில் உள்ள இடங்களைப் பார்க்க பணிபுரிந்த காலத்தில் வசதியும் இல்லை, நேரமும் இல்லை எனக் சொன்னார். பாண்டியன் குடைவரைகள் குறித்து விஜயகுமார் அவர்கள் பேசியதைப் பாராட்டினார்.
இன்னீர் மன்றல் நிகழ்விற்கு அறிமுகமாக இதுவரை நடந்த நடைகளின் எடுத்ததையெல்லாம் ஒலிஒளிப்படமாக அருண் தொகுத்த முன்னோட்டம் அட்டகாசமாகயிருந்தது. அருணை அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர்.
அதைத்தொடர்ந்து சிலைத்திருட்டையும், மீட்பையும் குறித்து இந்திய பழம்பொருள் பாதுகாப்புச் சட்டத்தில் பிரச்சனைகள் என்ன? என்ற தலைப்பில் விஜயகுமார் அவர்கள் அருமையானதொரு உரை நிகழ்த்தினார். பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இளஞ்செழியன் நன்றியுரை கூறினார். மதுர வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பசுமைநடையில் முதல் அரங்க அமர்வு வெற்றிகரமாக நடந்தது. ஆலமரத்தடியில் இன்னீர் மன்றலில் சந்திப்போம்.
படங்கள் உதவி – தமீம் அன்சார், வஹாப் ஷாஜகான், செல்வம் ராமசாமி