Archive for the ‘வழியெங்கும் புத்தகங்கள்’ Category

தொ.பரமசிவன் அய்யாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய பேரா. ம. பெ. சீனிவாசன் தாம் எழுதிய ‘பரிபாடல் – திறனுரை’ நூலுக்கு தொ.ப. எழுதிய சிறு குறிப்பினை பற்றிக் குறிப்பிட்டார். சமீபத்தில் ‘பரிபாடல் – திறனுரை’ நூலில் ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்ற வாழ்த்துரையை வாசிக்க முடிந்தது. தொ.ப.வின் நூல்களில் இதுவரை இடம்பெறாத, அவரது கையெழுத்தில் அமைந்த இந்த உரையைப் பகிர்கிறேன்.

முன்னுரையில் ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு:

பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி முடிக்கப்பெற்ற உரை இது. எனினும் இப்போதுதான் வெளி வருகின்றது. ‘பரிபாடல் அறிமுகம்’ என்னும் முகவுரைப் பகுதியைப் படித்துவிட்டு 2010இல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவராய் விளங்கிய பேராசிரியர் அறிஞர் தொ. பரமசிவன் எனக்கொரு பாராட்டுக் குறிப்பினை அனுப்பியிருந்தார். ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்பது அதன் தலைப்பு, அதனைச் சில மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்த போது, ‘நூலினை உடனே வெளியிட்டாக வேண்டும்’ என்ற வேகம் பிறந்தது. கைகொடுத்து உதவினார் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எஸ்.சண்முகம் அவர்கள். அவருக்கு என் நன்றி உரியது.

என்னுடன் நாற்பத்தேழு ஆண்டுக்கால இலக்கியத் தோழமை கொண்டிருந்தவர் அறிஞர் தொ.பரமசிவன். இன்று அவர் நம்மோடு இல்லை. எனினும், ‘எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்’ இளவலை நினைந்து நெகிழ்கிறேன். அவரின் பொன்னான நினைவைப் போற்றுகிறேன்.

தொ..வின் வாழ்த்துரை:

பேரா.ம.பெ. சீனிவாசன் தமிழ் எழுத்துலகில் அறிமுகம் வேண்டாத எழுத்தாளர். ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவராக அவர் ஆக்கித் தந்த நூல்கள் தமிழ் இலக்கிய மாணவர்க்கும் ஆய்வாளர்க்கும் பெருவிருந்தாவன.

பேராசிரியர் இப்பொழுது தமிழ்ச் செவ்விலக்கிய ஆய்வுகளிலும் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார். திருமுருகாற்றுப்படையினைத் தொடர்ந்து இப்பொழுது பரிபாடலுக்கு உரை வரைந்துள்ளார். நம்மைப் பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்.

மாணவர்களின் தேர்வுக்குரிய பதவுரை, பொழிப்புரையாக அன்றி அவருக்கேயுரிய மயக்குகின்ற மொழிநடையில் வரையப்பட்டுள்ளது இந்நூல். பழந்தமிழ் ஆய்வு முன்னோடிகள் கலித்தொகையினைப் ‘பாண்டிநாட்டு இலக்கியம்’ என்றும் பரிபாடலை ‘மதுரை இலக்கியம்’ என்றும் குறிப்பிடுவர். பக்தி இலக்கியத்தின் இசைப் பங்களிப்புக்கும் பரிபாடலே வழிகாட்டி. ஆயினும் இப்பாடல்கள் பாடப்பட்ட முறையினை அறிய இயலாமற் போனது தமிழர்க்குப் பேரிழப்பே.

தொல்காப்பியம் தொடங்கி உரையாசிரியர்கள் வழிவரும் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், பேரா. நா.வா.வின் பரிபாடல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் உள்வாங்கியிருப்பது அவரது வாசிப்புலகத்தின் வீச்சினை நமக்குக் காட்டுகிறது. உரைச் சிறப்புக்குச் சற்றும் குறையாத மிடுக்கோடு அமைந்துள்ளது, பேராசிரியரின் முன்னுரைச் சிறப்பு. இம்முன்னுரையைப் படித்தபோது உ.வே.சா. ஊன்றிய வித்துக்கள் வீண் போகவில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது. மு.அருணாசலம் அவர்களின் தமிழிசை இலக்கண வரலாறு வெளிவந்துள்ள சூழலில் இந்த இசைநூல் உரையும் வெளிவந்திருப்பது சிறப்பு.

பழந்தமிழ் இலக்கியப் பணியில் முன்னடி வைத்திருப்பதாகப் பேராசிரியர் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், அம்முன்னடியே பொன்னடியாக ஒளிர்கிறது. தமிழிலக்கிய ஆய்வாளர்கள் இவரது தடம் பற்றி நடப்பார்களாக. பேராசிரியர்க்குத் தமிழுலகின் சார்பாக நமது நன்றி கலந்த பாராட்டுகள்.

நன்றி : ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

சமணமலை மதுரையில் எனக்கு நெருக்கமான இடம், மிகவும் பிடித்தமான இடம். 14.11.2010இல் நானும் தமிழ்ச்செல்வ அண்ணனும் பசுமை நடை சென்றபோது செட்டிப்பொடவு, பேச்சிப்பள்ளம் எல்லாம் போய் பார்த்தோம். செட்டிப்பொடவில் திருவிழாக்களின் தலைநகரம் முதல்பதிப்பு 2019இல் வெளியானதும், இரண்டாம்பதிப்பு 2022இல் பேச்சிப்பள்ளத்தில் வெளியானதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

இரண்டாண்டுகளுக்குப்பின் சமணமலையில் நடந்த பசுமை நடை நிகழ்வில் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமையன்று இந்நூலை டோக்பெருமாட்டி கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் நிம்மா எலிசபெத் அவர்கள் வெளியிட இயற்பியல் துறை பேராசிரியை முனைவர் ஆரோக்கிய சியாமளாவும், பசுமை நடைத் தோழமைகளும் பெற்றுக்கொண்டனர்.

திருவிழாக்களின் தலைநகரம் முதலாம் பதிப்பு 1000 நூல்கள் விற்று, அடுத்த பதிப்பு வந்த அன்று இந்நூல் எழுதியதற்கான ராயல்டி தொகையாக 13,000 ரூபாய் பசுமை நடையினரால் சமணமலை அடிவாரத்தில் தேநீர்கடை நடத்திவரும் ஜெயமணி அம்மாவின் கரங்களால் எனக்கு வழங்கப்பட்டது. இது எதிர்பாராமல் வந்த பரிசு. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் ’மதுர வரலாறு’ நூலை வெளியிட்ட போது முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் ஜெயமணி அம்மா என்பது என் நினைவிற்கு வருகிறது.

திருவிழாக்களின் தலைநகரம் நூல் தந்த விதை நெல்லை அடுத்த வெளியீட்டில் சமூகத்திற்கு சரியான வகையில் திருப்பியளிப்பேன் என்ற உறுதியை இக்கணம் கூறிக்கொள்கிறேன்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

டோக் பெருமாட்டி கல்லூரி இயற்பியல் குடும்பத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இக்கணத்தில் இந்நூல் உருவாக உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனை காக்கும் மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இனிமேலும் வரங்கேட்கத் தேவையில்லை! இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை!

பால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.

அப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.

பசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.

மதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.

பசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.

பவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.

வம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.

இந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

சுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா எளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.

ஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)

பெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்?

வாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.

(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)

https://www.youtube.com/user/bavachelladurai

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB

மரணத்தில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமிருக்கவே செய்கிறது. அழுகையின் கதியும் மாறுபடுகின்றன. பெண் இறப்பின் போது, மண்சுவரில் பெய்யும் மழை போல நினைவுகளைக் கரைத்துக் கொண்டு ஓடுகிறது அழுகை. அதுவே, ஆணின் மரணத்தில் தகரத்தில் பெய்யும் மழை போல உரத்த ஒப்பாரி, ஓங்கிய அழுகை. அங்கே நினைவுகள் கரைவதில்லை, மாறாகத் தெறித்து விழுகின்றன. மயானம் பெண்களின் காலடி படாத உலகம்.

– எஸ்.ராமகிருஷ்ணன்

மலையாளத்தில் கல்பட்டா நாராயணன் எழுதிய ‘இத்ர மாத்ரம்’ என்ற நாவலை கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பில் சுமித்ரா என தமிழில் வந்ததை பொங்கல் விடுமுறையில் செங்கோட்டை பேசஞ்சரில் வாசித்தபடி சென்றேன். சிறிய நாவலானாலும் என்றும் மனதில் நிற்கும் நாவலாகயிருந்தது அதன் கதை. அதற்கு எஸ்.ரா. எழுதிய முன்னுரையை தனிப்பதிவாகவே போடலாம். அத்தனை சிறப்பு. இத்ர மாத்ரம் என்ற பெயரில் இந்நாவல் மலையாளப் படமாக வந்துள்ளதை அறிந்து அதைத் தரவிறக்கிப் பார்த்தேன். ஸ்வேதா மேனன் சுமித்ராவாக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்நாவலை மீண்டும் எடுத்து வாசிக்க காரணம் மரணம். ஆம், சகோதரியொருவரின் அகால மரணமே மீண்டும் இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. இந்நாவல் 38 வயதான சுமித்ரா மரணத்திலிருந்து தொடங்குகிறது. மரண வீட்டிற்கு வரும் மனிதர்கள் வாயிலாக சுமித்ராவின் வாழ்க்கை உயிர்பெறுகிறது.

sumithra rapper

சுமித்ரா நாவல் கேரளாவின் வயநாட்டு கிராமமொன்றின் சித்திரமாக திகழ்கிறது. அங்கு விளையும் பயிர், அங்குள்ள வீடுகளின் அமைப்பு, அங்கு வாழும் மலைவாழ் மக்களான பணியர்களின் வாழ்க்கை என ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது நம்மையும் அப்பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது கல்பட்டா நாராயணின் எழுத்து. அவர் கவிஞராக இருந்து எழுதிய முதல் நாவல். ஒவ்வொரு பக்கத்திலும் கவித்துவமான வரிகள் நிரம்பிக்கிடக்கிறது. இந்நாவலை படமாக எடுக்கையிலும் ஒவ்வொரு அத்யாயம் போல பெயர் போடுவது சிறப்பு. ஒரு நாவலை படமாக்கும் கலையை அறிய இத்ர மாத்ரம் படம் பார்த்தால் போதும். அந்நாவலின் ஆன்மா குலையாமல் படமாக்கியிருக்கிறார்கள். கல்பட்டாவும் அப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

swethamenon

மரண வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் சுமித்ராவுடனான நினைவுகளை எண்ணிப் பார்க்கிறார்கள். தன்னை சிறுவயதிலிருந்து வளர்த்து கல்லூரி நாட்களில் தன் காதல் குறித்தெல்லாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தாயாக, தோழியாக இருந்த சுமித்ரா குறித்த புருஷோத்தமனின் நினைவு, சுமித்ரா இறப்பதற்கு முதல்நாள் தன் குடிகார கணவனிடமிருந்து பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் நகையைக் கொடுத்து வைத்த மரியாக்காவின் பதற்றம், எப்போதும் அமைதியாக இருக்கும் சுமித்ராவின் மகள் அனுசுயா அம்மா உடலைக் கண்டு கதறி அழுது கட்டிப்பிடித்து முத்தமிடுவது, சுமித்ராவிடம் தன் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் தோழி கீதா தனக்கு இனி இறந்த காலமே இல்லையென எண்ணுமளவிற்கான அவளது வாழ்க்கை, சுமித்ராவோடும் கீதாவோடும் படித்த சுபைதா என பலர் வருகிறார்கள். ஒவ்வொருவர் வருகையிலும் சுமித்ரா பழங்கலத்திலிருந்து உயிர்பெற்று வந்துகொண்டேயிருக்கிறாள்.

ithramathram

வீட்டில் தனிமையில் வாழும் பெரியவருக்கு ஆறுதலாக, அவர் பசி போக்க உப்புமா கிண்டிக் கொடுக்கும் மகளாக இருக்கும் சுமித்ராவிற்கு அவர் சொன்ன ஆருடம் பொய்த்து போனதை கண்டு கலங்குகிறார். அந்த ஊரில் உள்ள பெண்களிடமெல்லாம் உரிமையாக பழகும் தாசன் கதாபாத்திரம் நம்மை ஈர்க்கிறது. தாயின் பயணத்திற்கு பிறகு தேசாந்திரியாய் வாழும் தாசன் எப்போதாவது ஊருக்கு வருகிறான். வரும்போது அங்குள்ள மனிதர்களிடம் வாஞ்சையாய் நடந்து கொள்கிறான். இரவு சர்க்கஸ் பார்க்கச் செல்வதென்றாலும் தாசனின் கரம்பிடித்து தைரியமாய் நடந்து செல்லலாம் பெண்கள். பணிச்சி இனப்பெண்ணாக வரும் கருப்பி, துணிதுவைக்கும் மாதவனின் மனைவியான மாதவி. இவர்களெல்லாம் சுமித்ராவின் தோழிகள்.

இராசாயன உரங்கள் போட்டதால் வயல்களில் நண்டுகள் இல்லாமல் போய், வயநாட்டில் நரிகள் கூட இல்லாமல் போய்விட்டதை நாவலின் வாயிலாக அறிய முடிகிறது. பல்துலக்காவிட்டாலும் பளீறிடும் பற்கள் கொண்ட கருப்பியை டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கெதிராய் சுமித்ரா எண்ணுவாள். பிற்பாடு இராசயன உரங்களால் அவர்களது பற்களும் மஞ்சள் படிந்து உடைவதைப் பார்க்கிறாள். இதெல்லாம் தனியாக துருத்தித் தெரியாமல் நாவலினூடாக வருகிறது. கேரள கிராமங்களில் வீட்டையொட்டி நெல் குதிர்கள், உரல் வைக்கப் பயன்படும் அறைதான், பழங்கலம். சுமித்ரா திருமணமாகி வந்ததலிருந்து பெரும்பாலான நேரங்களைக் கழிப்பது அந்த இடத்தில்தான். நம் ஊர் பெண்களுக்கான கிணற்றடிபோல. (இப்போது கிணறுகள் இல்லையென்பது தனிசோகம்).

ஜனவரி மாத இறுதியில் திருநெல்வேலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வந்த அலைபேசிச் செய்தி வாயிலாக என்னோடு முன்பு பணியாற்றிய சகோதரியொருவர் மரணமடைந்துவிட்டார் என்றதைக் கேட்டதை மனம் அதிரத் தொடங்கியது. அவர் வாழ்க்கை போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாய் ஒரு பக்கம் தோன்றினாலும் மனது மிகவும் கனத்துக்கிடந்தது. என்னைவிட மூத்தவரானாலும் என்னை ‘அண்ணே’ என்றே அழைப்பார். மிகவும் பாசமானவர். ஏராளமான பிரச்சனைகளோடு இருந்தாலும் எப்போதும் சிரித்தபடி அதை சமாளித்து வந்தார். உடலில் புதிதாய் ஒரு நோய் வந்தது. அதற்கும் பெரிய மருத்துவமனைகளில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் பேரதியசமாக அரசுப்பணி லஞ்சம் ஏதும் இல்லாமல் தகுதி அடிப்படையில் அவருக்கு கிடைத்து வெளியூர் சென்றார். சென்ற கொஞ்ச நாட்களில் மீண்டும் அந்த நோய் முற்றி மரணத்தோடு போராடி விடைபெற்றார். இத்ர மாத்ரம் என்ற நாவலின் நாயகியைப் போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை விட்டு நாற்பது வயதிற்குள்ளாக காலமானார். அச்சகோதரியின் நினைவு இந்நாவலோடு எனக்குள் நிறைந்துவிட்டது.

title

எஸ்.ராமகிருஷ்ணன்

லா.ச.ராமாமிர்தம்

லா.ச.ராவண்ணநிலவன்

பாற்கடல்

novel1

சஞ்சலத்தில் சஞ்சாரம் செய்யும் மனதிற்கு சஞ்சீவியாக நாவல்கள் திகழ்கின்றன. நாவல்கள் நம்மை உலகின் பல பிரதேசங்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் அழைத்துச் செல்லும் காலயந்திரம்.

எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நாவல் பட்டியலில் 25ஐ கடந்த போது அதைத்தவிர்த்த நாவல் பட்டியலைப் பார்த்தால் 75ஐ தாண்டியிருந்தது. அப்போதே நூறை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது. கடந்து சில மாதங்களாக வாசிப்பை முடுக்கிவிட்டு நிறைய நாவல்கள் வாசித்தேன். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் நூலகத்திலிருந்து பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எடுத்து வந்தேன். சமீபத்தில் வாசித்த தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’யோடு நூறாவது நாவல் ஆசை நிறைவேறியது.

novel2

வாசித்த நாவல்களில் மனதை கவர்ந்த மாந்தர்கள், மனதைத் தொட்ட வரிகள், பார்க்க விரும்பிய இடங்களை தொடர்ந்து எழுத நினைத்துள்ளேன். இந்த நூறு நாவல்களைக் குறித்தும் ஒரு பக்கமாவது எழுத ஆசை. இந்தப் பதிவில் நான் வாசித்த நூறு நாவல்கள் பட்டியலை மட்டும் சேர்த்துள்ளேன். இளங்கலைத் தமிழ் தொலைநிலைக் கல்வி வாயிலாகப் படிக்கையில் அதில் ஜெயகாந்தனின் சுந்தர காண்டம் பாடப்பகுதியாக இருந்தது. அந்நாவல் வாசிக்காமலேயே அதன் சுருக்கத்தை வாசித்தே காலத்தை ஓட்டுவிட்டேன். பாடப்புத்தகமாக ஒரு நாவல் வரும் போது ஏற்படும் சிக்கல் என் வாழ்விலும் வந்துவிட்டது. அதே போல ஆயிரம் பக்க நாவல்களான பூமணியின் அஞ்ஞாடி, பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் பாதியோடு நின்றுபோனது. மீண்டும் ஒரு வாரம் வாசிப்பின் வெறியேறினால் அவைகளை வாசிக்க முடியுமென நம்புகிறேன்.

novel3

  • பார்த்திபன் கனவு – கல்கி
  • பொன்னியின் செல்வன் – கல்கி
  • கன்னிமாடம் – சாண்டில்யன்
  • சித்தரஞ்சனி – சாண்டில்யன்
  • வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
  • கிருஷ்ண பருந்து – ஆ.மாதவன்
  • குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்
  • நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
  • ஆகாயத்தாமரை – அசோகமித்திரன்
  • தண்ணீர் – அசோகமித்திரன்
  • பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்
  • வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
  • அபிதா – லா.ச.ராமாமிருதம்
  • பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
  • புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
  • கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்
  • ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
  • ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  • கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  • புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
  • குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
  • பிறகு – பூமணி
  • ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
  • சாய்வு நாற்காலி – தோப்பில் முகமதுமீரான்
  • எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்

novel9

  • கம்பாநதி – வண்ணநிலவன்
  • கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  • ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
  • அலைவாய்கரையில் – ராஜம் கிருஷ்ணன்
  • குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
  • நளபாகம் – ஜானகிராமன்
  • தூர்வை – சோ.தர்மன்
  • கூகை – சோ.தர்மன்
  • மின்னுலகம் – நீல.பத்மநாபன்
  • பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்
  • எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில்நாடன்
  • கொற்றவை – ஜெயமோகன்
  • விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  • காடு – ஜெயமோகன்
  • வெள்ளையானை – ஜெயமோகன்
  • கன்னியாகுமரி – ஜெயமோகன்
  • உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  • உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
  • நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
  • யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  • துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  • நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  • சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  • இடக்கை – எஸ்.ராமகிருஷ்ணன்
  • பதின் – எஸ்.ராமகிருஷ்ணன்
  • சிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்
  • அக்கடா – எஸ்.ராமகிருஷ்ணன்
  • நிழல்முற்றம் – பெருமாள் முருகன்
  • மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
  • ஆழிசூழ் உலகு – ஜோ.டி.குருஸ்
  • கொற்கை – ஜோ.டி.குருஸ்

novel10

  • ஏழரைப்பங்காளி வகையறா – எஸ்.அர்ஷியா
  • பொய்கைகரைப்பட்டி – எஸ்.அர்ஷியா
  • அப்பாஸ்பாய்தோப்பு – எஸ்.அர்ஷியா
  • கரும்பலகை – எஸ்.அர்ஷியா
  • சொட்டாங்கல் – எஸ்.அர்ஷியா
  • கல்மரம் – திலகவதி
  • நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்
  • எங்கதெ – இமையம்
  • தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  • கன்னி – பிரான்சிஸ் கிருபா
  • காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
  • மிளிர்கல் – இரா.முருகவேள்
  • ஆட்டம் – சு.வேணுகோபால்
  • நிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
  • கூந்தப்பனை – சு.வேணுகோபால்
  • திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
  • பால்கனிகள் – சு.வேணுகோபால்
  • மணற்கேணி – யுவன்சந்திரசேகர்
  • கானல்நதி – யுவன்சந்திரசேகர்
  • ஊர்சுற்றி – யுவன்சந்திரசேகர்
  • நட்டுமை – ஆர்.எம்.நௌசத்
  • குன்னிமுத்து – குமாரசெல்வா
  • துருக்கித் தொப்பி – கீரனூர் ஜாகிர்ராஜா
  • கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா
  • மீன்காரத்தெரு – கீரனூர் ஜாகிர்ராஜா
  • கருப்பாயி என்ற நூர்ஜகான் – அன்வர் பாலசிங்கம்
  • கானகன் – லஷ்மிசரவணக்குமார்
  • பருக்கை – வீரபாண்டியன்
  • சேவல்கட்டு – ம.தவசி
  • கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
  • கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
  • சித்திரப்பாவை – அகிலன்

novel4

மொழிபெயர்ப்பு நாவல்கள்

  • அந்நியன் – ஆல்பெர் காம்யூ
  • ஜமீலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
  • ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) – சிங்கிஸ் ஜத்மதேவ்
  • அன்னைவயல் – சிங்கிஸ் ஜத்மதேவ்
  • எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
  • பால்யகால சகி – வைக்கம் முகமது பஷீர்
  • பாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர்
  • மதில்கள் – வைக்கம் முகமது பஷீர்
  • தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
  • இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்
  • சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா
  • கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

novel5

வாசித்த எல்லா நாவல்களும் எனக்கு நெருக்கமான நாவல்கள் என்பதே உண்மை. வாசித்த நாட்களில் அந்த கடற்கரைகளில், மலைகளில், வீதிகளில் அந்த மனிதர்களோடு அலைந்து திரிந்தேன். அவர்களது கஷ்டம் என்னையும் உலுக்கியது. பல கதாமாந்தர்களை எனக்கு நெருக்கமான மனிதர்களைப் போல இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். 2018ல் 25 நாவல்களும், 1000 சிறுகதைகளும் வாசிக்க வேண்டுமென்ற இலக்கோடு பயணிக்கிறேன். படித்து பதிவிடுகிறேன். நன்றி.

novel7

பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாவலையும் யார் யாரிடம் வாங்கினேன், எந்தெந்த நூலகங்களில் எடுத்தேன், எந்தெந்த நாவல்கள் பரிசாக வந்தது, எந்தெந்த நாவல்களை நான் வாங்கி வாசித்தேன் என நினைவில் உள்ளது. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. நாவலாற்றின் கரையில் நான் என்ற பதிவில் நான் நாவல் வாசிக்க வந்த கதையை விரிவாக எழுதியுள்ளேன்.

novel6

நாவல்களின் அட்டைப் படங்கள் எல்லாம் கூகுளில் இருந்து எடுத்துள்ளேன். அட்டைப்படங்களை வடிவமைத்த கலைஞர்களுக்கு நன்றி. மேலும், மின்னுலகம் நாவலின் அட்டைப்படம் மட்டும் கிடைக்காததால் அதை நான் வடிவமைத்துள்ளேன்.

novel8

Front Cover Sottangalநாலாபக்கமும் கண்ணாடி பொருத்தப்பட்ட அறைக்குள் நுழைந்தால் நாமே அறை முழுவதும் வியாபித்திருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதுபோலத்தான் சொட்டாங்கல் நாவலை வாசிக்கையில் தோன்றியது. கதையில் வரும் எல்லா இடங்களிலும் நானும் நிறைந்திருப்பது போன்ற உணர்வைத் தந்தது. கதையில் வரும் சில பக்களினூடாகத்தான் தினந்தோறும் பயணிப்பதால் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் நானே நின்று வேடிக்கை பார்த்தபடி செல்வது போலிருந்தது. இந்நாவல் என்னை ஈர்த்த விதத்தை கொஞ்சம் பத்திகளில் சொல்ல முயல்கிறேன்.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மதுரை மாநகரம் நாலாபக்கமும் வளர்ந்ததைப் போல வைகையின் வடகரையில் கோரிப்பாளையம் தர்ஹாவைச் சுற்றி வளர்ந்த ஊர்களின் கதையைச் சொல்கிறது. மதங்கடந்து மனிதநேயத்தை வளர்த்த இறைநேசரின் தர்ஹாவில் தொடங்கும் கதை அதைச் சுற்றிய மக்களின் கதையாகி அவுலியாவின் சந்தனக்கூடு விழாவோடு முடிகிறது. மதுரை கோரிப்பாளையம் தர்ஹா பாண்டியர் காலந்தொட்டே புகழ்பெற்றது. அரண்மனை மராமரத்துக்கு கொண்டு சென்ற கல் கோரிப்பாளையத்தைவிட்டு நகர மறுக்கிறது. அவுலியாவின் விதானக்கல்லுக்கு அதை அவரே தேர்வு செய்த கதையெல்லாம் நாவலில் வருகிறது.

18512_805820796171521_973933649478453124_n

Kuthiraiஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சித்திரங்களில் குதிரையை பல விதமாய் வரைந்திருக்கிறார். வேளார்தெருவில் குதிரைகள் செய்வதை இளம்பிராயத்தில் பார்த்த நினைவுகளை ஒரு நேர்காணலில் ஓவியர்  கூறியிருக்கிறார். அந்த வேளார் தெரு எப்படி உருவானது என்பதையெல்லாம் சொட்டாங்கல் கூறிச் செல்கிறது. அய்யங்கோட்டை கிராமத்தில் வாழும் ஆகாசம்பிள்ளையின் கனவில் வந்த கருப்புசாமி சாயபுமார் எல்லைக்கு போகச் சொல்கிறார். ஆகாசம்பிள்ளை வந்து விசயம் சொன்னதும் அவர் எங்க சீயான்ல என சாயபுமார்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல கோயில்காசை ஆட்டைய போட்ட சந்தனத்தேவரும் இப்பகுதி வந்து சேர்ந்து ஓர் ஆட்டை அடித்துப் போட்டு அழிந்து போகிறார். ஒவ்வொரு சமூகமும் கோரிப்பாளையம் தர்ஹாவை சுற்றி வந்து சேர்கிறது. கோயிலுக்கு சற்று தொலைவில் வேதக்காரப் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே கதீட்ரல் தேவாலயம் உருவாகிறது.

CIMG5079

சையத் சிராஜ்தீன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர். அவர் வைத்திருக்கும் அரசமரஸ்டோர் மஞ்சப்பையில் எவ்வளவு நினைக்குறாரோ அவ்வளவு பணம் நிரப்புவதில் வல்லவர். ஆனால், அவரது இரு மகன்களும் அதை அனுபவிக்க முடியாமல் செய்து விடுகிறது காலம். மூத்த மகன் ரப்யூத்தின் இளமையில் வீட்டைவிட்டு போய் டெல்லியில் பெரிய அதிகாரியாகிவிடுகிறார். இன்னொரு மகன் காஜா படிக்கையில் சல்லித்தனம் செய்து ‘காட்டுப்பய’ என அழைக்கும் தொனியில் காட்டுவா’வாகி விடுகிறான். சிராஜ்தீனின் வீடிருந்த இடத்தை அமைச்சரின் அடியாள் கைப்பற்றி விடுகிறான். தாத்தா சேர்த்ததை பேரன் அழிப்பான் என்பார்கள். இங்கே மகன்கள் சரியில்லாததால் சேர்த்தவரோடே போய்விடுகிறது.

ஒரு திரைப்படம் வெளியாகும் போதே அந்த நடிகருக்கு ரசிகர் மன்றம் தொடங்கும் மதுரையில், கமலும் ரஜினியும் உச்சத்திலிருந்த 80களின் காட்சியை அழகாய் படம்பிடிக்கிறார். அப்போதெல்லாம் படம் வெளியாகும் போது திரைப்பட போஸ்டர்களை வரைவார்கள். முதல்நாள் முதல்காட்சி பார்ப்பது அப்போதெல்லாம் பெரிய சாகசம். இப்போது போல டீசர் டிரைலரெல்லாம் இல்லாத காலம். கமல் ரசிகரான காஜா தன் நண்பனோடு தலைவரின் போஸ்டர் பார்க்கப் போக அங்கு வரும் ரஜினி ரசிகர்களுடன் கைகலப்பாகிறது. கடைசியில் கமல் மன்றம் தீப்பிடிக்க, ரஜினி ரசிகர்களை சிறைபிடிக்க தலைவர் படத்தை முதல்காட்சி பார்க்கமுடியாததால் அவர்களுக்கு துக்க தீபாவளி-ரம்ஜானாகிறது அந்நாள்.

A_still_from_rescue_operations_in_Maduraiமதுரையில் 1994ல் வந்த பெருவெள்ளத்தில் வைகைக் கரையோரம் இருந்த குடிசைகள் மற்றும் செல்லூர் பகுதி பலத்த சேதமடைந்தது. அப்போது கண்மாய்கள் எல்லாம் நிரம்பி வைகையை நோக்கி வந்தன. வயிற்றுமலை பக்கமிருந்து வந்த வெள்ள நீர் கூடல்நகர் வழியாக செல்லூர் கண்மாயை அடைந்து உடைந்து ஊரே நீர் சூழ்ந்து விட்டது. அதில் மாட்டியதை எல்லாம் எங்கள் உறவினர்கள் சொல்ல கதையாய் கேட்டிருக்கிறேன். வெள்ளம் போன்ற பேரழிவுக்காலங்களில் மனிதர்களுக்குள் மனிதம் துளிர்ப்பதை நாவலில் அழகாய் பதிவு செய்திருக்கிறார்.

Sottankal Back Coverமதுரை போன்ற தென்மாவட்டங்களைச் சூழ்ந்த பெருவியாதி சாதி. இவிங்ஙளுக்கு அவிங்களப் பிடிக்காது. அவிங்களுக்கு இவிங்ஙளப் பிடிக்காது. ஆனாலும், இது ஒட்டு மொத்த மனநிலை இல்லை என்பதை நாவலில் ஓரிடத்தில் பதிவு செய்கிறார். அவங்ங ரொம்ப பாசக்காரங்ங என இன்னொரு சாதிக்காரர் சொல்வது முக்கியமான இடம். இதே எண்ணத்தோடு உள்ள நாவலின் முக்கிய கதாபாத்திரமான காஜாவை ஒரு சிலர் மாற்றி சல்லித்தனம் செய்ய வைக்கிறார்கள். கடைசியில் செய்யாத கொலைக்கு போலீஸ் தேட மறைந்து இருந்து வாழ்க்கை வீணாகிறது.

காட்டுவா(காஜா) தேன்மொழி காதல் அத்யாயம் அத்தனை அழகு. அழகை ஆராதிக்கத் தெரியாத கணவனிடம் காலங்கழிக்கும் தேன்மொழி, பிள்ளைகள் வளர்ந்த சூழலிலும் காட்டுவாவின் காதலில் வீழ்கிறாள். அழகை கொண்டாடும் காட்டுவாவின் பின்னால் வர அவள் தயாராய் இருக்கும் சூழலில் காட்டுவா மறைந்துவாழும் சூழல் வருகிறது. நாவலின் கடைசி அத்தியாயங்களில் தேன்மொழியின் துர்மரணத்தை  சில வரிகளில் சொல்லிச் சென்றாலும் தாங்க முடியாத சோகத்தைத் தந்தது.

அரசியலின் சமகாலக் காட்சிகள் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது. ஒரே சமூகமாய் இருந்தாலும் யார் அமைச்சருக்கு அருகில் என்ற போட்டியின் இறுதியில் ஒருவரையொருவர் போட்டுக்கொள்கிறார்கள். கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட ஆகாமல் சாதி – பணம் போன்ற விசயங்களைக் கொண்டு தலைமையை நெருங்கும் சமகால சூழலை அருமையாய் சொல்லிச் செல்கிறார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் சாதியினரின் வளர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது. அவர்கள் நடத்தும் மொய்விருந்தில் லட்சக்கணக்கில் மொய் வருகிறது. அதைக் கொண்டு அவர்கள் மேம்படுகிறார்கள். இந்தப் பகுதி அண்ணாநகரில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர்களை நினைவுறுத்தியது. அவர்கள் வட்டிக்கு விடுவார்கள். ஆனால், பழகியவர்களோடு அத்தனை அன்பாய் இருப்பார்கள். இந்தக் கதையில் வரும் தண்டட்டி பாட்டி போல அந்த வீட்டிலிருந்த பாட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்டட்டி பாட்டி(வேலுத்தேவர் மனைவி) அச்சமூகப் பெண்களின் மன உறுதியை, அவர்களின் துணிச்சலை பிரதிபலிக்கிறது. தண்டட்டி பாட்டி இறக்கும்போது வரும் காட்சிகள் ‘மக்க கலங்குதப்பா’ போன்ற பாடல் களத்திற்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

சமீபத்திய கூலிப்படைகள் போல அக்கால ரவுடிகள் இல்லை. கலக்குமுட்டி போன்ற சரக்குகளை குடித்து தெருவில் சளம்பினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டால் அமைதியாகிறார்கள். அவர்களிடையே ஒரு அறம் இருந்ததை கதையினூடாக காண முடிகிறது. தர்ஹா பகுதியில் குடியேறிய பிற சாதியினர் குலதெய்வக்கோயில்களை கட்ட முயல இப்ப பெரிய கோயில் எதற்கு தர்ஹா இருக்குள்ள என ரவுடியென ஊரால் அழைக்கப்படுபவர் சொல்வது அதில் குறிப்பிடத்தகுந்த காட்சி.

சில நாவல்கள் நம்மை புதிய பிரதேசங்களுக்குள் அழைத்துச் சென்று நம்மை கிறங்கடிக்கும். அதுவொரு வகை. ஆனால், சில நாவல்கள் நாம் வாழும் பகுதியின் மீதே புத்தொளி பாய்ச்சும். அப்படிப்பட்ட நாவல்தான் சொட்டாங்கல். நான் தினசரி பயணிக்கும், பார்க்கும் இடங்களின் பின்னால் ஒளிந்து நிற்கும் கதைகளை எடுத்துச் சொல்கிறது. நாவலை வாசித்த பிறகு நரிமேடு சோனையா கோயில் தெருமுனையில் நிற்கும் கட்டிடத் தொழிலாளர்களைப் பார்க்கும்போது நாவலின் பக்கத்தினூடாக நானும் நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. முப்பரிமாணக்காட்சி போல என்னுள் பதிந்த நாவல்.

சோனையா கோயில் தெருவின் ஒருமுனையில் நாவலாசிரியரை சந்தித்து அவ்வப்போது உரையாடுவேன். இந்த நாவல் குறித்து ‘இருண்ட பக்கங்களை புரட்டும் வெளிச்சப்புள்ளி’ என்ற தலைப்பில் அற்புதமான பதிவை இரா.முருகவேள் எழுதியிருக்கிறார். இந்நாவல் எழுதத்தூண்டிய நினைவுகளை ‘புழுதிபோர்த்திய வெண்மை’யென அர்ஷியா அவர்கள் எழுதியிருக்கிறார். இப்பகுதியை அவர் வாசித்துக் கேட்கும் பாக்கியமும் எனக்கு நாவல் வெளிவருவதற்கு முன்பே கிட்டியது. அவரின் அன்பிற்கு நன்றி. இந்நாவலை சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கி வந்த அண்ணனுக்கு நன்றி.

நாவலினை நுட்பமாக வாசித்தால், ‘வில்லன்’ எனத் தனித்து யாரும் சித்தரிக்கப்படாததைக் கண்டறிய முடியும். எல்லாவிதமான பலவீனங்களும் மேன்மைகளும் நிரம்பிய மனிதன் இயல்பிலேயே துக்கமும் கொண்டாட்டமும் மிக்கவன். எதிலும் திருப்தியற்ற மனநிலையில், அடுத்தடுத்த தளங்களில் காலூன்றி எதையோ சாதிக்கத்துடிக்கும் நிலையில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அளவற்று விரிகின்றன. 

– ந.முருகேசபாண்டியன்

பலவகையான மரங்கள், பலவகையான உயிரினங்கள் வாழும் அடர்ந்த தோப்பை போலவே மதுரை அப்பாஸ்பாய்தோப்பு முழுக்க பலவகையான மனிதர்கள், அதற்கேற்ப பலவகையான குணநலன்களோடு வாழ்கிறார்கள். கண்மாய்களுக்கு மறுகாலாக கலிங்குகள் இருப்பதைப் போல இஸ்மாயில்புரத்துக்கு பின்னால் அப்பாஸ்பாய்தோப்பு போல பல தோப்புகள் இருக்கிறது. ஏழரைப்பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் கொஞ்சப்பேர் இத்தோப்பில் வசிக்கிறார்கள். குருவிக்காரன்சாலையிலிருந்து ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அமைந்திருக்கிறது அப்பாஸ்பாய்தோப்பு. வெள்ளப்பெருக்கால் கரையோரங்களில் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது அப்பாஸ்தோப்பும் அதில் பாதி காலியானது. அந்தச்சாலை வருவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் கதையைச் சொல்கிறது இந்நாவல்.

abbasbhai thoppu 2

உசேன் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியோடு தொடங்கும் கதை அவரது திருமணத்தோடு முடிகிறது. அப்படியென்றால் இது உசேனின் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் மைய இழையாகத்தான் அச்செய்தி வருகிறது. மற்றபடி இது அப்பாஸ்பாய்தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை. அதிலும் உசேன், நெக்லஸ்காரம்மா, ரோசாப்பூ பாய், அழுக்குமூட்டை ராமையா, பூசா என்ற பூவராகன், ஒடுக்கி போன்ற அத்தோப்பில் உள்ள மாந்தர்கள் நம் மனதை கவர்ந்து விடுகிறார்கள். இந்நாவலைக் குறித்து எழுதும் போது ஒவ்வொரு மாந்தர்களும், நிகழ்வுகளும் எல்லாவற்றையும் எழுதத் தூண்டும்படியாகயிருக்கிறது. அப்படி எழுதினால் அது நாவலின் கதைச்சுருக்கம் போல ஆகிவிடும் என்பதால் சில காட்சிகள், சில மனிதர்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.

திரைப்படங்களில் மதுரை என்றாலே அரிவாள், பட்டாக்கத்தியோடு ஆட்களைப் போட்டுத் தள்ளுவது போல இரத்தக்களரியாக காட்டுகிறார்கள். ஆனால், மதுரையில் போடும் வடை, பஜ்ஜி அதற்கு குழப்பியடிக்க ஊற்றும் சட்னி, சாம்பார் மற்றும் சால்னாவோடு சேர்த்து வெளுத்து வாங்கும் அசல் மதுரைக்காரர்களை முதல் பக்கத்திலேயே படம் பிடிக்கிறார் அர்ஷியா. மதுரையை மையங்கொண்டு திரைப்படம் எடுக்க முனைபவர்கள் இதுபோன்ற நல்ல கதைகளை, நாவல்களைப் படித்து அப்படியே எடுக்காவிட்டாலும் மதுரையின் வாழ்வியலை கொஞ்சமாவது படம்பிடித்தால் நன்றாகயிருக்கும்.

அப்பாஸ்பாய் தோப்பில் சில்வர் பட்டறை வைத்து நன்றாக வாழும் அபூன் தன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மூலம் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். அபூன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவனுடைய அம்மா மற்றும் நண்பனை பார்த்துச் செல்லும் காட்சி நம்மைக் கலங்க வைக்கிறது. அந்தப் பகுதிகளை வாசிக்கும் போது சந்தைப்பேட்டை பகுதியில் சில்வர் பட்டறையில் பணிபுரிந்து பின் அனுப்பானடி, இப்போ ஒத்தக்கடை வரை ஓடாத சில்வர் பட்டறையை கட்டி அழும் எங்க சித்தப்பாவின் நினைவுகளும் பிசிறுபிசிறாய் நினைவிற்கு வந்தது. எங்கப்பாவும் சில்வர்பட்டறையில்தான் பல வருடங்கள் வெல்டராக வேலை பார்த்தார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%af%88

முன்பொருமுறை வைகையில் வெள்ளம் வந்த போது அதில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழுதியுள்ளார். ஆற்றின் நடுவே தனியாக மரத்தில் சிக்கியிருந்த பெண்ணை தூக்கும்போது அவளுடைய சேலை பறந்துவிட்டதால் தன் மானம் காக்க ஆற்றுக்குள் மாய்ந்த பெண்ணை மீட்க வந்த ஹெலிகாப்டரும் அவளாள் வைகைக்கு இரையாகிறது. வெள்ளக்காட்சிகளை உடன்பணிபுரியும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்து பற்றி இந்நாவலில் உள்ளதைத்தான் அவரும் சொன்னார்.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா. இந்நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவுக்கு சுல்தான் அவுலியா மீது அதீத நம்பிக்கை. எந்தப்பிரச்சனையென்றாலும் வியாழனன்று இரவு இராத்தங்கி வேண்டினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ள மனுஷி. சிக்கந்தர் அவுலியாவின் சாகசங்களை தன் தாதீமாவிடம் கேட்கும் சிறுமி போல நாமும் மாறிப் போகிறோம். மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் நம்முன் காட்சிகளாய் விரிகிறது. பசுமைநடையாக மூன்று முறை எஸ்.அர்ஷியா அவர்களுடன் இம்மலையில் பயணித்த அனுபவமும் எனக்குண்டு.

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be

மதுரைப் பகடியை மிக எளிதாக தம் எழுத்தில் பதிவு செய்கிறார் எஸ்.அர்ஷியா. பார்க்கும் எல்லோரிடமும் எதாவது தோது செய்து விடச் சொல்லும் ‘தோது’சுப்புணியை அவனுடைய நண்பன் கருப்பட்டி அவன்பின்னால் சைக்கிளில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று அழுத்தி ஓட்டவைத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து குளத்தின் நீள அகலத்தை அவனிடம் கேட்டு மூடி போடச் சொல்வதை வாசிக்கும் போது உங்களுக்கு வடிவேல் நினைவுக்கு வரலாம். திரைப்படங்களில் மதுரைப் பகடியை மிக அருமையாக பயன்படுத்திய பெருமை வடிவேலுக்கு உண்டு.

இஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் ரசிகர்கள், கலக்குமுட்டி, கஞ்சா என அக்கால போதை வஸ்துகள், தெப்பக்குளத்தில் விட்டிருந்த போட் சர்வீஸ், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றுக்குள்ளே துணி துவைக்கும் மனிதர்களின் சிரமங்கள் போன்ற பலவிசயங்களை இந்நாவலினூடாக பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அப்பாவின் இளமைக்காலம் முதல் என்னுடைய பால்ய காலம் வரை இப்பகுதியில் கழிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஏழரைப்பங்காளி வகையறாவுக்கும், அப்பாஸ்பாய்தோப்புக்கும் தனியிடம் உண்டு. என்னை சைக்கிளில் வைத்து ஊரைச் சுற்றும் போது எங்கப்பா முனிச்சாலை – சந்தைப்பேட்டை பகுதியில் அவர் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டே வருவார். அதனால், இந்நாவலை வாசிக்கும் போது எல்லா கதாமாந்தர்களும் பழக்கமானவர்களாகவே இருந்தார்கள்.

abbasbhai thoppu

சாயபுமார்களோடு எல்லா சாதிக்காரர்களும் கலந்து வாழும் அப்பாஸ்பாய்தோப்பு, நாவலை முடித்து புத்தகத்தை மூடினாலும் மனது முழுக்க தோப்புக்குள்ளேயே சுற்றி வருகிறது. ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் விட்ட கதையை கொஞ்சம் இதில் தொட்டிருக்கிறார். ஏழரைப்பங்காளி வகையறாவில் வரும் உசேன் இந்நாவலில் வளர்ந்து சமூக – அரசியல் கட்டுரைகளை எழுதும் பத்திரிக்கைகாரராகிறார். உசேனிடம் நாவலாசிரியர் அர்ஷியாவின்  சாயல் தெரிகிறது.

ந.முருகேசபாண்டியனின் ‘சுழித்தோடும் ஆற்றுவெள்ளம்’ என்ற முன்னுரை கட்டுரை வாசித்தபின் இந்நாவல் குறித்து எழுதுவதற்கு தயக்கம் இருந்தது. அந்தளவிற்கு மிகச்சிறப்பாக இந்நாவலைப் பற்றி நான் சொல்ல நினைத்த விசயங்களை எல்லாம் குறிப்பிட்டுருந்தார். அருமையான மதிப்புரை. என்னளவில் நான் வாசித்த அர்ஷியாவின் நான்கு நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவை.

sramakrishnan

நாவல்களும் ஆறுகளைப் போலத்தான். ஒரு சிறுசொல்லில் துவங்கி இறுதியில் நம்மை வாழ்க்கையெனும் பெரும் கடலில் சேர்த்துவிடும். வேகமெடுக்கும் போது நம்மை இழுத்துச் சென்றுவிடும். கிளையாறுகள் சேர்ந்து பேராறு ஆவது போல, கிளைக்கதைகள் பல சேர்ந்து நாவலாகிறது.

நாவல்கள், அன்றாட வாழ்விலிருந்து மீட்டு நம்மை ஒரு புதிய வெளியில் கொண்டு சேர்ப்பவை. நாம் பார்க்காத பிரதேசங்கள், நமக்கு தெரியாத வட்டார வழக்குகள், நாம் மீண்டும் செல்ல முடியாத கடந்த காலம், நம்மால் வாழ முடியாத பிறரது வாழ்க்கை, நாம் அறியாத மனிதர்களின் கதை எனப் பல விஷயங்களை நாவல் வாசிப்பதன் வாயிலாக நாம் அடையலாம்.

vannanilavan

கண்டது, கடியதையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்த நான் வாசிப்புத் தளத்திற்குள் பள்ளி – தொழில்நுட்பக்கல்லூரி படிப்பிற்குப் பின்னரே வந்தேன். அதற்கு முன்னர் ஓரிரு நல்ல நாவல்கள் வாசித்திருக்கலாம். பதினோராம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அக்கதையின் ஈர்ப்பிலேயே அந்த விடுமுறையில் பொன்னியின் செல்வனை ஏழு நாட்களில் வாசித்தேன். அத்தனை பக்கங்களை குறுகிய காலத்தில் வாசித்தது அப்போது பெருமகிழ்வைத் தந்தது.

அதன்பிறகு சாண்டில்யனின் வரலாற்று புனைகதைகளில் சிக்கிக் கொண்டேன். அதில் கன்னிமாடம் பிடித்த நாவல். மற்றபடி நூலகத்தில் அப்போது கிடைத்த எல்லா சாண்டில்யன் நூல்களையும் படித்தேன். கோட்டயம் புஷ்பநாத்தின் கதைகளில் மோகினிகளும், யட்சிகளும் வரும் பக்கங்களை மட்டும் கடந்தேன். வாஸந்தி, பாலகுமாரன் நாவல்கள் வாசித்திருக்கிறேன். பெயர்கள் நினைவிலில்லை. ஞானபீட விருது பெற்ற அகிலனின் சித்திரப்பாவை வாசித்திருக்கிறேன்.

jemo

தமிழ்ச்செல்வ அண்ணன் ஜெயமோகனின் கொற்றவையை வாசிக்கக் கொடுத்த போது அந்த நாவல் முற்றிலும் வித்தியாசமாய் தெரிந்தது. அச்சமயம் மதுரையில் முதலாவது புத்தகத்திருவிழா தொடங்கியது. மதுரை புத்தகத்திருவிழா, நூலகங்கள், தமிழ்ச்செல்வம் மற்றும் நண்பர்கள் வாயிலாக நல்ல புத்தகங்களை வாசிக்கவும், வாங்கவும் தொடங்கினேன்.

books2

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த நூறு புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் பட்டியல் தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியது. அந்த பட்டியலில் உள்ள நாவல்களை கொஞ்சம் தேடிப் பிடித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். மதுரை புத்தகத்திருவிழாவில் சிறந்த நூறு நாவல்கள் மற்றும் புத்தகங்கள் பட்டியலை ஆயிரம் பிரதிகள் எடுத்து ஓராண்டு வழங்கினோம். அதை எஸ்.ரா.விடம் கொடுத்தபோது பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எஸ்.ரா.வின் நாவல் முகாமில் கலந்துகொண்டது ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது.

அஞ்ஞாடி நாவல் 400 பக்கங்கள் வாசித்ததோடு நிற்கிறது. அதைப்போலத் தான் சம்பத்தின் இடைவெளியும். சமீபத்தில் பூமணியின் பிறகு வாசித்தபோது அந்நாவலோடு எஸ்.ரா. தேர்ந்தெடுத்த நாவல்கள் பட்டியலில் 25 முடிந்தது. அப்படியே இதுவரை எத்தனை நாவல்கள், குறுநாவல்கள் வாசித்திருப்போம் என்றறியும் ஆசை வந்தது. பட்டியலைத் தொகுக்கும்போது 75 நாவல்கள்கிட்ட வந்தது. நூறு நாவல்களை எட்ட இது ஒரு உத்வேகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பதிவு. மறுமொழியில் உங்களுக்கு பிடித்த நாவல்களை பரிந்துரையுங்கள். உதவியாக இருக்கும்.

arshiya

எஸ்.ரா.தேர்ந்தெடுத்த பட்டியலில் நான் வாசித்தவை

  1. பொன்னியின் செல்வன் – கல்கி
  2. பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்
  3. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
  4. அபிதா – லா.ச.ராமாமிருதம்
  5. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
  6. புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
  7. கடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்
  8. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
  9. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  10. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  11. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
  12. கல்மரம் – திலகவதி
  13. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
  14. பிறகு – பூமணி
  15. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
  16. கம்பாநதி – வண்ணநிலவன்
  17. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  18. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  19. காடு – ஜெயமோகன்
  20. கொற்றவை – ஜெயமோகன்
  21. உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  22. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
  23. யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  24. நிழல்முற்றம் – பெருமாள் முருகன்
  25. ஆழிசூழ் உலகு – ஜோ.டி.குருஸ்

 novels

பட்டியல் தாண்டி வாசித்த நாவல்கள்

  1. பார்த்தீபன் கனவு – கல்கி
  2. கன்னிமாடம் – சாண்டில்யன்
  3. தென்பாண்டிச்சிங்கம் – மு.கருணாநிதி
  4. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
  5. குறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்
  6. ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
  7. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
  8. அலைவாய்கரையில் – ராஜம் கிருஷ்ணன்
  9. குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
  10. நளபாகம் – ஜானகிராமன்
  11. வெள்ளையானை – ஜெயமோகன்
  12. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
  13. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  14. நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  15. சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  16. மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
  17. ஏழரைப்பங்காளி வகையறா – எஸ்.அர்ஷியா
  18. பொய்கைகரைப்பட்டி – எஸ்.அர்ஷியா
  19. அப்பாஸ்பாய்தோப்பு – எஸ்.அர்ஷியா
  20. கரும்பலகை – எஸ்.அர்ஷியா
  21. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்
  22. எங்கதெ – இமையம்
  23. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  24. கன்னி – பிரான்சிஸ் கிருபா
  25. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
  26. மிளிர்கல் – இரா.முருகவேள்
  27. ஆட்டம் – சு.வேணுகோபால்
  28. நிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
  29. கூந்தப்பனை – சு.வேணுகோபால்
  30. திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
  31. மணற்கேணி – யுவன்சந்திரசேகர்
  32. கானல்நதி – யுவன்சந்திரசேகர்
  33. கொற்கை – ஜோ.டி.குருஸ்
  34. நட்டுமை – ஆர்.எம்.நௌசத்
  35. குன்னிமுத்து – குமாரசெல்வா
  36. கானகன் – லஷ்மிசரவணக்குமார்
  37. பருக்கை – வீரபாண்டியன்
  38. மின்னுலகம் – நீல.பத்மநாபன்
  39. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
  40. கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
  41. சித்திரப்பாவை – அகிலன்
  42. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்

su.ve

மொழிபெயர்ப்பு நாவல்கள்

  1. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
  2. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
  3. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) –  சிங்கிஸ் ஜத்மதேவ்
  4. எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
  5. பால்யகால சகி – வைக்கம் முகமது பஷீர்
  6. பாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர்
  7. மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர்
  8. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
  9. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
  10. சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா
  11. மோபிடிக் (திமிங்கல வேட்டை) – ஹெர்மன் மெல்வின்

tamilwriters

ஏதேனும் விடுபடல்கள் இருக்கலாம். இவற்றில் அறுபதிற்கும் மேலானவை கடந்த எட்டு ஆண்டுகளில் வாசித்தவை. இன்னும் தமிழில் முக்கியமான ஆளுமைகள் பலரது நாவல்களை வாசிக்கவில்லை எனும் போது சங்கடமாயிருக்கிறது. பெரும்பாலான நாவல்களின் கதை ஒரு கீற்று போலத் தெரிகிறது. ஒரு பக்கத்திலாவது ஒரு பதிவாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. அன்பே சிவம் படத்தின் இறுதி வரிகளைப் போல எழுதினால் இன்னும் வாசிக்க வேண்டிய நூல்கள் ஏராளம், ஏராளம். இதுவரை வாசித்த நூல்களின் பெயரைப் பார்க்கும்போதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை நோக்கி பயணிக்கிறேன்.

IMG_20151128_130332

9788188661435மதுரை மீதான காதல் ஆதிகாலத்தொடர்பு. சித்திரை வீதிகளின் மீதும், சித்திரங்களின் மீதும் பால்யத்திலிருந்தே விருப்பம் இருந்தாலும் அது காதலாய் உருவெடுக்க ஓவியர் மனோகர் தேவதாஸ் அவர்களது கோட்டோவியங்களே காரணம். அவரைக் குறித்து ஆனந்தவிகடனில் படித்தபோது அவர் மீதான ஈர்ப்பு அதிகமானது. அவரது GREEN WELL YEARS வாங்கி வாசிக்க விரும்பினேன். mymaduraiஆனால், முந்திக்கொண்டது MULTIPLE FACETS OF MY MADURAI. 2வது மதுரை புத்தகத்திருவிழா சமயம் அந்தப் புத்தகத்தில் உள்ள படங்களோடு வரவேற்பு பதாகைகள், விழா அறிவிப்புகள் வர அந்தப் புத்தகத்தை வாங்க விரும்பினேன். (அச்சமயம் அந்தப் புத்தகத்தின் விலை என் ஒருமாதச் செலவுக்கான தொகை) புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதிலுள்ள படங்கள் என்னை ஆட்கொண்டதால் வாங்கினேன். நேரங் கிட்டும்போதெல்லாம் அவருடைய சித்திரங்களைப் பார்ப்பதும், சில படங்களை வரைந்து பார்ப்பதும் வழக்கமானது. அதற்கடுத்து அவரது GREEN WELL YEARS எனது மதுரை நினைவுகள் ஆக தமிழில் வர, காத்திருந்தது ஒரு வகையில் நல்லதாய் போனது.

0000chn_07001_1-500x500_0சில மாதங்களுக்கு முன் அரவிந்த் கண் மருத்துவமனையில் நடந்த ஓவியர் அ.பெருமாள் ஐயாவின் நூற்றாண்டு விழாவிற்கு மனோகர் தேவதாஸ் வருவதாக அழைப்பிதழில் பார்த்தேன். நாட்களை குறித்து வைத்துக் கொண்டு மூன்று நாளும் சென்று பார்த்தேன். அங்கு மனோகர் தேவதாஸ் அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்க்க முடிந்ததும், ஓவியங்கள் தொடர்பான அவரது பவர்பாயிண்ட் பார்த்ததும் மறக்க முடியாத நிகழ்வு. அவர் வரைந்த சித்திரங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகத்தில் அவருடைய கையெழுத்துக் கேட்டேன். கண்பார்வை இப்போது மிகவும் பாதிப்படைந்திருந்தால் கையொப்பம் இட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லி கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர என்னைச் சூழ்ந்தது.  மூன்றாம் நாள் நிகழ்வின்போது மனோகர் தேவதாஸ் அவர்களிடம் என்னை சித்திரவீதிக்காரன் என அறிமுகப்படுத்தியதோடு நிழற்படம் எடுக்கவும் பசுமைநடை நண்பர் உதயகுமார் உதவினார். என் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான தருணங்களில் இதுவும் ஒன்று.