செந்தீ நடராசன் எழுதிய பண்பாட்டுத் தளங்கள் வழியே நூலில் தொ.பரமசிவன் அய்யாவின் மதிப்பரையைப் பார்க்கக் கிடைத்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. தொ.ப.வின் நூல்களில் வராத இந்த மதிப்புரையை பகிர்கிறேன்.

மதிப்புரை

தமிழ் ஆய்வுலகம் என்ற ஒன்று 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் நாட்டில் கருக்கொண்டது. அதன் முதல் அசைவாக மனோன்மணியம் சுந்தரனாரின், ‘ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி’யினைக் குறிப்பிடலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் ‘செந்தமிழ்’ இதழின் வழியாகத் தமிழ் ஆய்வுலகம் உருத்திரளத் தொடங்கியது. முதல் முப்பது ஆண்டுகளுக்குள் தமிழ் ஆய்வுலகம் மற்றும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அதாவது எழுத்திலக்கியச் செய்திகளுக்கு உரைவிளக்கம் தருவதோடு பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் தேங்கிப் போயிருந்த காலத்தில் இலக்கியச் செய்திகளைக் களஆய்வுச் செய்திகளோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்க்கின்ற முயற்சியினைச் ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரியர் மு. இராகவையங்கார் தொடங்கி வைத்தார். இதுவே தமிழாய்வுலகம் பெற்ற புதிய பரிமாணத்தின் தொடக்கமெனலாம். அவரைத் தொடர்ந்து ‘தமிழ்க்கிழவர்’ மயிலை. சீனிவேங்கடசாமி இந்தப் புதிய நெறியினை வளர்த்தெடுத்தார்.

1923-இல் தாம் இளைஞராக இருந்த போதே ‘லட்சுமி’ என்னும் இதழில் மணிமேகலை காட்டும் மணிபல்லவத் தீவினைக் கண்டறியும் முயற்சியில் அவர் கட்டுரை ஒன்றெழுதினார். அதற்குப் பின் வந்த இருபது ஆண்டுகளில் தமிழ்ப்பண்பாட்டின் வலிமையான வேர்கள் அவைதீக மரபில் கால் கொண்டிருப்பதை அவரது எழுத்துக்கள் தமிழாய்வாளர்களுக்கு எடுத்துக் காட்டின. அவரைத் தொடர்ந்து காசுகள், அணிகலன்கள், விளக்குகள் எனப் புழங்கு பொருட்களை முதலடையாளமாகக் கொண்டு மறைந்திருந்த தமிழ் மரபினை மீண்டும் கட்டமைத்துக் காட்டியவர் சாத்தன்குளம் அ. ராகவன் ஆவார். இந்த மூவரின் ஆய்வுலக வழித் தோன்றலாக நமக்கு கிடைத்தவர் பேராசிரியர் நா. வானமாமலை ஆவார்.

இயக்கவியல் பொருள் முதல்வாதப் பின்னணியில் எளிய மக்களின் வாழ்க்கை அசைவுகளையும், வழக்காறுகளையும் மூலப்பொருளாகத் திரட்டி அதற்குரிய ஆராய்ச்சி முறையியல் ஒன்றையும் அவர் உருவாக்கிக் காட்டினார். அவரது தொடர்ந்த முயற்சியின் விளைவாக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஆய்வுத் துறையாகவும், கல்விப் புலமாகவும் வளர்ந்தது. பழங்காலத்துச் சமணமுனிவர்களைப் போல தன்னுடைய கருத்தியலை ஏந்திச் செல்ல அவர் ஒரு மாணவர் பட்டாளத்தையும் உருவாக்கினார். தமிழாய்வுலகில் அவரது ‘நெல்லை ஆய்வுக்குழு’ மாணவர்கள் முயற்சி நினைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மாணவர் வரிசையில் இந்த நூலாசிரியர் செந்தீ நடராசன் ஒருவர் என்பதை நானறிவேன்.

ஆறு கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளுமே களஆய்வுச் செய்திகளை மூலத் தரவுகளாகத் கொண்டவை.

முதற் கட்டுரையான ‘அவ்வை நோன்பு’ அந்த நோன்பினைச் சமணத்தோடு தொடர்புப்படுத்த முயலுகின்றது. இந்த முயற்சிக்கான அடிப்படைக் காரணம் அவ்வை என்பது சமணப் பெண் துறவிகளைக் குறிக்கும் சொல்லாக நிகண்டு நூல்களில் காணப்படுவதேயாகும். ஆனால் இலக்கியங்களில் இந்தச் சொல் இந்தப் பொருளில் பதிவு பெறவில்லை. இதனோடு ஒலித் தொடர்புடைய, ஐயன் என்பதின் பெண்பாற் சொல்லான ‘ஐயை’ என்ற சொல்லே காணப்படுகிறது. அவ்வை நோன்பு மகப்பேற்று நோன்பு என்பதாகவே தோற்றமளிக்கிறது. சமணமே உலகில் முதன் முதலாக புலாலை நீக்கச் சொன்ன மதமாகும். பிச்சை எடுப்பதனை அங்கீகரித்த மதமுமாகும். அவ்வை நோன்பில் புலால் இடம் பெறாமையும், பிச்சை மதிப்பிற்குரிய செயலாகவும் காட்டப் பெறுவது ஆய்வாளர் செந்தீ நடராசனை இந்தத் திசை நோக்கி சிந்திக்கத் தூண்டியிருக்கலாம். ஆனால் அவ்வை நோன்பு நேரிடையாகவும், மறைமுகமாகவும், வணிகத்தோடு தொடர்புடைய சாதியாரால் தான் இன்றளவும் விரும்பிக் கொண்டாடப்படுகிறது. சமணம் வணிகரால் வளர்க்கப்பட்ட மதம். ‘வாரிசுரிமைக் கவலை’யும் அதன்விளைவாகத் தத்தெடுக்கும் பழக்கமும் வணிகச் சாதியாருக்கே மிகவும் உண்டு. இனக்குழுச்சடங்குகளோடு பெருஞ்சமய நெறிகள் ஊடாடியிருக்கின்றன. அந்த வகையில் ஓர் இனக்குழுச் சடங்கின் எச்சத்தை தமிழ் நாட்டுச் சமணம் உள் வாங்கியிருக்கலாம் என்ற செந்தீநடராசனின் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது கட்டுரையும் சமணம் பற்றியதாகவே அமைகின்றது. திகம்பர சமணத் துறவிகளின் தோற்றத்தைக் குறிக்கும் ‘மயிராண்டி’ என்ற சொல் வைதீக நெறியாளர்களால் வசைச் சொல்லாக மாற்றப்பட்டதை இவர் கூர்மையாக இனம் கண்டு காட்டுகிறார். ஆனால் இலையிலிட்டுப் படைத்த உணவைச் சுற்றி நீர் தெளிப்பது சமண வெளிப்பாடாகத் தோன்றவில்லை. வீட்டுச் சடங்குகளில் படைக்கப் பெற்ற உணவைச் சுற்றி பெண்கள் கையில் சிறிதளவு நீர் எடுத்துத் தெளிப்பதை ‘நீர் விளவுதல்’ என்ற சொல்லாலும் குறிப்பர். பாத்திரத்தில் பூவிதழ்கள் இட்ட நீரையே இவ்வாறு எடுத்துத் தெளிப்பர். இது சடங்கின் முடிவைக் குறிக்கும் ஓர் அசைவாகும். மாறாக உண்ணும் இலையினைத் தரையில் விரிப்பதற்கு முன்னால் அந்த இடத்தில் தண்ணீரைத் தெளித்து ‘தலசுத்தி’ செய்யும் முறை சமணருக்குரியதே.

கோவலனுக்கு உணவு படைக்க முற்படும் கண்ணகி

“மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி  

குமரி வாழையின் கோட்டகம்”

விரித்த செய்தியினைச் சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது.

(தலசுத்தி செய்யும் இப்பழக்கம் வைணவப் பார்ப்பனர்களிடையே இன்றும் காணப்படுகிறது.) ஆனால் நீர் விளவுதல் பெண்கள் செய்யும் வீட்டுச் சடங்குகளின் நிறைவுப் பகுதி என்றே தோன்றுகிறது; சமணத் தோற்றமுடையது என ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எஞ்சிய மூன்று கட்டுரைகளும், கட்டுரைகளுக்கான மூலத்தரவுகளும் நாஞ்சில் நாடு, ஆய்நாடு, வேணாடு என்று மூன்று பெயர்களில் சுட்டப்படும் நிலப்பகுதியினைச் சார்ந்ததாகும்.

முடிப்புரை அம்மன் வழிபாடு ஒடுக்கப்பட்டவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டு தெய்வமாக்கப்பட்டால், மேல்சாதி ஆளுமை அதனை எப்படிப் பார்த்தது என்பதற்கான அடையாளமாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இது அறியப்படாத வழிபாட்டு நெறியாகக் காணப்படுகிறது. ‘புரை’ என்பது இடப்பொருள் தரும் சொல்லாகும். இங்கே முடி தலையிடத்தில் சூடப்பட்ட அணிகலனாகத் தோன்றவில்லை. மாறாக, காலமல்லாத இறப்பைச் சந்தித்த பெண்ணின் தலைமுடியாக இருக்கலாம். இவ்வகை நிகழ்வுகளின் தொகுதி முடிப்புரை அம்மன் என்னும் வழிபாட்டு நெறியினை (Cult) உருவாக்கி இருக்க வேண்டும். திரு. செந்தீ கண்டுபிடித்துள்ள இந்த புதிய ஆய்வுக்களம் நம்முடைய ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.

கேரளச் சமூகத்தின் திருமண உறவுகள் குறித்த கட்டுரையும், குமரி மாவட்டச் சமூக ஒடுக்குமுறைக்கெதிரான குரல்களைப் பற்றிய கட்டுரையும் தனித்தனியே இரண்டு நூற்களுக்குப் பொருளாக விரிக்கத்தக்கன. திரு. செந்தீ அவர்களின் உழைப்பு அதனைச் சாத்தியமாக்குமென நினைக்கின்றேன், நம்புகின்றேன்.

கடைசர் பற்றிய கட்டுரை இந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழில் சார்ந்து மக்கள் திரள்களின் தன்னடையாளத்தைக் காண முயல்வது தமிழ்நாட்டு ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். எண்ணிக்கையில் சிறுத்தவர்களாக, மூன்று அல்லது நான்கு வகையான தொழில் செய்கின்ற கடைசர் போன்ற மக்கள் திரள்கள் (சாதிகள்) தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன. “அனுலோமம்”, “பிரதிலோமம்” என்ற வடசொற்கள் குறிப்பிடும் (தமிழில் இவற்றுக்கு நிகரான சொற்கள் காணப் பெறவில்லை என்பது வியப்பே). சாதிக்கலப்பு மணங்கள் தமிழ்நாட்டில் உட்சாதிகளின் எண்ணிக்கையினை வட்டாரம் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் பெருக்கிக் காட்டியுள்ளன. இதன் விளைவாகவே ஒவ்வொரு சாதியும் சாதியின் உட்பிரிவுகளும் அடையாளத்தைக் காட்ட முற்பட்டன. அதன் தொடர்ச்சியாகச் சாதித் தொன்மங்களும், சாதிப் புராணங்களும் தோன்றத் தொடங்கின. இதனை மட்டும் நம்மால் உறுதியாகக் கணிக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் கள ஆய்வு நடத்தப் பெற்றால் மட்டுமே இந்நிகழ்வுகள் குறித்த ஆய்வுக் கோட்பாடு ஒன்றை நம்மால் உருவாக்க முடியும். அந்த வகையில் திரு, செந்தீ அவர்களின் “கள ஆய்வு” முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

பண்பாட்டுத் தளத்தில் நம்மை நோக்கி நிறைய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. அதிகாரப்பின்னணியில் ஒற்றைப் பண்பாட்டை முன்வைக்கும் கொடுமையான முயற்சிகள் நாள்தோறும் அரங்கேறுகின்றன. வளமற்றதாகக் கருதப்படும் மண் கூட ஒரு போதும் ஒற்றைத் தாவரத்தை ஏந்தி நிற்பதில்லை. வளமான மக்கள் திரள்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆயிரமாயிரம் அசைவுகளை உடையன. பன்முகத் தன்மை என்பதே மண்ணுக்கும் மக்களுக்கும் உயிர்சார்ந்த இயல்பாகும். மண் சார்ந்த அசைவுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் திரு. செந்தீ போன்றவர்கள் தங்களின் சமூகப் பொறுப்பினை நேர்மையாக ஆற்றுகின்றார்கள். இவரைப் போன்றவர்கள் அணி திரட்சியே தமிழ் ஆய்வுலகத்திற்கு புதிய தடம் அமைத்துத் தருமென நம்புகிறேன், வாழ்த்துகின்றேன்.

பேராசிரியர் – தொ.பரமசிவன்

தமிழியல் துறைத்தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

நெல்லை.

1-12-2002.

விக்கிமேனியா என்பது விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிப்பவர்கள் ஆண்டுதோறும் சந்தித்துக் கொள்ளும் ஒரு கொண்டாட்டம். 2022இல் உலகின் 50 இடங்களில் விக்கிமேனியா சந்திப்பு & கொண்டாட்டம் நிகழ்ந்தது. அதில் இந்தியாவில் நடந்த நான்கு நகரங்களுள் மதுரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. கூடல் மாநகரில் தமிழ் வளர்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.

மதுரையில் விக்கிமீடியா அமைப்பின் உதவியுடன் விக்கிமேனியா நிகழ்வு ஆகஸ்ட் 14 ஞாயிறன்று மதுரை அண்ணாநகர் அருகிலுள்ள சக்ரா ரெசிடென்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் தமிழ்ச்செல்வம், ராமதேவன் இவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நீச்சல்காரன், மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், முகம்மது அம்மார், ஸ்ரீதர் போன்ற நண்பர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

விக்கிமேனியா சந்திப்பு விக்கிப்பீடியர்களின் அறிமுகத்தோடு தொடங்கியது. 5,000 கட்டுரைகள் தொடங்கிய பதிவரிலிருந்து விக்கிப்பீடியாவிற்கு தொடர்ந்து பங்களித்துவரும் பலரையும் நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பைக் குறித்து சொல்லச்சொல்ல நாமும் எதாவது செயலாற்ற வேண்டுமென்ற உந்துதல் கிட்டியது.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தது சகோதரர் ப.தமிழ்ச்செல்வம். அவர் வாயிலாக விக்கிப்பீடியாவில் ஒரு சில கட்டுரைகளைத் தொடங்கவும், திருத்தவும் முடிந்தது. மதுரையில் பெண்கல்விக்கு உழைத்த கேட்டிவில்காக்ஸ் அம்மையார் குறித்து எழுத முயற்சிசெய்தேன். பல படங்களை ஏற்றியிருக்கிறேன். குறிப்பிடும்படியான பங்களிப்பு என்றால் தொ.பரமசிவன் அய்யாவின் படத்தை விக்கிப்பீடியாவில் பகிர்ந்ததைச் சொல்லலாம். ” என்பது போன்ற விசயங்களைக் குறிப்பிட்டேன்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கிமீடியாவின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும் இச்சந்திப்பின் நோக்கம் குறித்தும் நீச்சல்காரன் தெளிவாக எடுத்துரைத்தார். விக்கிப்பீடியா மட்டுமில்லாமல் விக்சனரி, விக்கிமேற்கோள், பொதுவகம், விக்கித்தரவு போன்ற திட்டங்கள் இருப்பதையும் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் தெளிவான விளக்கங்களோடு எடுத்துரைத்தார்.

பள்ளிகளில் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தியதைக் குறித்து ஆசிரியர் ஸ்ரீதர் பேசினார். விக்கி நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை ஏற்றுவதைக் குறித்து தகவல் உழவன் பேசினார். விக்கிப்பீடியாவில் எழுதும்போது அதில் ஏற்றப்படும் கட்டுரைகள், அதிலுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசினார் செல்வசிவகுருநாதன்.

எல்லோருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினரான தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யாவை அழைக்கச் சென்றோம். மதிய நிகழ்வில் விக்கி வாயிலாக வழங்கப்படும் நிதிநல்கை குறித்து பாலாஜி எடுத்துரைத்தார். அதன்பிறகு சாந்தலிங்கம் அய்யாவை குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. ‘தமிழே திராவிடம்’ என்ற தலைப்பில் சாந்தலிங்கம் அய்யா உரையாற்றினார்.

டிஜிட்டல் உலகில் இயங்கும் இன்றைய இளைஞர்களிடம் தாம் கூறவேண்டியது என்ன என்பது பற்றி யோசித்த சாந்தலிங்கம் ஐயா, “இன்றைய அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் பற்றிய ஒவ்வாமையைச் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றுரீதியாக திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிப்பதே, அதனால் அச்சொல்லைப் புறந்தள்ளுவது நமக்கே இழப்பு” என்பதை வலியுறுத்தும்விதமாக ஒரு உரையைத் தயார் செய்திருந்தார். சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பங்கேற்பாளர்களையும் நடைமுறைகளையும் கவனித்து அதற்கேற்ப மேலும் சில விசயங்களையும் பேசினார். உரிய இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளுடன் கச்சிதமான வடிவத்தில் அமைந்த அவரது கட்டுரை விக்கிப்பீடியா கட்டுரைகளில் பங்களிப்பவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்று கலந்துகொண்டவர்கள் மகிழ்ந்தனர்.

விக்கிப்பீடியாவில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. எல்லோரும் சேர்ந்து குழுப்படம் எடுத்துக்கொண்டோம். விக்கிப்பீடியாவிற்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சூடான தேநீரும் பஜ்ஜியும் சாப்பிட்டு கிளம்பினோம். சாந்தலிங்கம் அய்யாவுடன் தொல்லியல் தொடங்கி பல விசயங்களையும் உரையாடியபடி சென்றது மகிழ்ச்சி.

இதிலுள்ள படங்கள் விக்கிமீடியா பொதுவகத்தில் இச்சந்திப்பு குறித்த பக்கத்தில் ஏற்றப்பட்டுள்ளவை. பங்களித்தவர்களுக்கு நன்றி.

நாம் தேடுகிற விசயத்தை நாம் விக்கிப்பீடியா வாயிலாகப் பெற்றுக்கொள்கிறோம். விக்கிப்பீடியாவில் இல்லாத விசயங்களை அல்லது இன்னும் விரிவு செய்யவேண்டிய தகவல்களை நாமும் அதில் ஏற்றலாம். அது சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையும்.

இளம்பிராயத்தில் ஆச்சியிடம் ஏராளமான கதைகள் கேட்டிருக்கிறேன். அதில் பக்த பிரகலாதன் கதையும் ஒன்று. பின்னாளில் திரைப்படமாக பிரகலாதன் கதையைப் பார்த்திருக்கிறேன். பிரகலாதன் கதையை இரணிய நாடகமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நிகழ்த்தப்படுவதை பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் சொன்னார்.

1991இல் முனைவர் பட்ட ஆய்விற்காக இரணிய நாடகத்தைத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் சுந்தர்காளி ஆய்வு முடிந்தபின்னும் கடந்த 30 ஆண்டுகளாக நாடகம் நடக்கும் ஊர்களோடு தொடர்பிலிருக்கிறார். அவரோடு உரையாடியதிலிருந்து நரசிம்ம ஜெயந்தியையொட்டி தஞ்சை சாலியமங்கலம் அருகிலுள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் நடக்கும் இரணிய நாடகத்தின் சிறப்பை அறிய முடிந்தது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு 2022ல் 375வது ஆண்டாக நடக்கும் இரணிய நாடகம் நடப்பதை பேரா. சுந்தர்காளி சொன்னார். என்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டிருந்தேன். மே 13 அன்று காலை பேராசிரியர் சுந்தர்காளி, ஓவியர் சரவணன், நான் என மூவரும் தஞ்சை நோக்கிப் புறப்பட்டோம். பயணத்தின்போது கூத்து, நாடகம், திரைப்படம் பற்றிய சந்தேகங்களை பேரா.சுந்தர்காளியிடம் கேட்க அவரும் விரிவாக பதிலளித்தபடி வந்தார். பார்சி நாடகக் குழுக்கள் வழியாக வந்த நாடகங்கள், திரைப்படங்களின் எழுச்சி என விரிவாக பல விசயங்களை அவரோடான பேச்சின்போது அறிய முடிந்தது.

மதியம் தஞ்சாவூர் சென்றோம். பழமையான அசோகா லாட்ஜில் அறை எடுத்தோம். மதிய உணவுக்குப் பிறகு கொஞ்சநேரம் ஓய்வெடுத்தோம். மாலை அங்கிருந்து நானும் ஓவியர் சரவணனும் தஞ்சை பெரிய கோவில் சென்றோம். மாலை ஏழு மணிக்கு மேல் நாங்கள் தஞ்சையிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் சாலையில் புன்னைநல்லூர், சாலியமங்கலம் போய் அங்கிருந்து ஆர்சுத்திப்பட்டு சென்றோம்.

மிக அழகான சிறிய கிராமம். அந்த கிராமத்திலிருந்த வீடுகள் பெரும்பாலும் ஓட்டுவீடுகளாக இருந்தாலும் முன்னால் பெரிய திண்ணை, நடையுடன் அழகாக இருந்தன.

நாடக ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் அருமையான இட்லியும், பொங்கலும் வழங்கினார்கள். இரவு விழித்திருக்க வேண்டுமென்பதால் அளவோடு சாப்பிட்டுக் கிளம்பினோம். பலவருடங்களாக அந்த ஊரில் இரணிய நாடகம் பார்க்கச் செல்வதால் பேராசிரியர் சுந்தர்காளியை அங்குள்ள பலருக்கும் தெரிந்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் நலம் விசாரித்து உரையாடுவதைப் பார்க்க முடிந்தது.

இரணிய நாடகம் நடக்கும் அரங்கிற்கு சென்றோம். ஒரு திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அரங்கு. அரங்கிற்கு பின்புறம் ஒப்பனை நடந்துகொண்டிருந்தது. அங்கு நரசிம்ம ‘முகமூடி’கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்தன. இரணியன், பிரகலாதன், இரணியன் மனைவி, காவலர்கள் என அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

மிருதங்கம், பின்பாட்டு, ஆர்மோனியம் வாசிப்பவர்கள் அரங்கிற்கு இடதுபுறம் இருக்கிறார்கள். அரங்கில் பெரிய மரமேசையும் அதன் மேலே இரண்டு உருளைக்கட்டைகள் (அமரும் ஆசனம்) உள்ளது. நாடகம் தொடங்கும்முன் அன்றைய நாள் நிகழ்வை அறிவிக்கிறார்கள். முதல்நாள் பிரகலாதன் பிறப்பு, மறுநாள் கல்வி கற்கச் சென்ற கதை நிகழ்கிறது. மூன்றாம் நாள் இரவு இரணியன் ஹரிநாமம் சொல்லும் பிரகலாதனை பல்வேறு வகைகளில் கொல்ல முயன்று தோற்றுப் போகும்கதை நடக்கிறது.

நாடகம் பார்க்க அந்த ஊர்க்காரர்களும், பக்கத்து ஊர்க்காரர்களும் வருகிறார்கள். பாய் போர்வைகளை விரித்து இடம்பிடித்து அமர்கிறார்கள். கொஞ்சம் நாற்காலிகளும் ஒரு ஓரமாக போட்டிருக்கிறார்கள். பிரகலாதன் கதையில் நான் முன்பு கேள்விப்படாத சில கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள். கிணறு வெட்டும் ஒட்டர்கள், வாணிபம் செய்யும் சோனகர்கள் (அரபு வணிகக்குழுவினர்), காளி, எமன் என புதிதாக சில கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள்.

ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் நடக்கும் இரணிய நாடகத்தின் சிறப்பு முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பேராக வேடமேற்று நடிப்பதுதான். இரணியன், பிரகலாதன், தாய், காவலர் என இரண்டிரண்டு பேர் வருகிறார்கள். இதில் இரணியன் கதாபாத்திரம்தான் உச்சம். இரண்டு இரணியன்களும் வந்து பாடி, ஆடிக்குதித்து தம் இருக்கையில் ஏறி அமரும் அழகு சொல்லுக்கடங்காது. அதேபோல ஒருவர் எழுந்து பாடியபடி தவ்வி இறங்குவதும், சலங்கைகள் ஒலிக்க, புழுதிபறக்க அரங்கே அதிர்கிறது. காலத்திற்கேற்றபடி காலர் மைக் வைத்துக்கொண்டு இரணியன் இருவரும் பாடுவதும், பேசுவதும் சிறப்பு.

இந்நாடகத்தின் உச்சக்காட்சி அதிகாலையில் நிகழ்கிறது. இரணியன் பிரகலாதனிடம் உன்னுடைய நாராயணன் எங்கிருக்கிறான் என அழைக்க நரசிம்மர் வருகிறார். நரசிம்ம அவதாரம் எடுத்திருப்பவர் அருள் வந்ததுபோல அமர்ந்திருக்கிறார். இரணியன் எதிரே நின்று நரசிம்மரை பார்த்து சண்டைக்கு அழைக்க, இருவருக்கும் இடையே சண்டை நிகழாதபடி தடுத்துக்கொள்ள ஒரு பெரிய துணியை முறுக்கிப்பிடித்துக் கொள்கின்றனர்.

அந்தக் காட்சியை தரிசிக்க மக்கள் நாடகம் நிகழும் இடத்தருகே வந்து குழுமி நிற்கின்றனர். இறுதியில் இரணியனின் மகுடம் தட்டிவிடப்பட்டு நரசிம்மரின் கைக்கு அதைக் கொண்டுவருகின்றனர். அத்துடன் நாடகம் நிறைவுறுகிறது. நரசிம்மருக்கு ஊரிலிருந்து மாவிளக்கு எடுக்கத் தொடங்குகின்றனர். பிறகு ஊர்வலமாக நாடகக் குழுவினர் ஊருக்குள் செல்கிறார்கள்.

மதுரை, புதுக்கோட்டைப் பகுதியில் நிகழும் இசை நாடகங்களைப் போல இல்லாமல் தெருக்கூத்தின் நீட்சியாகவே இரணிய நாடகம் நிகழ்கிறது. நாடகநடிகர்களாக உள்ளூர்காரர்களே நடிக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களின் கலையார்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாடகத்தில் நடிப்பவர்களுக்கு அவர்களது உறவினர்கள் செய்முறை செய்வதை காணமுடிந்தது. அதேபோல இரணிய வேடத்தை நள்ளிரவுவரை ஒரு ஜோடியும், அதற்குபிறகு ஒரு ஜோடியும் ஏற்று நடிக்கின்றனர். அதேபோலத்தான் பிரகலாதனும்.

இரணிய நாடகம் பார்த்து மதுரை நோக்கிக் கிளம்பினோம். கோவை காரமடையருகே பகத்தூரில் நரசிம்மரைப்போல இரணியனுக்கும் முகமூடியிருக்கும் என்ற தகவலை பேரா.சுந்தர்காளி குறிப்பிட்டார். பசுமைநடைப் பயணங்கள் வாயிலாக அவரோடு அறிமுகமாகி அவரது ஆய்வுக்களமாகிய இரணிய நாடகத்தை அவரோடு சேர்ந்து பார்க்கச் செல்லும் வாய்ப்பு அமைந்தது குறித்தது மகிழ்ச்சி.

மதுரை சித்திரைத் திருவிழா நேரடி ஒளிபரப்பு மற்றும் அதன் சிறப்புகளைச் சொல்ல நியூஸ் 7 தொலைக்காட்சி களம் இறங்கியது. அதன் ஒருபகுதியாக ‘கூடல்நகர் : நிலமும் வரலாறும்’ என்ற நிகழ்ச்சி சிறுசிறு பகுதிகளாக ஒளிபரப்பானது.

அதில் மதுரை வீதிகளுக்கும் தமிழ் மாதங்களுக்குமான தொடர்பு, வசந்தமண்டபம், இராயகோபுரம், சித்திரைத் தேரோட்டம், தேர்முட்டி, திருமலைநாயக்கர் அரண்மனை, யானைக்கல், மையமண்டபம், மதுரை வீதிகளிலுள்ள கடைகளின் சிறப்பு குறித்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

மெல்லிய பதட்டம் மனதில் எழுந்தாலும் எனக்குத் தெரிந்த விசயங்களை மேலும் நான் படித்து, கேட்டு அறிந்த விசயங்களை இதில் சொல்லியுள்ளேன். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த திவ்யா அவர்களுக்கும், ஒளிப்பதிவு செய்த ஸ்வேதா அவர்களுக்கும் நன்றிகள் பல.

சித்திரைத் திருவிழா சமயம் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இத்தொகுப்பை, நியூஸ் 7 பக்தி யூடியுப் சேனலிலும் காணலாம். அதற்கான இணைப்பு கீழேயுள்ளது. நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு குழுமத்திற்கு நன்றி.

ஓவியங்கள் : வில்லியம் டேனியல், தாமஸ் டேனியல்

படங்கள் : எட்மண்ட் டேவி லயன், கேப்டன் லினேஸ் த்ரீப்

நன்றி

மதுரை வீதிகளும் தமிழ் மாதங்களும்

மதுரை தேரோட்டம்

யானைக்கல் மையமண்டபம்

திருமலை அரண்மனை

தேர்நிலை மண்டபம்

மதுரை வீதிகளைச் சுற்றியுள்ள கடைகள்

இராயகோபுரம்

வசந்த மண்டபம்

2022 தொடங்கியதிலிருந்தே வாசிப்பில் ஏற்பட்ட சுணக்கமும், நடுநடுவே ஏற்பட்ட உளச்சோர்வும் என கொஞ்சம் மந்தமாகவே இருந்தது மனநிலை. இந்நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லத் திட்டமிட்ட பசுமைநடை நண்பர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். சனி, ஞாயிறு இரண்டுநாள் பயணமாக சென்னை செல்ல முடிவெடுத்தோம். எனக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்தது தொடங்கி, சென்னை சென்று மதுரை திரும்பும் வரை பார்த்துக் கொண்ட பசுமைநடை நண்பர்களுக்கும், தோழர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வைகை ரயிலில் பசுமைநடை நண்பர்களுடன் பயணம் ஆரம்பமானது. பலவருடங்களுக்குப் பிறகு வைகை ரயிலில் செல்கிறேன். ரயிலில் பரிசாகக் கிடைத்த கவிதைப் புத்தகங்கள் குறித்து தனிப்பதிவொன்றை எழுதுகிறேன். சென்னை தாம்பரத்தில் இறங்கி அங்கிருந்து மின்ரயில் வாயிலாக மாறி நாங்கள் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தங்கியிருந்த அறையை அடைந்தோம். அவர் எங்களுக்காக மதிய உணவு வாங்கிவைத்துக் காத்திருந்தார்.

சாப்பிட்டு கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட்டோம். சென்னையின் போக்குவரத்து நெரிசலை காணும் வாய்ப்பு கிட்டியது. புத்தகக் கண்காட்சி அரங்கிற்குள் சென்றோம். ஏராளமான அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் தூங்காநகர நினைவுகள் வெளியாகி சென்னை புத்தகக்கண்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையின் வரலாற்றை, அதன் தொன்மையை, பன்முகத்துவத்தை பறைசாற்றும் நூலாக தூங்காநகர நினைவுகள் திகழ்கிறது. பசுமைநடை நண்பர்கள் எல்லோரும் அ.முத்துக்கிருஷ்ணனுடன் தூங்காநகர நினைவுகள் புத்தகத்தை வைத்து நிழற்படம் எடுத்துக் கொண்டோம்.

நண்பர் ரகுநாத்தின் தேயிலை மனிதர்கள் நூல் நாங்கள் சென்ற அன்று காலை வெளியானது. பயணச்சீட்டை நிகழ்விற்கேற்ப மாற்ற முடியாததால் நாங்கள் புத்தக வெளியீட்டில் கலந்துகொள்ள இயலவில்லை. உயிர் பதிப்பக அரங்கில் நண்பர்கள் எல்லோரும் தேயிலை மனிதர்கள் நூலோடு சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டோம். சண்முகானந்தம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பலமுறை அலைபேசி வழியாக உரையாடியிருக்கிறோம். புத்தகக் கண்காட்சி அரங்கில் கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது.

புத்தகக் கண்காட்சிக்குள் குழுவாக செல்லாமல் இரண்டு, மூன்று பேராக சென்றோம். பார்க்கும் பெரும்பாலான புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற அவாவை அடக்கி, வாங்க வேண்டியதை பட்டியலிட்டபடி நடந்தோம். ‘இன்று மாலை பார்த்துவிட்டு, நாளை காலை வந்து வாங்கலாம்’ என்று முடிவெடுத்தோம். நண்பர்கள் சிலர் அப்போதே புத்தகங்களை வாங்கினர். புத்தகக் கண்காட்சியில் மதுரை நண்பர்கள் பலரைக் காண முடிந்தது.

புதிதாக வந்திருக்கும் புத்தகங்களை, எழுத்தாளர்களை, தீவிரமான வாசகர்களை எனப் பலரையும் அரங்கில் காண முடிந்தது. இரவு பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றோம். அங்குள்ள தட்டுக்கடை ஒன்றில் ஆப்பம் சாப்பிட்டோம். கடற்கரை நோக்கிய நடை மனதிற்கு உற்சாகம் தந்தது. பீட்சா செய்து நாங்கள் தங்கிய இடத்திற்கே கொண்டுவந்த நண்பருக்கு நன்றி. உணவுப்பிரியர்கள் பற்றிய பல விசயங்களை அவர் வாயிலாக அறிய முடிந்தது. புதிய இடம் சரியான தூக்கமில்லாமல் அன்றைய பொழுது முடிந்தது.

ஞாயிறன்று காலை வெள்ளென எழுந்து பெசன்ட்நகர் நோக்கிச் சென்றோம். காலைநேரக் கடற்கரை, அழகான சூரியன், ஆர்ப்பரிக்கும் அலைகள், உடற்பயிற்சி – நடைபயிற்சி செய்யும் மக்கள், கரவலை போட்டுவந்த மீனவர்கள் என வேடிக்கை பார்த்தபடி நடந்தோம். காலடி மண்ணும் சொந்தமில்லை என்பதை உணர்த்தும் அலைகளுக்கு நன்றி சொல்லிபடி அங்கிருந்து புறப்பட்டோம். அழகான ஜோல்னாபை ஒன்றை அ.முத்துக்கிருஷ்ணன் வாங்கிக் கொடுத்தார்.

கடற்கரையிலிருந்து வரும்போது சென்னையில் வரையப்பட்ட பெரிய சுவரோவியங்களை பார்த்து ரசித்தபடி வந்தேன்.ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் கருப்பட்டி காபி குடித்தோம், கருப்பட்டி அல்வா வாங்கி சுவைத்தோம். அறைக்குச் சென்று புறப்பட்டு தட்டுக்கடை ஒன்றில் கல்தோசையும், பூரியும் சாப்பிட்டோம். எங்களை அழைத்துச் சென்றது ‘கொலபசி’ தொடர் எழுதும் எழுத்தாளர் என்பதால் அதன் சுவை மிக நன்றாகயிருந்தது.

தமிழினி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கரு.ஆறுமுகத்தமிழன் நிகழ்ச்சியில் தலைமையுரை. அன்று வெளியிடயிருந்த நூல்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கினார். இராஜராஜசோழனின் கதைகளைப் பற்றி மானசீகன் விரிவான உரை நிகழ்த்தினார். அந்த கதைத்தொகுப்பை வாங்கி வாசிக்கத் தூண்டிய உரை. புத்தகக் கண்காட்சிக்கு செல்ல நேரமாகிவிட்டதால் அங்கிருந்து கிளம்பினோம்.

புத்தகக்கண்காட்சியில் முதல் அரங்கில் புதுமைப்பித்தன் சீர்வாசகர் வட்ட வெளியீடாக வரவேற்றுக் கொண்டிருந்தது. மதுரையிலேயே அந்த நூலை வாங்கிவிட்டேன். அங்கு நண்பர் தாமரைச்செல்வனிடம் உரையாடி அரங்கிற்குள் சென்றேன். நானும் பசுமைநடை நண்பர் சரவணாண்ணனும் சேர்ந்து புத்தக வேட்டைக்கு கிளம்பினோம். சங்க இலக்கியம், தொல்லியல் சார்ந்த நூல்களாக பெரும்பாலும் வாங்கினேன்.

தமிழ்ச்செல்வ அண்ணன் புத்தகக்கண்காட்சிக்கு வந்திருப்பதாக சொன்னதும் மதியம் ஒரு மணிப்போல அண்ணனுடன் சேர்ந்து அரங்கை சுற்றி வந்தேன். சில நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். மூன்று மணிக்கு மேல் ஹக்கீமுடன் அறைக்கு கிளம்பினேன். கிளம்பும் வேளையில்தான் வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவினர் சந்திப்பை தவறவிட்ட நினைவு வந்தது. அங்கிருந்து வந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக் கொண்டு இரவு பாண்டியனில் மதுரை நோக்கி புறப்பட்டோம். ஆர்.பாலகிருஷ்ணனின் தமிழ் நெடுஞ்சாலை நூலை நண்பரிடமிருந்து வாங்கி கொஞ்ச நேரம் வாசித்தபடி வந்தேன்.

  • தமிழாராய்ச்சியின் வளர்ச்சி – தொ.பரமசிவன்,
  • தேயிலை மனிதர்கள் – சு.ரகுநாத்,
  • அணிநடை எருமை – ஆர்.பாலகிருஷ்ணன்,
  • கலையியல் ரசனைக் கட்டுரைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்,
  • முப்பது கட்டுரைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்,
  • கொற்றவையும் நடுகற்களும் – ரா.பூங்குன்றன், கோ.சசிகலா,
  • மாலை மலரும் நோய் – இசை,
  • தொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம் – கோ.சசிகலா,
  • மதுரை நாட்டுப்புற ஆண்தெய்வங்கள் – முனைவர் கு.அன்பழகன்,
  • இசையின் முகவரி பறை – மணிமாறன் மகிழினி,
  • வண்ணக்களஞ்சியப்புலவரின் குத்புநாயகம் ஆய்வுரை – டாக்டர் -மு.அப்துல் கறீம்,
  • தமிழர் விளையாட்டுகள் – இரா.பாலசுப்பிரமணியம்,
  • பண்டைக்கால வானவியலாளர்கள் – பேரா.சோ.மோகனா,
  • பொழுதுபோக்கு வானியல் – யா.பெரல்மான்,
  • திசைகளும் தடங்களும் – சுகுமாரன்,
  • நிகழ்பாடு – மகுடேசுவரன்,
  • பேரெழில் வாழிடம் – மகுடேசுவரன்,
  • சுற்றுலா ஆற்றுப்படை – மகுடேசுவரன்,
  • இரவு வானின் வழிகாட்டி -தொகுப்பாளர் பரமேஸ்வரன்

ஆகிய நூல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்தேன். இவை எல்லாவற்றையும் இந்தாண்டு மதுரை புத்தகத் திருவிழாவிற்குள் வாசிக்க வேண்டும். நன்றி!

படங்கள் உதவி – சரவணன், வெற்றிவேல்

அழகர் மலையடிவாரத்தின் அருகில் அமைந்துள்ள பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் கடந்த இருபது ஆண்டுகளுக்குப்பிறகு மையமண்டபத்தை தொடும் அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. அழகர்கோயில் சாலையிலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் இத்தெப்பக்குளம் அமைந்துள்ளது.  அழகர்கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மூன்று குளங்கள் இருந்தாலும் அழகர் தெப்பத்திருவிழாவிற்கு மாசி மாதம் பொய்கைக்கரைப்பட்டிக்கு வருகிறார் என்பது இந்த குளத்தின் சிறப்பு.

அழகர்மலையிலிருந்து மழைபெய்து ஓடைகள் வழியாக வரும் நீர் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களில் நிரம்பி மறுகால் பாய்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தை வந்தடைகிறது. மழைநீர் வரும் வடிகால்களை சீரமைத்ததன் காரணமாக தெப்பத்திற்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தின் நடுவில் பதினாறுகால்களுடன், ஒற்றைக் குவிமாடத்துடன் கூடிய மையமண்டபம் அமைந்துள்ளது. மையமண்டபத்தின் உச்சிப்பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. பழமையான இந்த மைய மண்டபத்தை சீரமைத்தால் மிக அழகாக இருக்கும். மேலும், தெப்பம் தொடர்ந்து நிறைந்திருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் கடந்த பத்துவருடங்களாக முழுதாக நீர் நிரம்பாமல் இருந்ததால் அழகர் கரையைச் சுற்றி சென்றுகொண்டிருந்தார். ததும்பத்ததும்ப நீர் நிறைந்த தெப்பக்குளத்தில் இந்தாண்டு அழகர் எழுந்தருளுகிறார் என்ற செய்தி நாளிதழ்களில் வந்தது அழகரடியார்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது.

பௌர்ணமி இரண்டுநாட்கள் வந்ததால் மாசிமகத்திற்கு முதல்நாள் மாசிப்பௌர்ணமியன்று அழகர்கோயிலில் இந்தாண்டு தெப்பத்திருவிழா நடைபெற்றது. தெப்பத்திருவிழாவிற்கு முதல்நாள் கஜேந்திர மோட்சம் நடைபெறும். அழகர்கோயிலில் உள்ள ஆடிவீதியைச் சுற்றிவந்து கோபுரத்திற்கருகிலுள்ள மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

பொய்கைக்கரைப்பட்டியில் தெப்பத்திருவிழா அன்று அழகர் கிராமத்துத் தெருக்களின் வழியே வருகிறார். மக்கள் வீட்டுவாசல்களில் விளக்குகளை எடுத்துவைத்து தேங்காய், பழம், மாலை வாங்கி வைத்து காத்திருக்கின்றனர். அழகர் ஊருக்குள் எழுந்தருளியதும் தப்பாட்டம், சிலம்பாட்டம், கொக்கலிகட்டையாட்டம் வைத்து அழகரை வரவேற்றுச் செல்கின்றனர். கிராமத்துசிறுமிகள் பட்டுப்பாவாடை, கனகாம்பரம், மல்லிகை என சூடி திருவிழாவிற்கு வரும் அழகரை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

வெள்ளியங்குன்றம் ஜமீன் அழகர் கோவிலிலிருந்து அழகரோடு வருகிறார். அவருக்கும் ஊரிலிருந்து மரியாதை செய்கிறார்கள். கிராமத்து மந்தையில் பெரிய, பெரிய மரங்கள் உள்ளது அத்தனை அழகு. தப்பும் தவிலும் ஒலிக்க அழகர் வருகிறார்.

பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் வந்ததும் தெப்பத்தை சுற்றிவருகிறார். சுற்றிவந்து கிழக்குப்பகுதியில் உள்ள படித்துறையில் இறங்கி அன்னவாகனத்தில் அழகர் எழுந்தருளுகிறார். அழகர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியதும், அன்ன ஓடத்தை கழிகளைக் கொண்டு நகர்த்துகிறார்கள்.

சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தெப்ப உலாவந்து கிழக்குப்பகுதியில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் எழுந்தருளுகிறார். வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு பரிவட்ட மரியாதைகள் செய்யப்படுகிறது. காலையிலும், மாலையிலும் தெப்பம் சுற்றி வருகிறது. இரவு விளக்கொளியில் தெப்பம் சுற்றுவதை காண்பது மிக அழகு.

தெப்பத்திருவிழாவிற்கு ஏராளமான கடைகள் போட்டிருக்கிறார்கள். பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், அவல்பொரி கடைகள் என கிராமத்து மந்தையிலிருந்து தெப்பம் வரை நிறைய திருவிழாக்கடைகள். தெப்பத்தின் படிக்கட்டுகளில் அழகாய் வெள்ளை, காவி வண்ணம் பூசியிருக்கிறார்கள்.

2012ல் தெப்பத்திருவிழா பார்த்து முன்பு எழுதிய பதிவு அன்னவாகனத்தில் அழகுமலையான்

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தெருமுகம் என்ற நிகழ்ச்சி வாயிலாக நம் வரலாற்றுத் தலங்களை, பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியை இயக்கும் பி.என்.எஸ். பாண்டியன் ஒரு எழுத்தாளர் என்பதால் இந்நிகழ்விற்கு புதியதொரு முகம் கிட்டுகிறது.

பொங்கலையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் சல்லிக்கட்டு குறித்த தெருமுகம் நிகழ்வு முதலில் ஒளிபரப்பானது. அதில் சல்லிக்கட்டு சார்ந்த தொல்லெச்சங்கள், இலக்கியக்குறிப்புகள், பார்த்த நினைவுகளை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், மதுரையைச் சேர்ந்த ஓவியர் ட்ராஸ்கி மருதுவும் பகிர்ந்தார்கள். அந்த நிகழ்வில் கோவில்மாடுகளுக்கும் கிராம மக்களுக்குமான உறவைப்பற்றி பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

கோவில்மாட்டை அந்த கிராமத்தின் காவல் தெய்வத்தின் வடிவமாகப் பார்ப்பதும், மந்தையில் நிற்கும் மாட்டுடன் விளையாடும் பள்ளிச் சிறுவர்கள், கோவில்மாட்டுக்காக கழனித்தண்ணி வைத்து காத்திருக்கும் பெண்கள் என அந்த மாடு மக்களோடு கொண்டுள்ள உறவு. அதேபோல கோவில்மாடு வயதாகி இயற்கையெய்தும் வேளையில் ஊரோடு சேர்ந்து அதை அடக்கம் செய்வதை, அதற்கு சிலை எடுத்து வழிபடுவதைப் பற்றியும் அந்நிகழ்வின் வாயிலாக எடுத்துரைக்க முடிந்தது.

திருவிழாக்களின் தலைநகரம் என்ற தலைப்பில் பேசும்போது மதுரையிலுள்ள பெருங்கோவில்கள், இங்குள்ள பெருந்தேரோட்டங்கள் பற்றி பேசும் வாய்ப்பு அமைந்தது. மதுரையிலுள்ள நீர்நிலைகளுக்கும், விழாக்களுக்குமான உறவைப் பற்றி இந்நிகழ்வில் சொல்ல முடிந்தது. மூன்று வாரங்கள் மதுரை குறித்து தெருமுகம் நிகழ்வு ஒளிபரப்பானது மகிழ்ச்சி. மதுரையில் சமணம் குறித்து தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கமும், பசுமைநடை அமைப்பாளரும் பேசினார்கள். மதுரையின் வீதிகள், விழாக்கள், கல்வி குறித்த பதிவில் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன், எழுத்தாளர் ச.சுப்பாராவ், ஓவியர் சிவா என பல ஆளுமைகள் மதுரை குறித்து உரையாடியிருக்கிறார்கள்.

தெருமுகம் நிகழ்ச்சிகளுக்கான யூடியுப் இணைப்பு :

சல்லிக்கட்டு

https://youtu.be/eBqDauJBKB0

மதுரை தெருக்கள்

https://youtu.be/0Wkocniz3po

மதுரையில் சமணம்

https://youtu.be/DLYdzqczUb0

பொதுவாக இந்தித் திணிப்பை எதிர்த்த போராளிகள் என்றாலே திராவிடக் கட்சி பின்னணி கொண்டவர்கள் என்றே நினைப்போம். அவர்களுள் கம்யூனிஸ்ட்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரை 13 பிப்ரவரி 2022 அன்று சந்தித்தோம்.

கோவில்பாப்பாகுடி சாலையில் ஓரிடத்தில் மாவட்ட மொழிப்போர் தியாகிகள் சங்கம் பற்றிய அறிவிப்புப் பலகை இருந்தது. அந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு தி. சீனிவாசன் அங்கு வசிக்கிறார். சரி, நமது பகுதியிலேயே இப்படி ஒருவர் இருக்கிறாரே என்று அவரைச் சந்திக்க முடிவு செய்து தொடர்புகொண்டோம். உடனே வரச்சொல்லி இசைவு தந்தார்.

சீனிவாசன் 1947-இல் பிறந்தவர். இன்றைக்கு எழுபத்தைந்து வயதுப் பெரியவரான அவர் தனது பத்தொன்பதாம் வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றிருக்கிறார். கோவில்பட்டியில் பிறந்த அவர் தனது பத்து வயதுக்குள்ளேயே பெற்றோர் இருவரையும் இழந்து மதுரையில் ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் குடியேறி இருக்கிறார். அவரது வளர்ப்புத் தந்தை மதுரையில் ஹார்வி மில்லில் வேலை பார்த்திருக்கிறார். அவரது குடும்பம் என்பது இந்தக் குடும்பமே.

அதிகம் படிக்கவில்லை என்றாலும் அரசியல் ஆர்வம் இருந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு. இந்தித் திணிப்பு தொடர்பில் நடந்த போராட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்துகொண்டு அந்த நேரத்தில் சிறைசென்ற பலரில் இவரும் ஒருவர்.

தனது வீட்டுக்கு ஜானகி இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார். கே. பி. ஜானகி அம்மாள் அவர்களை அம்மா என்றே சொன்னார். அவரது பணிகளை நினைவுகூர்ந்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இருந்த சின்னம்மாள் என்ற இயக்கத் தோழரையே சீனிவாசன் மணமுடித்திருக்கிறார். அந்தத் திருமணத்தை ஜானகி அம்மாள் நடத்திவைத்ததாகச் சொன்னார். இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் படத்தை தோழர் ஒருவர் பரிசளித்திருக்கிறார். அதை வீட்டில் மாட்டிவைத்திருக்கிறார்.

அவரைச் சந்தித்ததில் மொழிக்காவலர்கள் அரசு அறிவித்த ஓய்வூதியம் பெறுவதற்கு எதிர்கொண்ட சட்டப்போராட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு மாதமாவது சிறையில் கழித்திருக்கவேண்டுமா, ஒரு நாள் இருந்திருந்தாலே போதுமா என்று நீதிமன்றப் படியேறி இருக்கிறார்கள்.

ஆர். ஆர். தளவாய் என்பவர் இந்தி எதிர்ப்பு போரில் கலந்துகொண்டவர்களுக்கு வெகுமானமா என்று வழக்குப் போட்டிருக்கிறார். உச்சநீதிமன்றமும் இப்படி இன்னொரு மொழிக்கு எதிராகப் போராடுவதையெல்லாம் அங்கீகரிக்கக் கூடாது, முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்; இது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மக்களாட்சிக்கும் எதிரானது என்று மொழியுரிமை, திணிப்பு, ஆதிக்கம் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோல நாட்டுப்பற்றையும் தியாகத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போட்ட முட்டுக்கட்டைகள் பல. அதனால் மாநில அரசு 1983-இல் தனியாகச் சட்டம் இயற்ற வேண்டியிருந்திருக்கிறது. ‘மொழிக்காவலர்’, ‘எல்லைக் காவலர்’, ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்’ என்றெல்லாம் வெவ்வேறு அடைமொழிகள் தந்து தனது கடமையை நிறைவேற்ற வேண்டியிருந்திருக்கிறது.

சீனிவாசனுக்கு மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற கூடுதல் சிக்கல். ஓய்வூதியம் பெற இருபத்தோராண்டுகள் போராடி இருக்கிறார். இடையில் ஒருமுறை ஒரே தடவையாக பத்தாயிரம் பணமுடிப்பு போல வழங்கியிருக்கிறார்கள். பின்பும் போராடி ஓய்வூதியம் பெற்றிருக்கிறார். பி டி ஆர் பழனிவேல் ராஜனை சந்திக்க வேண்டியிருந்ததாம். சிறையில் உடனிருந்த காவேரிமணியம், பி. எஸ். மணியன் போன்றவர்கள் சான்றளித்திருக்கிறார்கள். இவரது பெயர் உள்ளிட்ட பெயர்களடங்கிய சிறைப் பதிவேட்டின் 32 பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தனவாம். அரசு ஊழியர் சிலர் கையூட்டோ , கமிஷனோ பெற விரும்பியது வேறு நடந்திருக்கிறது.

இரண்டாயிரமாயிருந்த ஓய்வூதியமும், மருத்துவ உதவித்தொகையும் சேர்ந்து இன்று ஐயாயிரம் வரை வருகிறது. மொழிக் காவலருக்கும், அவரது உடன்செல்லும் உதவியாளருக்கும் இலவச பேருந்துப் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குடியரசு தினம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அழைப்பு வருகிறது. ஒருமுறை அவ்விதம் அழைப்பெதுவும் வரவில்லையாம். இவர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்தைப் பார்த்திருக்கிறார். அவர் உங்களை யாரும் தடுக்கவில்லையே என்றிருக்கிறார். அப்படியெல்லாம் அழையா விருந்தாளியாக வரமுடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அதன்பிறகு ஒழுங்காக கடந்த சுதந்திர தினவிழா வரை முறையாக அழைப்பு வந்திருக்கிறது. இந்த குடியரசு தினத்துக்கு மறந்துவிட்டார்கள் என்றார்.

நாங்கள் சென்றபோது ‘மார்க்ஸ்- அம்பேத்கர் – பெரியார் :ஒரு ஒப்பீடு’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தார். சாதி மறுப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இறை நம்பிக்கை தனிநபர் சார்ந்த விஷயம் என்றார். ஈழம் தொடர்பில் அவர் சொன்னது வரலாற்றுக்குப் புறம்பானது. மற்றபடி கருத்தியல்ரீதியாகப் பேசுமளவுக்குத் தாம் படித்தவனோ, பெரிய தலைவர்களுள் ஒருவனோ அல்லவென்று சொன்னார். மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனது செயல்பாடு குறித்து நிறைவுகொண்டிருந்தார்.

சீனிவாசனோடு பேசும்போது மாரி, மணவாளன், தில்லைவனம், ஐ. வி. சுப்பையா போன்ற பெயர்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. என். ராமகிருஷ்ணன் கோவில்பாப்பாகுடி தினமணி நகர் பகுதியில்தான் இருந்திருக்கிறார். சீனிவாசனது தலைமுறையில் விவசாயப் பிரச்சினை, பஞ்சாலைப் பிரச்சினை என்று பலவற்றைப் பார்த்திருக்கிறார்கள். இப்போது இந்தப் பகுதியில் எது முதன்மையான பிரச்சினை என்று கேட்டோம். சிறு, குறு தொழில்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திப்பதாகச் சொன்னார்.

உருப்படியாகச் செலவிட்ட நாளாக அமைந்தது.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களது நூல்களைக் குறித்தும், அவரது கட்டுரைகளைச் சேர்த்தும் ஒரு சிறப்பிதழ் கொண்டுவர தொ.ப.வாசகர் வட்டம் சார்பாக முடிவுசெய்தோம். 2017இல் தொ.ப. வாசகர் வட்ட முதல் சந்திப்பு அழகர்கோயிலில் நடந்தது. அதைத் தொடர்ந்து 2018இல் தொ.ப. இல்லத்தில் தொ.ப. வாசகர் வட்ட நண்பர்கள் சந்தித்தோம். தொ.ப. சிறப்பிதழ் கொண்டுவரலாமென 2019இல் சந்தித்த தமிழறம் செந்தில்குமார் அவர்கள் சொன்னபோது கட்டுரைகளைத் தொகுக்கும் பணிகளைத் தொடங்கி சிறப்பிதழைத் தொ.ப. இல்லத்தில் வெளியிடலாம் என முடிவு செய்தோம்.

கட்டுரைகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள், எங்களுடைய சோம்பல் என 2020 வந்துவிட்டது, கூடவே கொரோனா பெருந்தொற்றும். சிறப்பிதழுக்கான பணிகள் தேங்கிநின்றது. எதிர்பாராதவிதமாக 24.12.2020 அன்று தொ.ப. இயற்கையெய்தினார். அவரது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தொ.ப. சிறப்பிதழ் பணிகளைத் தொடங்கினோம். காலம் கனிந்து தொ.ப.வின் முதலாமாண்டு நினைவுநாளன்று அழகர்கோயிலில் தொன்மையும் பன்மையும் தொ.ப. நினைவுச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

அழகர்கோயில் பதினெட்டாம்படியான் சன்னதிக்கு அருகிலுள்ள அரசமரத்தடியில் நூலை தமிழறம் செந்தில்குமார், கவிதா செந்தில்குமார், கருந்துளை, கதிர்நம்பி, ரகுநாத், கணேசன், தமிழ்குடியோன், நான் என நண்பர்கள் கூடி நூலை வெளியிட்டோம். பாளையங்கோட்டையில் தொ.ப. முதலாமாண்டு நினைவு கருத்தரங்கிலும் இந்நூல் இதேசமயத்தில் வெளியிடப்பட்டது.

வேரும் விழுதும் என்ற கட்டுரையில் தொடங்கி பரண் தொகுப்பில் வந்த ஆங்கிலக் கட்டுரையோடு சேர்த்து மொத்தம் 20 கட்டுரைகள். தொ.ப. குறித்து, அவரது எழுத்துக்கள் குறித்து நல்லதொரு அறிமுகத்தை தரும் கட்டுரைகள். இத்தொகுப்பில் அழகர்கோயில், சமயம் ஓர் உரையாடல் நூல்கள் குறித்த எனது வாசிப்பனுபவமும் உள்ளது. பசுமைநடை விருட்சத் திருவிழாவில் தொ.ப. பேசிய உரையை எழுத்தாக்கம் செய்தது இந்நூலில் வந்துள்ளது. தொ.ப. அசலான ஆய்வாளர் என சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் எழுதிய கட்டுரையும், தொ.ப. எழுத்துக்களில் பெண்கள் என நண்பர் ரகுநாத் எழுதிய கட்டுரையும் இத்தொகுப்பிற்காக அவர்களிடம் வாங்கிக் கொடுத்தேன். இன்னும் சிலகட்டுரைகளை முகநூல் நண்பர்கள் வாயிலாக வாங்கிக் கொடுத்தேன்.

களஆய்வுன்றது மனுசன வாசிக்கிறது என்று சொல்லும் தொ.ப.வுடைய எழுத்துக்களும் மனித வாசிப்பை அடிப்படையாகக் கொண்டவை. தொ.ப.வுடன் பழகியவர்கள் சொல்லும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது அவரொரு பண்பாட்டு நூலகமாக வாழ்ந்து வந்ததை அறிய முடிகிறது. காலச்சுவடு, காக்கைச் சிறகினிலே வெளியிட்ட தொ.ப. நினைவுச் சிறப்பிதழிலிருந்து தொகுத்தவற்றைக் கீழே காணலாம்:

பகுத்தறிவுக்கும் பண்பாட்டுக்கும் இடையில் ஒரு சங்கடமான உறவு உண்டு. ஒன்று மற்றொன்றுடன் எளிதில் பொருந்திப் போகாது. அறிவு, நவீன யுகத்தின் காத்திரமான முதல் போராளி. பண்பாடு, மானுடப் பரப்பின் ஆழங்களைப் பற்றி நிற்பது. பேராசிரியர் தொ.ப. இவை இரண்டுக்குமிடையில் ஓர் உரையாடலை முன்னெடுத்தார். பெரியாரிய மானுடவியல் என்ற ஒரு புதிய போக்கினை அவர் உருவாக்கித்தர முயன்றுள்ளார். மொழி, பண்பாடு, மானுடவியல், விளிம்புநிலை மக்கள் என்ற சந்திப்பில் பேராசிரியர் தொ.ப.வைக் காண்கிறோம்.

– ந.முத்துமோகன்

தமிழகத்தின் தெருக்களில் நின்று வயல்வெளிகளில் நின்று, மலைக்குகைகளில் நின்று தொ.ப. பேசிக்கொண்டிருக்கிறார். இதோ இந்தக் கற்சிலையையும் சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியங்களையும் இந்துத்வ பாசிசத்தையும் உலகமயத்தையும் ஒரே வரிக்குள் கொண்டு வந்து நமக்கு விளக்கமளிக்கிறார். இந்த இணைப்புத்தான் தொ.ப.வின் மகத்தான பங்களிப்பு. பொருள்சார் பண்பாட்டு அறிஞர் என்றுதான் அவரை அடையாளப்படுத்த வேண்டும். அப்படி நம்மைச் சுற்றியுள்ள பொருட்களோடும் நிகழ்வுகளோடும் நம்மையும் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த தமிழ்க்கருத்துலகையும் இழுத்துப் பிடித்துக் கட்டிவைத்தவர் அவர்தான்.

– ச.தமிழ்ச்செல்வன்

ஒவ்வொரு மனுசன் மனுசியின் அசைவிலும் நாச்சுழட்டலிலும் முகபாவத்தினதும் வழியாக வெளிப்படும் குணவாகுளைக் கூர்ந்து கவனித்தார். என்ன வகையாக இந்த எறும்புகள் எந்தப் புள்ளியில் இருந்து புறப்பட்டு வருகின்றன என்பதை வாசித்தார். இது ஒரு கதைசொல்லி செய்ய வேண்டிய காரியம். அதனால், மண்சார்ந்த படைப்புகளைத் தருகிற செய்கிற கதைசொல்லிகள் தொ.ப.வுக்கு பிரியமானவர்கள்.

– பா.செயப்பிரகாசம்

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரையைச் சொல்லத் தொடங்குவார். தொடர்ந்து சொல்லிக் கொண்டே போவார். திடீரென்று நிறுத்தி தான் களப்பயணத்திற்கு மக்களைச் சந்தித்த போது கிடைத்த சுவையான அனுபவங்களை நீண்ட நேரம் சொல்வார். ஓர் ஊரைப் பற்றிச் சொல்கிறார் என்றால், அந்த ஊரில் என்னென்ன சாதியனர் வாழ்கின்றனர்? அவர்களின் திருமணமுறைகள் எப்படியிருக்கும்? இறப்புச்சடங்குகள் எப்படி நிகழ்த்தப்படும்? அந்த ஊரில் உள்ள நாட்டார் தெய்வங்களுக்கு கொடைவிழா எவ்வாறு நடைபெறும்? என்பதையெல்லாம் விரிவாக காரண காரியங்களுடன் விளக்குவார். இவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கிக் கொள்ளும் நமக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வளர்ந்துகொண்டே இருக்கும். இப்படி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும்போது இடையில் நிறுத்தி நடத்திய விவாதங்கள் உரையாடல்கள் விலைமதிப்பில்லாதவை.

-வே.சங்கர்ராம்

ஆய்வுமாணவர்கள் மீதான கரிசனம், நூல் வாசிப்பை அவர்கள் முன்னெடுப்பதற்கான உத்வேகமளிக்கும் சிரத்தை, ஆய்வு நோக்கில் புதிதானதொரு வெளிச்சப்புள்ளியைச் சுட்டும் திறன், ஆய்வு மாணவர்கள் குறிப்பெழுத மடைத்திறப்பாய் விழும் கருத்துரைகள், நூல் குறித்த அபாரமான மனனத்திலான விவரணைகள், தன்னுறவுகளை நிராகரித்துத் தன்னாய்வு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவரளிக்கும் பங்களிப்பு எனப் பேரா.தொ.ப. மாணவருலகில் பேரெழுச்சி மிகுவித்தப் பேராசானாகவே திகழ்ந்திருக்கிறார்.

– கண்ணா கருப்பையா

நட்பு சக்தி எது? பகை சக்தி எது? என்பதை பெரியாரைப் போலவே துல்லியமாக அறிந்து வைத்திருந்தார் தொ.ப. அதுதான் மொன்னை நாத்திகவாதிகளும் மூடக்காவிகளும் தொ.ப.விடம் தோற்றுப் போகும் மகத்தான புள்ளி

– பாமரன்

பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு அறியப்படாத வெகுமக்கள் பண்பாட்டினை மாணவர்கள் கற்க இன்னும் போதிய இடம் அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வியில் குறைந்தது 10, 11, 12ஆம் வகுப்புகளில் மொழி, வரலாறு, அறிவியல் பாடங்களில் தொ.ப. எழுத்துக்கள் உரிய அளவுக்குச் சேர்க்கப்பட வேண்டும். பல்கலைக்கழக, கல்லூரி மட்டங்களில் இளம்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் தொ.ப. அவர்கள் நூல்கள் சேர்க்கப்பட வேண்டும்.

– அப்பணசாமி

தொ.ப.வுடன் பேசும் போதெல்லாம் திராவிட குழுக்களுக்குள்ளிருக்கும் தமிழர் பண்பாடுகள் குறித்து ஆய்வை நிகழ்த்துங்கள் என்பார். தன்னிடம் பேசும் அனைவரையும் ஆய்வாளராகப் பார்த்த பெருமை அவரை மட்டுமே சேரும். நாமும் அவரைப்போல தமிழ்ச் சமூகத்தின் தொன்மங்களைத் தேடி அவை பயன்படுமெனில் அதை மக்களிடம் சொல்லுவோம். இதுவே ஒரு ஆய்வாளருக்கு நாம் செய்திடும் கைமாறு.

-முத்துநாகு

சிலர் சுடர்மிகும் அறிவுடன் விளங்குவர். கண்முன் விரியும் எதையும் அவர்களால் புரிந்துகொண்டு விளக்க முடியும். ஆனால் ஆழமாகப் படித்தவர்கள் என்று சொல்ல முடியாது. தொ.ப. ஆழமாகவும் படித்துக் கொண்டவர்.

-பழ.அதியமான்

தனது ஒவ்வொரு நூலிலும் தன் கருத்துக்களை எந்தவித மனத்தடையும் தயக்கமும் இல்லாமல் அவர் பதிந்திருக்கின்றார் என்றே உணர்கிறேன். தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களிடம் உரையாடுவது போன்றே கட்டுரைகள் ஒவ்வொன்றும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகைய எழுத்து நடை, வாசிப்பை இலகுவாக்குகிறது. சமூகவியல், மானுடவியல், பண்பாட்டு ஆய்வு, வரலாறு, அகழாய்வு மட்டுமின்றித் தனது அரசியல் பார்வையையும் தனது எழுத்துக்களின் வழி ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார்.

– தி.சுபாஷிணி

பல்கலைக்கழகத் துறைத்தலைவர்களின் அறைகளுக்குள் நுழையும் மாணவர்கள் செருப்பை வாசலில் கழற்றிவிட்டுச் செல்வது வழக்கம். தொ.ப. செருப்பைக் கழற்றிவரும் மாணவர்களை மீண்டும் அணிந்துவருமாறு வலியுறுத்துவார். மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், சாப்பிட்டார்களா, என்ன சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பார். மாணவர்கள் துறைத்தலைவருக்கு விண்ணப்பக் கடிதங்கள் எழுதும்போது ‘தங்கள் கீழ்படிதலுள்ள’ என்று எழுத வேண்டும் என்பது நடைமுறை. அவ்வாறு எழுதும் மாணவர்களின் கடிதங்களைத் திருத்தி ’தங்கள் உண்மையுள்ள’ என்று எழுதித் தருமாறு கூறுவார் சுயமரியாதைக்காரர் தொ.ப.

– இரா.இலக்குவன்

தங்களுடைய திறமையை எழுத்துக்கும் மேதைமையை உரையாடலுக்கும் வழங்கிவிட்டவர்கள் என்று ஆங்கிலக் கவிஞர்கள் கோல்ரிட்ஜ் பற்றியும் ஆஸ்கார் ஒயில்டு பற்றியும் சொல்லப்படுவது தொ.ப.வுக்கும் பொருந்தக்கூடியதே. புலமையோடு இணைந்த மொழி வறட்சி, தொ.ப.விடம் காணப்படாத ஒன்று.

– ந.ஜயபாஸ்கரன்

தொ.ப.வுக்குப் பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்லும் பழக்கம் அதிகம். அவ்வாறு செல்லும்போதெல்லாம், மறக்காமல் தமிழ் இசை நூல்கள் எதுவும் உண்டா என விசாரிப்பார். நூல்களை வாங்கி மறக்காமல் எனக்கு அனுப்புவதை விரதமாகவே கொண்டிருந்தார். “நண்பனாய், நல்லவனாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்” என இழைஇழையாய் இசைத்தமிழாய் என்ற என் இசை ஆய்வுநூலைத் தொ.ப.வுக்கு அர்ப்பணித்தேன் – நன்றிக் கடனாற்ற சிற்றளவில்.

– நா.மம்மது

ஒரு வாக்கியத்தில் நாலைந்து சொற்கள்; ஒரு பொருள் முடிபு; அதனோடு தொடர்புடைய வாக்கியங்கள்; தேவையெனில் மேற்கோள்கள்; அவற்றில் படிப்படியே விரியும் பொருள். இது அவரது நடையின் பொதுப்போக்கு. இதனோடு சிறப்புக் கூறுகள் பல விரவியது தொ.ப.வின் நடை.

– பா.மதிவாணன்

நவீன கல்வி நிறுவனங்களில் படித்துப் பணியாற்றினாலும் அதன் விதிகளுக்கு வெளியே கிராமப்புறக் கதைசொல்லியின் குணத்தொடு இயங்கியவர். கல்விப்புலத்தால் எதிர்மறையாகப் பார்க்கப்படும் இப்பண்பே அவர் பரவலாகக் கவனம் பெறுவதற்கும் காரணமாயிருக்கிறது.

– ஸ்டாலின் ராஜாங்கம்

சமூகப் பண்பாட்டியல் குறித்து தொ.ப.விடமிருந்து பெறுகிற அவதானிப்புகளை, உரசிப்பார்த்துத் தேர்வதற்கான குறுக்குத் தரவுகளை, ஆய்வுநூல்களாக நிறுவப்பட்டுள்ளவற்றைப் பார்க்கிலும், இயங்கிக் கொண்டுள்ள களங்களின் வழியேதான் பெரிதும் கண்டுணர முடியும். ஏனெனில், ‘பண்பாட்டியல் கல்வி’ என்ற ஒரு புதிய கல்விப்புலத்தின் முன்னோடி தொ.பரமசிவன் அவர்கள்.

-ஆ.திருநீலகண்டன்

நன்றி – காலச்சுவடு, காக்கைச் சிறகினிலே

(தொ.ப. படங்கள்: முகநூல் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி)

மேய்ச்சல் பிரதேசத்தில் அந்த குட்டிகளை கண்டெடுத்த குகையைத் தேடி தன் நண்பனோடு வந்தவன், அதை கண்டுபிடித்து அந்த இடத்தை சுத்தம் செய்கிறான். தான் கொண்டு வந்திருந்த கறியை அந்த ஏழு குட்டிகளுக்கும் பிரித்து வைக்கிறான். அதில் பெரிய துண்டு அவன் வளர்த்த குட்டிக்குரியது. ஏழு பத்தியைப் பொருத்திவைக்கிறான். பெரிய கீதாரியின் நினைவாக அவருக்கு பிடித்த மதுவை அந்தப் பகுதியைச் சுற்றித் தெளிக்கிறான். தான் எழுதிய அந்த நிலத்தின் வாழ்வைப் பற்றிய புத்தகத்தின் முதல் பக்கத்தை மட்டும் எடுத்து நெருப்பை பற்ற வைக்கிறான். அந்தப் பக்கம் எரியும்போது தீ அந்தப் புத்தகத்தின் பெயரையும், அவன் பெயரையும் தீண்டுகிறது. அவர்களின் ஆன்மா அவனை ஆசிர்வதித்ததாக, அவனது குற்றங்களை மன்னித்ததாக நினைத்துக் கொள்கிறான். 

நம்ம ஊரில் நாட்டார் தெய்வத்திற்கு படையல்போடுவது போல நடக்கும் மேற்கண்ட நிகழ்வு நடப்பது மங்கோலிய மேய்ச்சல் நிலமான ஓலான்புலாக்கில். பீஜிங்கொத்துக்கறியை தான் வளர்த்த ஓநாய் குட்டிகளுக்கு படையலிடும் ஜென்சென் சீனாவைச் சேர்ந்தவன். அவன் வணங்கும் முதியவர் பில்ஜி, அவனுக்கு வழிகாட்டியாக இருந்த மங்கோலியப் பழங்குடி. அவன் வைத்து வணங்கிய புத்தகம் ‘ஓநாய் குலச் சின்னம்’.

எதற்காக ஜென் ஓநாய் குலச்சின்னம் என்னும் நூலை எழுதினான்? சீன மாணவனான ஜென் ஏன் மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்கு வந்தான்? பில்ஜி யார்? அந்த மேய்ச்சல் நிலம் என்னவானது? ஓநாய் பெயரில் நூல் எழுதும் அளவிற்கு அவைகளுக்கு என்ன முக்கியத்துவம்? எனப் பல கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்நாவல்.

கலாச்சாரப் புரட்சியின் விளைவாக மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்கு கற்கவரும் சீன மாணவன் ஜென், மங்கோலியப் பழங்குடிகளின் வாழ்க்கை முறையை, அப்பழங்குடிகளின் பண்பாட்டை, அவர்கள் வாழ்வில் ஓநாய்கள் பெற்றுள்ள இடத்தை அறிந்துகொள்கிறான். தன்னையும் ஒரு மங்கோலியனாக கருதும் மனநிலையை அடைய ஒரு ஓநாயை வளர்க்க முயற்சிக்கிறான். இதற்கிடையில் மேய்ச்சல் நிலங்களை அழித்து அங்கு பயிர்த்தொழில் செய்ய சீனராணுவம் ஓநாய் வேட்டையைத் தொடங்குகிறது. மங்கோலியப் பழங்குடிகளின் வாழ்க்கை எவ்வாறு சிதைந்தது, இயற்கை வளங்களை பிரம்மாண்டங்கள் எவ்வாறு சூறையாடியது என்பதை இந்நாவல் எடுத்துரைக்கிறது.

ஓநாய்கள் பொறுமையாக காத்திருப்பது, தலைமை ஓநாய்க்கு அடிபணிவது, சரியான முடிவுகளை எடுப்பது, வேட்டையாடுவது, குடும்பமாக வசிப்பது, அவசரகாலத்தில் தன் உயிரைக் காக்க உடலின் ஒரு பாகத்தைத் துண்டித்துக் கொள்ளத் துணிவது, எதிரிகளின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவது என ஓநாய்கள் இந்நாவலின் நாயகர்களாகத் திகழ்கிறது. மங்கோலிய குதிரைகளின் வேகத்திற்கு ஓநாய்களின் மீதான அதன் பயம் ஒரு காரணம். மான்களும், மர்மோட்டுகளும் மேய்ச்சல் நிலத்தையும், மலைகளையும் முழுக்க அழிக்காமல் இருக்க ஓநாய்கள்தான் காரணம். இப்படி மேய்ச்சல்நிலத்தின் காவலனாக, டெஞ்ஞரின் (மங்கோலியப் பழங்குடிகளின் தெய்வம்) தூதுவனாக ஓநாய் திகழ்கிறது. 

மனித ஓநாயாக பில்ஜி இருக்கிறார். அற்புதமான பெரியவர். வேட்டையாடும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கும், தாக்குதல் நடத்த சரியான காலத்தைத் தேர்ந்தெடுப்பதும், டெஞ்ஞருக்கு பயந்து வாழ்வதும் என பில்ஜி நம்மை கவர்ந்த மனிதராக இருக்கிறார். ஜென் நல்ல வாசகன், தான் வாசிக்கும் விசயங்களைக் குறித்து பில்ஜிக்கு சொல்லி அவருடைய அனுபவங்களை கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

சீனாவில் வசிப்பவர்களுக்கு கறிக்கு, பனியாடைகளுக்குத் தேவையான ஆடு, மாடுகளை வளர்ப்பது, மான்களை வேட்டையாடுவது அதை சீனர்களுக்கு விற்பது, அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து மங்கோலியப் பழங்குடிகள் வாழ்கின்றனர். விவசாயக்குடிகளைவிட நாடோடிகளாக உள்ள மக்களிடம் உள்ள நற்பண்புகளை, இயற்கை மீதான அம்மக்களின் புரிதலை நாம் அறிய முடிகிறது.

மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்கு வந்த ஜென்சென் சீனாவிலுள்ள ஹேன் இனத்தைச் சேர்ந்தவன். மங்கோலியனாக வாழ விரும்பும் ஜென் அதற்காக அவர்களின் குலச்சின்னமாக விளங்கும் ஓநாயை வளர்க்க விரும்புகிறான். ஓநாயை வளர்ப்பதை பில்ஜி விரும்பவில்லை. இருந்தாலும் ஜென் அதை முயற்சிக்கிறான். மற்ற விலங்குகளைப் போல ஓநாய்கள் மனிதனின் வளர்ப்பு பிராணி ஆவதில்லை என அவன் அறிகிறான்.

பாவோ சுங்காய் என்ற சீன இராணுவத் தளபதி ஓலான்புலாக்கில் உள்ள ஓநாய்களை கொன்றழிக்கும் குணம் படைத்தவன். இயற்கை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் ஓநாய்களை வேட்டையாட முடிவு செய்வதில் தொடங்கி அந்த நிலத்தை சீர்குலைத்தவன். ஓநாய்களை, மான்களை, மர்மோட்டுகளை, வாத்துகளை வேட்டையாடி சீன ராணுவ அதிகாரிகளை மகிழ்விக்க நினைக்கிறான் பாவோ சுங்காய். 

ஓநாய்கள் அழிய மேய்ச்சல் நிலம் அழியத் தொடங்குகிறது. அவர்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிடுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு ஜென்னும் அவனது நண்பன் யாங்கீயும் ஓலான்புலாக்கிலுள்ள பில்ஜி பிள்ளைகளான பட்டுவையும், கஸ்மாயையும் பார்க்க வருகிறார்கள். அப்போதுதான் ஜென் எழுதிய அந்த நாவலையும் படையலிடுகிறார்கள். 

ஓநாய்குலச்சின்னம் வாசித்தபோது இந்தச் சூழலியல் சீர்கேடுகள் குறித்து தெளிவாகப் புரிந்தது. ஓநாய்களைப் பற்றிய நிறைய கதைகளை வாசித்திருக்கிறோம். அதில் பெரும்பாலும் அந்த ஓநாய் கெட்ட குணங்களைக் கொண்ட ஒரு விலங்காகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஓநாய்குலச்சின்னம் அந்த எண்ணத்தை சிதறடித்துவிட்டது. நாம் எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் ஓநாய் குலச்சின்னம்.

நம்ம ஊரின் வீதிகளில், சாலைகளில் மாடுகள் வழிமறித்துக்கொண்டு அலைவதைக் காணும்போது மேய்ச்சல் நிலம் எல்லாம் வீட்டடி மனைகளாக மாறியதைப் பார்க்கும்போது பில்ஜி சொல்லும் வரிகள் நினைவிற்கு வருகிறது. “இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள், இறைச்சி உண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை.”

2004ல் ஜியாங் ரோங் எழுதி வெளியான ஓநாய் குலச்சின்னம் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையாகியிருக்கிறது. ஜியாங்ரோங் தனது சொந்த அனுபவத்தையே அற்புதமான புனைவாக மாற்றியிருக்கிறார். கடந்த பதினைந்து வருடங்களில் ஒரு கோடிப்பேர் இந்நாவலை வாசித்திருக்கலாம். இந்நாவலை தமிழில் சி.மோகன் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இதுவரை வாசித்த மொழிபெயர்ப்பு நாவல்களில் இத்தனை நெருக்கத்தை உணர்ந்ததில்லை. இயக்குநர் வெற்றிமாறன் இந்நாவலை வெளியிடுவதற்காகவே அதிர்வு என்ற பதிப்பகத்தைத் தொடங்கியிருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன் 2013ல் நடத்திய நாவல் முகாமில் இந்த நாவலை வாங்கிய சகோதரர் அதை 2020ல் என்னிடம் தர புத்தகத்திலும், கிண்டிலிலும் மாறிமாறி வாசித்தேன். சி.மோகன் இந்நாவல் குறித்து சொன்ன வரிகளோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன். “இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர்; ஞான சிருஷ்டி.”