நூலக ஆர்வலர் விருது 2023

Posted: நவம்பர் 27, 2023 in வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:,

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தேசிய நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் அவர்களின் பெயரில் மாவட்ட அளவில் சிறந்த நூலகருக்கான விருதும், சிறந்த வாசகர் வட்டத் தலைவருக்கான நூலக ஆர்வலர் விருதும் வழங்கிவருகிறது. இந்தாண்டு தல்லாகுளம் நூலகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வாசகர் வட்டத் தலைவருக்கான “நூலக ஆர்வலர் விருது” எனக்கு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை வழங்கிய தல்லாகுளம் நூலகர் திரு. கி. ஆறுமுகம் அவர்களுக்கும், மாவட்ட நூலக அலுவலர் அவர்களுக்கும் நன்றிகள் பல.

சென்னையில் நடைபெற்று வந்த விருது வழங்கும் விழா இந்தாண்டு எஸ். ஆர். அரங்கநாதன் அவர்கள் பிறந்த சீர்காழியிலேயே நடைபெற்றது. அதற்காக மகிழ்வுந்தில் அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சீர்காழிக்கு சென்றோம். எங்களுடன் தல்லாகுளம் நூலகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்துதந்த புரவலர் இராமசந்திரக்குமார் (குமார் மெஸ் உரிமையாளர்) அவர்களும், பேராசிரியர் பாலகிருஷ்ணன், முருகேசன் அவர்களும் வந்தனர்.

விருது வழங்கும் நிகழ்விற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களும், அந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர். நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் இந்த விழாவை ஒருங்கிணைத்தார். விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தல்லாகுளம் நூலகத்தின் வாசகர் வட்டம் வாயிலாக பல்வேறு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் சுப்பாராவ், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார், பேரா.பாலகிருஷ்ணன், கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன், வழக்கறிஞர் கா.பிரபுராஜதுரை, வழக்கறிஞர் பெ.கனகவேல், வழக்கறிஞர் ஜெயமோகன், மருத்துவர் ராஜன்னா, எழுத்தாளர் சு. ரகுநாத், லயன் முத்துக்கிருஷ்ணன், ராஜ்குமார், இளங்கோ, ஜோதியம்மாள், கார்த்திக், ஜெயராமன், செல்வி. நிவேதா போன்ற பலரும் வாசகர் வட்டக் கூட்டங்களின் போது வந்து உரையாற்றியிருக்கிறார்கள்.

தல்லாகுளம் நூலகரான ஆறுமுகம் அவர்களின் ஒத்துழைப்பில் இந்த வாசகர் வட்ட நிகழ்வுகள் சாத்தியமானது. நூலகத்திற்கு போட்டித் தேர்வு மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் ஆகியோரது படங்களையும், புத்தகம் குறித்த ஓவியங்களையும் நூலகச்சுவரில் வரைந்த ஓவியர் ராகேஷ் அவர்களுக்கும் இக்கணத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

உலக புத்தக தினவிழா, தேசிய நூலக வாரவிழா, தூங்காநகர நினைவுகள் நூலுக்கான நிகழ்ச்சி, கி.ரா.வைக் கொண்டாடுவோம், தொ.ப. பிறந்தநாள் விழா போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம்.

தொ.ப.வின் பிறந்த நாளையொட்டி அறியப்படாத தமிழகம் நூலை அனைவருக்கும் வழங்க உதவிய சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கு நன்றி. பதாகைகளை வடிவமைத்துக் கொடுத்த ஹக்கீமுக்கு நன்றி.

2024இல் மாதம் ஒரு நிகழ்வு எனத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான முயற்சிகளைச் செய்ய உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
  1. radha krishnan சொல்கிறார்:

    வாழ்த்துகள்

பின்னூட்டமொன்றை இடுக