Archive for the ‘பார்வைகள்’ Category

FL20Green8_jpg_1571828g

ஆலமரங்களுக்கடியில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். குளக்கரைகளிலும் சமணமலையடிவாரத்திலும் குழந்தைகள் மகிழ்ச்சியாய் விளையாடித் திரிந்தனர். நாடகமேடையருகில் பெருஞ்சமையல் நடந்துகொண்டிருந்தது. சாலையின் மறுபுறம் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காத்திருந்தனர். மலையை காவல் காத்து நிற்கும் கருப்புச்சாமியும் குதிரையில் அமர்ந்து காற்றலைகளில் வரும் மதுர வரலாறையும் சூழலியல் குறித்த உரைகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். சில வருடங்களாக இம்மலையடிவாரம் தன்னை இயற்கைத்திருவிழாவோடு இணைத்துக்கிடக்கிறது. அப்படியென்னத் திருவிழா என்கிறீர்களா? வாருங்கள் பசுமைநடையாக.

947302_10201324070719963_1087338239_n

மதுரைக்கு அரணாக, அழகாகயிருந்த யானைமலையை கலைப்பார்வையோடு சிலர்பார்த்து படுத்திருக்கும் யானையை நிப்பாட்ட முடிவு செய்தனர். கலைப்பார்வையா? காமாலைப் பார்வையா? என்று உணர்ந்த மக்கள் போராடி மலையை மீட்டனர். அச்சமயத்தில் உயிர்மையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அம்மலை குறித்து எழுதிய கட்டுரையைப் படித்த மதுரைவாசிகள் நிறைய பேர் யானைமலையின் தொல்லெச்சங்களைக் காண விழைந்தனர். அதன்பின் ஐம்பதிற்கும் மேலானோர் யானைமலை சென்று வந்துள்ளனர். மதுரையில் இதுபோலுள்ள இடங்களுக்குத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்றபோது எண்ணம் ஏற்பட்டபோது பசுமைநடை முகிழ்தது. அந்நடை குறித்த தகவல் அடுத்தமாத உயிர்மையில் வர நானும் அதில் இணைய விரும்பினேன்.

மதுரை நகர்மன்றச்சாலையில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனை பார்த்தபோது அவரிடம் பசுமைநடையில் என்னையும் இணைத்துக்கொள்ளச் சொல்லி என் அலைபேசி எண்ணையும் கொடுத்தேன். அதன்பின் 14.11.2010ல் பசுமைநடையாக கீழக்குயில்சமணமலை செல்வதாக குறுந்தகவல் வந்தது. நானும், சகோதரனும் அதிகாலை கிளம்பிச் சென்றோம்.

CIMG2335

சமணமலையடிவாரத்திலிருந்து செட்டிப்புடவிற்கு பசுமைநடையாகச் சென்றோம். அங்கு சமணம், தமிழிக்கல்வெட்டுகள், மகாவீரர் குறித்தெல்லாம் அங்கு பேசிய ஆளுமைகளின் வரலாற்று உரையை தொல்தலத்தில் கேட்டபோது இந்த மலைவகுப்பை தவறவிடக்கூடாதென உள்ளத்தில் கெவுலி அடித்தது. ஒவ்வொரு நடையும் ஒரு திருவிழாப் போல பசுமைநடையில் தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

379169_160621200700113_1382093118_n

1396750_737035019659264_618051_oகீழக்குயில்குடி சமணமலை, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி பெருமாள்மலை, விக்கிரமங்கலம் உண்டாங்கல்லுமலை, நடுமுதலைக்குளம், சித்தர்மலை, திருப்பரங்குன்றம், யானைமலை, திருவாதவூர், அரிட்டாபட்டி, மாங்குளம் மீனாட்சிபுரம், கருங்காலக்குடி, கீழவளவு, வரிச்சூர் குன்னத்தூர், திருவேடகம், பேரையூர், சதுர்வேதிமங்கலம், சிவரக்கோட்டை, புதுமண்டபம், இராயகோபுரம், இராமாயணச்சாவடி, செல்லத்தம்மன் கோயில், புட்டுத்தோப்பு மண்டபம், திருமலைநாயக்கர் மஹால், விளக்குத்தூண், பத்துத்தூண் என ஏராளமான இடங்களுக்கு பசுமைநடையாகச் சென்றிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மதுரையைத் தாண்டி கோவில்பட்டி கழுகுமலை, சங்கரன்கோயில், திருமலாபுரம், வீரசிகாமணி, புதுக்கோட்டை கொடும்பாளூர், குடுமியான்மலை, திருமயம், தாண்டிக்குடி என மேற்குத்தொடர்ச்சி மலைகள் வரை பசுமைநடைப் பயணம் நீண்டது.

1502581_718252498219860_131053346_o

10847168_881766641868444_6472887997307946411_o

பசுமைநடையின் சிறப்பு என்னவென்றால் சாதி, மதம், மொழி, இனம் என எந்த எல்லைக்குள்ளும் சுருங்கிக்கொண்டதில்லை. கூலித்தொழிலாளி முதல் பெருமுதலாளிகள் வரை இந்நடையில் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக அமையாமல் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வது பசுமைநடையின் பெருஞ்சிறப்பாகும்.

10676230_10203119926255229_4661305522881399322_n

பசுமைநடைப் பயணங்களில் 25 வது நடையை விருட்சத்திருவிழாவாகவும், 40 வது நடையையும் பாறைத்திருவிழாவாகவும் கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்தில் கொண்டாடினோம். பசுமைநடைக்குழு அங்கத்தினர் என்பதையும் தாண்டி மலையடிவாரத்தில் நடந்த விருட்சத்திருவிழா இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

greenwalk_04

விருட்சத்திருவிழாவிற்கு முதல்நாளே எல்லோரும் சமணமலையடிவாரத்தில் கூடி வேலைகளை பகிர்ந்து செய்யத் தொடங்கினோம். அதில் மறக்கமுடியாத நிகழ்வு அன்றிரவு தங்கியதுதான். ஆலமரத்தடிக்காற்று இதமாக வீசியது. மலை இருளில் பதுங்கிக் கொண்டது. விளக்கு வெளிச்சத்தில் கருப்பு கோயிலைப் பார்த்த போது கருப்பு குதிரைகளைப் பூட்டி ஊர்வலம் கிளம்பிக் கொண்டிருந்தார். அமானுஷ்யக் கதைகள் முளைக்கும் வேளையில் அன்றாடக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து ஆகஸ்ட் 25ற்கு வந்துவிட்டது.

image003(2)

11822715_10204837096583414_8553559688952627097_nவிருட்சத்திருவிழா போல பாறைத்திருவிழா சிறப்பாக நிகழ வேண்டியிருந்தது. எதிர்பாராத கணத்தில் வந்த தீர்ப்பால் கொஞ்சம் வண்ணம் குலைந்து போனது. ஆனாலும், அன்றைய தினத்தில் அவ்விழா நடந்ததே பெரும்சிறப்புதான். அதற்கடுத்து வெள்ளப்பாறைப் பட்டியில் கொண்டாடிய பொங்கல்விழாவும், தாண்டிக்குடி வரலாற்றுக் கண்காட்சி திறப்புவிழாவும் பசுமைநடைப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாகும்.

நீர்நிலைகளைக் காக்கும் பொருட்டும், நீர் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கிலும் பசுமைநடையின் 50வது நடை ‘இன்னீர் மன்றல்’ ஆக கொண்டாடவிருக்கிறோம். ஆகஸ்ட் 16ஆம் தேதி கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் தாமரைக்குளத்திற்கு அருகிலுள்ள பெரிய ஆலமரத்தடியில் விழா நடைபெற உள்ளது. அறிஞர்களின் உரைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், தொல்லெச்சங்களை நோக்கிய நடை, புத்தக வெளியீடோடு சிறப்பாக நிகழவிருக்கிறது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

படங்கள் உதவி – பசுமைநடை நண்பர்கள்

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…

நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

 – கலீல் ஜிப்ரான்

jibranartநாட்குறிப்பேட்டில் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை எழுதும் முன் படித்ததில் பிடித்த வரிகளை குறித்து வைப்பேன். ஜனவரி 5 க்கான நாட்குறிப்பேட்டின் முதல் பத்தியில் கலீல் ஜிப்ரானின் மேலேயுள்ள கவிதை வரிகளை குறித்துவைத்திருந்தேன். தி இந்து நாளிதழில் நடுப்பக்க கட்டுரைப் பார்க்கும் வரை ஜனவரி 6 கலீல் ஜிப்ரான் பிறந்ததினம் என்று தெரியாது. எதேச்சையாக ஜனவரி 5 இரவிலோ அல்லது ஜனவரி 6 காலையிலோ நாட்குறிப்பேடு எழுதும் போது கலீல் ஜிப்ரானின் கவிதையை நினைவுகூர்ந்திருக்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது.

kaleeljibranமுன்பு நர்மதா பதிப்பகம் வெளியிட்ட கலீல் ஜிப்ரானின் தத்துவக் க(வி)தைகள் என்ற புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். அந்நூலை எடுக்க அதிலிருந்த ஓவியங்களும் ஒரு காரணமாகயிருந்தது. கவிஞர் நாவேந்தன் இந்நூலை அழகாக மொழிபெயர்த்திருந்தார். அதில் எனக்கு பிடித்த வரிகளை குறித்து வைத்திருந்தேன். அதை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.  கலீல் ஜிப்ரான் சிறந்த ஓவியரும்கூட. அரபியிலும், ஆங்கிலத்திலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது தீர்க்கதரிசி என்னும் நூல் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய தத்துவங்களை கொஞ்சம் பருகலாம் வாருங்கள்.

  • jibran10மிகவும் வசதி படைத்தவர்களுக்கு இறைவன் உபசரிக்கட்டும்.
  • அதிகம் பேசுபவனைப் பார்த்து ஊமை மட்டுமே பொறாமைப்படுவான்.
  • மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது.
  • இது மிகவும் வேடிக்கை…! சில இன்பங்களை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையே என் வலிக்கும் காரணமாக அமைகிறது.
  • நாம் அனைவருமே சிறைக்கைதிகள்தான்…!  சிலர் சிறைக்கம்பிகளோடு… சிலர் கம்பி இல்லாமலேயே…!
  • அடிமைச் சுமையைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனே உண்மையான சுதந்திர மனிதன்.
  • தோல்வியடைந்தவர்களைப் பார்த்து வெற்றியடைந்தவர்கள் கூறும் உபதேசத்தை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
  •  ஒவ்வொரு மனிதனும் என்றோ வாழ்ந்த ஓர் அரசன் அல்லது அடிமையின் சந்ததி…!
  • நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…!
  • உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது…! எனவேதான் அது நம் கண்ணீரிலும் இருக்கிறது… கடலிலும் இருக்கிறது.
  • இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது. நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்…!
  • அதிகம் பேசுபவன் குறைந்த அறிவு உடையவன்.. பேச்சாளிக்கும் ஏலம் போடுபவனுக்கும் அப்படியொன்றும் அதிக வித்தியாசமில்லை…!
  • இன்பங்களையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு அனுபவிக்கும் முன்பே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.
  • குற்றம் என்பது தேவையின் மறுபெயர்… வியாதியின் ஓர் அங்கம்…! மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதைவிட பெரிய குற்றம் ஏதுமில்லை…!
  • பூமியில் நடக்கும் அனைவருடனும் நான் நடக்க விரும்புகிறேன்…! ஊர்வலம் என்னைக் கடந்து செல்வதை என்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது…!
  • நாம் இவ்வுலகில் வாழுவது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் காத்திருத்தல் போன்றது…!
  • உன் வாயில் உணவு நிறைந்திருக்கும் போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ள போது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்…?
  • வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பை காட்டுகிறோம்.
  • அவர்கள்… என்னை வாழ்நாளை சரியாக விற்பனை செய்யாத பைத்தியம் என நினைக்கிறார்கள். என் வாழ்நாளுக்கு விலை மதிப்பு உள்ளது என நினைக்கும் அவர்களை நான் பைத்தியக்காரர்கள் என நினைக்கிறேன்…!
  • நீ உண்மையில் கண்களைத் திறந்து பார்ப்பாயானால் எல்லா உருவத்திலும் உன் உருவத்தையே பார்ப்பாய்! காதுகளைத் திறந்து வைத்து மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பாயானால், எல்லாக் குரல்களிலும் உன் குரலையே கேட்பாய்!
  • மேகத்தின் மீது நாம் அமர்ந்துகொண்டு பார்த்தால் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்குமிடையே எல்லைக்கோடு தெரியாது…! ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்குமிடையில் கல்லைப் பாரக்க முடியாது… ஆனால், மேகத்தின் மீது ஏறி அமர முடியாதது நமது துரதிஷ்டம்…!

 நன்றி – கவிஞர் நாவேந்தன், நர்மதாபதிப்பகம், தமிழ் இந்து நாளிதழ்

kaleel

2015

எனக்கு வழங்கப்பட்ட மீதியில் ஆதியிருந்தது – அந்த

ஆதியிலிருந்து மீதியை எழுதத் தொடங்கிவிட்டேன்

 – சித்திரவீதிக்காரன்

என்னை ஆளும் மதுரையையும், தமிழையும் வணங்குகிறேன். நாட்குறிப்பேட்டின் நீட்சியாக மதுரைவாசகன் வலைப்பூ மலர்ந்தது. இத்தளத்தில் இதுவரை பதிவேற்றிய 200 கட்டுரைகளின் தலைப்புகளோடு 2015 ஆம் ஆண்டின் முதல் பதிவைத் தொடங்குகிறேன்.

1.        சித்திர வீதிகள் 2.        புத்தகங்களோடு நான் 3.        அழகர்கோயில் தேரோட்டம்
4.        பாண்டி முனி 5.        தொ.பரமசிவன் அய்யாவிடம் பெற்ற கையொப்பம் 6.        காலச்சக்கரம் {திரை இசைப் பாடல்கள்}
7.        குன்றிலிருந்து குன்றம் நோக்கி 8.        மாவீரர் உரைகள்… நேர்காணல்கள்… 9.        சதுரகிரி பட்டிமன்றம்
10.     தேசாந்திரி      – எஸ்.ராமகிருஷ்ணன் 11.     தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன் 12.     வையைப்புனல்
13.     உயரப்பறத்தல் – வண்ணதாசன் 14.     மதுரையில் நாட்டுப்புறக்கலை விழா 15.     மனங்கவர்ந்த கலெக்டரின் உரை
16.     உள்ளானும் சுள்ளானும் 17.     சிவகாசி ரயில்நிலையமும் கூத்தும் 18.     சாத்தியார் அணையும் கல்லுமலைக் கந்தன் கோயிலும்
19.     துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்        {வாதைக்கும் மீட்சிக்கும் இடையேயான பயணம்} 20.     மழையோடு பாதயாத்திரை 21.     கானல் நதி – யுவன் சந்திரசேகர்
22.     காதல் கவிதைகள் 23.     தூங்கா நகரில் உற்சவ விழா 24.     தொ.பரமசிவன் உரை- உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்
25.     டம்மடும்மா டம்மடம்மடும்மா 26.     உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்கட்டும் 27.     தலைவன் இருக்கிறான்        {சித்திரம்}
28.     எது கலாச்சாரம்?       – ச.தமிழ்ச்செல்வன் 29.     மதுரையில் சமணம் 30.     மதுரை கொங்கர் புளியங்குளமும் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தமிழ்பிராமி எழுத்துருவும்
31.     பம்பாயில பல்டியடிக்கிறவன் வேணுமா? டில்லியில டிமிக்கியடிக்கிறவன் வேணுமா? 32.     தொ.பரமசிவன் பார்வையில் தமிழ்ப் புத்தாண்டு 33.     மதுரை கீழ்குயில்குடியில் சமணத்தின் சுவடுகளும் அய்யனார் வழிபாடும்
34.     மதுரை சமணமலை குறித்து மயிலைசீனி.வே & எஸ்.ராமகிருஷ்ணன் 35.     சமணமும் தமிழும் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி 36.     மதுரை சித்திரை திருவிழா நினைவுகளும் பழமரபுக்கதைப்பாடல்களும்
37.     மதுரை வீதிகள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் 38.     நகுலன் இலக்கியத்தடம் 39.     மதுரை சித்திரைப் பொருட்காட்சியும், சர்க்கஸும்
40.     ஜெயமோகனின் மத்தகம் 41.     நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகத்திருவிழா 42.     நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும்
43.     வாசித்தபுத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும் 44.     அரிட்டாபட்டி மலை ஏன் பாதுகாக்கப்படவேண்டும் 45.     மதுரை அரிட்டாபட்டியில் பசுமைநடை
46.     மதுரை அரிட்டாபட்டி மலையில் பாண்டியர்கால குடைவரைக்கோயில் 47.     தமிழ்ச்சமணம் – தமிழ்ச்சமணனின் வலைப்பூ 48.     அரிட்டாபட்டிமலை எண்பெருங்குன்றங்களுள் ஒன்று – வெ.வேதாச்சலம்
49.     நம்மாழ்வார் உரை – உழவுக்கும் உண்டு வரலாறு 50.     இதயங்கவர்ந்த இடைக்காட்டூர் இருதயநாதர் 51.     மதுரை புத்தகத்திருவிழாவில் பிரபஞ்சன் சொன்ன கதைகள்
52.     பஞ்ச பாண்டவ மலையில் பசுமைநடைப் பயணக்குறிப்புகள் 53.     அழகனைக்காண அலை அலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும் 54.     மதுரை புத்தகத்திருவிழாவில் கவிஞர் தமிழச்சி
55.     மறக்க முடியாத ஆளுமை – ஜி.நாகராஜன் 56.     தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக சித்திரவீதிக்காரன் 57.     மிதமான காற்றும் இசைவான கடலலையும் ச.தமிழ்ச்செல்வன் கதைகளும்
58.     மறைந்துவரும் விளையாட்டுக்களும் மறக்காத நினைவுகளும் 59.     நாஞ்சில்நாடனின் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை 60.     நாட்டுப்புறக்கலைகள் அகமும்புறமும்
61.     மதுரை உலகின் தொன்மையான நகரம் 62.     காணாமல் போனேன் சாமியேய்… சரணம் ஐயப்பா! 63.     மதுரை புத்தகத்திருவிழா நாட்குறிப்புக்கள்
64.     அணிகலன்களின் தேவதை 65.     சில நிகழ்வுகள் சில பகிர்வுகள் 66.     தமிழ்மணத்திற்கும், தமிழ்மனங்களுக்கும் நன்றி
67.     கதவைத்திற காற்றுவரட்டும் 68.     மின்வெட்டில் இருளும் மின்னுலகம் 69.     அன்பின்பாதை சேர்ந்தவனுக்கு
70.     சரக்குன்னா சரக்குதானா? 71.     அபூர்வ சகோதரர் கமல்ஹாசன் 72.     பசுமைநடை நட்சத்திரங்கள்
73.     கோணங்கி எனும் தேசாந்திரியின் பயணக்குறிப்புகள் 74.     மதுரையும் தொ.பரமசிவனும் 75.     மாவீரர்தினத்தில் மகாவீரரைக் காண…
76.     வண்ணநிலவனுடன் கடல்புரத்தில் 77.     திரும்பிப்பார்க்கிறேன் 2011 78.     விகடன் வரவேற்பறையில் சித்திரவீதிக்காரன்
79.     அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன் 80.     கலைப்பார்வையா, காமப்பார்வையா 81.     யானைமலையும் பசுமைநடையும்
82.     அருகி வரும் இசைக்குறிப்புகள் 83.     யானைமலையில் சமணம் 84.     தெப்பத்திருவிழா
85.     மதுரை விக்கிரமங்கலத்தில் பசுமைநடை 86.     பெண் என்னும் சுமைதாங்கி 87.     அன்னவாகனத்தில் அழகுமலையான்
88.     என்னைக்காக்கும் காவல்கோட்டம் 89.     காவல்கோட்டத்திலிருந்து 90.     வாழ்வு – வரலாறு – புனைவு
91.     மனதைக் கவர்ந்த காவல்கோட்டக்காரர்கள் 92.     அரவான் – காவல்கோட்டம் – அரிட்டாபட்டி 93.     அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள்
94.     அழகர்மலையில் ஆதிகாலக் குகை ஓவியங்கள் 95.     அவ்வைநோன்பும் சில நம்பிக்கைகளும் 96.     மகுடேஸ்வரன் கவிதைகள்
97.     வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன் 98.     புரவியெடுப்பு 99.     சித்திரவீதி
100.  நன்றி 101.  முனிப்பாட்டு 102.  ஆடித்தேர்நடை ஆடியாடி
103.  பால்பன் அழைக்கிறது… பாலமேடு செல்கிறோம் 104.  மதுரை புத்தகத்திருவிழா 105.  வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
106.  கும்பமுனி 107.  குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல் 108.  ஆவணிக்கதைகள்
109.  வாசிப்புத்திருவிழா 110.  மாடக்குளக்கீழ் மதுரை 111.  இப்படியும் ஒரு சுற்றுலா
112.  இங்கும் ஒரு எல்லோரா 113.  அரைமலை ஆழ்வார் 114.  வீரசிகாமணி குடைவரை, குகை, கல்வெட்டு
115.  திருமலாபுரம் பாண்டியன் குடைவரை 116.  எதிர்பாராத தரிசனம் 117.  கமல்ஹாசனின் கானமழை
118.  திருச்செந்தூரின் கடலோரத்தில் 119.  சித்தர்மலையில் பசுமைநடை 120.  நான்மாடக்கூடலில்…
121.  நினைத்தாலே இனிக்கும் 122.  கொடும்பாளூர் மூவர்கோயில் 123.  குடுமியான்மலை குகையும் குடைவரையும்
124.  முந்நீர் விழவு 125.  மாமதுரை போற்றுவோம் 126.  சுங்கடி தினம்
127.  பூம்பூம் மாட்டுக்காரர் 128.  மணியாட்டிக்காரர்கள் 129.  தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழா
130.  புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் 131.  திருப்பரங்குன்றமலையில் பசுமைநடை 132.  திருப்பரங்குன்ற மலையில் பசுமைநடை – பகுதி 2
133.  வைகை ரயிலாக மட்டும் ஓடினால்.. 134.  பக்தியாத்திரையா? ஜாலியாத்திரையா? தீனியாத்திரையா? 135.  கண்டதையெல்லாம் கவிதையென்று சொல்லாதே
136.  குன்றத்திலே குமரனுக்குத் தேரோட்டம் 137.  எனக்கு புத்தகம் பிடிக்கும் – உதயசந்திரன் 138.  அழகர்கோயில் – தொ.பரமசிவன்
139.  எனக்குப் பிடித்த பிரகடனம் 140.  பறவைக்கோணம் – எஸ்.ராமகிருஷ்ணன் 141.  மதுரை வீதிகளில் பசுமைநடை
142.  ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம் 143.  பாண்டியனின் சமணப்பள்ளியில் 144.  தொல்குடிகள் வாழ்ந்த கருங்காலக்குடி
145.  மதுரையில் இஸ்லாம் 146.  தோல்பாவைக்கூத்து 147.  நிறைகண்மாய் சிலுசிலுப்பு
148.  பகல்வீடு தன்னில் உயிர்வாழ ஒரு மரம் 149.  விருட்சத் திருவிழா அழைப்பு 150.  எழுத்தாளுமைகளுடன் பசுமைநடை
151.  பகல்வீடு மின்னூலை தரவிறக்க… 152.  மதுரையில் 8-வது புத்தகத்திருவிழா 153.  மதுர வரலாறு
154.  தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் 155.  தென்பறம்பு நாட்டுத் திருவாதவூரில் பசுமைநடை 156.  ஐந்து கருட சேவை
157.  நான் நானாக நாலுவிதம் 158.  யாரோ எழுதிய கவிதை 159.  தீபாவளி நாயகனைக் காண..
160.  கமலின்றி அமையாது கலை உலகு 161.  சேரன் பாண்டியன் பெருவழித்தடம் 162.  பகல்வீட்டின் சாளரங்கள் – வயிற்றுக்கும் ஈயப்படும்
163.  பகல்வீட்டின் சாளரங்கள் – சொல்புத்தி 164.  பகல்வீட்டின் சாளரங்கள் – தாய்மொழி வழிக்கல்வி காந்தியடிகள் 165.  நெடுஞ்சாலை – வாழ்க்கைப் பயணம்
166.  நினைவோ ஒரு பறவை 167.  காரி 168.  திருப்பரங்குன்றம் போற்றுவோம்
169.  அனிமல் லவ்வர்ஸ்க்கு அன்பான அழைப்பு 170.  சமணமலை – அகிம்சைமலை – தமிழர்மலை 171.  வேர்தேடும் பயணத்தில் விரல்பற்றி அழைத்துச் செல்பவர்
172.  பயணங்களே கசடுகளைப் போக்கும் – அ.முத்துக்கிருஷ்ணன் 173.  திருப்பரங்குன்றமும் சிக்கந்தர் தர்ஹாவும் 174.  மாதங்களில் நான் சித்திரை
175.  சொக்கப்பனையும் பூரொட்டியும் 176.  விக்ரமாதித்யன் கவிதைகள் 177.  சங்கத்தமிழுக்கு என்றும் அழிவில்லை – தொ.பரமசிவன்
178.  ஜெயமோகனின் வெள்ளையானை 179.  சித்திரைத் திருவிழா நாயகரின் அரண்மனையில் 180.  ஈரம்பிரியன் மதுரைக்காரன்
181.  எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் – நிராகரிப்பின் வலி 182.  தொல்குடிகளின் வாழிடங்களின் மடியில் 183.  பேரையூரில் பாண்டியர்கால மலைக்கோயில்
184.  நெஞ்சில் பதிந்த மிளிர்கல் 185.  மதுரையில் வாழ்ந்த ரோசாப்பூதுரை 186.  வாசிப்பது தியானம்
187.  கமலுக்கு நேரமிருக்கிறது. நமக்கேன் இருக்காது? 188.  பாறைத்திருவிழா கொண்டாட வாருங்கள் 189.  விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக்காட்சிகள்
190.  பிரகடனம் 191.  தெப்பக்குளத்தில் முகிழ்த்த காற்றின் சிற்பங்கள் 192.  மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா
193.  திருமாலிருஞ்சோலையில் தைலக்காப்புத் திருவிழா 194.  வைகைக்கரையில் தோன்றிய தாமரைச் சிரிப்புடையோன் 195.  சிலம்பாற்றில் தலைமுழுகும் சீடன்?
196.  மீனாட்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமைப் பள்ளி 197.  சேலம் – மேட்டூர், வழி: தாரமங்கலம் 198.  துலாமிலிருந்து விருச்சிகத்திற்கு வரும் சனிபகவானே வருக!
199.  குன்றேறி வையைவளம் காணல் 200. மறக்க மனங்கூடுதில்லையே

தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. பதிவுகளைத் தொடர்ந்து எழுத ஊக்கமளித்து வரும் சகோதரர் தமிழ்செல்வத்திற்கும், பசுமைநடை மற்றும் வலைப்பதிவுலக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

மேட்டூர்நீர்த்தேக்கம்.

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலே?
கல் மேடு தாண்டிவரும் காவேரி நீராலே!
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா!
நாத்தோடு செய்தி சொல்ல காற்று வராதா!

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்!
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்!
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி!
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

– கவிஞர் வாலி, மகாநதி

மதுரையைத் தாண்டி பயணித்து வெகுநாட்களாயிற்று. ஊர்சுற்றுவதற்கு எப்போதாவதுதான் வாய்க்கிறது. சமீபத்தில் ஒரு திருமணநிகழ்விற்கு கலந்து கொள்வதற்காக சகோதரர் வெள்ளியன்று சேலம் வந்தார். ஞாயிற்றுக்கிழமை இருவருமே கோயம்புத்தூரில் இன்னொரு விசேசத்திற்கு கலந்து கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. ‘சேலத்திற்கு வா இங்கிருந்து கோயம்புத்தூர் போகலா’மென அண்ணன் அழைக்க வெள்ளியன்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி சனிக்கிழமை அதிகாலை சேலம் சென்றேன்.

திருச்செங்கோடு போவதாகத்தான் திட்டம். மலைமேல் உள்ள கோயிலென்பதால் நாங்கள் செல்லும் நேரம் நடைசார்த்திவிட்டால் சிரமமென்று தாரமங்கலம் சிவன் கோயில் போகலாமென்று முடிவெடுத்தோம். தாரமங்கலம் நோக்கி நகரப்பேருந்தில் பயணித்தோம். சேலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

Tharamangalam Assorted 2

தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி நுழைவாயிலுக்கு எதிரேயுள்ள கோயிலை நோக்கி நடந்தோம். கோயிலின் பின்வாசல் என்பதால் அப்பகுதியில் கூட்டமில்லை. வெளிப்பிரகாரத்தைச் சுற்றி சன்னதிக்குள் நுழைந்தோம். கைலாசநாதராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கினோம். அம்மனை வழிபட்டு உட்பிரகாரத்தைச் சுற்றி வந்தோம். ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்கள் கண்கொள்ளா காட்சி தருபவை. நடராஜர் சன்னதிக்கு அருகில் உள்ள ஊர்த்துவத்தாண்டவர், சிவனும் அம்பிகையும் ஊடல் கொண்ட சிற்பம் அதற்கடுத்த தூணில் ஊடல் தணிந்திருக்கும் சிற்பம், ஜூரகேஸ்வரர், ரிஷபவாகனர், ரதி, மன்மதன், மோகினி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு.

Tharamangalam Assorted

அந்தக்காலத்தில் இப்பகுதியிலுள்ள சிற்பிகள் கோயில் சிற்பங்கள் செய்யும் பணியேற்கும்போது ‘தாரமங்கலம், தாடிக்கொம்பு நீங்கலாக’ என்று சொல்லித்தான் வேலையை ஒப்புக் கொள்வார்களாம். அந்தளவிற்கு இங்குள்ள சிற்பங்கள் மிக நேர்த்தியாக உள்ளன. தாடிக்கொம்பிற்கு நானும், சகோதரரும் சிறுமலையில் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் முகாமிற்கு சென்றுவிட்டு வருகையில் பார்த்துவிட்டு வந்தோம். அங்குள்ள சிற்பங்களும் மிக அழகானவை. என்ன நிழற்படம் எடுக்க இருஇடங்களிலும் அனுமதி கிட்டவில்லை.

ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதனும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதியும் தெரியும் படி சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள். பாதாளலிங்க சன்னதியொன்று உள்ளது. அதிலிருந்து பார்த்தபோது அங்கொருவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். நடைசாத்தும் நேரமென்பதால் உடனே கிளம்பிவிட்டோம். சன்னதிக்குள் நுழையும் முன்புள்ள வாசலில் உள்ள சிற்பங்களை கம்பிவலை வைத்து அடைத்திருக்கிறார்கள். அதிலுள்ள சிற்பங்கள் புகழ்பெற்றவை. அதிலொரு சிற்பத்தில் சிம்மத்தின் வாயினுள் உருளையான பந்து ஒன்றுள்ளது. எப்படி அதை உள்ளே வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

வெளிக்கோபுரத்திற்கு செல்லும்முன் இருபுறமும் இரண்டு சன்னதிகள் உள்ளன. அதில் ஒன்றில் சகஸ்ரலிங்கம் உள்ளது. இந்த சன்னதிகள் மிகப்பழமையானதாக உள்ளது. இக்கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானதாகயிருக்கலாம். பல்வேறு காலகட்டங்களை இக்கோயிலுள் சுற்றி வரும்போது அறியலாம். கோயிலுக்கு வெளியே இக்கோயில் தேர் நிற்கிறது. அருமையான மரவேலைப்பாடுகள் கொண்டது. இக்கோயில் குறித்து தமிழ்விக்கிபீடியா மற்றும் ஜெயமோகன் தளத்தினுள்ள ஒரு கட்டுரை வாயிலாக மேலும் அறிந்து கொண்டேன். பேருந்துநிலையித்திலிருந்து பார்க்கும்போது சமீபத்தில் கட்டிக்கொண்டிருக்கும் நந்தி இக்கோயில் சிற்பங்களுக்கு திருஷ்டி போல உள்ளது.


தாரமங்கலத்திலிருந்து மேட்டூர் அணை பார்க்கச் செல்லலாமென நினைத்தோம். பேருந்துக்காக காத்திருந்தோம். மேட்டூர் RS என்று போட்டு வந்த வண்டி ஊரெல்லாம் சுத்திப்போகுமாம். (RSன்னா Railway Stationனாம்). அதனால் வேறு வண்டிக்காக காத்திருந்தோம். மேட்டூர் வண்டி ஒன்று வந்தது. கூட்டம் கொஞ்சம் குறைவாகயிருந்தது. ஏறி அமர்ந்தோம். லேசாக சொக்கியது. மதிய உணவாக கல்யாணவீட்டில் கொடுத்த லட்டும், சேவும் அமைந்தது.

CIMG0888

நீரோவியம்மேட்டூர் பேருந்து நிலையத்தில் இறங்கி அணை நோக்கி நடந்தோம். பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் இருக்கலாம். அணையை மேலே ஏறிப்பார்க்க அனுமதி கிடையாதாம்.

என்ன செய்வதென யோசித்த போது அங்கிருந்து பவளவிழா கோபுரம் சென்றால் நீர்நிரம்பியிருப்பதைப் பார்க்கலாமென்று சொன்னார்கள். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமென்றதால் ஆட்டோவில் சென்றோம்.

பவளவிழா கோபுரத்திலேறி மேட்டூர் அணையைப் பார்க்க படியேறிச்சென்றால் ஐந்து ரூபாய், மின்தானியங்கியில் சென்றால் இருபது ரூபாய். படியேறியே சென்றோம்.

கீழ்தளத்தில் அணை கட்டப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

Mettur Dam Construction

மேட்டூர் அணை கட்ட அப்போதைய மைசூர் சமஸ்தானாம் அனுமதி கொடுக்கவில்லையாம். கி.பி.1800 களிலிருந்து முயற்சித்து இருக்கிறார்கள். இறுதியில் கி.பி.1920களில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் வெள்ளச்சேதத்திற்கு ஈடாக 30,00,000/- ரூபாய் கேட்க மைசூர் சமஸ்தானம் வேறு வழியில்லாமல் அணை கட்ட அனுமதி கொடுத்து விட்டார்கள். ஸ்டேன்லி என்பவர் கட்டியதால் இதற்கு அவர் பெயரையே வைத்து ஸ்டேன்லி நீர்த்தேக்கம் அழைக்கப்படுகிறது. தமிழகத்திலேயே பெரிய அணை இந்த மேட்டூர் அணைதான். 124 அடி உயரம் கொண்டது. (நன்றி – வீக்கிபீடியா)

Mettur Dam

அணையை ஏறிப்பார்த்த போது மலைகளுக்கிடையேயிருக்கும் கடல் போல காட்சியளித்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் என்ற வார்த்தைகளையெல்லாம் நாளிதழ்களில்தான் வாசித்திருக்கிறேன். அதை நேரில் கண்டபோது ஏற்பட்ட அனுபவம் அற்புதமானது. கொஞ்சநேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நீர்வெளியேறிவரும் பகுதியைப் போய் பார்த்தோம். பின் வந்த ஆட்டோவிலேயே ஏறி மேட்டூர் அணைப்பூங்காவிற்கு சென்றோம். அணையை அடியிலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமாகயிருந்தது. நேரம் குறைவாகயிருந்ததாலும், பூங்காக்கள் சிறுவர்களுக்கும், காதலர்களுக்கும் ஏற்ற இடம் என்று தோன்றுவதாலும் சீக்கிரம் கிளம்பிவிட்டோம்.

மேட்டூர் பேருந்துநிலையம் செல்ல பேருந்து கிடைத்தது. அங்கிருந்து சேலம் போய் சேலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரவு பதினொருமணிவாக்கில் சென்றோம். நள்ளிரவு ஒருமணிவரை அரட்டை. அதன்பின் நல்ல தூக்கம். ஞாயிறு நிகழ்வில் கலந்து கொண்டு இரவு 9 மணிக்கு மதுரையம்பதிக்கு வந்தேன். திங்கள்கிழமை தினத்தந்தியில் மேட்டூர் அணை நூறு அடி நீருடன் தொடர்ந்து ஒருமாத காலமாகயிருந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததாக வந்த செய்தியைப் பார்த்தபோது உடன் இருந்தவர்களிடம் நானும் போய் பார்த்துட்டு வந்தேன் என சொல்லிக் கொண்டிருந்தேன். ஆண்டாள் சொன்னது தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியட்டும். வாழ்க வளமுடன்.

சித்திரவீதிக்காரன்

எனக்குள் ஒருவன், தசாவதாரம் – விஸ்வரூபம் எடுத்த உயர்ந்த உள்ளம், நம்மவர், கலைஞன், அன்பால் ஆளவந்த வெற்றிவிழா நாயகன், அபூர்வசகோதரர் கமல்ஹாசன் பிறந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். ஆச்சர்யமாக இருக்கிறது. புதிய விசயங்களைத் தேடித்தேடிக் கற்று என்றும் இளமையாக இருக்கும் சகலகலாவல்லவருக்கு வயது என்றும் பதினாறுதான்.

1989ல் அபூர்வ சகோதரர்கள் வெளியானது. நான் ஓரளவு விவரம் தெரிந்து பார்த்த படம். அப்பு கதாபாத்திரமும், சர்க்கஸ் காட்சிகளும், பாடல்களும் மனதைக் கவர்ந்தன. குள்ளமாக வந்து நெஞ்சில் வெள்ளமாக நிறைந்து விட்டார் கமல்ஹாசன். அந்தப் படம் வெளியானபோது நாங்கள் அண்ணாநகரில் குடியிருந்தோம். சுந்தரம் தியேட்டரில்தான் கமல்ஹாசன் படங்கள் பெரும்பாலும் வெளியாகும்.

பள்ளிநாட்களில் பாட்டுப்புத்தகங்கள் வாங்கி வகுப்பறைகளில் புத்தகங்களுக்கிடையில் வைத்துப்படிப்பது, அங்கேயே பாடுவது என எல்லாம் நடக்கும். சிலநேரங்களில் ஆசிரியர்களால் பறிக்கப்பட்டு கிழிக்கப்படுவதும் உண்டு. கமல்ஹாசன் பாடல்களின் மொத்த தொகுப்பு புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் யார் யாரோ பாட குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லோருமே சூப்பர் ஸிங்கர்ஸ்தான். எங்கள் வகுப்பில் பெரும்பாலான பேர் கமல் ரசிகர்களாக இருந்ததால் கமல்ஹாசன் பாடல்களை மனப்பாடப்பகுதிக்கு குறித்து கொடுத்ததுபோல படித்துக்கொண்டிருந்தோம்.

எட்டாம் வகுப்பிற்கு பிறகு நண்பர்கள் எல்லோரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டாலும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பேசிக்கிட்டே கண்மாய்கரையோரம் உள்ள சோனையா கோயிலுக்கு போய்ட்டு வந்து மந்தையில் ஒளியும் ஒளியும் பார்க்க அமர்வோம். கமல்ஹாசன் பாடல் எப்போது போடுவார்கள் என்று காத்திருந்த அந்தக் காலம் திரும்ப வருமா?

Kamal Haasan's Uthama Villain First Look Wallpapers

தேவர்மகன் வெளியான போது ஒரு கம்பை எடுத்து கொண்டு குண்டு பல்பு வெளிச்சத்தில் என் நிழலைப் பார்த்து சாந்துப்பொட்டு பாடலை பாடிக்கொண்டே கம்பு சுற்றிப் பழகியதையெல்லாம் மறக்க மனங்கூடுதில்லையே. தனிமை கிட்டும்போது கணினியில் கமல்ஹாசன் பாடலைப் போட்டு ஆடுவது பெருங்கொண்டாட்டமான விசயம். சமீபத்தில் அப்படி ஆடத்தூண்டிய பாடல் ‘உன்னைக் காணாமல் நானிங்கு நானில்லையே’.

பாலிடெக்னிக் படிக்கும்போது எங்கள் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் நான் கமல்ஹாசன் ரசிகனென்று தெரியும். அன்பே சிவம் வெளியான சமயம் மீசையை எப்போதும் முறுக்கிக் கொண்டு திரிந்த காலம். விருமாண்டி வந்த போது தினமலரில் ஒருபக்க ப்ளோஅப் கொடுத்தார்கள். அதை எனக்கு எடுத்துவர வேண்டுமென்று ஒரு ஆசிரியர் நினைக்குமளவிற்கு பிரபலமாக இருந்தேன்.

2004ல் விருமாண்டி பார்த்துத் தொடங்கினேன். கல்லூரி காலமென்பதால் அந்த வருடம் மட்டும் 24 படங்கள் பார்த்துவிட்டேன். இறுதியாக டிசம்பர் 28 அன்று மீனாட்சி தியேட்டரில் விருமாண்டி பார்க்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டு சென்று 25வது படமாக விருமாண்டி பார்த்தேன். படித்து முடித்தபின் இருசக்கர வாகன விற்பனை பிரதிநிதியாக இருந்தபோது அங்குள்ளவர்கள் என்னை கமல் என்றே அழைப்பார்கள்.

Actor Kamal Haasan in Papanasam Movie Stills

உரையாடலின் போது கமல்ஹாசன் பட வசனங்களை அடிக்கடி சொல்வேன். அதிலும் வசூல்ராஜா பட வசனங்களைத்தான் மேற்கோளாக பெரும்பாலும் கூறுவேன். வசூல்ராஜாவை திரையரங்குகளில் மட்டும் ஆறுமுறை பார்த்தேன். கமல்ஹாசன் குறித்த செய்தியோ, பேட்டியோ நாளிதழ்களில் வந்திருந்தால் அதை அப்போதே வாங்கிவிடுவேன். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தை மட்டும் எப்படியாவது எடுத்துருவேன். அப்படி தொகுத்தவை இரண்டு பெட்டி நிறைய இன்னமும் இருக்கிறது. இப்போது கணினியில் கமல்ஹாசனின் நேர்காணல்கள், பாடல்கள், படங்கள் எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

விஸ்வரூபம்2

திருமணம் முடிந்தபிறகு கமல்ஹாசன் படம்தான் முதலில் பார்க்க வேண்டுமென்று இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என ஹாட்ரிக் ஹிட் கொடுக்க வருகிறார். என்னுடைய திருமண ஆல்பத்தில் ஒருபக்கம் எங்க படமும் மறுபக்கம் கமல் பியானோ வாசிப்பது போல் உள்ள படத்தையும் சேர்த்திருந்தோம். பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

கமல்ஹாசன்

எங்க வீட்டில் இன்னமும் கமல்ஹாசன் படங்களைப் பார்க்கும் இடங்களில் ஒட்டி வைத்திருக்கிறேன். மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சலாடும் நவம்பர் மாதத்தில் கமல்ஹாசனைப் போல வைகையெனும் மகாநதிக்கரையில் நானும் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. கமல்ஹாசனை நினைத்தாலே இனிக்கும். பார்த்தால் பசி தீரும். அன்பே சிவம், அன்பே கமல்.

blogersmeet

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்  
தான் வாட, வாடாத தன்மைத்தே – தென்னவன்  
நான்மாடக் கூடல் நகர்.  
– பரிபாடல்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. மற்ற ஊர்களில் நடைபெற்று வந்த வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் புத்தகக்கண்காட்சி எல்லாம் திருவிழாவானது மதுரையில்தான். நாள்தோறும் மதுரையில் திருவிழாதான்.  நான் வலைப்பதிவு எழுத வந்த கதையும், வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு மதுரை குறித்து பேசியதையும் குறித்த சிறுபதிவு.

வாசித்தலும், அலைதலும் தான் வாழ்க்கையாய் இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கையிலிருந்து நாட்குறிப்பேடு எழுதுகிறேன். வேண்டாத வேலையாக தோன்றி நடுநடுவே விட்டாலும் இன்று வரை நாட்குறிப்பேடு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன். புத்தக வாசிப்பு இளமையிலிருந்தே தொடர்கிறது. ஆனால், இணையத்தில் தமிழில் வாசிக்க இது போன்ற வலைதளங்கள் இருக்கிறது என்பதே 2009ல் தான் தெரியும். விகடன் வரவேற்பறையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம் குறித்து வாசித்து பின் அவரது தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

மற்ற தளங்களை வாசித்த போது நாமும் எழுதலாமே என்று மனதுக்குள் கெவுளி அடித்தது. மதுரையையும், வாசித்ததையும் குறித்து பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்குத் தொற்றிக் கொண்டது. என்னுடைய கனவை சாத்தியமாக்கிய தமிழ்ச்செல்வ அண்ணனுக்குத்தான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பதிவுகளைப் படித்து தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி. 23.10.2010ல் சித்திரவீதிகள் என்ற பதிவோடு வலைப்பதிவு எழுதத் தொடங்கிய இந்த நாலாண்டுகளில் என் வாசிப்பும், பயணமும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவர் திருவிழாவில் மதுரை குறித்து பேச வேண்டுமென்று என்னிடம் சீனா அய்யாவும் அவரது துணைவியார் செல்விசங்கர் அம்மாவும் சொன்னார்கள். மதுரை குறித்து பேசுவது மகிழ்வான விசயம்தான். ஆனாலும், கிராமத்து பள்ளிநாட்களுக்குப் பிறகு எனக்கு மேடை வெகுதூரமாகிப் போனது. என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையில் சரியென்றிருந்தேன்.

26.10.2014 அன்று தெப்பக்குளத்தில் உள்ள கீதா நடன கோபால மந்திர் அரங்கில் தமிழ் வலைப்பதிவர் திருவிழா தொடங்கியது. தெப்பக்குளத்தில் பசுமைநடை முடிந்தவுடன் பசுமைநடை நண்பர்களுடன் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. தமிழணங்குதான் அந்த அரங்கில் பலரையும் ஒருங்கிணைத்திருக்கிறது.

தெரிந்த வலைப்பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். புதிய நண்பர்களும் அறிமுகமானார்கள். சிலர் என்னுடைய பதிவுகளை வாசித்தேன் என்று சொன்னது மகிழ்வாகியிருந்தது. விழாவில் தருமி அய்யா, சீனா அய்யா, ரமணி அய்யா என மதுரையின் மூத்த பதிவர்கள் பேசினார்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். தொழில்நுட்பப் பதிவர்களுக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது. மதுரை சரவணன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பசுமைநடை பயணத்தில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை எழுதிய பதிவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து காற்றின் சிற்பங்கள் என்ற நூல் தெப்பக்குளம் பசுமைநடையில் வெளியிடப்பட்டது. அதை தமிழ் வலைப்பதிவர் திருவிழாவிலும் வெளியிட்டு அந்நூல் அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்பட்டது. அச்சமயத்தில் மதுரை, தமிழ், பசுமைநடை குறித்து பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. என்னை வாழ்த்தி செல்வி சங்கர் அம்மா அருமையாகப் பேசினார். அவரது வாழ்த்து எனக்கு பதட்டத்தைக் குறைத்து நம்பிக்கையை அளித்தது.

chithraveedhikkaranஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே! – திருமந்திரம்
 
என்னை நன்றாக மதுரை காக்கிறது
தன்னை நன்றாகப் பதிவு செய்யுமாறே!

என்ற வரிகளுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லித் தொடங்கினேன். என்னைக் குறித்து அறிமுகத்தை ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு மதுரையின் தொன்மை, பரிபாடல், மதுரையில் உள்ள மலைகளின் வரலாறு, பசுமைநடை, திருவிழாக்கள், குடைவரைகள், மதுரையும் தமிழும் குறித்து ஐந்து நிமிடங்களுக்குள் பேசினேன். மதுரையின் பல பெயர்கள், மீனாட்சியம்மன் கோயில், மதுரையின் பன்முகத்தன்மை குறித்தெல்லாம் பேசணும் என்று நினைவில் இருந்தாலும் என்னையறியாமல் நன்றி சொல்லி முடித்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த சீனா அய்யாவிற்கும், மதுரை மற்றும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

maduraivaasaganதமிழ் சிறப்பாக இருக்கும் வரை மதுரை இருக்கும் என்று பரிபாடல் சொல்கிறது. அதே போல மதுரை சிறப்பாக இருக்கும் வரை தமிழும் இருக்கும். இனி அகராதிகளில் மதுரை என்றால் தமிழ் என்றும் தமிழ் என்றால் மதுரை என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பேசும்போது குறிப்பிட்டேன். நான் மதுரையையும், தமிழையும் தெய்வமாக வழிபடுபவன்.

எல்லோருக்கும் அருந்த குளிர்ந்த ‘மதுரைப்புகழ்’ ஜிகர்தண்டா கொடுத்தார்கள். பதிவர்கள் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வு தொடங்கியது. தாங்கள் எழுதும் பதிவுகள் குறித்து எல்லோரும் பேசினார்கள். இரத்னவேல் நடராஜன் அய்யாவைப் பார்த்தேன். ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து துணைவியாருடன் கலந்து கொண்டார். என்னுடைய பதிவுகளைப் படித்து மறுமொழியிட்டு அதை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்வார். அன்றுதான் நேரடியாக சந்தித்தோம். திண்டுக்கல் தனபாலனையும் வெகுநாட்களுக்கு பிறகு பார்த்து பேசினேன். பதிவர்களின் நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பத்திரிகை மற்றும் ஊடகத் தொடர்பை இன்றைய வானம் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிருந்தார். திருமங்கலத்திலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது.

நெருங்கிய உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக மதுரை அலங்காநல்லூர் தாண்டி ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் மதியத்தோடு கிளம்பினேன். மதியத்திற்கு மேல் நடைபெற்ற விழா நிகழ்வுகளை மறுநாள் வலைப்பூக்களில் பார்த்தேன். தமிழ்முரசு மற்றும் தினகரன் நாளிதழ்களில் நான் பேசும்போது எடுத்த படம் வந்திருந்தது. தினகரன் நாளிதழ் குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

மதுரை உலகின் தொன்மையான நகரம் என்று கல்லூரி ஆண்டுவிழா மலரில் நான் எழுதிய கட்டுரையில் உள்ளதைத்தான் கொஞ்சம் பேசினேன். அந்தக் கட்டுரையைப் படத்தில் பார்க்கவும். அடுத்த பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில்.

படங்கள் உதவி – தினகரன் (நாளிதழ்), ரகுநாத், இளஞ்செழியன்

madurai