அறக்கயிறு: அனுபவப் பகிர்வுகள்

Posted: ஓகஸ்ட் 28, 2023 in பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:,

1964இல் மதுரைக்கு பதினொரு வயதில் தன் பாட்டியோடு சிறுபையனாக வந்திறங்கினார் டி.கே.சந்திரன். வறுமை கற்றுத்தந்த பாடங்களோடு கடும் உழைப்பையும் சேர்த்து வாழ்வில் முன்னேறிய கதைதான் அறக்கயிறு. டி.கே.சந்திரன் தன் வாழ்க்கை அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளையும் அவர்களின் உழைப்பையும் குறித்து எழுதிய நூல். டி.கே.சந்திரன் அவர்களின் வாழ்வை வாசிக்கும்போது மதுரையின் ஒரு காலகட்டத்தின் கதையை நாம் அறியலாம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்த நூலை எனக்கு வழங்கினார்.

1953இல் தாயாரின் ஊரான சின்னாண்டிபாளையத்தில் பிறந்தவர் டி.கே.சந்திரன். திருப்பூர் அவினாசி அருகே உள்ள தேவராயம்பாளையம்தான் டி.கே.சந்திரனின் சொந்த ஊர். எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா தறியில் துணிமட்டும் நெய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை தானே விற்பனை செய்யவும் தொடங்கினார்.

டர்க்கி காட்டனில் இருந்து தயாரிக்கப்படும் துண்டு அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் பிரத்யேகமான மக்கம் தறிகள் மதுரையில் இருந்தன. டி.கே.சந்திரனுடைய அப்பா மதுரைக்கு வந்து புதிய நெசவு நுட்பங்களை அவ்வப்போது அறிந்து செல்வார். மதுரையிலிருந்த உறவினர் ஒருவரின் ஆலோசனையில் 1962இல் ‘கஸ்தூரிபாய் காதி வஸ்திராலயம்’ என்ற கடையை கீழவாசலில் தொடங்கினார். கடையை டி.கே.சந்திரனின் தாய்மாமாவும் சித்தப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாய்மாமாவிற்கு சமைத்துப்போட பாட்டி உண்ணாமலையோடு கடைக்கு உதவியாக இருக்க சிறுவயது டி.கே.சந்திரனையும் மதுரைக்கு அவரது அப்பா அனுப்பிவைக்கிறார். திருப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடியாக வர முடியாத காலம். பழனி வந்து அங்கிருந்து சொக்கன் டிரான்ஸ்போர்ட் பேருந்தில் 5 ரூபாய் கட்டணத்தில் மதுரை வருகிறார்கள். அப்போது நகரப்பேருந்து கட்டணம் 10 பைசா.

காலையில் எழுந்து கடையைத் திறந்துவைத்து சுத்தம் செய்துவிட்டு பள்ளிக்குச் சென்று மீண்டும் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு கடையிலுள்ள தாய்மாமாவிற்கு சாப்பாடு கொண்டுசென்று கொடுப்பது இவரது பணியாக இருந்தது. மாலைவேளைகளில் கடைக்கு வருபவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க, கடையை கவனித்துக்கொள்ள என உதவியாக இருக்கிறார்.

5 பைசா தினமும் அவருக்கு அவங்க மாமா கொடுப்பார். அதில் பக்கோடா வாங்கி இரவு உணவுக்கு தொட்டுக் கொள்வது, அதை சேர்த்துவைத்து 25 பைசாவில் தியேட்டரில் படம் பார்ப்பது என அந்தக் காலத்தை நம் கண்முன் கொண்டுவருகிறார். மரக்கட்டை பேனா என அழைக்கும் நேவி பேனா பற்றி வாசிக்கையில் நம்முடைய பால்ய நினைவுகளும் மனதில் எழுகிறது.

மதுரை சுங்குடி சேலை உருவான கதையை நூலினூடாக சொல்கிறார். “சாயமிடுவதில் கைதேர்ந்த ஒரு சௌராட்டிரர் நெய்த துணிகளில் சிறுசிறு கற்களை வைத்து நூலினால் முடிச்சிட்டு பின் அந்தத் துணிக்கு சாயமிட்டுப் பார்த்தார். நூல் முடிச்சு இருந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் சாயம் ஏறியிருக்க முடிச்சிட்ட பகுதிகள் வட்டமாக வெள்ளை நட்சத்திரம் போல் வடிவம் இருப்பதைக் கண்டுகொண்டார். இப்படித் தயாரிக்கப்பட்ட துணிகளே பின்னாலில் மதுரையின் பாரம்பரியச் சின்னமான சுங்குடி சேலை என அறியப்பட்டது.”

ஆறாம் வகுப்புவரை வீட்டிற்கு அருகிலிருந்த சந்திரா பள்ளியில் படித்துவந்த டி.கே.சந்திரன் ஏழாம் வகுப்பில் விருதுநகர் இந்து நாடார் பள்ளி சேர்கிறார். அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்திலிருந்த காலம். மதுரையில் மாணவர் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள். அதன்பின் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருகிறது. கதர் வேட்டி போய் கலர் பார்டர் வைத்த வேட்டிகள் அறிமுகம் ஆகின்றன.

கந்தராஜ் என்ற கணக்கு ஆசிரியர் இவரது கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருந்திருக்கிறார். எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் அப்போதே 600க்கு 508 மதிப்பெண் வாங்கி கணக்கிலும் 100க்கு 100 வாங்கியிருக்கிறார். மெரிட் ஸ்காலர்சிப்பில் 500 ரூபாய் உதவித்தொகை பெற்று அப்போதிருந்த கல்லூரி புதுமுக வகுப்பான பியூசி-க்கு அமெரிக்கன் கல்லூரியில் சேர்கிறார். இவரது தமிழ் ஆசிரியராக சாலமன் பாப்பையா இருந்திருக்கிறார்.

அமெரிக்கன் கல்லூரியிலும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் பொறியியல் படிக்க விரும்பியிருக்கிறார். தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கிறார். மாணவனின் வயது 21ற்குள் இருக்க வேண்டும். இவர் பிறந்த வருடம் 1950 எனத் தெரியாமல் சர்டிபிகேட்டில் இருந்ததால் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பு இவருக்கு பறிபோனது. பிறகு தியாகராசர் கல்லூரியில் பி.எஸ்.சி பிசிக்ஸ் சேர்கிறார். இவரது அண்ணன் ‘நீ என்ன வாத்தியாராகவா போகிறாய்? எனகேட்டு ஒரு யோசனை சொல்கிறார். பிறகு பி.எஸ்.சி பிசிக்ஸ் படிப்பை பாதியில்விட்டு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிகவியல் சேர்கிறார்.

படிப்பை முடித்தபின் டெலிகாம் டிபார்ட்மென்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விண்ணப்பத்தை பார்த்து போஸ்ட்கார்டில் மதிப்பெண்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி கடிதம் வர தேர்வாகி மத்திய அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்குகிறார். சென்னையில் இரண்டு மாத பயிற்சி முடிந்து மதுரை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலைக்கு வருகிறார். அப்போது (1975) இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவிக்கிறார்.

1976இல் சேலத்தில் ஒரு புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அப்போது 1000 போஸ்ட்கார்டுகளில் சேலம் டைரக்டரியைப் பார்த்து ஊரிலுள்ள முக்கிய ஆட்களுக்கு செந்தில்முருகன் காதி வஸ்திராலயம் என்ற புதுக்கடைக்கு ஆதரவு தரும்படி கடிதம் போடுகிறார். இவரது இந்த உத்தி பலனளித்து அந்தக் காலத்திலேயே ஒரே நாளில் 3000 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது.

1979இல் மதுரை ஆரியபவன் அருகே ஐந்தாவது புதிய கடையைத் தொடங்குகிறார்கள். அடிக்கடி பணிக்கு விடுப்பு எடுத்து கடையைப் பார்த்துக் கொள்ளும் சூழல். 1985இல் மத்திய அரசு வேலையை விட்டு குடும்ப நிறுவனத்தை பார்த்துக் கொள்ளத் தொடங்குகிறார். 2020இல் 40,000 பேர் பணிபுரியும் நிறுவனமாக அவர்களது நிறுவனம் வளர்ந்து நிற்கிறது. மதுரையில் மட்டுமல்ல, ஆசியாவிலே பெரிய திரையரங்காக இருந்த தங்கம் திரையரங்கு இருந்த இடத்தில் சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடையையும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை என்ற பெயரில் நகைக்கடையும் இவர்களுடையதுதான்.

டி.கே.சந்திரன் தன் வாழ்வில் வாசிப்பு, பயணம் ஏற்படுத்திய மாற்றங்களையும் எழுதியிருக்கிறார். தரத்தை முன்னிறுத்தி அறத்தோடு தொழிலை முன்னேற்றிய கதையையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார். அவரது கதையாக மட்டும் நில்லாமல் இந்நூல் வாழ்வில் கடின உழைப்பால் முன்னேறிய ஜி.டி.நாயுடு, இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார், அப்துல்கலாம், ஆர். பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், தைரோகேர் வேலுமணி, சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனர் சுப்பிரமணியம், எடிட்டர் லெனின், சூழலியளாளர் நித்யானந்தம், களப்பணியாளர் மாணிக்க அத்தப்ப கவுண்டர், மதுரை காந்திமதி அம்மாள், உமா பிரேமன், அன்புராஜ் என பலரது கதையையும் சொல்லியிருக்கிறார். இதில் ஜி.டி.நாயுடு தவிர மற்றவர்களை நேரில் சந்தித்தும் இருக்கிறார். பவா செல்லத்துரை யூடியுப் உரைகள் டி.கே.சந்திரன் அவர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அவரோடு நட்பு குறித்தும் எழுதியிருக்கிறார்.

அறக்கயிறு வாசித்து முடிக்கையில் “வறுமை என்பது சிந்தனையின் வறுமையாக இருக்க கூடாது. நாம் முயன்றால் எதையும் சாதிக்க முடியும். கடின உழைப்பும் செயலில் தெளிவும் சமூகத்தின் மீதான அக்கறையும் இருந்தால் கட்டாயம் நாமும் வெல்லலாம்” என்ற எண்ணம் நம்முள் எழுகிறது. இந்நூல் சுயமுன்னேற்ற நூல் அல்ல. ஆனாலும், வாசித்து முடித்ததும் நம்முள் உத்வேகம் எழும்.

அறக்கயிறு, வம்சி பதிப்பகம்

பின்னூட்டமொன்றை இடுக