காரங்காடு: அலையாத்திக் காடும் அமைதியான கடலும்

Posted: ஜனவரி 24, 2024 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராஜசிங்கமங்கலத்திலுள்ள உறவினர் இல்லத்திற்கு செல்லத் திட்டமிட்டோம். இராஜசிங்கமங்கலத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத்தலம் குறித்து இணையத்தில் தேடியபோது காரங்காடு சூழலியல் சுற்றுலா பற்றி அறிய முடிந்தது. உப்பு நீரில் வளரும் அலையாத்தி தாவரங்களைக் காண பிச்சாவரம் செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த வேளையில் இராமநாதபுரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த காரங்காடு பற்றி அறிந்தது மகிழ்ச்சி.

இராஜசிங்கமங்கலம் சென்று அங்கிருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்டு இராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் மணக்குடி அருகே அமைந்துள்ள காரங்காட்டுக்குச் சென்றோம். காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து தமிழக வனத்துறையினர் காரங்காடு சூழலியல் சுற்றுலாவை நடத்திவருகின்றனர். இதில் படகு சவாரி, துடுப்பு சவாரி போன்ற விசயங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.

படகு சவாரி செல்வதற்கு பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறுவர்களுக்கு 100 ரூபாயும் வாங்குகின்றனர். இது ஒரு மணி நேர படகு பயணத்திற்கான கட்டணம். பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு படகில் அமர்ந்தோம். காரங்காடு அழகான கடற்கரை கிராமம். ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. கரைகளில் மீன்பிடிப்படகுகள் நிற்கின்றன.

படகுப்பயணத்தின்போது இரண்டு பக்கங்களிலுமுள்ள அலையாத்தி மரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். ஆலா, நீண்ட காலுள்ள நாரை, கடல்புறா போன்ற பறவைகளைப் பார்த்தோம். கரைப்பகுதிக்கு அருகில் மீனவர்கள் நீருக்குள் நடந்துபோய் வலைவீசி மீன்பிடிப்பதைக் காண முடிந்தது. மோட்டார் படகினை மிகவும் மெல்ல ஓட்டி வந்தனர். மிகக் குறைந்த ஆழமே உள்ள பகுதியில் படகு செல்கிறது.

ஓரிடத்தில் படகை நிறுத்தி மேடான இடத்தில் நம்மை இறக்கி விடுகின்றனர். சுற்றிலும் நீர் இருக்க நாம் அப்பகுதியில் இறங்குவது அற்புதமான அனுபவமாக இருக்கிறது. கடலினைப் பார்க்கும்போது உற்சாகம் அலைஅலையாய் வந்து சேர்கிறது. அங்கிருந்து படகில் ஏறியதும் கொஞ்சதூரம் கடலுக்குள் படகுப் பயணம்.

அலையில் படகு மெல்ல ஏறி இறங்க நம் மனமும் அதோடு சேர்ந்து இயங்குகிறது. அலையாத்திக் காடுகளுக்கு நடுவே படகு மீண்டும் வருகிறது. காரங்காடு தேவாலயம், கரையோர வீடுகள் வேடிக்கை பார்த்தபடி பயணம் நிறைவடைந்தது. காரங்காடு படகு குழாம் பயணச்சீட்டு எடுக்குமிடம் அருகில் சிறு உணவகம் ஒன்றிருக்கிறது. கடல் உணவுகளான மீன் குழம்பு, நண்டு கிரேவி, கணவாய் கட்லெட், இறால் கட்லெட் கிடைக்கிறது. மேலும் தக்காளி சாதம், தயிர் சாதமும் கிடைக்கும். தேநீர், சர்பத், மோர் போன்ற குடினிகளும் கிடைக்கிறது. காரங்காடு தேவாலயத்திற்கு அருகில் ஒரு பழைய மண்டபம் ஒன்றுள்ளது.

காரங்காடு படகுப் பயணம் முடித்து மதுரை வரும் வழியில் பார்த்த கிராமங்களிலிருந்த நீர்நிலைகளை மிகவும் சுத்தமாகப் பராமரித்து வருகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகளை எங்கும் காணமுடியவில்லை. கிராம மக்களின் நீராதாரமாக விளங்கும் கண்மாய், குளங்களை அவர்கள் பராமரிப்பதைப் போல நமது ஊர்களிலும் பராமரித்தால் சிறப்பாக இருக்கும். 2023-இன் மறக்க முடியாத பயணமாகவும் காரங்காடு பயணம் அமைந்தது.

படங்கள் உபயம் : செல்லப்பா

காணொளி உபயம் : History with Madura

பின்னூட்டமொன்றை இடுக