நெற்காவல், நீர்க்காவல், ஊர்க்காவல் என்று கிராமங்களில் காவல்காத்து வரும் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவரான, அய்யாத்துரை என்றழைக்கப்பட்ட மா. கிருஷ்ணசாமி 02 ஜூலை 2016 அன்று இயற்கை எய்தினார். அகவை 94 என்று தகவல். பஞ்சாலைத் தொழிலாளியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நல்ல பாடகர். ஓய்வுக்குப் பின் காலையில் எழுந்து ஊரின் கிழக்கேயும், மேற்கேயும் இருக்கும் ஐயனார் கோயில்களுக்கும், காவல் தெய்வங்களான சோணைச்சாமியும், கருப்புச்சாமியும் இருக்கும் கோயிலுக்கும், மற்ற தெய்வங்கள் இருக்கும் இடங்களுக்கும் சென்று கைகளைத் தாள நயத்துடன் தட்டி தாமறிந்த பாடல்களைப் பாடித் தொழுவதையே பணியாகக் கொண்டிருந்தார். இந்தக் கோயில்களில் செய்யவேண்டிய திருப்பணிகளை நினைவுறுத்திக்கொண்டே இருப்பார். இவரும் இவரது மைத்துனரும் நட்டு வைத்து வளர்த்த மரங்கள் இன்று வளர்ந்து சோலையாகி நிற்கின்றன.
அவர் பாடக் கேட்டு எழுதி வைத்த சில பாடல்கள் இங்கே.
- முதற் பாடல் கடவுள் வாழ்த்து. கட்டை கொடுத்த கம்மாளன், உடுக்கை கொடுத்த உத்தமன், சத்தம் கொடுத்த சாம்பசிவன் என எல்லாரையும் பணிந்து, குற்றம் குறை இருந்தால் கும்பிடு போட்டுத் தொடங்குவது
- இரண்டாவது பாடல் தேனாய் மழை பொழியும் மலையாளத்திலிருந்து வந்த ஐயனாரின் பரிவாரத்தைச் சேர்ந்த சோணையாவின் பெருமையைச் சொல்லி, எதிரிகளைச் சங்கரித்து ஏழைகளைக் காத்த திறம்பாடி, மழை வேண்டுவது (கோயிலில் சோணையாவுக்கு எதிரேயுள்ள மேற்குச் சுவரில் ஒரு திறப்பு இருக்கும் – மலையாள தேசம் பார்க்க). ஐயனார் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது.
- அடுத்த பதிவில் இடம்பெறும் மூன்றாவது பாடல் அவரது மூதாதைகள் பற்றியது. வீரண மணியமும், முத்திருளாண்டி மணியமும் கிழக்குச் சீமையிலிருந்து சிறுவாலை சமீனிடம் காவல் வேலை பார்க்க வரும் வழியில் அரியூரிலும், கோயில் பாப்பாகுடியிலும் தங்கிவிட நேர்வது. காவல் பணியில் உயிர்விட்டு “பட்டவர்”களாகி விடுவது. (மேற்கே உள்ள அய்யனார் கோயிலில் பட்டவர்களுக்குச் சிலைகள் உண்டு). இப்பாடலில் ஐயனாரின் பரிவாரங்கள் அரண்மனை, மாளிகையெல்லாம் விரும்பாமல் இண்டஞ்செடி, சங்கஞ்செடி மண்டிய மேடைகளில் திறந்த வெளியில் கோயில்கொள்வதும் பாடப்படுகிறது. கோயில் பார்ப்பார்குடி உருவான கதையொன்றும் சொல்லப்படுகிறது (ஆனால் இவ்வூரில் தற்காலத்தில் ஒரு பார்ப்பனக் குடும்பமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இந்தப் பாடல்களில் எல்லாம் நிலக்காட்சி நன்கு வருணிக்கப்படுகிறது. பயணங்களில் வரிசையாக வரும் ஊர்கள் சொல்லப்படுகின்றன. திருப்பூவனம் பக்கமிருந்து வைகை ஆற்றங்கரை வழியாக மதுரை புட்டுத்தோப்பு வருபவர்கள் “பழைய” சொக்கநாதரைத்தான் பார்க்கிறார்கள். இருளாயி, ராக்காயி, சங்கன், சமையன், சோணைமுத்து, முத்திருளாண்டி, கருப்பு, நீலமேகம், முத்தையா, வீரணன் போன்ற பெயர்கள் ஊரில் வைக்கப்பட்டு வருவதன் காரணம் தெரிகிறது (போன தலைமுறை வரை).
(1)
அரி ஓம் நன்றாள்க
குரு வாழ்க குருவே துணை
ஆதிகுருவே துணையாய் குருபாதம் தஞ்சம்
அரியைப் பணிந்து அரிபாதம் தஞ்சம் என்று
குருவைப் பணிந்து குருபாதம் தஞ்சம் என்று
மண்டு வணங்கி மாமலையும் தஞ்சம் என்று
ஆனைமுகத்தோனே அடிபணிந்தேன் நான் சரணம்
வேலவனை நான் பணிந்தேன் விநாயகனே நான் சரணம்
காரானை நான்முகனே கணபதியே முன் நடவாய்
நாவில் சரஸ்வதியை நான் பணிந்து பாடுகின்றேன்
தாயே சரஸ்வதியே சங்கரியே மாரிமுத்தே
நாவில் குடியிருந்து நல்லகவி சொல்லுமம்மா
குரலில் குடியிருந்து குரலோசை தாருமம்மா
அரியும் சிவனும் அனுதினமும் நான்மறவேன்
அரகர என்று சொல்லி அடித்தேன் பறையோசை
சிவசிவ என்று சொல்லி எடுத்தேன் சிலைமுகத்தை
கட்டைகொடுத்த கம்மாளனைப் பணிந்து
உடுக்கு கொடுத்த உத்தமனை நான் பணிந்து
சத்தம் கொடுத்த சாம்பசிவனைப் பணிந்து
மாதா பிதா குருவை மனதிலே நான் நினைத்து
என்பாட்டனார் ஏழ்வரையும் மிகப்பணிந்து நான்வணங்கி
ஆறுகுற்றம் நூறு பிழை அடியேன் நான் செய்தாலும்
குற்றம் நூறு செய்தாலும் கும்பிடு இருபத்தொன்று
(2)
தேனாய் மழைபொழியும் எங்கள்
மலையாளத்தின் சிறப்பதனைக் கூறுவேன் கேள்
மரகதத்தால் மாளிகையும் செம்பொன்னால்தான் இழைத்த மாணிக்க மேடைகளும்
சிறப்புடனேதான் துலங்கும் கோபுரங்கள் சூழ்ந்த திருமூர்த்தி ஆலயமும்
சத்திரமும் சாவடியும் அன்னதானம் கொடுக்கும் சார்ந்த பல மேடைகளும்
வித்தகர்கள் யாவருக்கும் பரிசுமிகக் கொடுக்கும் வீரசபா மண்டபமும்
கொடிகள் பலதுலங்க கலிங்கர் தெலுங்கர்களும் கோவலர்கள் வாழ் தெருவும்
நெடிய உயரமதாய் தங்கச் சிகரம் உள்ள நிகரற்ற மாளிகையும்
வீரமுரசொலிக்க மலையாளத்தில் சோணைக்கருப்பன் வீற்றிருந்த கதை உரைக்க
முண்டு கட்டி முண்டு உடுத்தும் மூணு மலையாளம்
கச்சை கட்டி முண்டுடுத்தும் கரந்த மலையாளம்
மழைபெய்து நெல் விளையும் மேல மலையாளம்
குளம்பெருகி நெல்விளையும் கோல மலையாளம்
மலையாள தேவதையாம் மண்டுக்கு அதிபதியாம்
சார்ந்த குணமே ஐயா, சற்குணமே சோணைமுத்தே
ஆண்டி பரதேசி அருந்தவசி பண்டாரம்
சடையும் முடியுமாய் நீ சன்யாசி கோலமுமாய்
இருளா கருப்பா நீ ஈஸ்வரா மாயாண்டி
சங்கா சமையா சப்பாணி சோணைமுத்தா
நாடே மயங்குது சாமி நல்ல மழை இல்லாமல்
ஊரே மயங்குது எங்கள் காயாம்பூ மன்னனுடைய
உண்மை விளங்காமல்
பயிரே மயங்குது முத்தையா
பருவமழை இல்லாமல்
நாடு செழிப்பதற்கும் நல்லமழை பெய்வதற்கும்
ஊரும் செழிப்பதற்கும் உங்கள் உண்மை விளங்குதற்கும்
ஐயன் பெருமாளை அன்புடனே நீ அழைத்து
கங்கையைத்தான் அழைத்து நாடு செழிக்க என்று
வருணனைத்தான் அழைத்து வந்துமழை பெய்திடவே
மும்மாரிதான் பொழிந்து முப்போகம்தான் விளைய
உன்மனதை அறிந்து மனம்போல் நடக்காமல்
குணத்தை அறிந்து குணம்போல் நடக்காமல்
குடிகாரத் தெய்வம் என்று கொண்டுநோக்க மாட்டாமல்
பழிகாரத் தெய்வம் என்று பயந்து நடுங்காமல்
துப்பாக்கிக்காரன் என்று சூது அறியாமல்
பணத்தின் திமிராலே ஏழை மக்களைப்
பழிவாங்கி வந்ததினால்
அதிகாரத்தின் திமிராலே அழிந்துவந்த காரணத்தால்
மனது பொறுக்காத முத்தையா நீ
மாறுவேடந்தான் எடுத்து
பச்சைக் குழந்தையைப் போல் பாங்காய் வடிவெடுத்து
சின்னக் குழந்தையைப் போல் தெருவினிலே நீ நடந்து
துலுக்கர் தெருவினிலே சூதாக நீ நுழைந்து
கயவர் தெருவிலே கபடமதாய் நீ நுழைந்து
அரக்கர் தெருவிலே அதிகாரமாய் நீ நுழைந்து
துஷ்டனைக் கருவறுத்து துரிதமாய் வந்து நின்று
துஷ்டர்களைச் சங்கரித்து சூதாகவே நீ நுழைந்து
கயவர்களைச் சங்கரித்து கபடமதாய் நீ நுழைந்து
அரக்கர்களைச் சங்கரித்து அதிகாரமாய் நீ நுழைந்து
ஏழைகளைக் காத்த எங்கள்குல சோணைமுத்தா
அடுத்த பதிவில் பட்டவன் கதைப் பாடல் காண்போம்.