Archive for the ‘தமிழும் கமலும்’ Category

பால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.

அப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.

பசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.

மதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.

பசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.

பவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.

வம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.

இந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

சுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா எளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.

ஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)

பெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்?

வாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.

(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)

https://www.youtube.com/user/bavachelladurai

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB

ஒரே பக்கத்தில் 2016-இன் அனைத்து மாதங்களுக்குமான நாட்காட்டி. தமிழக அரசு விடுமுறை நாட்கள் கட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பிடிஎப் கோப்புகளைத் தரவிறக்கி விரும்பியதை அச்செடுத்து ஒட்டிக்கொள்ளவும்.

தொ. பரமசிவன் அய்யாவின் கருத்து ஒன்றுடன்.

2016 Calendar Tho.pa

தொ. ப நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்

அசோகமித்திரன் அவர்களின் கருத்து ஒன்றுடன்:

2016 Calendar A.Mi

அ.மி நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்

என் போன்ற கமல் ரசிகர்களுக்கென்றே:

2016 Calendar Kamalகமல் நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரவீதிக்காரன்

எனக்குள் ஒருவன், தசாவதாரம் – விஸ்வரூபம் எடுத்த உயர்ந்த உள்ளம், நம்மவர், கலைஞன், அன்பால் ஆளவந்த வெற்றிவிழா நாயகன், அபூர்வசகோதரர் கமல்ஹாசன் பிறந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். ஆச்சர்யமாக இருக்கிறது. புதிய விசயங்களைத் தேடித்தேடிக் கற்று என்றும் இளமையாக இருக்கும் சகலகலாவல்லவருக்கு வயது என்றும் பதினாறுதான்.

1989ல் அபூர்வ சகோதரர்கள் வெளியானது. நான் ஓரளவு விவரம் தெரிந்து பார்த்த படம். அப்பு கதாபாத்திரமும், சர்க்கஸ் காட்சிகளும், பாடல்களும் மனதைக் கவர்ந்தன. குள்ளமாக வந்து நெஞ்சில் வெள்ளமாக நிறைந்து விட்டார் கமல்ஹாசன். அந்தப் படம் வெளியானபோது நாங்கள் அண்ணாநகரில் குடியிருந்தோம். சுந்தரம் தியேட்டரில்தான் கமல்ஹாசன் படங்கள் பெரும்பாலும் வெளியாகும்.

பள்ளிநாட்களில் பாட்டுப்புத்தகங்கள் வாங்கி வகுப்பறைகளில் புத்தகங்களுக்கிடையில் வைத்துப்படிப்பது, அங்கேயே பாடுவது என எல்லாம் நடக்கும். சிலநேரங்களில் ஆசிரியர்களால் பறிக்கப்பட்டு கிழிக்கப்படுவதும் உண்டு. கமல்ஹாசன் பாடல்களின் மொத்த தொகுப்பு புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் யார் யாரோ பாட குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லோருமே சூப்பர் ஸிங்கர்ஸ்தான். எங்கள் வகுப்பில் பெரும்பாலான பேர் கமல் ரசிகர்களாக இருந்ததால் கமல்ஹாசன் பாடல்களை மனப்பாடப்பகுதிக்கு குறித்து கொடுத்ததுபோல படித்துக்கொண்டிருந்தோம்.

எட்டாம் வகுப்பிற்கு பிறகு நண்பர்கள் எல்லோரும் வேறுவேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டாலும் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பேசிக்கிட்டே கண்மாய்கரையோரம் உள்ள சோனையா கோயிலுக்கு போய்ட்டு வந்து மந்தையில் ஒளியும் ஒளியும் பார்க்க அமர்வோம். கமல்ஹாசன் பாடல் எப்போது போடுவார்கள் என்று காத்திருந்த அந்தக் காலம் திரும்ப வருமா?

Kamal Haasan's Uthama Villain First Look Wallpapers

தேவர்மகன் வெளியான போது ஒரு கம்பை எடுத்து கொண்டு குண்டு பல்பு வெளிச்சத்தில் என் நிழலைப் பார்த்து சாந்துப்பொட்டு பாடலை பாடிக்கொண்டே கம்பு சுற்றிப் பழகியதையெல்லாம் மறக்க மனங்கூடுதில்லையே. தனிமை கிட்டும்போது கணினியில் கமல்ஹாசன் பாடலைப் போட்டு ஆடுவது பெருங்கொண்டாட்டமான விசயம். சமீபத்தில் அப்படி ஆடத்தூண்டிய பாடல் ‘உன்னைக் காணாமல் நானிங்கு நானில்லையே’.

பாலிடெக்னிக் படிக்கும்போது எங்கள் ஆசிரியர் உட்பட அனைவருக்கும் நான் கமல்ஹாசன் ரசிகனென்று தெரியும். அன்பே சிவம் வெளியான சமயம் மீசையை எப்போதும் முறுக்கிக் கொண்டு திரிந்த காலம். விருமாண்டி வந்த போது தினமலரில் ஒருபக்க ப்ளோஅப் கொடுத்தார்கள். அதை எனக்கு எடுத்துவர வேண்டுமென்று ஒரு ஆசிரியர் நினைக்குமளவிற்கு பிரபலமாக இருந்தேன்.

2004ல் விருமாண்டி பார்த்துத் தொடங்கினேன். கல்லூரி காலமென்பதால் அந்த வருடம் மட்டும் 24 படங்கள் பார்த்துவிட்டேன். இறுதியாக டிசம்பர் 28 அன்று மீனாட்சி தியேட்டரில் விருமாண்டி பார்க்க ஆசிரியரிடம் அனுமதி கேட்டு சென்று 25வது படமாக விருமாண்டி பார்த்தேன். படித்து முடித்தபின் இருசக்கர வாகன விற்பனை பிரதிநிதியாக இருந்தபோது அங்குள்ளவர்கள் என்னை கமல் என்றே அழைப்பார்கள்.

Actor Kamal Haasan in Papanasam Movie Stills

உரையாடலின் போது கமல்ஹாசன் பட வசனங்களை அடிக்கடி சொல்வேன். அதிலும் வசூல்ராஜா பட வசனங்களைத்தான் மேற்கோளாக பெரும்பாலும் கூறுவேன். வசூல்ராஜாவை திரையரங்குகளில் மட்டும் ஆறுமுறை பார்த்தேன். கமல்ஹாசன் குறித்த செய்தியோ, பேட்டியோ நாளிதழ்களில் வந்திருந்தால் அதை அப்போதே வாங்கிவிடுவேன். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தை மட்டும் எப்படியாவது எடுத்துருவேன். அப்படி தொகுத்தவை இரண்டு பெட்டி நிறைய இன்னமும் இருக்கிறது. இப்போது கணினியில் கமல்ஹாசனின் நேர்காணல்கள், பாடல்கள், படங்கள் எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.

விஸ்வரூபம்2

திருமணம் முடிந்தபிறகு கமல்ஹாசன் படம்தான் முதலில் பார்க்க வேண்டுமென்று இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என ஹாட்ரிக் ஹிட் கொடுக்க வருகிறார். என்னுடைய திருமண ஆல்பத்தில் ஒருபக்கம் எங்க படமும் மறுபக்கம் கமல் பியானோ வாசிப்பது போல் உள்ள படத்தையும் சேர்த்திருந்தோம். பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

கமல்ஹாசன்

எங்க வீட்டில் இன்னமும் கமல்ஹாசன் படங்களைப் பார்க்கும் இடங்களில் ஒட்டி வைத்திருக்கிறேன். மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சலாடும் நவம்பர் மாதத்தில் கமல்ஹாசனைப் போல வைகையெனும் மகாநதிக்கரையில் நானும் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. கமல்ஹாசனை நினைத்தாலே இனிக்கும். பார்த்தால் பசி தீரும். அன்பே சிவம், அன்பே கமல்.

மய்யம்

வாசகா – ஓ – வாசகா…
என் சமகால சகவாசி
வாசி…

புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து…

எனது கவி உனதும்தான்
ஆம்…
நாளை உன்வரியில்
நான் தெரிவேன்.  

– கமல்ஹாசன்

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் வாசிப்பை நாசம் செய்யும் வேளையில் நம்மை ஆச்சர்யமூட்டும் விசயமாக தன்னுடைய திரைப்படப் பணிகளினூடே தமிழின் உன்னதமான படைப்புகளை வாசிக்கும் கமல்ஹாசனைப் பார்க்கும்போது பொறாமையாகயிருக்கிறது. வாசிக்க நேரமில்லை என்று சொல்ல வெட்கமாகயிருக்கிறது. புத்தகம் பேசுது  மாத இதழுக்காக கமல்ஹாசனோடு எழுத்தாளர் வெண்ணிலா மற்றும் முருகேஷ் எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு சிறுபகுதி:

கலையுலக இலக்கியவாதியான உங்களின் இலக்கிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?

கலையுலகத்திலிருந்து இலக்கியவாதியின் அனுபவத்தைப் பேசணும்னா, அது ரொம்ப சோகம்தான். ஜே.கே.வினுடைய கலை உலக அனுபவங்கள் மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இன்றைக்கு வாழும் ஹீரோக்களில் முதன்மையானவராக நான் நினைப்பது ஜே.கே.வைத்தான். ஆனால், நான் அவரை வாழ்நாளில் நான்கைந்து முறைகளுக்குமேல் பார்த்ததில்லை. காரணம், அதீதமான வியப்பும் பெருமிதமும். அது மட்டுமில்லாம கிட்ட பார்க்கிறதுல சின்ன தயக்கமும் இருக்கு. நரைச்ச மீசை, உயரம் இதெல்லாம் தொந்தரவு பண்ணிடுமோன்னு தள்ளியே இருக்கேன். குழம்பிடுமோன்னு தோணும். ‘வாழும் ஹீரோ’ அவர் காதுபட சொல்றதுல எனக்கு சந்தோஷம். அந்த மாதிரி நெறய பேர் இருக்காங்க.

Writers

தன்னோட ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு கு.ஞானசம்பந்தன். தொ.பரமசிவன். தொ.ப.வைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம். ஆனா, உடம்பு முடியாம ஒரு வயோதிகரா தொ.ப.வைப் பார்க்கிறதுல ஒரு சின்ன வருத்தம். இளைஞரா இருந்தப்ப எங்க அப்பாவையெல்லாம் பார்க்க வந்திருக்காரு. அப்ப தெரிஞ்சுக்காம போயிட்டமேன்னு தோணும். கோபமான தொ.ப.வைப் பார்த்திருக்கலாம். ஞானசம்பந்தனையே சொல்லலாம். அவர் வெளியே கோமாளி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டாலும் ரொம்ப ஆழமான, கோபமான ஆளு. கோமாளி தொப்பி ஒரு யுக்தி. ஞானக்கூத்தன், புவியரசு இவங்கள்லாம் எனக்குக் கிடைச்ச பரிசு. நட்புன்றது நானா தேடிக்கிட்டதுதான். அதனால் அது பரிசா, நான் சம்பாதித்தான்னு தெரியல. இதே இடத்தில் உட்கார்ந்து சுந்தர ராமசாமியோட ரெண்டு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். ஞானக்கூத்தன்தான் ஏற்பாடு செஞ்சாரு. முக்கியமான ஒரு வேலையை செஞ்ச மாதிரி ஞானக்கூத்தன் அன்னைக்கு நெகிழ்ச்சியா பக்கத்தில் நின்னுக்கிட்டுருந்தார். எனக்கு ரொம்ப நெகிழ்வான அனுபவம். அதே மாதிரி சமீபத்துல படிச்சது ப.சிங்காரத்தை. அவரு செத்துப்போனப்புறம்தான் அவர படிச்சேன். அவரோட புத்தகம் இருக்கிறதால அவர் இல்லாம போனதைப் பத்தி எனக்கு வருத்தமில்ல. சமீபத்தில் தூக்கி வாரிப்போட்ட புத்தகம் கொற்றவை. மிரண்டுட்டேன். சொல்லியே ஆகணும். ஜெயமோகன் சினிமாவுக்கு வந்ததால சொல்லலை. ஒருவேளை அவர் என் சினிமாவில் வேலை செஞ்சு என் புஸ்தகம் படிங்கன்னு குடுத்திருந்தார்னா நான் படிச்சிருக்கமாட்டேன்னு நினைக்கிறேன். நானா தேடி படிச்சதால என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் படிக்கிறது பத்தலன்றது மட்டும் எனக்குத் தெரிஞ்சது.

Books

‘ஆழி சூழ் உலகு’ன்னு ஒரு புஸ்தகம். நண்பர்கள் பரிந்துரை பண்ணாங்க. ஜி.நாகராஜனையே நான் அவர் இறந்து போனதுக்குப் பின்னாடிதான் படிச்சேன். ‘குறத்திமுடுக்கு’, ‘நாளை மற்றொரு நாளே’ எல்லாம் அப்புறம்தான் படிச்சேன். ஜெயகாந்தனைத் தெரிஞ்சுகிட்டது மாதிரி அவரைத் தெரிஞ்சுக்கிட்டிருந்தா அவர் கூட கைகுலுக்கியிருக்கலாமேன்னு தோணுச்சு. கு.ப.ரா.ல்லாம் காலதாமதமாக வாங்கிப் படிக்கிறேன். நான்தான் சொல்றேனே, 15 வருசமாத்தான் தெளிவு வர ஆரம்பிச்சுருக்கு.

(நன்றி – வெண்ணிலா, முருகேஷ் – புத்தகம் பேசுது, ஜனவரி 2008 இதழ்)

கமல்ஹாசன் தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.சா.ரா, கு.ப.ரா, பிரமிள், புவியரசு, ஞானக்கூத்தன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தொ.பரமசிவன், சுந்தர ராமசாமி, சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், கோணங்கி என இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை தேடி வாசித்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என தொ.பரமசிவன் சொல்கிறார். கமல்ஹாசன் மய்யம் என்ற இலக்கிய மாத இதழை முன்பு நடத்தியிருக்கிறார். நாமும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்போம்.

ஜி. நாகராஜன் பிறந்த நாள்  & மதுரை புத்தகத் திருவிழா சிறப்புப் பதிவு

கமல்ஹாசன்அந்தக் காலம் மாதிரி வராது. அது வரம். இடுப்புல ஜாலியா உட்கார்ந்துகிட்டு சாப்டுக்கிட்டேயிருப்பேன். இப்ப எதுக்கெடுத்தாலும் வேலை.

–   கமல்ஹாசன் (மும்பை எக்ஸ்பிரஸ்)

என் நினைவில் பதிந்த வசனமிது. சிக்னல் நிறுத்தத்தில் கார் நிற்கும்போது குழந்தையை கையில் வைத்துகொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் சிறுமியைப் பார்த்ததும் கண்ணில் நீர் துளிர்க்க தனக்கு பழைய நினைவு வந்ததாகச் சொல்லி கமல்ஹாசன் சொல்லும் வசனமே மேலே உள்ளது. அந்தப் படத்தில் நிலையான வேலையில்லாமல் மரணக்கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து வண்டி ஓட்டும் காதுகேளாத நாயகனாக கமல்ஹாசன் நடித்திருப்பார். அந்தப் படத்தில் அவரது காதுகேளாமையைப் பலரும் கேலி செய்வார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல் வாசித்ததும் மும்பை எக்ஸ்பிரஸ்தான் நினைவிற்கு வந்தது.  இந்நாவலின் நாயகனான தேவராஜூம் காதுகேளாமல் உருப்படியான வேலையில்லாமல் சிரமப்படுபவர்தான்.

47 வயதில் தேவராஜ் திருமணத்திற்கு முதல்நாள் தன் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது அவரோடு பயணிக்கும் நாமும் நிசப்தமாக நிராகரிப்பின் வலியை உணர முடிகிறது. தேவராஜிற்கு சிறுவயதில் ஏற்படும் காய்ச்சலால் காதுகேளாமல் போய்விடுகிறது. அதனால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் அவனது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. காதுகேளாததால் பள்ளிப் படிப்பை ஒழுங்காக முடிக்க முடியாமல், நிரந்தரமான வேலையில்லாமல், உரிய வயதில் திருமணம் செய்யாமல் தேவராஜ் படும் அவமானமும், புறக்கணிப்பும் நம்மையும் பாதிக்கிறது. அந்தளவிற்கு தேவராஜ் நமக்கு நெருக்கமான நண்பராகிவிடுகிறார்.

பிரிண்டிங் பிரஸ், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் சோப்பு கம்பெனி, மிளகாய்ப் பொடி அரைக்கும் மில், லாட்டரிச் சீட்டுக்கடை, டாக்டர் வீட்டில் எடுபிடி, ஊட்டியில் கடையில் விற்பனை பிரதிநிதி, காசிக்கு போகும் பாட்டிக்கு துணையாளாக சம்பளத்திற்கு போவது, சீட்டுக்கம்பெனியில் என பல வேலைகள் பார்க்கிறான். ஒரிடத்திலும் நிலையான வேலையில்லாமல தேவராஜ் படும் சிரமங்கள் என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்தது.

நிமித்தம்டிப்ளமோ முடித்து விட்டு நிரந்தர வேலையில்லாமல் அலைந்த நாட்களில் நானும் தேவராஜ் போலத்தான் திரிந்தேன். அதிலும் தேவராஜ் மிளகாய் மில்லில் வேலையை விடுவது போல மதுரையில் இரண்டு பெரிய நிறுவனங்களில் கார்பன் வாடை பிடிக்காமல் கொஞ்ச நாட்களில் வேலையை விட்டிருக்கிறேன். டாக்டர் வீட்டில் தேவராஜ் வேலை பார்த்ததை படித்தபோது நான் ஓரிடத்தில் வேலை பார்த்தபோது பட்ட அசிங்கமும் ஞாபகத்திற்கு வந்தது. இருபது வயதிற்கு மேலாகியும் மனவளர்ச்சி இல்லாத டாக்டர் மகனை தூக்கி சாப்பிட வைக்க, குளிப்பாட்ட உதவியாக தேவராஜ் வேலைக்கு போகிறான். அப்போது அந்தப் பையன் மலம்கழித்து உலப்பிவிட டாக்டர் தேவராஜை திட்டும் இடங்களில் மனது மிகவும் சங்கடமாகிவிட்டது.

டிப்ளமோ படிப்புக்கு ஏற்ற வேலையென ஓரிடத்தில் வேலைக்கு சேர அங்கு நான் சேர்ந்த நேரத்தில் ஒரு நாயையும் புதிதாக வாங்கினார்கள். எனக்கு சிறுவயதிலிருந்தே நாயைக் கண்டாலே கொல நடுங்கிரும். இதில் நாயை சில நேரங்களில் இடம் மாற்றி என்னைக் கட்டச் சொல்வார்கள். பயந்து பயந்து செய்வேன். இடையிடையே அதற்கு சாப்பாடு வாங்கிப் போடும் பணிவேறு. இரவில் உடன் வேலைப்பார்ப்பவர் அதற்கு புரோட்டா வாங்கி சாப்பிடப் போட அது கக்கி வைத்து விட்டது. மறுநாள் காலை அது கக்கி வைத்த இடத்தை கழுவினால் வாடை குடலைப் புடுங்கி எடுத்துவிட்டது. அச்சமயம் சொந்தக்கார பாட்டி செத்துட்டாங்கன்னு ஒரு தகவல் வந்ததும் அப்படியே அந்த வேலைய விட்டுட்டேன். அதுபோல ஏ/சி சர்வீஸ் வேலைக்கு போக உதிரி பாகங்களைக் கழுவ எந்நேரமும் கழிப்பறை போன்ற இடங்களையே நோக்கி போக வேண்டியிருந்தது. மூன்று நாட்களில் வேலையை விட்டு ஓடி வந்துவிட்டேன். இப்படி நான் பல இடங்களில் பட்டபாட்டை நிமித்தம் திரும்பவும் நினைவூட்டிவிட்டது.

தேவராஜிற்கும் அவனது அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம். தண்டமாகத்திரிவது, காதுகேளாமையைச் சுட்டிக் காட்டி எப்போதும் தேவராஜைத் திட்டிக் கொண்டேதானிருப்பார். அவங்கப்பா இறந்தபோதுகூட தேவராஜ் சாமியாராக ஒரு மடத்திலிருப்பார். மற்றவர்கள் வற்புறுத்தலால்தான் இறுதிச் சடங்கிற்கே செல்வார். அந்தளவிற்கு அப்பாவின்மீது தேவராஜிற்கு வெறுப்பு.

தேவராஜிற்கு காதுகேட்க வைப்பதற்காக மருத்துவமனைக்கும், கோயிலுக்கும் அழைத்துச் செல்லும் அம்மா, ஆறுதலாகப் பேசி உதவும் அக்கா, இக்கட்டான சூழல்களிலெல்லாம் உறுதுணையாக உடன்வரும் நண்பனான இராமசுப்பு, ஓவியத்தின் மீதும், புத்தகவாசிப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்திய சுதர்சனம் வாத்தியாரும் அவரது மனைவியான அங்கயற்கண்ணி டீச்சரும், தம் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் கதைகளைப் பகிரும் தாய்வழித்தாத்தாவும் வண்டிப்பேட்டையிலிருக்கும் தம்பையாத் தாத்தாவும், தொழிற்பயிற்சி படிக்கும் நாட்களில் சேட்டைக்காரனாக வரும் ஜோசப்பும்தான் தேவராஜ் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் விதமாக வருபவர்கள்.

நிலையான அன்பிற்கு ஏங்கும் தேவராஜ் பிரிண்டிங் பிரஸில் வேலை பார்க்கும் போது ஜோஸ்லினுடன் வரும் காதலை தேவராஜின் அப்பா பிரித்துவிடுகிறார். அதன்பின் ஊட்டியில் சவீதாவுடன் வரும் காதலும் அவளது கல்யாணத்தால் முடிந்து போகிறது. நிரந்தரமான வேலையில்லை, காதுகேளாமை போன்ற காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. இறுதியில் வீடு விற்ற பங்கையும் தேவராஜின் அண்ணன் கொழுந்தியாவைக் கட்டி வைக்கிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றி விடுகிறான். இராமசுப்பு தன்னுடன் இணைத்து தொழில் செய்ய வைத்து ஒரு பெண்ணையும் பார்த்து திருமணம் செய்து வைக்கிறான். தன் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு காத்திருக்கும் தேவராஜ் நம்மையும் சலனப்படுத்தி விடுகிறார்.

மண்குதிரைதேவராஜின் தாய்வழித்தாத்தா குயவர். மிக அழகாக குதிரை, மண்பாண்டங்கள் செய்பவர். சேவல் சண்டைக்கு நடுவராகச் செல்பவர். அவர் ஓரிடத்தில் சொல்வார். குதிரை செய்யும்போது மனதில் கோபமோ, கவலையோ இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிலை ஒழுங்காக வராது என்று. அதை நானும் பலமுறை குதிரையை வரையும் போது உணர்ந்திருக்கிறேன். குதிரையை கொஞ்சம் கவனமில்லாமல் வரைந்தாலும் கழுதை போலாகிவிடும். தாத்தா வீட்டில் இருந்த நாட்களில் தேவராஜ் அந்த ஊர் கதைகள், மண் சிலைகள் என மகிழ்ச்சியாக இருப்பான். அப்பகுதி நம் எல்லோருடைய தாத்தா-பாட்டி வீட்டு நினைவுகளையும் மீட்டெடுக்கக் கூடியது.

கங்கைக் கரையில் ஹேமாவதி பட்டு நூல் நெய்யும் கதை, வண்டிப்பேட்டைக்கு வருபவர்கள் சொல்லும் திருடன் கதை, குயவரான தாத்தாவின் உதவியாளர் சொல்லும் வைரவன் செட்டியார் கதை, தம்பையாத் தாத்தா சொன்ன ஆண்கிணறு பெண்கிணறு உருவான கதை, ஜோசப்பின் கடற்கரை கிராமத்தில் கிரேசம்மாள் கிழவி சொல்லும் காற்றடிக்காலக்கதையென நாவலில் கிளைக்கதைகளாக வரும் ஒவ்வொன்றும் நம்மை ஈர்க்கிறது.

nimithambooklaunch2நாவலில் காந்தி விருதுநகருக்கு வருவது, நேரு காலத்தில் ஏற்பட்ட பஞ்சம், இந்திரா காந்தி காலத்திலிருந்த மிசா தடைச்சட்ட காலம், விருதுநகரில் வண்டிப்பேட்டை உருவான கதை, நாத்திகம் பேசிய திராவிடக் கட்சிக்காரர்கள் என அந்தக் கால நிகழ்வுகளையும்  கதையினூடாக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவலினூடாக சில கணங்களே வந்துபோகும் உணவகம் நடத்தும் காந்தி மீது பற்றுக் கொண்டவரான இராஜாமணி இறக்கும்போது நமக்கும் வலிக்கிறது.

நாவலின் களம் விருதுநகர். மதுரையையொட்டிய பகுதியென்பதால் இன்னும் நெருக்கமாகிறது. மதுரையில் நான் பணிபுரியும் பகுதியில் தேவராஜ் கொஞ்சகாலம் சீட்டுக் கம்பெனியில் வேலை பார்ப்பதை வாசித்தபோது மகிழ்வாகயிருந்தது. இந்நாவலை எனக்கு வாசிக்கத் தந்த அண்ணனும் நெருக்கமான நிறைய பகுதிகளைச் சொல்லி சிலாகித்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறுநாவல்களையும் வாசித்துவிட்டேன்ற திருப்தி நிமித்தம் வாசித்ததும் மனதில் அப்பிக் கொண்டது தனிக்கதை. கதைசொல்லியான எஸ்.ராமகிருஷ்ணன் நிமித்தத்தினூடாக நம்மை அவரது எழுத்தில் கிறங்க வைத்து விடுகிறார். வாசிக்க வேண்டிய அற்புதமான நாவல்.

kamalhaasan
தமிழுக்கு நிகரான மொழியுமில்லை!
கமலுக்கு நிகரான கலைஞனுமில்லை!

vasoolraja kamal

வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் நெருக்கமான நட்சத்திரம் சூரியன்தான். அதேபோல, திரையுலகில் ஆயிரம்பேர் வந்துபோனாலும் எனக்கு பிடித்த அபூர்வ நட்சத்திரம் கலைஞானி கமல்ஹாசன்தான்.

kamal flims

மானுடத்தின் மீது தீராதகாதலும், சமூக அக்கறையும் கொண்ட நல்ல மனிதர். பன்முகத்தன்மைகொண்ட தம் படைப்பாற்றலால் உலகையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்த மகாகலைஞன். வாசிப்பிலும் எழுத்திலும் தேர்ந்த இலக்கியவாதி. தடைகளை வென்று புதிய முயற்சிகளின் மூலம் தமிழ்திரையுலகை மாற்றத்துடிக்கும் போராளி நம்மவர் கமல்ஹாசன்.

maduraiyum kamalum

வாசிக்கும் வார மாத இதழ்களில் கமல்ஹாசன் குறித்து வந்தவைகளையெல்லாம் எடுத்து தனியே தொகுத்து ஒரு பெட்டி நிறைய வைத்திருக்கிறேன். என்னுடைய கட்டற்ற கமல் கலைக்களஞ்சியத்திலிருந்து சில படங்களை தொகுத்திருக்கிறேன். கமல்ஹாசனைப் பார்த்தால் பசி தீரும்.

kamalin dasavadharam

நடிப்பு, வாசிப்பு, பாடும்திறன், மனிதநேயம் என கமல்ஹாசனின் பன்முகத்தன்மையை பற்றி எழுதிய முந்தைய பதிவுகளான அபூர்வசகோதரர் கமல்ஹாசன், கமல்ஹாசனின் கானமழை கட்டுரைகளை வாசியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நவம்பர் 7 நம்மவர் தினம்.

mumbaiexpress

kamal

தமிழ்திரைப்படப்பாடல்கள்

திரையிசைப் பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை, எளிய மனிதர்களின் சுக துக்கங்களை, சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்த இலக்கிய வடிவத்தை விடவும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் கலை வெளிப்பாடு திரையிசைப்பாடல்களே. காரணம், சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தனது மனதின் பாடலாக உருமாற்றிக்கொண்டு விடுகிறார்கள்.      

– எஸ்.ராமகிருஷ்ணன்

இளம்பிராயத்தில் கேட்ட பாடல்கள், பள்ளி நாட்களில் பாடப்புத்தகங்களுக்கு நடுவே வைத்துப் படித்த பாட்டுப்புத்தகங்களும், கல்லூரிக்காலங்களில் பாடவேளைகளுக்கு ஊடாக வைத்த பாட்டுப்போட்டிகளும், விழாக்காலங்களில் ஒலிபெருக்கியின் வாயிலாக இதயந்தொட்ட பாடல்களும், இன்றும் பயணங்களில் கூட வரும் பாடல்கள் என தினசரி அன்றாடப்பாடுகளுடன் பாடல்களும் கலந்துவிட்டது.


சில பாடல்கள் காதலிக்கத் தூண்டும்; சில பாடல்கள் உற்சாகங் கொள்ள வைக்கும்; சில பாடல்கள் அழ வைக்கும்; சில பாடல்கள் அமைதிப்படுத்தும்; சில பாடல்கள் நமக்காகவே எழுதப்பட்டது போலத் தோன்றும். திரைப்படங்களை விடப் திரைப்படப்பாடல்கள் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டது எனலாம்.

பறவைக்கோணம்எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை இதழில் திரைப்படப்பாடல்கள், அவை இடம் பெற்ற படங்கள், திரைத்துறை சார்ந்த நூல்களைக் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பறவைக்கோணம் என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது. இந்தாண்டு நடந்த சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கி வந்த சகோதரி மதுரை வந்தபோது எனக்கு வாசிக்கத் தந்தார். பறவைக்கோணம் புத்தகத்தை ஒரே நாளில் வாசித்து விட்டேன். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களும் படங்களும் ஏற்படுத்திய நினைவுகளைக் குறித்த அடியேனின் சிறுபதிவு.

 பறவைக்கோணம் தொடரில் இடம்பெற்ற அழகே அழகு பாடல் குறித்த கட்டுரையை எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் வாசித்திருக்கிறேன். அழகே அழகு

ராஜபார்வையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்திமழை பொழிகிறதுதான். எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை அழகே அழகு பாடல் மீதான பித்தத்தோடு ராஜபார்வையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் தூண்டி விட்டது. அழகே அழகு பாடலை யூடியூப்பில் தரவிறக்கி பார்த்தேன்.

அழகே அழகு தேவதை

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கமல்பாடல் எடுக்கப்பட்ட விதம், கமல்ஹாசனின் நடிப்பு, மாதவியின் அழகான கண்கள், ஜேசுதாஸின் குரல், இளையராஜாவின் இசை, கண்ணதாசனின் வரிகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். வண்ணநிலவன் கதை வசனத்தில் வந்த அவள் அப்படித்தான் படத்தில் உறவுகள் தொடர்கதை பாடலில் வரும் ‘வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்’ என்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பிடித்த வரிகள் இப்போது எனக்கும் நெருக்கமாகி விட்டது.

முகல்-ஏ-ஆசம் படம் குறித்து வாசித்து அந்தப்படத்தை வாங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அதிகரித்துவிட்டது. சமீபத்தில் விஸ்வரூபம் குறித்த நேர்காணலொன்றில் கமல்ஹாசன் ‘உன்னைக் காணாது நானில்லையே’ பாடலை முகல்-ஏ-ஆசம் படத்தில் வரும் ஒரு பாடலின் ராகத்தின் சாயலில் எடுத்ததாக சொன்னார்.

இந்தப் புத்தகத்தை வாசித்ததும் ராஜபார்வை, அவள் அப்படித்தான், அழியாத கோலங்கள், இரத்தக்கண்ணீர், முகல்-ஏ-ஆசம் என இந்த வருடம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் உருவாகிவிட்டது. எல்லாம் பழைய படங்கள் என்பதால் கடைகளில் கிடைக்கும் என நினைக்கிறேன்.

பறவைக்கோணம் வாசித்த பிறகு நான் அறியாத பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். ‘சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னை தழுவிக் கொண்டோடுது தென்னங்காற்று’ என்ற பாடலை ஒலிபெருக்கிகளில் நிறையமுறை கேட்டிருக்கிறேன். அந்தப் பாடல் இடம் பெற்ற படம் ‘பிராப்தம்’ என்றும் அதை இயக்கியது நடிகையர் திலகம் சாவித்திரி என்றறிந்த போது ஆச்சர்யம் அதிகமாகியது. ‘குழந்தை உள்ளம்’ என்ற படத்தையும் சாவித்திரி இயக்கியிருக்கிறார்.

நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடல் ஜேசுதாஸின் முதல் பாடல் என்று தெரியும். அந்தப் படத்தை இயக்கியது வீணை எஸ்.பாலசந்தர் என்றும் அவர் தமிழில் திரில்லர் படங்களை வித்தியாசமாக எடுத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன். வீணை எஸ்.பாலசந்தர் இசைக்கலைஞர், எடிட்டர், இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமைகள் கொண்டவர்.

பனிரென்டாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியை குண்டலகேசி கதையை சொன்னபோது இந்தக் கதையை ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் இடம்பெற்ற மந்திரிகுமாரி கதை மாதிரி உள்ளதென்று நான் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இந்தப் படம் குறித்து பறவைக்கோணத்தில் வாசித்த போது பள்ளி ஞாபகம் வந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படமிது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் சொன்னது நீதானா பாடல் ஒரே அறையில் குறைந்த செலவில் அற்புதமான பாடலை இயக்கிய ஸ்ரீதரின் ஆளுமையைச் சொல்லும் பகிர்வு. செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலை எஸ்.ரா. மலைப்பாடல் என்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன்இரயில் பயணத்தின் போது வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்ற பாடலைக் வண்டியில் வந்தவர் பாடியதைக் கேட்ட போது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் தங்கவேலுவின் நடிப்பையும் புகழ்கிறார். அத்தோடு அடுத்த வீட்டு பெண் படத்தில் இடம் பெற்ற கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே என்ற பாடலை குறித்த வரிகளை வாசித்த போது சமீபத்தில் மறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடகர் அவர். பாடலின் முதல் ஹம்மிங்கை எனது தம்பி அழைப்பு ஓசையாக பதிவு செய்து வைத்திருந்தான். கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எடுத்த படங்களையும் அதில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தையும் குறித்த வரிகளையும் வாசித்த போது அந்த நாவலைப் படித்துவிட்டு அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகியது. சமீபத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி போன்ற ஆளுமைகளை வைத்து அவர்களோடு பாடல்கள் உருவான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் வரத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியமான விசயம்.

பறவைக்கோணம் வாசித்ததும் எனக்குப் பிடித்த பாடல்கள், பிடித்த பாடல்வரிகள், அது பிடிக்கக் காரணம் போன்ற காரணங்களை எழுதித் தொகுத்து வைக்க வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகியுள்ளது. இந்நூல் வாசிக்கும் போது உங்களுக்கு பிடித்த பாடல்களும், நினைவுகளும் கட்டாயம் மேலெழும். என் நினைவுகளை மீட்டெடுத்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள் பல.

பறவைக்கோணம் புத்தகம் வாசியுங்கள்.

நண்பர் இளஞ்செழியன் எடுத்த பறவைத்தாகம் தணிக்க கோரும் குறும்படத்தைக் காணுங்கள்: http://www.kathirvalaipoo.blogspot.in/2013/04/blog-post_29.html

காலச்சக்கரம் – திரையிசைப்பாடல்கள்

kamal

மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச் ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டாக்டர் நரசிம்மன்(C.O.P.D) க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதயநோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ளக் குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்.

இந்தக் கூட்டத்தில் புகைப்பதைக் கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட் – ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.

சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு பிரபந்தம் சொல்லிக் கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு சங்கு சக்கரம் போல் அந்தக் கையில் ஒன்று, அந்தக் கையில் பனாமா பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயர் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.

இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டுப் பேசிக்கொண்டே வார்த்தை வார்த்தையாக புகை வெளியிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தைக் கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.

என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி.ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும் போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம் போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்துக் காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்துச் சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வப்போது சே என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சிலசமயம் பிப்ரவரி வரை நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதிவரை.

பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் ‘ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்’ என்றார்.

‘ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை’ என்றார்.

‘எப்போதிலிருந்து விட வேண்டும்?’ என்று கேட்டதற்கு நேற்றிலிருந்து’ என்றார். ‘கைவிடாவிட்டால் என்ன ஆகும்?’ என்றேன். ஹார்ட் அட்டாக்… லங் கேன்சர்.. யு சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?’

இந்த முறை பயம் வந்துவிட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தோதாக தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும் ‘நான் சிகரெட்டை நிறுத்திவிட்டேன்’ என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன். சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை… சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும். இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது. முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம்… சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்குப் பதிலாக பாக்கு, பான்பராக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. வேறு எதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தம்மானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு ‘யார் தெச்ச சட்டை.. எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்ச சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை’ என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால் ‘ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்’ என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம்.(கண் ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப் படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்… சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்… இப்படி! மெள்ள மெள்ள நண்பர்களிடம் மனைவியிடமும் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம்… போஸ்டர்கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டிவிட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்றவைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘சீ நாயே’ என்று சொல்ல முடிந்து, அழுகை வராவிட்டால் பரீட்சை பாஸ். இனியெல்லாம் சுகமே. சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன். அதாவது சிகரெட்டை நிறுத்தின அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்குப் போய்விடூவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டி விட்டால் பழக்கம் போய்விடுகிறது.

இப்போதெல்லாம் அமெரிக்காவில் சிகரெட்டை நிறுத்த பலவிதமான patch டம்மி சிகரெட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்தியாவிலும் கிடைக்கலாம். எல்லாவற்றிலும் சிறந்தது லங் கேன்சர் பயம்தான். 90 விழுக்காடு சிகரெட் குடிப்பதால் இது வருகிறது. வகுத்துப் பார்த்தால் இன்றைய தினம் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வருஷத்துக்கு 130 சிகரெட் குடிக்கிறார் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. சுமார் ஐந்து கோடி மக்கள். பெரும்பாலும் ஆண்கள் புகைபிடிக்கிறார்கள். 50 லட்சம் பேர் அதைக் கைவிட்டிருக்கலாம். அந்நியச் செலாவணி நிறைய சம்பாதிக்கிறது. நம் மக்கள் தொலையில் ஐந்து விழுக்காடாவது இந்த வியாதியின் அபாயத்தில் இருக்கிறார்கள். இதனுடன் சேர்ந்து புகையிலை சார்ந்த வாய், நாக்கு, தொண்டை, உணவுக்குழல் கேன்சர்கள்… கிட்னிகாரானரி ஆர்ட்டரிகளைப் பாதிக்கும் வியாதிகளுக்குக் கணக்கில்லை. இதை அறிந்து கொண்டால் பாட்ச் தேவையில்லை.

பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!

நன்றி : சுஜாதா – கற்றதும் பெற்றதும் – ஆனந்தவிகடன் (29.12.2002)

பிப்ரவரி 27 சுஜாதா நினைவு நாள்

பள்ளிநாட்களில் ஒருமுறை தாத்தா வாங்கி வைத்திருந்த பீடியை ஒருமுறை பற்ற வைத்து இழுத்துப் பார்த்தேன். பிறகு தொழில்நுட்பவியல் படிப்பின் இறுதிநாளன்று நண்பனுக்காக சிகரெட்டை இரண்டு இழு இழுத்தேன். இந்த இரண்டுமுறை தவிர வேறெந்த நாளும் புகைபிடித்ததில்லை. பீடி, சிகரெட் என்னை இன்றுவரை ஈர்க்கவில்லை. நீங்கள் புகைப்பவராக இருந்தால் சிகரெட்டை நிறுத்த இந்தப் பதிவு உதவினால் ரொம்ப மகிழ்ச்சி.

நினைவில் காடுள்ள மிருகத்தை

எளிதாகப் பழக்க முடியாது.  

என் நினைவில்

காடுகள் இருக்கின்றன!

– சச்சிதானந்தன்

2012ல் உலகம் அழிந்துவிடும் என்ற பெரும் வதந்தியில் தொடங்கிய இந்த வருடம் எனக்கு நன்றாகவே அமைந்தது. கொண்டாட்டமான நிகழ்வுகள், மறக்கமுடியாத பயணங்கள், வாசிக்க நல்ல புத்தகங்கள் என பகிர்ந்து கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளன. நாம் ஏன் காயங்களையும், கசடுகளையும் சுமந்து கொண்டு அலைய வேண்டும்?. கம்பாநதியில் வண்ணநிலவன் சொன்ன வரிகள் ஞாபகம் வருகிறது.

நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது. எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன.               

– வண்ணநிலவன்

விகடன் தந்த பரிசு

vikatan

ஆனந்தவிகடன் வரவேற்பறையில் இத்தளம் குறித்த அறிமுகம் வந்தது என்னை பெருமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதுவும் இந்த ஆண்டின்  முதல் இதழாக வந்த விகடனில் எனும்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மதுரேய்.. எனத் தலைப்பிட்டு மதுரை மீது தீராக்காதல் கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள் என விகடனில் வந்த வரிகள், பாடத்திட்டத்தில் மனப்பாடம் செய்து படித்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை விட பொக்கிஷம். என் விகடன் வலையோசைப் பகுதியிலும் மே மாதம் வந்தது மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

வாசிப்புத் திருவிழா

thiruparankunram

ஒவ்வொரு வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டே தொடங்குவேன். இந்தாண்டு மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ வாசித்தேன். ஜெயமோகனின் ‘காடு’, போதிசத்வமைத்ரேயின் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’, பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, யுவன்சந்திரசேகரின் ‘மணற்கேணி’, நாஞ்சில்நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘சூடிய பூ சூடற்க’, ‘கான்சாகிப்’, வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பான தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’, கடிதத் தொகுப்பான ‘சில இறகுகள் சில பறவைகள்’, மா.கிருஷ்ணனின் ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ இசையின் ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ என கொஞ்ச புத்தகங்கள்தான் வாசிக்க முடிந்தது. சங்க இலக்கிய பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான ந.முருகேசபாண்டியனின் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ மற்றும் ஜோ.டி.குருஸூன் ‘கொற்கை’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பசுமைநடை

greenwalk

நினைத்துப்பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. பசுமைநடை குழுவுடன் இணைந்து பயணிக்க தொடங்கியபின் இந்தாண்டு மதுரையிலுள்ள தொன்மையான இடங்களான யானைமலை, சமணமலை, விக்கிரமங்கலம், மாடக்குளம் கண்மாய், கபாலிமலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை பெயர் பொறித்த தமிழ்பிராமிக்கல்வெட்டுள்ள அழகர்மலை கிடாரிப்பட்டி குன்று, அணைப்பட்டி சித்தர்மலையோடு மதுரைக்கு வெளியேயும் கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம், கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், திருமெய்யம் என புதுக்கோட்டை வரை நீள்கிறது பசுமைநடை. தனியே இவ்வளவு இடங்களுக்கு பயணித்திருக்க முடியுமா என்றால் சந்தேகந்தான். இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேலும், பசுமைநடை மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றதில் பெருமகிழ்வடைகிறேன்.

kadalநெய்தல் சுவடுகள்

திருச்செந்தூர்க் கடலில் நீராடும் வாய்ப்பு இந்தாண்டு இருமுறை கிட்டியது.

நவம்பர்மாத மழைக்கால மாலையொன்றில் சென்னை மெரீனா கடற்கரையில் நீலவானையும், நீண்ட கடலையும் பார்த்துக் கொண்டே நின்றது நினைவில் நிற்கிறது.

அடுத்தாண்டு கொற்கை துறைமுகத்தை போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் துளிர்த்துள்ளது.

அடுத்த ஆண்டு மலைகளோடு கடலையும் நோக்கி பயணிக்க வேண்டும்.

இயற்கை அருளட்டும்.

மதுரையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம்

vishwaroopam

இளமையிலிருந்தே கமல்ஹாசனின் மீதான அன்பு அதிகம். சமீபத்தில் மதுரையில் விஸ்வரூபம் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் வருவதாய் அறிந்ததும் அன்று விடுப்பெடுத்து அவரைக் காணக் கிளம்பினேன். நானும், சகோதரனும் சென்றோம். அந்தத் திடலில் நுழைந்ததும் ஒரே கொண்டாட்டமாகியது. மூத்த இரசிகர்களின் ஆட்டம் என்னை மேலும் உற்சாகமாக்கியது. அரங்கிற்குள் கமல்ஹாசன் வரும்போது அருகில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை எழுத்தில் சொல்லிவிட முடியாது. கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே’ பாடலை சங்கர் மகாதேவனோடு இணைந்து மிக அற்புதமாக பாடினார். மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருந்தேன். தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவரின் விஸ்வரூபம் 2013ல் வெற்றி வாகை சூடும்.

http://www.youtube.com/watch?v=C8IjeOdpAng

சித்திரக்காரன்

madurai

மதுரையை சித்திரமாகப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அடுத்தாண்டு சித்திரவீதிக்காரனின் ‘சித்திர’வதைகள் அதிகரிக்கும். சித்திரவீதியில் வந்து தடம் பதித்து சென்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கம்போல இந்தாண்டும் முறையான திட்டமிடலில்லாமல் காலத்தை நிறைய வீணடித்துவிட்டேன். அடுத்தாண்டு அவைகளை நீக்கி இன்னும் கொஞ்சம் வாழ்க்கையை கொண்டாட மதுரையும், தமிழும் அருளட்டும்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல                                  

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்                         

வாடித் துன்பமிக உழன்று – பிறர்                                     

வாடப் பலசெயல்கள் செய்து – நரை                                

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்                             

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல                        

வேடிக்கை மனிதரைப் போலே – நான்                                 

வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி                            

என்னைப் புதிய உயிராக்கி – எனக்                                     

கேதுங் கவலையறச் செய்து – மதி                                 

தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்                               

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய அலைபேசியின் அழையோசையே இந்தக்கவிதைதான். கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். அவரது திரைப்படங்கள், பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்!                               

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்!

எனக்கு பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜனைப் பிடிக்கும். இசைஞானி இளையராஜாவும், கலைஞானி கமல்ஹாசனும் பாடிய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் படிக்கையில் பாட்டுப்புத்தகம் வாங்கி வைத்து படிப்பது வழக்கம்.  பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஆளவந்தான் பாட்டு புத்தகம் வைத்து படித்துக் கொண்டிருந்தோம். அதைப்பார்த்த ஆசிரியை பாட்டுப்புத்தகத்தை வாங்கி கிழித்துப்போட்டு விட்டார். மனப்பாடப்பகுதி பாடல்களைவிட ஆளவந்தான் பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம் என்று அவங்களுக்கு தெரியாது.

கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்!

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியா கவிதை நான்!

கமல்ஹாசனின் குரலின் மீது எனக்கு தனி ஈர்ப்பு உள்ளது. மனதிற்கு மிகவும் நெருக்கமான காந்தக்குரல். கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எல்லாமே தனித்துவமானவை. கமல்ஹாசன் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களை தொகுத்துள்ளேன்.

  1. நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்
  2. நரிக்கதை – மூன்றாம் பிறை
  3. விக்ரம், விக்ரம் – விக்ரம்
  4. கண்ணே தொட்டுக்கவா – விக்ரம்
  5. அம்மம்மா வந்ததிங்கு – பேர் சொல்லும் பிள்ளை
  6. தென்பாண்டிச்சீமையிலே – நாயகன்
  7. போட்டா மடியுது – சத்யா
  8. ராஜா கையவச்சா – அபூர்வ சகோதரர்கள்
  9. சுந்தரி நீயும் – மைக்கேல் மதன காமராஜன்
  10. கண்மனி அன்போடு – குணா
  11. போட்டுவைத்த காதல் திட்டம் – சிங்காரவேலன்
  12. சொன்னபடிகேளு – சிங்காரவேலன்
  13. சாந்துப்பொட்டு – தேவர்மகன்
  14. இஞ்சி இடுப்பழகி – தேவர்மகன்
  15. கொக்கரக்கோ – கலைஞன்
  16. தன்மானம் உள்ள நெஞ்சம் – மகாநதி
  17. எங்கேயோ – மகாநதி
  18. பேய்களை நம்பாத – மகாநதி
  19. எதிலேயும் வல்லவன்டா – நம்மவர்
  20. ருக்கு ருக்கு – அவ்வை சண்முகி
  21. காசுமேலே காசுவந்து – காதலா காதலா
  22. மெடோனா மாடலா நீ – காதலா காதலா
  23. ராம்…ராம்… – ஹேராம்
  24. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி – ஹேராம்
  25. ராமரானாலும் பாபரானாலும் – ஹேராம்
  26. கடவுள்பாதி மிருகம்பாதி – ஆளவந்தான்
  27. சிரி…சிரி…சிரி – ஆளவந்தான்
  28. ஆழங்கட்டி மழை – தெனாலி
  29. இஞ்சிருங்கோ – தெனாலி
  30. கந்தசாமி மாடசாமி – பம்மல் கே சம்மந்தம்
  31. ஏண்டி சூடாமணி – பம்மல் கே சம்மந்தம்
  32. வந்தேன் வந்தேன் – பஞ்சதந்திரம்
  33. காதல்பிரியாமல் – பஞ்சதந்திரம்
  34. ஏலே மச்சி மச்சி – அன்பே சிவம்
  35. யார்யார் சிவம் – அன்பே சிவம்
  36. நாட்டுக்கொரு சேதி சொல்ல – அன்பே சிவம்
  37. உன்னவிட இந்த உலகத்தில் – விருமாண்டி
  38. மாடவிளக்க – விருமாண்டி
  39. கொம்புலபூவசுத்தி – விருமாண்டி
  40. அன்னலட்சுமி – விருமாண்டி
  41. பாண்டி மலையாளம் – விருமாண்டி
  42. ஆழ்வார்பேட்டை ஆளுடா – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  43. கலக்கப்போவது யாரு – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  44. ஏலேய் நீ எட்டிப்போ – மும்பை எக்ஸ்பிரஸ்
  45. குரங்கு கையில் மாலை – மும்பை எக்ஸ்பிரஸ்
  46. ஓஹோசனம் ஓஹோசனம் – தசாவதாரம்
  47. அல்லா ஜானே – உன்னைப்போல் ஒருவன்
  48. தகிடுதத்தம் – மன்மதன் அம்பு
  49. கண்ணோடு கண்ணை – மன்மதன் அம்பு
  50. நீலவானம் – மன்மதன் அம்பு

இந்த 50 பாடல்களையும் பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. சில பாடல்களை கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பாடியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையிலும், முண்ணனி பாடகர் – பாடகிகளோடும் இணைந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கமல்ஹாசன் சிறந்த பாடகர் என்று இசையாளுமைகள் பலரும் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.

அன்று சொன்னான் பாரதி

சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

எந்தன் எண்ணம் என்றைக்கும்

தோல்வி என்பதை ஏற்றதில்லையடி!

மகாகவி பாரதியாரின் வசனகவிதை மேல் கமல்ஹாசனுக்கு காதல் அதிகமென நினைக்கிறேன். கமலின் நிறையப் பாடல்களில் வசனநடையைக் காணலாம். வசனநடையில் வந்த பாடல்களை எல்லாம் படிக்கும்போதே மனதில் உற்சாகம் பிறக்கும். கமல்ஹாசனின் பாடல்களுக்கிடையே உரையாடல்களும் அதிகம் வரும். சென்னைவட்டார வழக்கில் ‘ராஜா கையவச்சா, காசுமேலே, ஆழ்வார்பேட்டை ஆளுடா’ போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை!

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!  

ஓடிஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை!

அன்பேசிவம் படத்தில் ‘நாட்டுக்கொரு சேதி சொல்ல’ பாடலில் வரும் ‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற வரிகளை அலைபேசியில் எனது குரலில் பதிந்து அழையோசையாக வைத்திருந்தேன். நிறையப்பேர் அது கமல்ஹாசனின் குரல் என்றெண்ணியதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. கமல்ஹாசன் பிற நடிகர்களுக்காக பாடிய பாடல்களும் சிறப்பானவை. அஜித்திற்காக உல்லாசம் படத்தில் ‘முத்தே முத்தம்மா’, தனுஷின் புதுப்பேட்டை படத்தில் ‘நெருப்புவாயினில்’ பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

துடிக்குது புஜம்!   ஜெயிப்பது நிஜம்!

விரைவில் விஸ்வரூபம் படப்பாடல்கள் மதுரையிலிருந்து முதலில் ஒலிக்கப் போகிறது. கமல்ஹாசன் நம்ம வைகைகரையைச் சேர்ந்தவர் எனும்போது பெருமையாய் இருக்கிறது. நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!

அபூர்வசகோதரர் கமல்ஹாசன்

நன்றிவிகடன்.காம்