Archive for the ‘வழியெங்கும் புத்தகங்கள்’ Category

திரைப்படப்பாடல்களை ஒரு காலச்சக்கரம், அருமருந்து, உணர்வூட்டி எனப் பலவாறு சொல்லலாம். அப்படி ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு ரசித்து அதை சிலாகித்து மானசீகன் எழுதிய கட்டுரைகளே இசை சூஃபி நூல். முகநூலில் மானசீகன் ரஹ்மான் பாடல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோதே இந்நூலை வாங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழினியில் வாங்க முடிந்தது.

மானசீகன் ஒரு பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர். அதோடு சுவாரசியமான எழுதுபவர். ரஹ்மான் ரசிகர் என்பதோடு அவர் கமல் ரசிகரும்கூட. அவரது எழுத்துக்களை முகநூலில் விரும்பிவாசிப்பேன். உளவியல் ரீதியாக எளிமையாக நிறைய விசயங்களை எழுதுவார்.

இசையில் ரஹ்மானின் பரிசோதனை முயற்சிகள், பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம், புல்லாங்குழல், தப்ஸ் அல்லது தாயிரா போன்ற கருவிகளை பாடல்களில் பயன்படுத்திய விதம், புதிய பாடகர்களை அறிமுகம் செய்தது எனப் பல விசயங்களை இக்கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறார். “ரஹ்மானின் பாடல்களை கேட்கக் கேட்க பிடிக்கும் என்பது பொய்; கேட்ட உடனேயே பிடிக்கும்; கேட்க கேட்க புரியும்; இதுவே உண்மை” என்கிறார் மானசீகன்.

இந்தியன், பம்பாய், முத்து, காதல் தேசம், இந்திரா, மெட்ராஸ் போன்ற படங்களிலுள்ள பெரும்பாலான பாடல்களைக் குறித்து எழுதியிருக்கிறார். உயிரே படப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லையே என்றொரு வருத்தமும் உள்ளது. ரஹ்மான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை உயிரே படப்பாடல்கள்தான்.

ஊரடங்கு காலத்தில் இரண்டு பாடல்களைத்தான் பலமுறை கேட்டேன். ஒன்று மரியான் படத்திலுள்ள “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?” என்ற ரஹ்மான் இசையில் வந்த பாடலும், மற்றொன்று விஸ்வாசம் படத்திலுள்ள “வானே வானே” என்ற இமான் இசையில் வந்த பாடலும்தான். இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களே மேடையில் பாடியதைப் பலமுறைப் பார்த்தேன். பம்பரம் சுழலும்போது “ரொங்குது பார்” எனச் சொல்வார்கள். அப்படித்தான் இந்தப் பாடல்கள் என்னை ரொங்க வைத்தன.

மானசீகனின் எழுத்துக்களில் நமக்குப் பிடித்த பாடல்கள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது அந்தப் படங்களைப் பார்த்த நாட்களுக்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. மாயா மச்சீந்தரா பாடலை பற்றி வாசிக்கையில் கைகளும் கால்களும் “டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ” என மெல்ல அசைந்தன. கண்ணாளனே பற்றி வாசிக்கும்போது திருமலை மன்னர் அரண்மனையில் நானும் ஓரிடத்தில் நின்று அந்தப் பாடலைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

அஞ்சலி அஞ்சலி என்ற டூயட் பாடலில் பிரபு கதாநாயகி வந்ததும் சாக்சபோனை வாசிக்கும்போது அந்த இசையும் அவரது முகபாவனைகளும் மிகவும் பிடிக்கும். அந்த நினைவுகளைக் கிளறியது மானசீகனின் எழுத்து. முத்து படத்தில் ரஜினிக்கு இசையமைத்தது, சுகாசினி எடுத்த இந்திரா படத்திற்கு இசையமைத்தது, கதிரின் காதல் தேசம் படத்திற்கு இசையமைத்தது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ரஹ்மானின் இசை படத்திற்கு எவ்வளவு உயிர் கொடுத்திருக்கிறது என்பதை அக்கட்டுரைகளை வாசிக்கையில் அறியலாம். இந்த நூலை வாசித்ததும் ஒரு நாட்குறிப்பேட்டில் எனக்குப் பிடித்த பாடல்களைக் குறித்து விரிவாக எழுதிவைக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.

யுவன் சந்திரசேகரின் சிறுகதைத் தொகுப்பான ஏமாறும் கலையை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இந்தாண்டு (2024) தொடக்கமாக வாசிக்க எடுத்தேன். கதைகதையாம் காரணமாம் தொடங்கி மூன்று கதைகள் வாசித்தேன். அவரின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டு விடுமுறை நாட்களில் நூலகம் சென்று ஏமாறும் கலை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் வாசித்தேன்.

யுவன் சந்திரசேகர் தன் கதையுலகிற்குள் வாசிப்பவரையும் அழைத்துச் செல்கிறார். அவர் கரட்டுப்பட்டியில் கதை நடக்கிறது என்றால் நாம் கரட்டுப்பட்டி தெருவில் நிற்கிறோம், வங்கியில் நடப்பதுபோல எழுதினால் நாம் பணமெடுப்பவராய் வரிசையில் நிற்கிறோம், இந்துஸ்தானி இசையை மையம் கொண்ட கதையென்றால் நாமும் பின்வரிசையில் நின்று புல்லாங்குழலிசை கேட்கிறோம். அவர் ஒரு கதையில் ஒரு கதையை மட்டும் சொல்வதில்லை. பல கதைகளைச் சொல்கிறார். மேலும், அந்தக் கதையில் வரும் எல்லோரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார். சில கதாபாத்திரங்களை நாமும் வழியில் சந்தித்திருப்போம்.

யுவன் சந்திரசேகர் கதை சொல்வதைப்போல எங்கப்பா என்னிடம் கதை சொல்லியிருக்கிறார். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும் மதுரையிலிருந்து புறப்பட்டு போய் திரும்பிவந்தது வரை கதையாய் என்னிடம் சொல்லிய நாட்கள் நினைவில் எழுகிறது. எத்தனையெத்தனை மனிதர்கள். ஏமாறும் கதை தொகுப்பிலுள்ள 12 கதைகளும் ஏதோ ஒருவகையில் யாரோ ஒருவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. சில கதையில் வரும் முக்கிய மாந்தர்களின் மரணமோ, தற்கொலையோ அது நம்மையும் உலுக்கி எடுக்கிறது.

ஒருவர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தபின் தெரியாததுபோல் நாமும் நடிப்பதுதான் ஏமாறும் கலை. வங்கிக்கு பணமெடுக்க வரும் பெண் ஒருவர் தன் கணவரின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது; அவரால் நடக்க முடியாதெனப் பொய் சொல்லி ஒவ்வொருமுறையும் வந்ததும் பணமெடுத்து சென்றுவிடுவார். பின்னாளில் ஒரு விசேச வீட்டில் அப்பெண் அவள் கணவனுடன் சேர்ந்து நிற்பதை பார்த்து நொந்துவிடுவார் கதைசொல்லி. உடன் பணியாற்றுபவர் அதைத் தெரியாததுபோல் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். அதுதான் ஏமாறும் கலை.

ஊரில் இறந்தவர் குரலில் குறிசொல்லும் பெண்ணின் கதையை வாசிக்கையில் எங்க ஊரில் முன்பு இறந்தவர்கள் பேய் பிடித்ததாகச் சொல்லி அவர்களைப் போல் பேசிய கதைகளை நிறைய கேட்டிருக்கிறேன். மனம்புகுதல் என்ற கதை இதைப்பற்றி பேசுகிறது. கரட்டுப்பட்டியில் நடக்கும் இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள் முப்பது வயதிற்கு மேலானவராய் இருந்தால் இதுபோன்றதொரு கதை உங்களிடமும் இருக்கும்.

ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் காதலை அறிந்த குடும்பம் அவளது சோற்றில் விசம் வைத்துக் கொள்கிறது. ஆணவக்கொலையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் பானு பன்னீர்செல்வம் மீது கொண்ட காதலால் இறந்துபோகிறாள். முடிவற்று நீளும் கோடை எனும் இக்கதை மறக்க முடியாத ஒரு தம்பியின் பார்வையில் நகர்கிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் கால்போன போக்கில் பயணிப்பவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும். தங்கையா என்ற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த கதைகளும் மூன்று முத்தங்களும்தான் மூன்றாவது முத்தம் கதை. ரயில்வே போர்ட்டராக தங்கையா இருக்கையில் என்ஜின் டிரைவராக வரும் லால் சொல்லும் கதை சுவாரசியம்.

தன்னோடு வங்கியில் உடன் பணியாற்றிய ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஐரீனிடம் தன் தாய் பற்றி பகிர்ந்து கொள்ளும் கதை தாய்மை யாதெனில். மகனுக்காக வாழும் அம்மா பக்கத்துவீட்டில் திருமணமாகி சண்டையிட்டு வந்த ஜம்னாவுடன் பேசும் மகனின் மீது சந்தேகம் கொள்வது அவளது அன்பென்கிறது கதை.

ஒவ்வொரு கதையாய் கதையில் வரும் மாந்தர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்தத் தொகுப்பை நீங்கள் வாசிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறுதான் இல்லையா? கவிஞர் சுகுமாரன் யுவனின் கதைகள் குறித்து சொல்லும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன். “தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப்பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதிநவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. யுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்லை. கதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார்.”

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்; நன்றி – கலைஞர் நூற்றாண்டு நூலகம்

முன்பு ஆடு-மாடு என்ற வலைப்பக்கத்தை விரும்பி வாசிப்பேன். ஏக்நாத் எழுதும் கதைகள் அவரது கிராமத்திற்கே நம்மையும் அழைத்துச் சென்றுவிடும். அவர் சென்னையில் வசித்துவந்தாலும் தன்னுடைய கிராமத்தை, ஆடு மாடு கிடையை, வயல்வெளிகளை தன்னோடு சுமந்தபடியேயிருக்கிறார்.

வேசடை என ஏக்நாத் எழுதிய குறுநாவலை வாசித்தேன். பனஞ்சாடி என்ற மனிதரின் வழியே மந்தையூரின் கதையை எழுதியிருக்கிறார். வேசடை என்றால் நெல்லை வழக்கில் எரிச்சல், தொல்லை என்ற பொருளில் சொல்லப்படுகிறது. பட்டா கிடைக்காமல் அலைபவரின் எரிச்சல் என்ற பொருளில் இந்நாவலின் தலைப்பை வேசடை என வைத்திருக்கிறார்.

பனஞ்சாடி என்ற பெரியவர் தன் வீட்டிற்கு பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்திற்கு அலைகிறார் அலைகிறார் அலைந்து கொண்டேயிருக்கிறார். மனுவை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்த மாதம், அதற்கடுத்த மாதம் என அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பணம் கொடுத்து வாங்கக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் பனஞ்சாடி. பின் பட்டா வாங்குவது லேசுப்பட்ட காரியமா?

பனஞ்சாடியின் இயற்பெயர் சங்கரலிங்கம். ஆனால், அந்தப் பெயர் அவருக்கே நினைவிலில்லை. அவருடைய தாத்தா பனஞ்சாடி என்ற கிராமத்திலிருந்து மனைவியின் ஊரில் வந்து தங்கிவிடுகிறார். அதனால் அந்த ஊர்க்காரர் என்ற பெயரில் பனஞ்சாடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள் அந்த வீட்டு ஆண்கள். எங்க ஊரிலும் பலரை அவர்கள் மனமுடித்துவந்த ஊர்ப்பெயரால் அழைக்கப்படுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

பனஞ்சாடி ஆடு மேய்ப்பவராக இருந்திருக்கிறார். ஆனால், அவரது மகனோ வீடுகட்டும் வேலையைப் பழகி கொத்தனாராகிவிடுகிறான். பனஞ்சாடியின் மகள் வழிப்பேரன் குத்தாலம் மாடு மேய்க்கிறான். அதனால் அவனுக்கு பொண்ணு கிடைப்பது குதிரைக் கொம்பாகயிருக்கிறது. பனஞ்சாடியின் மனைவி லட்சுமியாட்சிக்கு மருமகள் மேல் ஏகப்பட்ட பிராது இருக்கிறது. மாடியில் வந்து பனஞ்சாடியிடம் அவளை குறித்து குறைகூறிக்கொண்டேயிருக்கிறாள்.

இருமினாலும் பீடியைக் குடித்து இதம் காணும் பனஞ்சாடி. தன் ஊரில் மந்தையில் வீடுகள் வந்த கதையை நினைத்துப் பார்க்கிறார். ஆடுமாடுகளை கட்டிய இடங்கள் இன்று வீடுகளாகிவிட்டன. அதேபோல அவர் ஊரிலுள்ள பெரிய வீட்டின் கதையை தெரிந்தவர்கள் ஓரிருவரே. அந்த வீட்டில் பீடிக்கடை வைத்திருக்கும் பாய்க்கும் அந்தக் கதை தெரியாது. அந்த வீட்டின் கதை தெரிந்தவர்களில் பனஞ்சாடியும் ஒருவர். ஆட்டுக்கான கூடு செய்வதிலும் பனஞ்சாடி வல்லவர்.

பனஞ்சாடியின் நண்பர்களான அம்மாசி, ராமசாமி, கந்தன் வழியாகவும் கதையை சொல்கிறார். அம்மாசி அறுவடைக்காலத்தில் களத்திற்கருகில் கடை போட்டிருப்பார். மொச்சை, கடுங்காப்பி என அவரிடம் கொத்துக்காரர்கள் வாங்கி சாப்பிட்டு கூலிபோட்டதும் நெல்லாக கொடுத்துவிடுவார்கள். இந்தக் கதைகளை வாசிக்கையில் சிறுவயதில் பார்த்த அறுவடைக்கால நினைவுகள் மேலெழுந்தன. பனஞ்சாடிக்கும் சுடலிக்குமான காதல் அத்தியாயம் அருமை. பனஞ்சாடி பட்டா வாங்குவது, தன் மகள் வயிற்று பேரன் குத்தாலத்திற்கு திருமணம் முடிப்பது போன்ற செயல்களை நிறைவேற்றியதோடு இயற்கை எய்திவிடுகிறார்.

பனஞ்சாடியுடன் மாடு மேய்ப்பவரின் முன்னோர் ஒருவர் வயலில் மேயும் மாட்டை பத்திவிட அரிவாளை வீச அது மாட்டின் நாக்கை துண்டித்துவிடுகிறது. பின்னாளில் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் வாய்பேசாமல் ஆகிவிடுகிறார்கள். இதேபோல ஒரு கதையை என்னுடைய பள்ளி ஆசிரியர் பத்தாம் வகுப்பு படிக்கையில் சொல்லியிருக்கிறார். மாட்டை உயிரோடு தோலை உரித்த குடும்பத்தின் பிள்ளைகளின் கால்கள் மாட்டின் கால்களைப் போல ஆனதாக சொன்னார்.

கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பெரிய வீடுகள் பின்னாலுள்ள கதை, மூத்தவர்களுக்கும் ஊருக்குமான பிணைப்பு, காலம் மாறமாற அதன் அடையாளங்களை இழத்தல் எனப் பல விசயங்களை வேசடை நினைவூட்டுகிறது. இந்த நாவலை வாசிக்கையில் பனஞ்சாடியின் முகமாக மறைந்த ’பூ ராமு’ அவர்களின் முகமே நினைவிலிருந்தது.

நூறு பக்கங்களான இந்தக் குறுநாவலை வாசித்தபோது மந்தையூர் கிராமத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் ஏக்நாத். இவரது ஆடுமாடுகாடு, கெடைகாடு, ஆங்காரம் நூல்களை வாசிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தேசிய நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் அவர்களின் பெயரில் மாவட்ட அளவில் சிறந்த நூலகருக்கான விருதும், சிறந்த வாசகர் வட்டத் தலைவருக்கான நூலக ஆர்வலர் விருதும் வழங்கிவருகிறது. இந்தாண்டு தல்லாகுளம் நூலகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வாசகர் வட்டத் தலைவருக்கான “நூலக ஆர்வலர் விருது” எனக்கு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை வழங்கிய தல்லாகுளம் நூலகர் திரு. கி. ஆறுமுகம் அவர்களுக்கும், மாவட்ட நூலக அலுவலர் அவர்களுக்கும் நன்றிகள் பல.

சென்னையில் நடைபெற்று வந்த விருது வழங்கும் விழா இந்தாண்டு எஸ். ஆர். அரங்கநாதன் அவர்கள் பிறந்த சீர்காழியிலேயே நடைபெற்றது. அதற்காக மகிழ்வுந்தில் அதிகாலை மதுரையில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சீர்காழிக்கு சென்றோம். எங்களுடன் தல்லாகுளம் நூலகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்துதந்த புரவலர் இராமசந்திரக்குமார் (குமார் மெஸ் உரிமையாளர்) அவர்களும், பேராசிரியர் பாலகிருஷ்ணன், முருகேசன் அவர்களும் வந்தனர்.

விருது வழங்கும் நிகழ்விற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்களும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களும், அந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் வந்திருந்தனர். நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் இந்த விழாவை ஒருங்கிணைத்தார். விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தல்லாகுளம் நூலகத்தின் வாசகர் வட்டம் வாயிலாக பல்வேறு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் சுப்பாராவ், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார், பேரா.பாலகிருஷ்ணன், கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன், வழக்கறிஞர் கா.பிரபுராஜதுரை, வழக்கறிஞர் பெ.கனகவேல், வழக்கறிஞர் ஜெயமோகன், மருத்துவர் ராஜன்னா, எழுத்தாளர் சு. ரகுநாத், லயன் முத்துக்கிருஷ்ணன், ராஜ்குமார், இளங்கோ, ஜோதியம்மாள், கார்த்திக், ஜெயராமன், செல்வி. நிவேதா போன்ற பலரும் வாசகர் வட்டக் கூட்டங்களின் போது வந்து உரையாற்றியிருக்கிறார்கள்.

தல்லாகுளம் நூலகரான ஆறுமுகம் அவர்களின் ஒத்துழைப்பில் இந்த வாசகர் வட்ட நிகழ்வுகள் சாத்தியமானது. நூலகத்திற்கு போட்டித் தேர்வு மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி.

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் ஆகியோரது படங்களையும், புத்தகம் குறித்த ஓவியங்களையும் நூலகச்சுவரில் வரைந்த ஓவியர் ராகேஷ் அவர்களுக்கும் இக்கணத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

உலக புத்தக தினவிழா, தேசிய நூலக வாரவிழா, தூங்காநகர நினைவுகள் நூலுக்கான நிகழ்ச்சி, கி.ரா.வைக் கொண்டாடுவோம், தொ.ப. பிறந்தநாள் விழா போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம்.

தொ.ப.வின் பிறந்த நாளையொட்டி அறியப்படாத தமிழகம் நூலை அனைவருக்கும் வழங்க உதவிய சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கு நன்றி. பதாகைகளை வடிவமைத்துக் கொடுத்த ஹக்கீமுக்கு நன்றி.

2024இல் மாதம் ஒரு நிகழ்வு எனத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான முயற்சிகளைச் செய்ய உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

மீனாட்சியம்மன் திருக்கல்யாண விழாவில் தொடங்கி அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு நிறைவடைகிறது எம்.ஏ.சுசீலா அவர்களின் தடங்கள் நாவல். தொடக்கமும் முடிவும் கொண்டாட்டமாக அமைந்தாலும் வாழ்வு எவ்வாறு இருக்கிறது என்பதை சொல்கிறது கதை. எம்.ஏ.சுசீலா தஸ்தாயெவெஸ்கியின் முக்கியமான நாவல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர். ஏராளமான சிறுகதைகள் எழுதியவர்.

நாவல் முழுவதும் ஏராளமான பெண் கதாமாந்தர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் சிக்கல்கள், தடங்கல்கள் அவற்றைத்தாண்டி தடம்பதித்த பெண்கள் என பலரது கதைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியை தம் தோழியோடு மின்னஞ்சல் வழியாக தான் சந்தித்த பல பெண்களின் வாழ்க்கை கதைகளைப் பகிர்ந்து கொள்வதுதான் கதைக்களம். நாவலை வாசிக்கையில் நாம் அறிந்த பலரது கதைகளை நினைவூட்டினாலும் கதை சொல்லும் விதத்தில் தனது பார்வையையும் சேர்த்தே எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர். கதாமாந்தர்களின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவர்களுக்கான பிரச்சனை பொதுவாகத்தான் இருக்கிறது. குடும்பம், திருமணம், பணிச்சூழல், சமூகம் என பல தளங்களில் பெண்கள் இயங்கினாலும் அவர்கள் வாழ்வில் மையம் கொண்டுள்ள விசயங்களை நாவல் பேசுகிறது.

கணவனின் சந்தேக குணத்தால் கஷ்டப்படும் பெண், கணவனின் பேராசையால் மரணமடைந்த பெண், கணவனின் பதவியாசைக்காக குடும்பவாழ்க்கையை விட்டுவிலகிய பெண், கட்டாயத்திருமணத்தால் வாழ்க்கையைத் தொலைத்த பெண், விடலைப்பையனின் காதலுக்காக தன்னை மாய்த்துக்கொண்ட பெண், துறவு வாழ்க்கையை உதறி தனித்து வாழ முற்படும் பெண், திருமணம் நின்றுபோனதால் வாழ்வின் மீதான நம்பிக்கையிழந்த பெண், தன் வாசிப்பால் வாழ்வை புரிந்துகொண்ட பெண், திருமணத்தைத்தாண்டி சாதித்த பெண் என கதை முழுக்க பெண்கள்.

தான் விரும்பிய பெண் விபத்தில் கால்களை இழந்தபோதும் அவளை விரும்பி ஏற்றுக்கொண்ட ஆண், தன் மகள்கள், மனைவிக்காக தன்னை மாற்றிக் கொண்ட ஆண் என கதையில் வரும் இரண்டு ஆண்கள் கவனிக்க வைக்கிறார்கள். வெறும் சம்பவங்களாக மட்டும் கதையைச் சொல்லாமல் வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் விதமாக கதையை கொண்டு செல்வது சிறப்பு. பேராசிரியையாகப் பணியாற்றும் பெண்ணுக்கும், வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கும் ஒரே பிரச்சனை சந்தேகம் கொண்ட கணவன். பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்யச் செல்லும் பெண்களுக்கு வழிகாட்டிகளாக வருபவர்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாவல் பேசுகிறது.

கல்லூரியை மையம் கொண்ட கதையென்பதால் கல்லூரியின் அமைப்பு, மாணவிகளின் குணநலன்கள், அங்கு நடைபெறும் பல்வேறு விழாக்கள், குறிப்பாக பொங்கல் விழா, ஆசிரியைகளின் பணிச்சூழல், நாட்டுநலப்பணித்திட்டத்திற்குச் செல்வது, ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எனப் பல விசயங்களை நாவல் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

மதுரையில் நிகழும் கதைக்களம் என்பதால் நாவலை வாசிப்பது மனதிற்கு நெருக்கமாகயிருக்கிறது. மீனாட்சியம்மன் கோவில், மேலமாசிவீதி, டவுன்ஹால்ரோடு, பத்துத்தூண் சந்து, தெப்பக்குளம், குருவிக்காரன்சாலை, பெசண்ட் ரோடு, கன்னடியர் மருந்துக்கடை, கௌரி கங்கா ஹோட்டல், செல்லத்தம்மன் கோவில், காமராஜர் சாலை, கீழக்குயில்குடி சமணமலை என கதாமாந்தர்கள் உலவும் இடங்களில் அலைந்துதிரிவதால் கதைமாந்தர்களை நேரில் பார்த்த உணர்வு. மதுரை மீதான நூலாசிரியரின் நேசம் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது.

தடங்கள் நாவலை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிறது. ஓவியர் ஜீவா மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களோடு கூடிய அழகானதொரு முகப்போவியத்தை வரைந்திருக்கிறார்.

தொ.பரமசிவன் அய்யாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய பேரா. ம. பெ. சீனிவாசன் தாம் எழுதிய ‘பரிபாடல் – திறனுரை’ நூலுக்கு தொ.ப. எழுதிய சிறு குறிப்பினை பற்றிக் குறிப்பிட்டார். சமீபத்தில் ‘பரிபாடல் – திறனுரை’ நூலில் ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்ற வாழ்த்துரையை வாசிக்க முடிந்தது. தொ.ப.வின் நூல்களில் இதுவரை இடம்பெறாத, அவரது கையெழுத்தில் அமைந்த இந்த உரையைப் பகிர்கிறேன்.

முன்னுரையில் ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு:

பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி முடிக்கப்பெற்ற உரை இது. எனினும் இப்போதுதான் வெளி வருகின்றது. ‘பரிபாடல் அறிமுகம்’ என்னும் முகவுரைப் பகுதியைப் படித்துவிட்டு 2010இல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவராய் விளங்கிய பேராசிரியர் அறிஞர் தொ. பரமசிவன் எனக்கொரு பாராட்டுக் குறிப்பினை அனுப்பியிருந்தார். ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்பது அதன் தலைப்பு, அதனைச் சில மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்த போது, ‘நூலினை உடனே வெளியிட்டாக வேண்டும்’ என்ற வேகம் பிறந்தது. கைகொடுத்து உதவினார் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எஸ்.சண்முகம் அவர்கள். அவருக்கு என் நன்றி உரியது.

என்னுடன் நாற்பத்தேழு ஆண்டுக்கால இலக்கியத் தோழமை கொண்டிருந்தவர் அறிஞர் தொ.பரமசிவன். இன்று அவர் நம்மோடு இல்லை. எனினும், ‘எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்’ இளவலை நினைந்து நெகிழ்கிறேன். அவரின் பொன்னான நினைவைப் போற்றுகிறேன்.

தொ..வின் வாழ்த்துரை:

பேரா.ம.பெ. சீனிவாசன் தமிழ் எழுத்துலகில் அறிமுகம் வேண்டாத எழுத்தாளர். ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவராக அவர் ஆக்கித் தந்த நூல்கள் தமிழ் இலக்கிய மாணவர்க்கும் ஆய்வாளர்க்கும் பெருவிருந்தாவன.

பேராசிரியர் இப்பொழுது தமிழ்ச் செவ்விலக்கிய ஆய்வுகளிலும் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார். திருமுருகாற்றுப்படையினைத் தொடர்ந்து இப்பொழுது பரிபாடலுக்கு உரை வரைந்துள்ளார். நம்மைப் பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்.

மாணவர்களின் தேர்வுக்குரிய பதவுரை, பொழிப்புரையாக அன்றி அவருக்கேயுரிய மயக்குகின்ற மொழிநடையில் வரையப்பட்டுள்ளது இந்நூல். பழந்தமிழ் ஆய்வு முன்னோடிகள் கலித்தொகையினைப் ‘பாண்டிநாட்டு இலக்கியம்’ என்றும் பரிபாடலை ‘மதுரை இலக்கியம்’ என்றும் குறிப்பிடுவர். பக்தி இலக்கியத்தின் இசைப் பங்களிப்புக்கும் பரிபாடலே வழிகாட்டி. ஆயினும் இப்பாடல்கள் பாடப்பட்ட முறையினை அறிய இயலாமற் போனது தமிழர்க்குப் பேரிழப்பே.

தொல்காப்பியம் தொடங்கி உரையாசிரியர்கள் வழிவரும் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், பேரா. நா.வா.வின் பரிபாடல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் உள்வாங்கியிருப்பது அவரது வாசிப்புலகத்தின் வீச்சினை நமக்குக் காட்டுகிறது. உரைச் சிறப்புக்குச் சற்றும் குறையாத மிடுக்கோடு அமைந்துள்ளது, பேராசிரியரின் முன்னுரைச் சிறப்பு. இம்முன்னுரையைப் படித்தபோது உ.வே.சா. ஊன்றிய வித்துக்கள் வீண் போகவில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது. மு.அருணாசலம் அவர்களின் தமிழிசை இலக்கண வரலாறு வெளிவந்துள்ள சூழலில் இந்த இசைநூல் உரையும் வெளிவந்திருப்பது சிறப்பு.

பழந்தமிழ் இலக்கியப் பணியில் முன்னடி வைத்திருப்பதாகப் பேராசிரியர் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், அம்முன்னடியே பொன்னடியாக ஒளிர்கிறது. தமிழிலக்கிய ஆய்வாளர்கள் இவரது தடம் பற்றி நடப்பார்களாக. பேராசிரியர்க்குத் தமிழுலகின் சார்பாக நமது நன்றி கலந்த பாராட்டுகள்.

நன்றி : ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

சமணமலை மதுரையில் எனக்கு நெருக்கமான இடம், மிகவும் பிடித்தமான இடம். 14.11.2010இல் நானும் தமிழ்ச்செல்வ அண்ணனும் பசுமை நடை சென்றபோது செட்டிப்பொடவு, பேச்சிப்பள்ளம் எல்லாம் போய் பார்த்தோம். செட்டிப்பொடவில் திருவிழாக்களின் தலைநகரம் முதல்பதிப்பு 2019இல் வெளியானதும், இரண்டாம்பதிப்பு 2022இல் பேச்சிப்பள்ளத்தில் வெளியானதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

இரண்டாண்டுகளுக்குப்பின் சமணமலையில் நடந்த பசுமை நடை நிகழ்வில் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமையன்று இந்நூலை டோக்பெருமாட்டி கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் நிம்மா எலிசபெத் அவர்கள் வெளியிட இயற்பியல் துறை பேராசிரியை முனைவர் ஆரோக்கிய சியாமளாவும், பசுமை நடைத் தோழமைகளும் பெற்றுக்கொண்டனர்.

திருவிழாக்களின் தலைநகரம் முதலாம் பதிப்பு 1000 நூல்கள் விற்று, அடுத்த பதிப்பு வந்த அன்று இந்நூல் எழுதியதற்கான ராயல்டி தொகையாக 13,000 ரூபாய் பசுமை நடையினரால் சமணமலை அடிவாரத்தில் தேநீர்கடை நடத்திவரும் ஜெயமணி அம்மாவின் கரங்களால் எனக்கு வழங்கப்பட்டது. இது எதிர்பாராமல் வந்த பரிசு. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் ’மதுர வரலாறு’ நூலை வெளியிட்ட போது முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் ஜெயமணி அம்மா என்பது என் நினைவிற்கு வருகிறது.

திருவிழாக்களின் தலைநகரம் நூல் தந்த விதை நெல்லை அடுத்த வெளியீட்டில் சமூகத்திற்கு சரியான வகையில் திருப்பியளிப்பேன் என்ற உறுதியை இக்கணம் கூறிக்கொள்கிறேன்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

டோக் பெருமாட்டி கல்லூரி இயற்பியல் குடும்பத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இக்கணத்தில் இந்நூல் உருவாக உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனை காக்கும் மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இனிமேலும் வரங்கேட்கத் தேவையில்லை! இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை!

பால்யத்தில் கதைகளின் வழியாக வளர்ந்தவன் நான். பின் தானே கதை படிக்க விரும்பி படக்கதைகள் வாயிலாக வாசிப்பிற்குள் வந்தேன். கதை படிப்பதைவிட கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஏனெனில், அப்போதெல்லாம் யாரோ பால்யத்திற்குள் கரம்பிடித்து அழைத்துப் போவதைப் போலிருக்கும். சொல்ல முடிந்த கதைகள் நிறைய, சொல்ல முடியாத கதைகள் நிறைய. ஆனால், ஒரு கதைசொல்லி இந்த இரண்டு எல்லைகளையும் கடந்துவிடுகிறார்.

அப்படி என்னை ஈர்த்த கதைசொல்லிகளில் பவா செல்லத்துரையும் ஒருவர். முதன்முதலாக அவரைப் பார்த்தது 04.09.11 அன்று. வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடை முடிந்து அன்று மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு யாமம் நாவலுக்கு விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தல்லாகுளம் அருகிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. அதில் எஸ்.ரா.வின் கதைகளைப் பற்றி பவா பேசவந்தபோதுதான் பார்த்தேன். வண்ணநிலவனின் கதையொன்றையும், எஸ்.ரா.வின் கதையையும் இணைத்துப் பேசினார். திருடனைப் பற்றிய கதையது. அவரது அன்றைய உரை மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு அவரது வலைப்பூவான டி.எம்.சாரோனிலிருந்துவை தொடர்ந்து வாசித்துவந்தேன். அதில் எல்லா நாளும் கார்த்திகை தொடரை மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

“பவா என்ற கதைசொல்லி” வீடியோவை யூடிபில் பின் பார்த்தேன். அதன்பின் அவர் கதைசொல்லத்தொடங்கிய வீடியோக்களை தரவிறக்கிப் பார்ப்பதும் அந்தக் கதைகளில் மயங்கிக் கிடப்பதும் தொடர்ந்தது. ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என பலரது கதைகளையும் அவர் சொல்லக் கேட்டு பின் அந்தக் கதைகளைத் தேடி வாசித்தேன். பெரும்பாலான விடுமுறை நாட்களில் பவா கதை சொல்லச்சொல்ல கேட்டபடி கணினி முன்னே அமர்ந்திருப்பது என் வழக்கம்.

பசுமைநடை இன்னீர் மன்றல் விழாவில் அவர் பேசிய கதைகளில் மல்லாட்டை மணம் வீசியதை நுகர முடிந்தது. அதன் பின் அவரது கதையாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். ஜெயகாந்தனின் நாவல் குறித்த பெருங்கதையாடலை நிகழ்த்திய பிறகு அந்த வீடியோ இணையத்தில் தரவேறிய அன்றிரவு அதைத் தரவிறக்கி மறுநாள் விடிகாலை 5 மணிக்கு கேட்டேன். வாசிக்காமல் இருந்த ஜெயகாந்தனின் அந்த நாவலை பவா கதை சொல்ல தேர்ந்தெடுத்த பிறகுதான் தேடி எடுத்து வாசித்தேன்.

மதுரை என்றும் கதைகளின் தாயகம். இந்த ஊரிலுள்ள ஒவ்வொரு கல்லும், மலையும் கதைகளைக் கொண்டவை. இந்த ஊரின் வீதிகளில் திருவிளையாடற் புராணக்கதைகள் இன்னமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்தகைய மதுரையில் தொல்லியல் திருவிழாவில் அவரது கதைகள் குறித்து பேசலாம் என்றிருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போனது.

பசுமைநடையும், வம்சி பதிப்பகமும் இணைந்து நடத்தும் பெருங்கதையாடல் மதுரை அரசரடி இறையியற் கல்லூரியில் 23.3.2019 அன்று மாலை நிகழவிருந்தது. தேர்தல் அறிவிப்பினால் அந்த நிகழ்வு தள்ளிப் போனாலும் அன்று அவரைச் சந்திக்க சென்றிருந்த என்னைப் போன்ற ஐம்பது, அறுபது பேருக்காக நான்கைந்து கதைகள் சொன்னார். அன்று சொன்ன சு.வேணுகோபாலின் ‘சொல்ல முடிந்தது’ கதையாகட்டும், சக்கரியாவின் ‘இரண்டாம் குடியேற்றம்’ கதையாகட்டும் பவா சொன்னதும் வாங்கி வாசிக்கத் தோன்றியது.

பவா கதை சொல்லும் போது அந்தக் கதையை அப்படியே சொல்லி விடுவதில்லை. அந்த கதையின் சிகரங்களை நமக்குத் தொட்டுக்காட்டி கதையை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறார். மலையடிவாரத்தில் தங்கிவிடாமல் நாமும் மலையேறத்தொடங்குகிறோம். கதைகளில் வரும் எளிய மனிதர்களை, அழகிய தருணங்களை அவரது குரலில் விவரிக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.

வம்சி பதிப்பக வெளியீடாக வந்த தேன் சிறுகதைப் புத்தகத்தை வாங்கினேன். பவா, சைலஜா இணையர்கள் சொல்லியும் அக்கதையை கேட்டிருக்கிறேன். அற்புதமான கதை.

இந்நிலையில் மீண்டும் மதுரையில் அமெரிக்கன் கல்லூரி – பசுமைநடை – வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பில் திங்களன்று மாலை இடக்கை நாவல் குறித்த பெருங்கதையாடல் நிகழ்ந்தது. வாரத்தின் தொடக்க நாளான அன்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வளவிற்கும் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் வேறு.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பவாவின் கதையாடலைக் குறித்த அறிமுகத்தை வழங்கினார். இணையத்தின் வழியாக கதை கேட்டு பலரும் இந்நிகழ்வு தங்களை ஆற்றுப்படுத்தியதாக அனுப்பிய செய்தியைக் கூறினார். இரவு ஏழு மணிக்குத் கதை சொல்லத் தொடங்கிய பவா ஒன்பது மணிவரை கதையைச் சொன்னார். இடக்கை நாவலை அவர் சொல்லச் சொல்ல ஔரங்கசிப்பும், தூமகேதுவும், அஜ்வாவும், சூஃபி ஞானியும் அந்த அரங்கிலிருந்த ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்தனர். நாவலின் கோடிட்டு வைக்க கூடிய அற்புதமான வரிகளை வாசித்துக் காட்டினார். பவாவின் வெற்றி என்னவென்று சொன்னால் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் அங்கு வம்சி மற்றும் பசுமைநடை வெளியீடுகள் விற்றுக்கொண்டிருந்த இடத்தில் ஓரிருவர் வந்து இடக்கை நாவல் இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர். பவாவின் மகன் வம்சி அரங்கைச் சுற்றிச் சுற்றி ரசித்தபடி படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

சுமித்ரா நாவலை வாசித்தும், அந்தக் கதையை இத்ர மாத்ரம் என்ற மலையாளத் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். அதைக்குறித்த பதிவொன்றையும் எழுதியிருக்கிறேன். இப்போது பவா வாயிலாக சுமித்ரா கதையை கேட்டபொழுது சொல்வதற்கு கடினமான விசயங்களை பவா எளிமையாக கடந்துசெல்கிறார். நாவலின் பிரமாதமான இடங்களையும், வரிகளையும் சொல்லி புதிய வாசகனை நாவலுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.

ஷ்ருதி டிவியின் வாயிலாக இணையத்தில் இந்த கதைகளை நீங்களும் பார்க்கலாம். நான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களில் ஷ்ருதி டி.வி ஒலிபரப்பு செய்தால் முதல்வரிசையில் அமர்ந்திருந்ததைப் போல இணையத்தின் வழியாக பார்த்து மகிழ்வேன். ஷ்ருதி டிவியின் இலக்கியச் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி. (நீங்களும் ஷ்ருதி டி.வி.யை Subscribe பண்ணுங்க. வீடியோக்களுக்கு லைக் பண்ணுங்க)

பெருங்கதையாடல் வழியாக பவா ஒரு சுடரை ஏற்றி வைக்கிறார். ஜெயகாந்தன், ஜானகிராமன் என தமிழின் ஜாம்பவான்கள் தொடங்கி புதிய எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமல்லாமல் மலையாளத்திலுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். பால்சக்காரியாவின் தேர்ந்தெடுத்த கதைகளை வாசிக்கத் தொடங்கியது பவாவின் கதையாடல்களை கேட்கத் தொடங்கியபிறகுதான். பவாவின் இந்தக் கதைகளை நாமும் குடும்பத்தோடு கேட்கலாம். நெடுந்தொடர்களில் ஏன் இதுபோன்ற நல்ல கதைகளை எடுப்பதில்லை என உரையாடலாம். சமூக வலைதளங்களில் நண்பர்களுக்கு பகிரலாம். சுமித்ரா நாவலை மலையாளத்தில் இத்ரமாத்ரம் என அதன் ஆன்மா குறையாமல் திரைப்படமாக்கும் போது நம்ம ஊரில் ஏன் இப்படி நாவல்களை, சிறுகதைகளை படமாக்கமுடிவதில்லை என்ற கேள்வியை எழுப்பலாம்?

வாசிப்பவர்கள் தமக்கு பிடித்த கதைகளை சொல்லி இணையத்தில் பதிவேற்றலாம். நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாசித்த கதைகளைச் சொல்லி மகிழலாம். கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொன்னது போல கதை சொல்வதற்கென ஒரு ரேடியோ ஒன்று தொடங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாடங்களை கொஞ்சம் கதைகளாகச் சொல்லலாம். இல்லாவிட்டால் பாட இடைவேளைகளிலாவது கதைகளைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் கதை சொல்ல நேரம் ஒதுக்கலாம்.

(படங்கள் – பவா முகநூல் பக்கம் மற்றும் வம்சி)

https://www.youtube.com/user/bavachelladurai

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB

மரணத்தில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமிருக்கவே செய்கிறது. அழுகையின் கதியும் மாறுபடுகின்றன. பெண் இறப்பின் போது, மண்சுவரில் பெய்யும் மழை போல நினைவுகளைக் கரைத்துக் கொண்டு ஓடுகிறது அழுகை. அதுவே, ஆணின் மரணத்தில் தகரத்தில் பெய்யும் மழை போல உரத்த ஒப்பாரி, ஓங்கிய அழுகை. அங்கே நினைவுகள் கரைவதில்லை, மாறாகத் தெறித்து விழுகின்றன. மயானம் பெண்களின் காலடி படாத உலகம்.

– எஸ்.ராமகிருஷ்ணன்

மலையாளத்தில் கல்பட்டா நாராயணன் எழுதிய ‘இத்ர மாத்ரம்’ என்ற நாவலை கே.வி.ஷைலஜா அவர்கள் மொழிபெயர்ப்பில் சுமித்ரா என தமிழில் வந்ததை பொங்கல் விடுமுறையில் செங்கோட்டை பேசஞ்சரில் வாசித்தபடி சென்றேன். சிறிய நாவலானாலும் என்றும் மனதில் நிற்கும் நாவலாகயிருந்தது அதன் கதை. அதற்கு எஸ்.ரா. எழுதிய முன்னுரையை தனிப்பதிவாகவே போடலாம். அத்தனை சிறப்பு. இத்ர மாத்ரம் என்ற பெயரில் இந்நாவல் மலையாளப் படமாக வந்துள்ளதை அறிந்து அதைத் தரவிறக்கிப் பார்த்தேன். ஸ்வேதா மேனன் சுமித்ராவாக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்நாவலை மீண்டும் எடுத்து வாசிக்க காரணம் மரணம். ஆம், சகோதரியொருவரின் அகால மரணமே மீண்டும் இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. இந்நாவல் 38 வயதான சுமித்ரா மரணத்திலிருந்து தொடங்குகிறது. மரண வீட்டிற்கு வரும் மனிதர்கள் வாயிலாக சுமித்ராவின் வாழ்க்கை உயிர்பெறுகிறது.

sumithra rapper

சுமித்ரா நாவல் கேரளாவின் வயநாட்டு கிராமமொன்றின் சித்திரமாக திகழ்கிறது. அங்கு விளையும் பயிர், அங்குள்ள வீடுகளின் அமைப்பு, அங்கு வாழும் மலைவாழ் மக்களான பணியர்களின் வாழ்க்கை என ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது நம்மையும் அப்பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது கல்பட்டா நாராயணின் எழுத்து. அவர் கவிஞராக இருந்து எழுதிய முதல் நாவல். ஒவ்வொரு பக்கத்திலும் கவித்துவமான வரிகள் நிரம்பிக்கிடக்கிறது. இந்நாவலை படமாக எடுக்கையிலும் ஒவ்வொரு அத்யாயம் போல பெயர் போடுவது சிறப்பு. ஒரு நாவலை படமாக்கும் கலையை அறிய இத்ர மாத்ரம் படம் பார்த்தால் போதும். அந்நாவலின் ஆன்மா குலையாமல் படமாக்கியிருக்கிறார்கள். கல்பட்டாவும் அப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

swethamenon

மரண வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் சுமித்ராவுடனான நினைவுகளை எண்ணிப் பார்க்கிறார்கள். தன்னை சிறுவயதிலிருந்து வளர்த்து கல்லூரி நாட்களில் தன் காதல் குறித்தெல்லாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தாயாக, தோழியாக இருந்த சுமித்ரா குறித்த புருஷோத்தமனின் நினைவு, சுமித்ரா இறப்பதற்கு முதல்நாள் தன் குடிகார கணவனிடமிருந்து பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் நகையைக் கொடுத்து வைத்த மரியாக்காவின் பதற்றம், எப்போதும் அமைதியாக இருக்கும் சுமித்ராவின் மகள் அனுசுயா அம்மா உடலைக் கண்டு கதறி அழுது கட்டிப்பிடித்து முத்தமிடுவது, சுமித்ராவிடம் தன் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் தோழி கீதா தனக்கு இனி இறந்த காலமே இல்லையென எண்ணுமளவிற்கான அவளது வாழ்க்கை, சுமித்ராவோடும் கீதாவோடும் படித்த சுபைதா என பலர் வருகிறார்கள். ஒவ்வொருவர் வருகையிலும் சுமித்ரா பழங்கலத்திலிருந்து உயிர்பெற்று வந்துகொண்டேயிருக்கிறாள்.

ithramathram

வீட்டில் தனிமையில் வாழும் பெரியவருக்கு ஆறுதலாக, அவர் பசி போக்க உப்புமா கிண்டிக் கொடுக்கும் மகளாக இருக்கும் சுமித்ராவிற்கு அவர் சொன்ன ஆருடம் பொய்த்து போனதை கண்டு கலங்குகிறார். அந்த ஊரில் உள்ள பெண்களிடமெல்லாம் உரிமையாக பழகும் தாசன் கதாபாத்திரம் நம்மை ஈர்க்கிறது. தாயின் பயணத்திற்கு பிறகு தேசாந்திரியாய் வாழும் தாசன் எப்போதாவது ஊருக்கு வருகிறான். வரும்போது அங்குள்ள மனிதர்களிடம் வாஞ்சையாய் நடந்து கொள்கிறான். இரவு சர்க்கஸ் பார்க்கச் செல்வதென்றாலும் தாசனின் கரம்பிடித்து தைரியமாய் நடந்து செல்லலாம் பெண்கள். பணிச்சி இனப்பெண்ணாக வரும் கருப்பி, துணிதுவைக்கும் மாதவனின் மனைவியான மாதவி. இவர்களெல்லாம் சுமித்ராவின் தோழிகள்.

இராசாயன உரங்கள் போட்டதால் வயல்களில் நண்டுகள் இல்லாமல் போய், வயநாட்டில் நரிகள் கூட இல்லாமல் போய்விட்டதை நாவலின் வாயிலாக அறிய முடிகிறது. பல்துலக்காவிட்டாலும் பளீறிடும் பற்கள் கொண்ட கருப்பியை டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கெதிராய் சுமித்ரா எண்ணுவாள். பிற்பாடு இராசயன உரங்களால் அவர்களது பற்களும் மஞ்சள் படிந்து உடைவதைப் பார்க்கிறாள். இதெல்லாம் தனியாக துருத்தித் தெரியாமல் நாவலினூடாக வருகிறது. கேரள கிராமங்களில் வீட்டையொட்டி நெல் குதிர்கள், உரல் வைக்கப் பயன்படும் அறைதான், பழங்கலம். சுமித்ரா திருமணமாகி வந்ததலிருந்து பெரும்பாலான நேரங்களைக் கழிப்பது அந்த இடத்தில்தான். நம் ஊர் பெண்களுக்கான கிணற்றடிபோல. (இப்போது கிணறுகள் இல்லையென்பது தனிசோகம்).

ஜனவரி மாத இறுதியில் திருநெல்வேலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வந்த அலைபேசிச் செய்தி வாயிலாக என்னோடு முன்பு பணியாற்றிய சகோதரியொருவர் மரணமடைந்துவிட்டார் என்றதைக் கேட்டதை மனம் அதிரத் தொடங்கியது. அவர் வாழ்க்கை போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாய் ஒரு பக்கம் தோன்றினாலும் மனது மிகவும் கனத்துக்கிடந்தது. என்னைவிட மூத்தவரானாலும் என்னை ‘அண்ணே’ என்றே அழைப்பார். மிகவும் பாசமானவர். ஏராளமான பிரச்சனைகளோடு இருந்தாலும் எப்போதும் சிரித்தபடி அதை சமாளித்து வந்தார். உடலில் புதிதாய் ஒரு நோய் வந்தது. அதற்கும் பெரிய மருத்துவமனைகளில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் பேரதியசமாக அரசுப்பணி லஞ்சம் ஏதும் இல்லாமல் தகுதி அடிப்படையில் அவருக்கு கிடைத்து வெளியூர் சென்றார். சென்ற கொஞ்ச நாட்களில் மீண்டும் அந்த நோய் முற்றி மரணத்தோடு போராடி விடைபெற்றார். இத்ர மாத்ரம் என்ற நாவலின் நாயகியைப் போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை விட்டு நாற்பது வயதிற்குள்ளாக காலமானார். அச்சகோதரியின் நினைவு இந்நாவலோடு எனக்குள் நிறைந்துவிட்டது.

title

எஸ்.ராமகிருஷ்ணன்

லா.ச.ராமாமிர்தம்

லா.ச.ராவண்ணநிலவன்

பாற்கடல்