எழுத்து வழியாக அறிந்த பலரை நேரில் காணும் வாய்ப்புகள் தந்தது மதுரைப் புத்தகத்திருவிழா. அதில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுடனான சந்திப்பு என் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த நூறு நாவல்கள், சிறந்த நூறு புத்தகங்கள் பட்டியலை சகோதரரின் உதவியுடன் ஆயிரம் பிரதிகள் எடுத்து மதுரை புத்தகத் திருவிழாவில் வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பட்டியலை வாங்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், என்னிடம் அவரது அலைபேசி எண்ணையும் வழங்கினார்.

புத்தகத் திருவிழா நிறைவடைந்த பிறகு நூலகத்தில் உயிர்மை மாத இதழில் பசுமை நடை குறித்த தகவலை பார்த்தேன். முத்துக்கிருஷ்ணனோடு அலைபேசி வழியாகப் பேசலாம் என்றால் உள்ளுக்குள் எப்போதும்போல ஒரு தயக்கம். நகருக்குள் சென்று பேசலாம் என நினைத்தேன். டவுன்ஹால்ரோடு பிரேமவிலாஸ் அருகே நண்பருக்காக காத்திருந்த வேளையில் பேசலாமா என்று யோசித்தேன். வாகன இரைச்சலில் சரியாகப் பேசமுடியாதோ என யோசித்து சித்திரை வீதிப்பக்கம் சென்று பேசலாம் என தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.

நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கருகில் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் குரல் அங்கு ஒலிப்பதுபோல தோன்ற திரும்பிப் பார்த்தால் அவர் நண்பர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு நானும் பசுமை நடையில் இணைவது குறித்து பேசினேன். எனது எண்ணை வாங்கிக்கொண்டு குறுந்தகவலும் அனுப்பினார். அதன்பின் நவம்பர் 14, 2010ல் சமணமலையில் பசுமை நடை என்ற தகவலும் அவரது எண்ணிலிருந்து வந்தது. அதே சமயத்தில்தான் மதுரை வாசகன் வலைப்பூவும் அக்டோபர் 23ல் சகோதரர் ப.தமிழ்ச்செல்வம் உதவியுடன் தொடங்கினேன். பசுமை நடையில் இணைந்ததையும் வலைப்பதிவு எழுதத் தொடங்கியதையும் 2010இல் என் வாழ்வில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளாக பார்க்கிறேன்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அறிவுப்புலங்கள் மட்டுமே சொந்தமென வைத்திருந்த வரலாறு, தொல்லியலை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனையே சேரும். ஒவ்வொரு நடையும் தொடங்கியதிலிருந்து, முடியும்வரை எல்லோரையும் வழிநடத்துவார். காலை உணவை பசுமைநடைக்கு வந்தவர்களுக்கெல்லாம் வழங்கிய பின்னரே அவர் சாப்பிடுவார். கொலபசி எழுதியவர், பிறர்பசி அறிந்தவர். பஞ்சாபி ரெஸ்டாரென்ட்டில் பட்டர்நாண் – பன்னீர் டக்காடக் என நான் தேடி உண்ண வழிகாட்டியவர்.

பசுமைநடையில் இணைந்து மதுரையின் தொல்தலங்கள், மலைகள், மதுரை வீதிகள், கல்மண்டபங்கள், நீர்நிலைகள் என எழுத்தின் வழியாக அறிந்த இடங்களிலெல்லாம் நடமாடும் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு நடையையும் வலைப்பூவில் தொடர்ந்து ஆவணப்படுத்திவந்தேன். பசுமைநடை குழுவில் இணைந்து கற்றவை ஏராளம், ஏராளம்.

நான் எழுதிய திருவிழாக்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணத்தை தூண்டியதோடு அதை தொகுக்கச் சொன்னார். நான் வலைப்பூவில் எழுதியதை அப்படியே எடுத்துக் கொடுக்க இன்னும் மேம்படுத்தச் சொன்னார். மேம்படுத்திய பிரதியை பின்னாளில் தொல்லியல் திருவிழாவில் திருவிழாக்களின் தலைநகரம் நூலை வெளியிட்டு என்னை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

மதுரை குறித்து அவர் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூலின் வாயிலாக அவரது மதுரை அனுபவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. மதுரையின் பல அறியப்படாத விசயங்களை, மறந்துபோன விசயங்களை தம் எழுத்துக்கள் வாயிலாக அதில் மீட்டெடுத்திருக்கிறார். அதேபோல, அவர் பயணித்த ஊர்களும், நாடுகளும் ஏராளம். தனது பயண அனுபவங்களை அவர் நூலாக விரிவாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப்பதிவின் வாயிலாக வைத்துக்கொள்கிறேன்.

இயற்கை பேரிடரின் போதெல்லாம் நிவாரணப் பணிகளை பசுமைநடை குழு மேற்கொள்ளும். சமீபத்திய கொரோனா ஊரடங்கின்போது அவர் வேலையின்றி வாடும் ஒவ்வொருவராகத் தேடித்தேடி நிவாரணப் பொருட்கள் வழங்க தேர்ந்தெடுத்த பட்டியல் குறிப்பிட வேண்டிய விசயம். டிரைசைக்கிள் ஓட்டுபவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், சாலையோரத்தில் பொம்மை செய்யும் பிறமாநிலத்தவர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள், கரும்புச்சாறு கடைபோடுபவர்கள், பறையாட்டக்கலைஞர்கள் என ஒவ்வொருவரையும் தேடிச்சென்று பொருட்களை வழங்கிய விதம் குறிப்பிடத்தகுந்தது. நான் பார்த்த தனிநபர் நூலகத்தில் தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் நூலகம் தனித்துவமானது. பல அரிய நூல்களைக் கொண்டது. பல நாடுகளுக்குப் பயணித்து சில அழகிய கலைப்பொருட்களையும் நூலகத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்.

அ.முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களில், உரையாடல்களில் ஒலிக்கும் சமூக அக்கறையை அவரது செயல்களிலும் பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன் தனியார் வங்கியொன்றில் பெருங்கடனில் சிக்கவிருந்த என்னை அதிலிருந்து மீட்டு நல்வழி காட்டினார். உடல்நிலை சரியில்லாதபோது தகுந்த மருத்துவரைப் பார்க்க எனக்கு மட்டுமல்லாது, எனக்கு தெரிந்தவர்களுக்குக் கூட அவரது உதவியை பெற்றிருக்கிறேன். பல நண்பர்களுக்கு இதுபோல இக்கட்டான தருணங்களில் அவர் உதவியிருக்கிறார்.

சங்கச்சுரங்கத்திலிருந்து ஒரு பாடலெடுத்து அ.முத்துக்கிருஷ்ணனைப் பற்றிச் சொன்னால் ‘பிறர்க்கென முயலுநர்’ என்ற புறநானூற்றுப் பாடலைச் சொல்லலாம்.

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்,

பிறர்க்கென முயலுநர் உண்மையானே.

பிறர்க்கென முயலும் தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் எழுதிய 12 கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை ‘பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ’ என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுவையான பல்வேறு ஆய்வுச் செய்திகள் அடங்கிய நூல் இது.

கோபுரத்திலிருந்து குதித்தவர்கள்

கோவில் கோபுரங்களில் ஏறி உயிர்துறந்தவர்களைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுக்கள் வாயிலாக கிடைக்கின்றன. திருப்பரங்குன்றம், திருவரங்கம் கோவிலைக் காக்க கோபுரமேறி உயிரை விட்டவர்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. அதேபோல சாமி தூக்குபவர்களான ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் மீது வரி விதித்ததை எதிர்த்து மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் ஏறி உயிர்துறந்தவர், கொதிக்கும் நெய்யில் கைவிடும் சோதனையை எதிர்த்து சுசீந்திரத்தில் உயிர்துறந்தவரைப் பற்றிய குறிப்புகளும் கிடைத்துள்ளன. தலைவனுக்காக உயிர்நீத்தவர்களைக் குறித்தும் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

பெண் தெய்வங்கள்

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெண்தெய்வங்கள் உள்ளன. அவற்றின் கதைகளை ஆராய்ந்தால் ஆணவக்கொலைக்கு பழியான பெண்கள், உடன்கட்டை ஏறிய (ஏற்றப்பட்ட) பெண்கள் என சில ஒற்றுமைகளைக் காணலாம். அ.கா.பெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் களஆய்வு வாயிலாக முன்னூற்றுக்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் பெயர்களைச் சேகரித்திருக்கிறார்.

கணவன் இறந்தபோது அவனது மனைவியர்களையும் உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கம் இந்தியா முழுவதிலும் இருந்திருக்கிறது. விதவையான பெண்களுக்கு இச்சமூகத்தில் மதிப்பு இல்லாத காரணத்தால் உடன்கட்டை ஏறுவதே மேல் என பூதப்பாண்டியன் மனைவி பாடிய சங்கப்பாடலை சான்றாகச் சொல்லலாம். வில்லியம் பெண்டிங் பிரபு 1829இல் இக்கொடிய பழக்கத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவந்தும் அது முற்றிலுமாக அகல பல காலம் எடுத்தது. நாம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்த இக்கொடுமை குறித்து விரிவாக பல கதைப்பாடல்கள், நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விரிவாக எழுதியிருக்கிறார் அ.கா.பெருமாள்.

பழமரபுக் கதைகள்

நம்முடைய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பழமரபுக் கதைகள் பாடல்களில் ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சிவன், திருமால், அகலிகை, மன்மதன் பற்றிய கதைகள் இருந்தாலும் அவை தமிழகத்திலிருந்த வாய்மொழி கூறுகளுடன் இணைந்தவை. முருகன் வள்ளி கதைகள், கண்ணன் நப்பின்னை கதைகளை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம் என எடுத்துரைக்கிறார் அ.கா.பெருமாள்.

பீமனைக் கொல்ல காந்தாரி எடுத்த முயற்சிகளை வைத்து ‘நெட்டூரி காந்தாரி’ என கன்னியாகுமரிப் பகுதியில் சொல்லப்படும் கதையை பதிவு செய்திருக்கிறார்.

கண்ணகியின் கதை

கேரளத்தில் வழிபடப்படும் பகவதியம்மன் வழிபாடு சிலப்பதிகார கண்ணகியின் வழிபாட்டின் நீட்சியே என்பதை கொடுங்கோளூர் பகவதியம்மன் கோவில் வழிபாட்டில் கண்ணகி வழிபாட்டை வெளிப்படையாகவே காண முடியும் என்றும், ஆற்றுக்கால் பகவதி தொடங்கி கேரளத்தில் வணங்கப்படும் பகவதியம்மன் வழிபாடு கண்ணகி வழிபாடு என்பதை மூத்த மலையாள அறிஞர்கள் ஏற்கத் தயங்கவில்லை என்றும் கூறுகிறார் அ.கா.பெருமாள்.

அகத்திய முனி

அகத்தியன் குறித்த கதைகள் ஏராளம். தமிழ்த்திரைப்படங்கள் வாயிலாகவும் அவர் தமிழ் முனி, சைவ முனி போன்ற தோற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மணிமேகலை நூல்தான் அகத்தியன் குறித்த புராணக்கதைகளை முதலில் கூறுகிறது. பின்னால் சேக்கிழார் அகத்தியர்தான் காவிரியைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தார் போன்ற கதைகளை எழுதினார். தமிழ் பண்பாட்டோடு அகத்தியன் குறித்த கதைகளும் நிறைய கலந்துவிட்டன.

நிகழ்த்துகலை

மக்கள் கூடியிருந்த தருணங்களில் நிகழ்த்தப்பட்ட ஆட்டத்தில் ஆண்களும் பெண்களும் பங்குகொண்டனர். பண்டைய இலக்கியங்களில் ஆட்டம் குறித்த செய்திகள் குறைவாகவும், அதில் பெண்கள் பங்கேற்ற செய்திகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. குரவைக்கூத்து, துணங்கைக்கூத்து, வெறியாட்டு, போன்ற கூத்துக்களை பெண்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். இன்று கயிற்றில் மீது ஆடும் ஆட்டம் தமிழர்களிடம் முன்பிருந்திருக்கிறது என்பதை அ.கா.பெருமாள் சங்கப்பாடல் வழியாக எடுத்துரைக்கிறார். பழந்தமிழர் கலைகள் குறித்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இரட்டை காப்பியங்கள் ஆகிய நூல்களில் நிகழ்த்துகலைகள் குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற கதைகள் நிகழ்த்தப்படும்போது நிலைத்த பனுவல் இடத்திற்கேற்ப மாறுபடுவதைக் குறிப்பிடுகிறார்.

அ.கா.பெருமாள் எழுதிய இந்நூலிலுள்ள கட்டுரைகளை வாசிக்கையில் நம்முடைய மரபு, தொன்மம், கலைகள், கதைகள், சங்கப்பாடல்கள், வாய்மொழி மரபுகள், நாட்டார் தெய்வங்கள், கல்வெட்டுச் சான்றுகள் என பலவிசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

கலை விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சி.மோகனின் 70வது பிறந்தநாளையொட்டி ஒரு விழா எடுத்து அவருக்கு பணமுடிப்பு வழங்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. சி.மோகனின் படைப்புகளை வாசித்திருந்த வேளையில் அவரை சந்திக்க வேண்டும், இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஒருநாள் சி.மோகன் அவர்கள் அலைபேசியில் அழைத்து அவரது கட்டுரைத் தொகுப்புகள் குறித்து பேசுமாறு கேட்டார். இதுபோன்ற நிகழ்வுகளில் பேசிப் பழக்கமில்லை என்று தயக்கத்துடன் கூற தைரியமாகப் பேசுங்கள் என்று சொன்னார்.

சி.மோகனின் நூல்களை எனக்கு அறிமுகம் செய்த அண்ணனிடம் எனக்கு கிட்டிய வாய்ப்பைச் சொன்னேன். சி.மோகனின் கட்டுரைகள் குறித்து பேசுவதற்கான உரையைத் தயாரிக்க சில யோசனைகள் சொன்னார். ஏற்கனவே வாசித்து எழுதிய குறிப்புகளை வைத்து, மீண்டுமொருமுறை வாசித்து ஒரு உரையைத் தயார் செய்தேன். சி.மோகனின் எழுத்துக்கள் மிகவும் செறிவானவை. அவற்றை நம் விருப்பம்போல் சுருக்கியோ, வேறுவிதமாகத் தொகுத்தோ பேசுவது கடினமான விசயம்.

டிசம்பர் 17 அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்குப் போய் முகலிவாக்கம் பகுதியிலுள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றேன். அங்கிருந்து புறப்பட்டு மைலாப்பூர் சென்றேன். கபாலீஸ்வரரை வணங்கினேன். அங்கிருந்து கவிக்கோ மன்றம் செல்ல கூகுள் மேப்பில் தேடி லஸ் சர்ச் ரோடு செல்வதற்கு பதிலாக மாறி வேறு வழியில் சென்றேன். அதுவும் நல்லதிற்குத்தான். எனக்குப் பிடித்த மனோகர் தேவதாஸ் வாழ்ந்த சாந்தோம் சர்ச் பகுதியை அடைந்தேன். அங்கு சென்று இயேசுநாதரை வணங்கினேன். பின் வந்தபாதையிலேயே திரும்பி சரியான பாதையை அடைந்தேன்.

கவிக்கோ மன்றத்தில் எனக்கு முன்னதாக வந்திருந்த எழுத்தாளர் காலபைரவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எழுத்தாளரும் கதைசொல்லியுமான பவா செல்லத்துரையும், டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பனும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சி.மோகன் அவர்களை முதன்முதலாக நேரில் பார்த்தேன். அன்பாக அரவணைத்துக் கொண்டார். மதுரையிலிருந்து நந்தசிவம் புகழேந்தி வந்திருந்தார். நிறைய நண்பர்களைப் பார்க்க முடிந்தது. நிகழ்விற்கு சென்னையிலுள்ள இன்னொரு அண்ணன் குடும்பத்தோடு வந்திருந்தார்.

கருத்தரங்கம், வாழ்த்துரைகள், பணமுடிப்பு வழங்குதல், சிறப்புரை, ஏற்புரை என விழா திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெற்றது. சி.மோகனின் கட்டுரைகள் குறித்து நான் தயார் செய்து வைத்திருந்த உரையைப் பார்த்து கொஞ்சம் வாசித்தும், கொஞ்சம் பேசியும் முடித்தேன்.

அங்கிகரீக்கப்படாத கனவின் வலி என்ற நேர்காணல்கள் தொகுப்பும், சி.மோகனின் படைப்புகள் (நாவல்கள்-சிறுகதைகள்) தொகுப்பும் வெளியிடப்பட்டது.

தன் வாசகனை மேடையேற்றி அழகு பார்த்த சி.மோகனுக்கும், விழாவிற்கு வருவதாக சொன்ன பொழுதே எனக்காகப் பயணச் சீட்டை முன்பதிவு செய்த சகோதரர் தமிழ்செல்வத்திற்கும், நிகழ்விற்கு குடும்பத்தோடு வந்த சகோதரர் பழனிக்குமாருக்கும், மதுரையிலிருந்து வந்திருந்த நந்தசிவம் புகழேந்திக்கும், ஷ்ருதி டிவி சுரேஷ் அவர்களுக்கும், விழா முடிந்ததும் ரயில்நிலையத்தில் கொண்டுவந்து சேர்த்த தோழர் முத்துவிற்கும் நன்றி! நன்றி! நன்றி!

படங்கள் உதவி : நந்தசிவம் புகழேந்தி, சரவணன், ஈஸ்வர் (ஒளிப்படக்காதலன்)

தொ.பரமசிவன் அய்யாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய பேரா. ம. பெ. சீனிவாசன் தாம் எழுதிய ‘பரிபாடல் – திறனுரை’ நூலுக்கு தொ.ப. எழுதிய சிறு குறிப்பினை பற்றிக் குறிப்பிட்டார். சமீபத்தில் ‘பரிபாடல் – திறனுரை’ நூலில் ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்ற வாழ்த்துரையை வாசிக்க முடிந்தது. தொ.ப.வின் நூல்களில் இதுவரை இடம்பெறாத, அவரது கையெழுத்தில் அமைந்த இந்த உரையைப் பகிர்கிறேன்.

முன்னுரையில் ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு:

பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதி முடிக்கப்பெற்ற உரை இது. எனினும் இப்போதுதான் வெளி வருகின்றது. ‘பரிபாடல் அறிமுகம்’ என்னும் முகவுரைப் பகுதியைப் படித்துவிட்டு 2010இல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவராய் விளங்கிய பேராசிரியர் அறிஞர் தொ. பரமசிவன் எனக்கொரு பாராட்டுக் குறிப்பினை அனுப்பியிருந்தார். ‘பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்’ என்பது அதன் தலைப்பு, அதனைச் சில மாதங்களுக்கு முன் பார்க்க நேர்ந்த போது, ‘நூலினை உடனே வெளியிட்டாக வேண்டும்’ என்ற வேகம் பிறந்தது. கைகொடுத்து உதவினார் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எஸ்.சண்முகம் அவர்கள். அவருக்கு என் நன்றி உரியது.

என்னுடன் நாற்பத்தேழு ஆண்டுக்கால இலக்கியத் தோழமை கொண்டிருந்தவர் அறிஞர் தொ.பரமசிவன். இன்று அவர் நம்மோடு இல்லை. எனினும், ‘எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்’ இளவலை நினைந்து நெகிழ்கிறேன். அவரின் பொன்னான நினைவைப் போற்றுகிறேன்.

தொ..வின் வாழ்த்துரை:

பேரா.ம.பெ. சீனிவாசன் தமிழ் எழுத்துலகில் அறிமுகம் வேண்டாத எழுத்தாளர். ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவராக அவர் ஆக்கித் தந்த நூல்கள் தமிழ் இலக்கிய மாணவர்க்கும் ஆய்வாளர்க்கும் பெருவிருந்தாவன.

பேராசிரியர் இப்பொழுது தமிழ்ச் செவ்விலக்கிய ஆய்வுகளிலும் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளார். திருமுருகாற்றுப்படையினைத் தொடர்ந்து இப்பொழுது பரிபாடலுக்கு உரை வரைந்துள்ளார். நம்மைப் பரிபாடல் அமுதம் பருக அழைக்கிறார்.

மாணவர்களின் தேர்வுக்குரிய பதவுரை, பொழிப்புரையாக அன்றி அவருக்கேயுரிய மயக்குகின்ற மொழிநடையில் வரையப்பட்டுள்ளது இந்நூல். பழந்தமிழ் ஆய்வு முன்னோடிகள் கலித்தொகையினைப் ‘பாண்டிநாட்டு இலக்கியம்’ என்றும் பரிபாடலை ‘மதுரை இலக்கியம்’ என்றும் குறிப்பிடுவர். பக்தி இலக்கியத்தின் இசைப் பங்களிப்புக்கும் பரிபாடலே வழிகாட்டி. ஆயினும் இப்பாடல்கள் பாடப்பட்ட முறையினை அறிய இயலாமற் போனது தமிழர்க்குப் பேரிழப்பே.

தொல்காப்பியம் தொடங்கி உரையாசிரியர்கள் வழிவரும் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், பேரா. நா.வா.வின் பரிபாடல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் உள்வாங்கியிருப்பது அவரது வாசிப்புலகத்தின் வீச்சினை நமக்குக் காட்டுகிறது. உரைச் சிறப்புக்குச் சற்றும் குறையாத மிடுக்கோடு அமைந்துள்ளது, பேராசிரியரின் முன்னுரைச் சிறப்பு. இம்முன்னுரையைப் படித்தபோது உ.வே.சா. ஊன்றிய வித்துக்கள் வீண் போகவில்லை என்ற நம்பிக்கை பிறக்கிறது. மு.அருணாசலம் அவர்களின் தமிழிசை இலக்கண வரலாறு வெளிவந்துள்ள சூழலில் இந்த இசைநூல் உரையும் வெளிவந்திருப்பது சிறப்பு.

பழந்தமிழ் இலக்கியப் பணியில் முன்னடி வைத்திருப்பதாகப் பேராசிரியர் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், அம்முன்னடியே பொன்னடியாக ஒளிர்கிறது. தமிழிலக்கிய ஆய்வாளர்கள் இவரது தடம் பற்றி நடப்பார்களாக. பேராசிரியர்க்குத் தமிழுலகின் சார்பாக நமது நன்றி கலந்த பாராட்டுகள்.

நன்றி : ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

சமணமலை மதுரையில் எனக்கு நெருக்கமான இடம், மிகவும் பிடித்தமான இடம். 14.11.2010இல் நானும் தமிழ்ச்செல்வ அண்ணனும் பசுமை நடை சென்றபோது செட்டிப்பொடவு, பேச்சிப்பள்ளம் எல்லாம் போய் பார்த்தோம். செட்டிப்பொடவில் திருவிழாக்களின் தலைநகரம் முதல்பதிப்பு 2019இல் வெளியானதும், இரண்டாம்பதிப்பு 2022இல் பேச்சிப்பள்ளத்தில் வெளியானதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

இரண்டாண்டுகளுக்குப்பின் சமணமலையில் நடந்த பசுமை நடை நிகழ்வில் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமையன்று இந்நூலை டோக்பெருமாட்டி கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் நிம்மா எலிசபெத் அவர்கள் வெளியிட இயற்பியல் துறை பேராசிரியை முனைவர் ஆரோக்கிய சியாமளாவும், பசுமை நடைத் தோழமைகளும் பெற்றுக்கொண்டனர்.

திருவிழாக்களின் தலைநகரம் முதலாம் பதிப்பு 1000 நூல்கள் விற்று, அடுத்த பதிப்பு வந்த அன்று இந்நூல் எழுதியதற்கான ராயல்டி தொகையாக 13,000 ரூபாய் பசுமை நடையினரால் சமணமலை அடிவாரத்தில் தேநீர்கடை நடத்திவரும் ஜெயமணி அம்மாவின் கரங்களால் எனக்கு வழங்கப்பட்டது. இது எதிர்பாராமல் வந்த பரிசு. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் ’மதுர வரலாறு’ நூலை வெளியிட்ட போது முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் ஜெயமணி அம்மா என்பது என் நினைவிற்கு வருகிறது.

திருவிழாக்களின் தலைநகரம் நூல் தந்த விதை நெல்லை அடுத்த வெளியீட்டில் சமூகத்திற்கு சரியான வகையில் திருப்பியளிப்பேன் என்ற உறுதியை இக்கணம் கூறிக்கொள்கிறேன்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

டோக் பெருமாட்டி கல்லூரி இயற்பியல் குடும்பத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இக்கணத்தில் இந்நூல் உருவாக உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனை காக்கும் மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இனிமேலும் வரங்கேட்கத் தேவையில்லை! இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை!

பெங்களூருக்கு ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஈர்ப்பது அங்குள்ள மரங்கள்தான். ஒவ்வொரு சாலையிலும் எதாவது பெருமரம் அந்த வீதியின் காவல்தெய்வம் போலக் காத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள நகர நெரிசலைத்தாண்டி, பிரமாண்ட கட்டிடங்களைத் தாண்டி அந்த ஊரின் அழகு அந்த மரங்களில்தான் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

இராமன் ஆய்வகத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடமே ஒரு காடு போலிருக்கிறது. அங்குள்ள அரங்கை அவ்வளவு அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள். அதைத் தொடங்கியபோது சர்.சி.வி.ராமன் இருந்த காணொளிகளை ஒலிபரப்புவதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதேபோல பிரபஞ்சம் குறித்தும், சூரியக்குடும்பம் குறித்தும் நிறைய செய்திகளை அங்குள்ள வல்லுநர்கள் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள்.

இராமனின் சேகரிப்புகள் எல்லாம் அரிதான பொருட்கள். அங்குள்ள கண்ணாடிப் படிமங்களைப் போன்று வேறெங்கும் கண்டதில்லை. மேலும், அவர் இசை ரசிகர் என்பதால் அவருடைய வீணையையும் காணலாம். இராமன் தொடங்கிய நூலகத்தை இப்போது மிகப்பெரிதாக எடுத்துக்கட்டியிருக்கிறார்கள். அங்கு இராமனின் வாழ்வை, அவரது கண்டுபிடிப்புகளை பற்றிய அரங்கை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார்கள். மிக அரிய நூல்களைக் கொண்ட நூலகம்.

1962 ஜூலை 14இல் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பிரதமராகயிருந்த ஜவகர்லால் நேரு தொடங்கிவைத்திருக்கிறார். பள்ளி, கல்லூரியிலிருந்து வருபவர்கள் பார்வையிட சலுகை கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி தவிர ஆண்டின் எல்லா நாட்களிலும் காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை இந்த அருங்காட்சியகம் இயங்குகிறது. இயற்பியல், வேதியியில், உயிர்தொழில்நுட்பவியல், வானியல், கணினியியல் என பல்துறை சார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு செய்முறையையும் நாம் செய்து பார்க்கும்படி சிறப்பாக வடிவமைத்து அதைக்குறித்த விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

பெங்களூர் அரசு அருங்காட்சியம் இந்தியாவிலுள்ள பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. 1865இல் தொடங்கப்பட்டு 1877இல் தற்போதுள்ள இடத்தில் இந்திய ரோம கட்டிடக்கலையில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியது. இங்கு கன்னடச் செப்பேடுகள், கல்வெட்டுகள், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், ஓவியங்கள் என பல அரிய பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

அரசு அருங்காட்சியகத்தின் அருகில் வெங்கடப்பா ஓவிய கேலரி உள்ளது. பெங்களூரிலிருந்த வெங்கடப்பா என்ற ஓவியரின் படைப்புகள் இங்குள்ளன. 1886இல் பிறந்தவர். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்கெல்லாம் சென்று அந்த ஊரின் இயற்கை காட்சிகளை ஓவியமாக வரைந்திருக்கிறார். இந்த கேலரியின் இரண்டாவது மாடியில் பல்வேறு ஓவியர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒரு அறையில் மரத்தில் செய்த அரிய மரச்சிற்பங்கள் உள்ளன.

ஜவகர்லால் நேரு கோளரங்கம் பெங்களூரில் எனக்கு மிகவும் பிடித்த இடம். பிரபஞ்சத்தில் நமது பூமி எத்தனையெத்தனை சிறிது என்பதை அறிய கோளரங்கம் பெரிதும் உதவுகிறது. திரையரங்கு போன்ற இடத்தில் நடுவில் சிறிய புரொஜக்டரிலிருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. லால்பார்க் என்ற இடத்திலுள்ள தாவரவியல் பூங்காவும், பூங்காவின் தொடக்கத்திலுள்ள பாறைத்திட்டில் அமைந்துள்ள தொல்சின்னமும் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள்.

பெங்களூரில் மெஜஸ்டிக், கிருஷ்ணராஜ மார்க்கெட் பகுதியிலுள்ள கடைவீதிகள் மிகவும் பிரபலம். இந்த வீதியில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கிறது. துணிகள், கைப்பைகள், அலங்காரப்பொருட்கள் என ஒவ்வொருவரும் வேண்டியதை வாங்குகிறார்கள். சாலையோரங்களில் குடைமிளகாய் வைத்து சுடச்சுட பஜ்ஜி போடுகிறார்கள். இட்லி, தோசை, பூரி, பிரியாணி என தள்ளுவண்டிக்கடைகளில் ஒரு கூட்டம். பெங்களூரில் கிடைக்கும் சாம்பாரை சாம்பார்னு சொல்ல மட்டும் மனசு வரமாட்டேங்குது. எல்லா ஊர்களிலும் மாலை நேரங்களில் கடைவீதிகளுக்கான அழகு தங்க விலை போலக் கூடிக்கொண்டேயிருக்கிறது.

பெங்களூரில் பயணிப்பதற்கு பொறுமை ரொம்ப அவசியம். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவ்வளவு எளிதில் சென்று விட முடியாது. நகர நெரிசல், சிக்னலில் மாட்டி நம்முடைய பெரும்பாலான நேரம் அதில் போய்விடும். பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கின்றன.

செப்டம்பர் 8 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநாட்டு அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதில் முதல் நிகழ்வாக மதுரை புத்தகத் திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெற்றது. 200க்கும் மேலான அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் இவற்றோடு மாமதுரை அரங்கு, கல்லூரி மாணவர்களுக்கான படைப்பூக்கப் பயிலரங்கு, பள்ளி மாணவர்களுக்கான சிறார் அரங்கு, உரையரங்கு, கலைநிகழ்ச்சிகள் என மதுரை புத்தகத் திருவிழா பெருங்கொண்டாட்டமாக நடந்தது. எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துக்கிருஷ்ணன், பவா செல்லத்துரை, சு.வெங்கடேசன் என பலரின் உரைகளை கேட்க வாய்ப்பு கிட்டியது.

மாமதுரை போற்றுதும்

மதுரையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் மாமதுரை போற்றுதும் அரங்கை அமைக்க ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களில் என்னையும் தேர்வு செய்திருந்தார்கள். பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம், பேராசிரியர் இரத்தினக்குமார், பேராசிரியர் பெரியசாமி ராஜா இவர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது எங்களுக்கு பெருவாய்ப்பாக அமைந்தது. வரலாற்றுக்கு முந்தைய கால மதுரை தொடங்கி சமகால மதுரை வரை பல்வேறு விசயங்களை பதாகைகளாக வடிவமைத்தோம். ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்தோடு வந்து பார்த்தனர்.

மண்ணின் மைந்தர் விருது

மதுரை புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளுமைகளை சிறப்பிக்கும் பொருட்டு மண்ணின் மைந்தர் விருது பத்து பேருக்கு வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர் வேதாச்சலம், எழுத்தாளர்கள் சுப்பாராவ், ந.முருகேசபாண்டியன், அ.முத்துக்கிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன், சுரேஷ்குமார் இந்திரஜித், இந்திரா சௌந்திரராஜன், லெட்சுமி சரவணக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக புத்தகங்களை வெளியிட்ட கல்லூரி மாணவிகள் எம். தீபிகா, எஸ்.சோபனா, என்.நிசாலினி, எஸ்.என்.அறிவுமதி, எம்.அனு, எம்.தீபிகா, ஆர்.எஸ்.சுவேதா, எஸ்.பி.தமிழ்ச்செல்வி ஆகிய எட்டு மாணவிகளுக்கு மண்ணின் மைந்தர் விருது வழங்கப்பட்டது.

படைப்பூக்கப் பயிலரங்கு

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, சினிமா, நாடகம், புனைவு, தொல்லியல், பேச்சு, நுண்கலை என பலதுறைகளிலும் துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்துவந்து படைப்பூக்க பயிலரங்கு நடத்தினர். படைப்பூக்கப் பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சில நிகழ்வுகளின் உரைகளை கொஞ்ச நேரம் கேட்கவும் முடிந்தது. பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறார் பயிலரங்கு

பள்ளி மாணவர்களுக்கு காகிதக்கலை, ஓலைக்கலை, கதையாக்கம், சிறார் நாடகம், காமிக்ஸ் வரைதல், கதை சொல்லுதல், எழுத்தாக்கம் என பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. கூடுதலாக சிறார் திரைப்படங்கள் மதியத்திற்கு மேல் காண்பிக்கப்பட்டன. கதை வாசித்தல் போன்ற நிகழ்வுகளுடன் சிறார் அரங்கு உற்சாகமாக நிகழ்ந்தது.

வாங்கிய புத்தகங்கள்

ஒவ்வொரு அரங்கிலும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறைய இருந்தாலும் கைவசம் இருந்த தொகைக்கு ஏற்ப சொற்ப புத்தகங்களே வாங்கினேன். வெகுநாட்களாக வாசிக்க நினைத்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் மண்டியிடுங்கள் தந்தையே, நான் திரு.வி.க. பள்ளியில் பயின்ற போது முன்னாள் மாணவராகயிருந்த வீரபாண்டியன் எழுதிய சலூன் என்ற இரண்டு நாவல்களையும்; மணிவாசகர் பதிப்பகத்தில் சங்க இலக்கியத்தில் யானைகள், தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு தூண்கள், கல்வெட்டில் வாழ்வியல் போன்ற நூல்களையும்; செண்பகா பதிப்பகத்தில் பதிமூன்று சிறுநூல்கள், யுரேகா பதிப்பகத்தில் அறிவியல்சார்ந்த குறுவெளியீடுகள், அதோடு மனங்கவர்ந்த அன்பின் வண்ணதாசனிடம் கையொப்பம் பெற்று ஒரு சிறு இசையில் நூல் ஆகியவற்றையும் வாங்கினேன்.

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை

2019ல் நடைபெற்ற 14வது மதுரை புத்தகத் திருவிழாவில் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூல் இடம்பெற்றது. இரண்டாண்டு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு நடந்த 15வது மதுரை புத்தகத்திருவிழாவில் இரண்டாம் பதிப்பான திருவிழாக்களின் தலைநகரம் இடம்பெற்றது பெருமகிழ்ச்சி. 2023இல் இன்னும் விரிவாக 40 திருவிழாக்களோடு நூலைக் கொண்டுவரும் ஆசையை மதுரையும் தமிழும் நிறைவேற்றட்டும்.

பத்மஸ்ரீ விருது வாங்கச் சென்று திரும்பிய தனது அனுபவம் பற்றி ஓவியர் மனோகர் தேவதாஸ் சாந்தோம் தென்னிந்திய திருச்சபை தேவாலய செய்திமடல் ஒன்றில் எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து சகோதரர் அனுப்பியிருந்தார். நன்றியுணர்வு, மனநிறைவு, தந்தைமை, நெகிழ்ச்சி போன்றவை வெற்றுவார்த்தைகளல்ல, இன்றும் பொருளுள்ளவை என்று தோன்றச் செய்யும் கட்டுரை என்பதால் மனோகர் தேவதாஸ் அவர்களுக்குப் பிரியாவிடை தரும் இந்த தருணத்தில் பதிவேற்றுகிறேன்:

பத்மஸ்ரீ விருது பெற்ற அனுபவம் மனோகர் தேவதாஸ்

எனக்கு 2020 ஜனவரியில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. விருதளிப்பு விழா ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருந்தது. மார்ச் மாத மத்தியில் மடகாஸ்கரிலிருந்து சுஜா மெட்ராசுக்கு (சென்னைக்கு) வந்தாள். அவள் வந்த மூன்று நாட்களில் பெருந்தொற்று காரணமாக விழாவை அரசு காலவரையின்றி ஒத்திவைத்தது.

2021 அக்டோபர் மத்தியில் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. நவம்பர் 8-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முறைப்படி விருதை வழங்குவார் என்று கண்டிருந்தது. எனக்கும் உடன் வருபவருக்கும் விமானக் கட்டணம் திருப்பியளிக்கப்படும். ஓட்டல் அசோக்கில் நவம்பர் ஏழாந்தேதி பிற்பகலில் இருந்து ஒன்பதாந்தேதி முற்பகல் முடிய நாங்கள் சேர்ந்து தங்கிக்கொள்ளலாம். கைச்செலவுக்கும் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அக்கடிதம் சொன்னது.

என் உடன் வந்தது இளம் கட்டிடக்கலைஞனான முகிலன். முந்தைய நாள் விடிய விடிய மழைகொட்டியது. எனவே விமான நிலையத்திற்கு சற்று முன்னதாகவே போய்விடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். மழை சட்டென்று வெறித்துவிட்டதால் விமானத்தில் ஏறும் நேரத்துக்கு மூன்று மணிநேரம் முன்னதாகவே போய்ச்சேர்ந்துவிட்டோம். மீண்டும் மழைகொட்டத் தொடங்கியதால் விமானம் தாமதமாக வந்தது. மாலை ஆறுமணிவாக்கில் தில்லியில் ஓட்டலை அடைந்தோம். அசதியூட்டுகிற பயணம் என்றாலும் இயல்புபோலவே இருந்தேன்.

அமைச்சகத்தில் தொடர்புடைய மூன்று அலுவலர்களில் ஒருவரான பத்மா என்ற தமிழருடன் விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தொடர்பில் இருந்தேன். அவர் தமது இரு நண்பர்களுடன் எனது அறைக்கே வந்து பார்த்தது மகிழ்ச்சி அளித்தது. ஒன்றாம் வகுப்பில் இருந்து சுஜாவுடன் கூடப்படித்த ஜனகா எனக்கு மயில் பச்சை நிறத்தில் ஒரு குர்தாவைப் பரிசளித்தார். ஒரு மாதம் முன்பு SCILET பிரெமிளா பரிசாகக் கொடுத்திருந்த பட்டு வேட்டியோடு இந்தக் குர்தாவை அணிந்துகொண்டேன்.

விருது வழங்கும் நாளில் 2.30 மணிக்கு ஒத்திகையும் அதைத் தொடர்ந்து முறையான வைபவமும் குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடந்தேறின. முகிலனுக்கு அழைப்பு இருந்தாலும் குடியரசுத் தலைவரிடம் என்னைக் கூட்டிச் செல்ல அனுமதி இல்லை. ஒரு ராணுவ வீரரே என்னை அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் முகிலன் உடன்வந்த பிறருடன் அமர்ந்திருந்தார். குடியரசுத் தலைவர்க்கு ‘நமஸ்கார்’தான் செய்யவேண்டுமேயொழிய கைகுலுக்கக் கூடாது என்று விருதுபெறுபவர்களிடம் வலியுறுத்திச் சொல்லப்பட்டது. எனது முறை வந்தது. பார்வையாளர்கள் சற்று கூடுதல் உற்சாகத்துடன் கைதட்டியதாக முகிலன் சொன்னார். விருது வாங்க எந்தப் பக்கம் திரும்பவேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் எனக்குச் சொல்லவேண்டியிருந்தது. நிழற்படம் எடுக்கப்பட்டது. அவர் ‘எக்ஸலண்ட்’ என்று சொன்னார். பின் கை குலுக்கியபடி ‘காட் பிளஸ் யூ’ என்றார்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு பிரம்மாண்டமான அரங்கொன்றில் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பிரதமர் என்னிடம் வந்தார். என்னிடம் உற்சாகமாகக் கைகுலுக்கி மதுரை பற்றிய எனது நூல் நாட்டுக்கு ஒரு கொடை என்று சொன்னார். திருமதி நிர்மலா சீதாராமன் நுட்பமான எனது கோட்டோவியங்கள் அவரது மாமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டன என்றார். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அவர் பிறரையும் சந்திக்கவேண்டியிருந்ததால் விடைபெற்றார். பிறகு குடியரசுத் தலைவர் எனக்கு கைகொடுத்தார். எங்கள் முதலமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது எனது புத்தகத்தைத்தான் கொடுத்தார் என்று சொல்லத் துவங்கினேன். “ஆம், அந்தச் சிறந்த புத்தகத்தை திரு ஸ்டாலின் எனக்குக் கொடுத்தார்” என்று உடனே சொன்னார். விருதுபெற்ற வேறு சிலரையும் சந்தித்தேன்.

சென்னையில் கனமழை பொழிந்துகொண்டிருந்ததால் திரும்பி வரும் விமானம் தாமதாகலாம் என்று பயந்துகொண்டிருந்தேன். ஆனால் சரியான நேரத்தில் மழை நின்றது. பயணம் சௌகர்யமாகவே இருந்தது.

தில்லியில் நாங்கள் காலை 8.15 மணிக்கெல்லாம் ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்துவிட்டோம். விமானத்தில் ஏறிய முதல் ஆட்கள் நானும் முகிலனும்தான். விமானத்தின் கதவருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி தன்னை துணை விமானி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு பெண் இந்த விமானத்தைச் செலுத்தவிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னேன். ரோசி என்ற விமான பணிப்பெண் என்னைப் பற்றி நிறையத் தெரிந்துவைத்திருந்தார். கொஞ்ச நேரத்திலேயே என்னை ‘மனோகர் அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானி டி’சில்வா – அவர் ஒரு தமிழர் – ஒரு அறிவிப்பைச் செய்தார். “ ஓவியரும், எழுத்தாளரும், இசைக்கலைஞரும், அறிவியலாளரும், இன்ன பிறவுமான திரு மனோகர் தேவதாஸ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டு நம்முடன் இவ்விமானத்தில் ஊர்திரும்புகிறார் ” என்றார். நான் எழுந்து நின்றேன். பயணிகள் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் கூச்சமாகவும் உணர்ந்தேன். 2020-இல் விருது அறிவிக்கப்பட்டபோது தி இந்து நாளிதழில் ஃபேபியோலா எழுதியிருந்த கட்டுரையின் அறிமுக வரிகளைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். முகிலனும் நானும்தான் முதல் ஆளாக வெளியேறி ஏரோபிரிட்ஜில் கால்வைத்தோம். விமானிகள் இருவரும் நேரில் வந்து வாழ்த்தி விடைதந்தார்கள்.

மாலை 4.30 மணிவாக்கில் வீடுதிரும்பினோம். பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பும் என்னை வரவேற்குமுகமாக தமிழ்த் திரைப்படப் பாடல் சரணம் ஒன்றை சற்றே மாற்றிப்பாடி எனது உதவியாளரான கிரேஸ் வரவேற்றார்.

பாதுகாப்பான பயணத்திற்காகவும், அற்புதமான இந்த அனுபவத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி.

-மனோ

நன்றி: EānMé (December 2021), CSI St. Thomas English Church, Santhome, Chennai

மதுரை 1950 அஞ்சலட்டை வெளியீடு

மனோகர் தேவதாஸ்

செந்தீ நடராசன் எழுதிய பண்பாட்டுத் தளங்கள் வழியே நூலில் தொ.பரமசிவன் அய்யாவின் மதிப்பரையைப் பார்க்கக் கிடைத்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. தொ.ப.வின் நூல்களில் வராத இந்த மதிப்புரையை பகிர்கிறேன்.

மதிப்புரை

தமிழ் ஆய்வுலகம் என்ற ஒன்று 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் நாட்டில் கருக்கொண்டது. அதன் முதல் அசைவாக மனோன்மணியம் சுந்தரனாரின், ‘ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி’யினைக் குறிப்பிடலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் ‘செந்தமிழ்’ இதழின் வழியாகத் தமிழ் ஆய்வுலகம் உருத்திரளத் தொடங்கியது. முதல் முப்பது ஆண்டுகளுக்குள் தமிழ் ஆய்வுலகம் மற்றும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அதாவது எழுத்திலக்கியச் செய்திகளுக்கு உரைவிளக்கம் தருவதோடு பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் தேங்கிப் போயிருந்த காலத்தில் இலக்கியச் செய்திகளைக் களஆய்வுச் செய்திகளோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்க்கின்ற முயற்சியினைச் ‘செந்தமிழ்’ இதழின் ஆசிரியர் மு. இராகவையங்கார் தொடங்கி வைத்தார். இதுவே தமிழாய்வுலகம் பெற்ற புதிய பரிமாணத்தின் தொடக்கமெனலாம். அவரைத் தொடர்ந்து ‘தமிழ்க்கிழவர்’ மயிலை. சீனிவேங்கடசாமி இந்தப் புதிய நெறியினை வளர்த்தெடுத்தார்.

1923-இல் தாம் இளைஞராக இருந்த போதே ‘லட்சுமி’ என்னும் இதழில் மணிமேகலை காட்டும் மணிபல்லவத் தீவினைக் கண்டறியும் முயற்சியில் அவர் கட்டுரை ஒன்றெழுதினார். அதற்குப் பின் வந்த இருபது ஆண்டுகளில் தமிழ்ப்பண்பாட்டின் வலிமையான வேர்கள் அவைதீக மரபில் கால் கொண்டிருப்பதை அவரது எழுத்துக்கள் தமிழாய்வாளர்களுக்கு எடுத்துக் காட்டின. அவரைத் தொடர்ந்து காசுகள், அணிகலன்கள், விளக்குகள் எனப் புழங்கு பொருட்களை முதலடையாளமாகக் கொண்டு மறைந்திருந்த தமிழ் மரபினை மீண்டும் கட்டமைத்துக் காட்டியவர் சாத்தன்குளம் அ. ராகவன் ஆவார். இந்த மூவரின் ஆய்வுலக வழித் தோன்றலாக நமக்கு கிடைத்தவர் பேராசிரியர் நா. வானமாமலை ஆவார்.

இயக்கவியல் பொருள் முதல்வாதப் பின்னணியில் எளிய மக்களின் வாழ்க்கை அசைவுகளையும், வழக்காறுகளையும் மூலப்பொருளாகத் திரட்டி அதற்குரிய ஆராய்ச்சி முறையியல் ஒன்றையும் அவர் உருவாக்கிக் காட்டினார். அவரது தொடர்ந்த முயற்சியின் விளைவாக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஆய்வுத் துறையாகவும், கல்விப் புலமாகவும் வளர்ந்தது. பழங்காலத்துச் சமணமுனிவர்களைப் போல தன்னுடைய கருத்தியலை ஏந்திச் செல்ல அவர் ஒரு மாணவர் பட்டாளத்தையும் உருவாக்கினார். தமிழாய்வுலகில் அவரது ‘நெல்லை ஆய்வுக்குழு’ மாணவர்கள் முயற்சி நினைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மாணவர் வரிசையில் இந்த நூலாசிரியர் செந்தீ நடராசன் ஒருவர் என்பதை நானறிவேன்.

ஆறு கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளுமே களஆய்வுச் செய்திகளை மூலத் தரவுகளாகத் கொண்டவை.

முதற் கட்டுரையான ‘அவ்வை நோன்பு’ அந்த நோன்பினைச் சமணத்தோடு தொடர்புப்படுத்த முயலுகின்றது. இந்த முயற்சிக்கான அடிப்படைக் காரணம் அவ்வை என்பது சமணப் பெண் துறவிகளைக் குறிக்கும் சொல்லாக நிகண்டு நூல்களில் காணப்படுவதேயாகும். ஆனால் இலக்கியங்களில் இந்தச் சொல் இந்தப் பொருளில் பதிவு பெறவில்லை. இதனோடு ஒலித் தொடர்புடைய, ஐயன் என்பதின் பெண்பாற் சொல்லான ‘ஐயை’ என்ற சொல்லே காணப்படுகிறது. அவ்வை நோன்பு மகப்பேற்று நோன்பு என்பதாகவே தோற்றமளிக்கிறது. சமணமே உலகில் முதன் முதலாக புலாலை நீக்கச் சொன்ன மதமாகும். பிச்சை எடுப்பதனை அங்கீகரித்த மதமுமாகும். அவ்வை நோன்பில் புலால் இடம் பெறாமையும், பிச்சை மதிப்பிற்குரிய செயலாகவும் காட்டப் பெறுவது ஆய்வாளர் செந்தீ நடராசனை இந்தத் திசை நோக்கி சிந்திக்கத் தூண்டியிருக்கலாம். ஆனால் அவ்வை நோன்பு நேரிடையாகவும், மறைமுகமாகவும், வணிகத்தோடு தொடர்புடைய சாதியாரால் தான் இன்றளவும் விரும்பிக் கொண்டாடப்படுகிறது. சமணம் வணிகரால் வளர்க்கப்பட்ட மதம். ‘வாரிசுரிமைக் கவலை’யும் அதன்விளைவாகத் தத்தெடுக்கும் பழக்கமும் வணிகச் சாதியாருக்கே மிகவும் உண்டு. இனக்குழுச்சடங்குகளோடு பெருஞ்சமய நெறிகள் ஊடாடியிருக்கின்றன. அந்த வகையில் ஓர் இனக்குழுச் சடங்கின் எச்சத்தை தமிழ் நாட்டுச் சமணம் உள் வாங்கியிருக்கலாம் என்ற செந்தீநடராசனின் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது கட்டுரையும் சமணம் பற்றியதாகவே அமைகின்றது. திகம்பர சமணத் துறவிகளின் தோற்றத்தைக் குறிக்கும் ‘மயிராண்டி’ என்ற சொல் வைதீக நெறியாளர்களால் வசைச் சொல்லாக மாற்றப்பட்டதை இவர் கூர்மையாக இனம் கண்டு காட்டுகிறார். ஆனால் இலையிலிட்டுப் படைத்த உணவைச் சுற்றி நீர் தெளிப்பது சமண வெளிப்பாடாகத் தோன்றவில்லை. வீட்டுச் சடங்குகளில் படைக்கப் பெற்ற உணவைச் சுற்றி பெண்கள் கையில் சிறிதளவு நீர் எடுத்துத் தெளிப்பதை ‘நீர் விளவுதல்’ என்ற சொல்லாலும் குறிப்பர். பாத்திரத்தில் பூவிதழ்கள் இட்ட நீரையே இவ்வாறு எடுத்துத் தெளிப்பர். இது சடங்கின் முடிவைக் குறிக்கும் ஓர் அசைவாகும். மாறாக உண்ணும் இலையினைத் தரையில் விரிப்பதற்கு முன்னால் அந்த இடத்தில் தண்ணீரைத் தெளித்து ‘தலசுத்தி’ செய்யும் முறை சமணருக்குரியதே.

கோவலனுக்கு உணவு படைக்க முற்படும் கண்ணகி

“மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி  

குமரி வாழையின் கோட்டகம்”

விரித்த செய்தியினைச் சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது.

(தலசுத்தி செய்யும் இப்பழக்கம் வைணவப் பார்ப்பனர்களிடையே இன்றும் காணப்படுகிறது.) ஆனால் நீர் விளவுதல் பெண்கள் செய்யும் வீட்டுச் சடங்குகளின் நிறைவுப் பகுதி என்றே தோன்றுகிறது; சமணத் தோற்றமுடையது என ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எஞ்சிய மூன்று கட்டுரைகளும், கட்டுரைகளுக்கான மூலத்தரவுகளும் நாஞ்சில் நாடு, ஆய்நாடு, வேணாடு என்று மூன்று பெயர்களில் சுட்டப்படும் நிலப்பகுதியினைச் சார்ந்ததாகும்.

முடிப்புரை அம்மன் வழிபாடு ஒடுக்கப்பட்டவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டு தெய்வமாக்கப்பட்டால், மேல்சாதி ஆளுமை அதனை எப்படிப் பார்த்தது என்பதற்கான அடையாளமாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இது அறியப்படாத வழிபாட்டு நெறியாகக் காணப்படுகிறது. ‘புரை’ என்பது இடப்பொருள் தரும் சொல்லாகும். இங்கே முடி தலையிடத்தில் சூடப்பட்ட அணிகலனாகத் தோன்றவில்லை. மாறாக, காலமல்லாத இறப்பைச் சந்தித்த பெண்ணின் தலைமுடியாக இருக்கலாம். இவ்வகை நிகழ்வுகளின் தொகுதி முடிப்புரை அம்மன் என்னும் வழிபாட்டு நெறியினை (Cult) உருவாக்கி இருக்க வேண்டும். திரு. செந்தீ கண்டுபிடித்துள்ள இந்த புதிய ஆய்வுக்களம் நம்முடைய ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்.

கேரளச் சமூகத்தின் திருமண உறவுகள் குறித்த கட்டுரையும், குமரி மாவட்டச் சமூக ஒடுக்குமுறைக்கெதிரான குரல்களைப் பற்றிய கட்டுரையும் தனித்தனியே இரண்டு நூற்களுக்குப் பொருளாக விரிக்கத்தக்கன. திரு. செந்தீ அவர்களின் உழைப்பு அதனைச் சாத்தியமாக்குமென நினைக்கின்றேன், நம்புகின்றேன்.

கடைசர் பற்றிய கட்டுரை இந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழில் சார்ந்து மக்கள் திரள்களின் தன்னடையாளத்தைக் காண முயல்வது தமிழ்நாட்டு ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். எண்ணிக்கையில் சிறுத்தவர்களாக, மூன்று அல்லது நான்கு வகையான தொழில் செய்கின்ற கடைசர் போன்ற மக்கள் திரள்கள் (சாதிகள்) தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன. “அனுலோமம்”, “பிரதிலோமம்” என்ற வடசொற்கள் குறிப்பிடும் (தமிழில் இவற்றுக்கு நிகரான சொற்கள் காணப் பெறவில்லை என்பது வியப்பே). சாதிக்கலப்பு மணங்கள் தமிழ்நாட்டில் உட்சாதிகளின் எண்ணிக்கையினை வட்டாரம் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் பெருக்கிக் காட்டியுள்ளன. இதன் விளைவாகவே ஒவ்வொரு சாதியும் சாதியின் உட்பிரிவுகளும் அடையாளத்தைக் காட்ட முற்பட்டன. அதன் தொடர்ச்சியாகச் சாதித் தொன்மங்களும், சாதிப் புராணங்களும் தோன்றத் தொடங்கின. இதனை மட்டும் நம்மால் உறுதியாகக் கணிக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் கள ஆய்வு நடத்தப் பெற்றால் மட்டுமே இந்நிகழ்வுகள் குறித்த ஆய்வுக் கோட்பாடு ஒன்றை நம்மால் உருவாக்க முடியும். அந்த வகையில் திரு, செந்தீ அவர்களின் “கள ஆய்வு” முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

பண்பாட்டுத் தளத்தில் நம்மை நோக்கி நிறைய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. அதிகாரப்பின்னணியில் ஒற்றைப் பண்பாட்டை முன்வைக்கும் கொடுமையான முயற்சிகள் நாள்தோறும் அரங்கேறுகின்றன. வளமற்றதாகக் கருதப்படும் மண் கூட ஒரு போதும் ஒற்றைத் தாவரத்தை ஏந்தி நிற்பதில்லை. வளமான மக்கள் திரள்கள் பண்பாட்டுத் தளத்தில் ஆயிரமாயிரம் அசைவுகளை உடையன. பன்முகத் தன்மை என்பதே மண்ணுக்கும் மக்களுக்கும் உயிர்சார்ந்த இயல்பாகும். மண் சார்ந்த அசைவுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் திரு. செந்தீ போன்றவர்கள் தங்களின் சமூகப் பொறுப்பினை நேர்மையாக ஆற்றுகின்றார்கள். இவரைப் போன்றவர்கள் அணி திரட்சியே தமிழ் ஆய்வுலகத்திற்கு புதிய தடம் அமைத்துத் தருமென நம்புகிறேன், வாழ்த்துகின்றேன்.

பேராசிரியர் – தொ.பரமசிவன்

தமிழியல் துறைத்தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

நெல்லை.

1-12-2002.

விக்கிமேனியா என்பது விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமீடியா பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிப்பவர்கள் ஆண்டுதோறும் சந்தித்துக் கொள்ளும் ஒரு கொண்டாட்டம். 2022இல் உலகின் 50 இடங்களில் விக்கிமேனியா சந்திப்பு & கொண்டாட்டம் நிகழ்ந்தது. அதில் இந்தியாவில் நடந்த நான்கு நகரங்களுள் மதுரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. கூடல் மாநகரில் தமிழ் வளர்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.

மதுரையில் விக்கிமீடியா அமைப்பின் உதவியுடன் விக்கிமேனியா நிகழ்வு ஆகஸ்ட் 14 ஞாயிறன்று மதுரை அண்ணாநகர் அருகிலுள்ள சக்ரா ரெசிடென்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் தமிழ்ச்செல்வம், ராமதேவன் இவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நீச்சல்காரன், மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், முகம்மது அம்மார், ஸ்ரீதர் போன்ற நண்பர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

விக்கிமேனியா சந்திப்பு விக்கிப்பீடியர்களின் அறிமுகத்தோடு தொடங்கியது. 5,000 கட்டுரைகள் தொடங்கிய பதிவரிலிருந்து விக்கிப்பீடியாவிற்கு தொடர்ந்து பங்களித்துவரும் பலரையும் நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பைக் குறித்து சொல்லச்சொல்ல நாமும் எதாவது செயலாற்ற வேண்டுமென்ற உந்துதல் கிட்டியது.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தது சகோதரர் ப.தமிழ்ச்செல்வம். அவர் வாயிலாக விக்கிப்பீடியாவில் ஒரு சில கட்டுரைகளைத் தொடங்கவும், திருத்தவும் முடிந்தது. மதுரையில் பெண்கல்விக்கு உழைத்த கேட்டிவில்காக்ஸ் அம்மையார் குறித்து எழுத முயற்சிசெய்தேன். பல படங்களை ஏற்றியிருக்கிறேன். குறிப்பிடும்படியான பங்களிப்பு என்றால் தொ.பரமசிவன் அய்யாவின் படத்தை விக்கிப்பீடியாவில் பகிர்ந்ததைச் சொல்லலாம். ” என்பது போன்ற விசயங்களைக் குறிப்பிட்டேன்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கிமீடியாவின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும் இச்சந்திப்பின் நோக்கம் குறித்தும் நீச்சல்காரன் தெளிவாக எடுத்துரைத்தார். விக்கிப்பீடியா மட்டுமில்லாமல் விக்சனரி, விக்கிமேற்கோள், பொதுவகம், விக்கித்தரவு போன்ற திட்டங்கள் இருப்பதையும் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் தெளிவான விளக்கங்களோடு எடுத்துரைத்தார்.

பள்ளிகளில் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தியதைக் குறித்து ஆசிரியர் ஸ்ரீதர் பேசினார். விக்கி நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை ஏற்றுவதைக் குறித்து தகவல் உழவன் பேசினார். விக்கிப்பீடியாவில் எழுதும்போது அதில் ஏற்றப்படும் கட்டுரைகள், அதிலுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசினார் செல்வசிவகுருநாதன்.

எல்லோருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினரான தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யாவை அழைக்கச் சென்றோம். மதிய நிகழ்வில் விக்கி வாயிலாக வழங்கப்படும் நிதிநல்கை குறித்து பாலாஜி எடுத்துரைத்தார். அதன்பிறகு சாந்தலிங்கம் அய்யாவை குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. ‘தமிழே திராவிடம்’ என்ற தலைப்பில் சாந்தலிங்கம் அய்யா உரையாற்றினார்.

டிஜிட்டல் உலகில் இயங்கும் இன்றைய இளைஞர்களிடம் தாம் கூறவேண்டியது என்ன என்பது பற்றி யோசித்த சாந்தலிங்கம் ஐயா, “இன்றைய அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் பற்றிய ஒவ்வாமையைச் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றுரீதியாக திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிப்பதே, அதனால் அச்சொல்லைப் புறந்தள்ளுவது நமக்கே இழப்பு” என்பதை வலியுறுத்தும்விதமாக ஒரு உரையைத் தயார் செய்திருந்தார். சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பங்கேற்பாளர்களையும் நடைமுறைகளையும் கவனித்து அதற்கேற்ப மேலும் சில விசயங்களையும் பேசினார். உரிய இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளுடன் கச்சிதமான வடிவத்தில் அமைந்த அவரது கட்டுரை விக்கிப்பீடியா கட்டுரைகளில் பங்களிப்பவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்று கலந்துகொண்டவர்கள் மகிழ்ந்தனர்.

விக்கிப்பீடியாவில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. எல்லோரும் சேர்ந்து குழுப்படம் எடுத்துக்கொண்டோம். விக்கிப்பீடியாவிற்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். விழாவில் கலந்துகொண்ட எல்லோருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சூடான தேநீரும் பஜ்ஜியும் சாப்பிட்டு கிளம்பினோம். சாந்தலிங்கம் அய்யாவுடன் தொல்லியல் தொடங்கி பல விசயங்களையும் உரையாடியபடி சென்றது மகிழ்ச்சி.

இதிலுள்ள படங்கள் விக்கிமீடியா பொதுவகத்தில் இச்சந்திப்பு குறித்த பக்கத்தில் ஏற்றப்பட்டுள்ளவை. பங்களித்தவர்களுக்கு நன்றி.

நாம் தேடுகிற விசயத்தை நாம் விக்கிப்பீடியா வாயிலாகப் பெற்றுக்கொள்கிறோம். விக்கிப்பீடியாவில் இல்லாத விசயங்களை அல்லது இன்னும் விரிவு செய்யவேண்டிய தகவல்களை நாமும் அதில் ஏற்றலாம். அது சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையும்.