பதினெட்டாம்படியான்

Posted: திசெம்பர் 24, 2023 in பார்வைகள், பகிர்வுகள்

மாலைநேர மஞ்சள்வெயில் அடித்துக் கொண்டிருந்தது. பாளையங்கோட்டை தபால் நிலையத்திற்கு நேரேயிருந்த தெருவில் இருந்த வீடுகளை வேடிக்கை பார்த்தபடியே அந்த இளைஞன் வந்து கொண்டிருந்தான். மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பழைய காரை வீடுகளும், மஞ்சள் காவி அடித்த சுவர்களையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. சில வீடுகளைப் புதுப்பித்துக் கட்டியிருந்தார்கள். தெருமுட்டும் இடத்தில் இருந்த வீட்டின் வெளிக்கதவைத் திறந்து மாடிநோக்கிச் சென்றான்.

அய்யா! என்று அழைத்தபடி வந்த குரலைக் கேட்டு வாசலருகே வந்தவர், வந்த இளைஞனை உள்ள வாங்க என்று வரவேற்பறையில் அமர வைத்தார். இடதுபக்கம் இரும்பு அடுக்குகளில் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பின்னால் இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள். அதற்குமேலே பெரியார் படம் மாட்டப்பட்டிருந்தது. வந்திருந்த இளைஞனை எங்கிருந்து வற்றீங்க? என்ன பண்றீங்க? என விசாரித்தார் தொ.ப. என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்.

‘அழகர்கோயிலிலிருந்து வற்றேங்கய்யா. எம் பேரு பதினெட்டாம்படியான். பாலிடெக்னிக் படிக்கிறேன்’ என்றான் அந்த இளைஞன். அவரது முகத்தில் புன்னகையும், அன்பும் அந்த இளைஞனின் மீது கவிழ்ந்தது. ‘அழகர்கோயிலிலிருந்து என்னைப் பார்க்க வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சிப்பா.’ என்றார். அழகர்கோயில் புத்தகம் வாசித்ததும் உங்களைப் பார்த்து, அழகர்கோயில், பதினெட்டாம்படிக்கருப்பு, சித்திரைத் திருவிழா பற்றியெல்லாம் பேசனும்னு ஆசையா இருந்துச்சுங்கய்யா. அதான் பாளையங்கோட்டைக்கு வண்டி ஏறிட்டேன்.’ என்றவரிடம், தொ.ப. ‘அழகாபுரிக்கோட்டையிலருந்து பாளையங்கோட்டைக்கு வந்துட்டீங்க’ என சிரித்தபடி சொன்னார். 

அழகர்கோயில் புத்தகம் எப்படிக் கிடைத்தது என விசாரித்தவரிடம் நூலை வாங்கிய விசயத்தைப் பற்றி விரிவாகச் சொன்னான். ‘கிடாரிப்பட்டியில் உள்ள கல்வெட்டுக்களைப் பார்க்க பசுமைநடை குழுவினர் வந்தபோது இவ்வளவுபேர் இந்த மலைக்கு எதுக்கு போறாங்கன்னு நானும் போய் பார்த்தேன். எங்க ஊர் மலையைப் பத்தி நிறையச் சொன்னாங்க. மதுரைன்ற பெயர் பொறித்த 2000 வருசத்துக்கு முந்தைய கல்வெட்டு இருக்குன்றது தொடங்கி நிறைய தகவல்கள் கிடைச்சுது. அப்ப நீங்க எழுதுன அழகர்கோயில் நூல் பத்தியும் குறிப்பிட்டாங்க. அதற்குப்பிறகு பசுமைநடை நடத்துன விருட்சத் திருவிழாவுக்கான அழைப்பிதழில் உங்க பெயரைப் பார்த்தேன். மேலும், அந்த அழைப்பிதழே அந்த விழாவுக்கு அழைத்தது. அன்னைக்கு கீழக்குயில்குடி சமணமலை ஆலமரத்தடியில் நடந்த விழாவில் உங்களைப் பார்த்தேன். நீங்க பேசியது மனதைத் தொட்டது. அன்று விழா முடிந்தபிறகு உங்களோடு பேச நினைத்தேன். நீங்கள் சென்றுவிட்டது அப்பொழுதுதான் தெரிந்தது. இன்று அந்த வாய்ப்பு கிடைச்சுருச்சு’ என்றான் பதினெட்டாம்படியான்.

தொ.ப. பசுமைநடை நிகழ்வில் கலந்துகொண்டது பற்றியும், அழகர்கோயில் ஆய்வு செய்கையில் சமணமலை அடிவாரத்தில் போய் அமர்ந்து ஏகாந்தமாய் இருந்ததையும் குறிப்பிட்டார். அப்பொழுது தொ.ப.வின் துணைவியார் இருவருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார். தொ.ப. துணைவியாரிடம் ‘மதுரை அழகர்கோயில்ல இருந்து பார்க்க வந்திருக்காரு’ என சிரித்தபடி சொன்னார். அவங்க ‘மதுரைக்காரங்களைப் பார்த்தாலே இவரு ரொம்ப குஷியாடுவாருன்னு’ சொல்லி பலகாரங்களை எடுத்துவரச் சென்றார். பதினெட்டாம்படியான் தன் பையிலிருந்து அழகர்கோயில் தோசையையும், ஒரு சில்வர் போத்தலில் சிலம்பாற்று நீரையும் தொ.ப.விடம் கொடுத்தான். அதைப் பார்த்த கணத்தில் தொ.ப. கடந்த காலத்திற்கே சென்றார். 

ஆடித்திருவிழாவில் அழகர்கோயில் தோசையை தேர்வடம் பிடித்து இழுக்கும் ஊர்க்காரர்களுக்கு கோயிலிருந்து கொடுப்பதையும், சிலம்பாறு குறித்து சிலப்பதிகாரத்தில் உள்ளதையும் சொன்னார். அந்தப் புத்தகம் எழுதிய நாட்களில் அழகர்கோயில் மலையிலும், அழகர்மலையைச் சுற்றிய கிராமங்களிலும் அலைந்து திரிந்த கதையைச் சொல்லச்சொல்ல பதினெட்டாம்படியானின் கண்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

விருட்சத்திருவிழா முடிந்ததும் பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் அழகர்கோயில் புத்தகம் கிடைக்குமா எனக்கேட்க அவர் தொ.ப.தாசன் என ஒருவரை அடையாளம் காட்டினார். அந்த இளைஞன் புத்தகம் இப்பொழுது அச்சில் இல்லை. ஆனாலும், நீங்க நாளை தல்லாகுளம் கருப்பசாமி கோயில்கிட்ட வாங்க நான் நகல் எடுத்து வச்சுருக்கேன் எனக்கூறி, மறுநாளே சொன்னதுபோல புத்தக நகலைக் கொண்டுவந்து கொடுத்தார் என தான் அழகர்கோயில் வாசித்த கதையை தொ.ப.விடம் பதினெட்டாம்படியான் கூறினான்.

அழகர்கோயில் எழுதி பல ஆண்டுகாலம் பதிப்பிக்கப்படாமல் இருந்து, பின் பதிப்பாகி வந்தபிறகு நல்ல கவனம் பெற்றதையும், தலைப்பிள்ளை போல அந்நூல் தன் பேர் சொல்வதையும் பதினெட்டாம்படியானிடம் கூறினார். நாட்டார்தெய்வங்களை ஏன் மளையாளம் எனச் சொல்கிறார்கள் என்ற ஐயத்தை தொ.ப.விடம் கேட்க, ‘நாட்டார்தெய்வங்களோட வாகனம் பெரும்பாலும் நீர்தான். சாமியாடிகள் தலையிலே கரகம் வைத்து ஆடுகிறபோது அந்த கரகத்துக்குள்ள இருக்கிற தண்ணீரிலே அந்த தெய்வத்தினுடைய ஸ்பிரிட்சுவல் எஸ்சன்ஸ் அடங்கியிருப்பதாக நம்பிக்கை. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிற ஆறுகளின் வழியாகத்தான் நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. எனவே, தெய்வங்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்தன என்ற நம்பிக்கையும் உருவானது’ என்றார். 

‘பதினெட்டாம்படியான் எங்க தாத்தாவோட பெயரைத்தான் எனக்கும் வச்சுருக்காங்க. என்னோட தங்கச்சி பேரு தீர்த்தக்கரை ராக்கு’ எனச் சொல்ல தொ.ப. ‘சரியாத்தான வச்சுருக்காங்க. பெயரன்னாலே தாத்தாவுடைய பெயரைக்கொண்டவன்தானே. அதுவுமில்லாம அழகர்கோயில் பக்கம் பதினெட்டாம்படிக்கருப்போட தங்கச்சியாத்தான் மலைமேல இருக்கிற இராக்காயியை நினைக்கிறாங்க. அதுனால உங்க தங்கச்சிக்கு தீர்த்தக்கரை ராக்கு பொருத்தமான பேரு’ எனச்சொல்லி சிலாகித்தார்.

பதினெட்டாம்படியான் அண்ணன் – தங்கை உறவு குறித்த மக்களின் கதையை தொ.ப.விடம் கேட்டான். ‘அழகருடைய தங்கையாகத்தானே மக்கள் மீனாட்சியை சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாம அழகர் மதுரைக்கு வரும்போது கொண்டுவரும் உண்டியல்களை, ஆபரணப்பெட்டிகளை சீர் என்றுதானே சொல்றாங்க. “தல்லாகுளம் விட்டார் – தமுக்கடிக்கும் மேடைவிட்டார் மானாமதுரை விட்டார் – மதுரையிலே பாதிவிட்டார்” அப்படின்னு வர்ணிப்பு பாட்டே இருக்கே. தமிழர்களுடைய பண்பாட்டின் வேராக இருப்பது அண்ணன் தங்கை உறவு’ எனச் சொன்னார்.

மதுரையில் தொ.ப. பணியாற்றிய காலத்தில்தான் சிறுவனாக இருந்ததால் அவரிடம் படிக்க முடியாமல் போனதே என வருத்தப்பட்டான் பதினெட்டாம்படியான். மேலும், மதுரை குறித்தும், அதன் தொன்மை குறித்தும் தொ.ப.விடம் பேச மீனாட்சி என்ற தாய்த்தெய்வத்தின் சிறப்பை, பட்டம் சூடி அரசாளும் பெண் தெய்வம் இந்தியாவிலேயே மீனாட்சிதான் என பல விசயங்களை சொன்னார். 

அழகர் கல்யாணத்துக்கு வராமல் துளுக்க நாச்சியார் வீட்டுக்கு கோவித்துக்கொண்டு போவது பற்றி மக்கள் சொல்லும் கதைகளைப் பற்றி தொ.ப.விடம் கேட்க ‘நம்ப முடியாத, விடை சொல்ல முடியாத கேள்விகளுக்கு கதைகளை விடையாகச் சொல்வது நாட்டார் மரபு’ என எடுத்துரைத்தார். அப்பொழுது அவரது பேத்தி மதுரா வந்து தாத்தாவிடம் ஏதோ கேட்க அவர் ‘இங்கபாரு, மதுரையில இருந்து வந்துருக்காங்க. வணக்கம் சொல்லு’ எனச் சொல்லச் சொன்னார். அந்தச்சிறுமியும் பதினெட்டாம்படியானுக்கு வணக்கம் சொல்லியது. தொ.ப.வின் குணமும், அவரது வீடும் அவனுக்குள் ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது. 

தொ.ப. பதினெட்டாம்படியானிடம் ‘நீங்க பாலிடெக்னிக்கில் என்ன படிக்கிறீங்க?’ எனக் கேட்க ‘எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்’ எனச் சொன்னான். உடனடியாக அவர் ‘படிப்பது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் ஆனால் நீங்கள் தமிழ் நேசன்’ என்றார் சிரித்தபடி. மேலும், ‘உங்கள் பாடங்களைத் தாண்டி நிறைய வாசிங்க. குறிப்பா வயதான மனிதர்களை கண்டு நிறையப் பேசுங்க. அவங்களோடு உரையாடுங்க. திருவிழாக்குள்ள அலைந்து திரிந்து என்னென்ன விதமான வேண்டுதல்கள், எத்தனைவிதமான மக்கள், திருவிழாக் குறித்த கதைகளை சேகரிங்க.’ என்றார். தொ.ப.வின் துணைவியார் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்தார். அவர்தான் இப்பொழுதே கிளம்பினால்தான் ஊருக்குப் போக முடியும் எனச் சொல்லிக் கிளம்ப, அவர்கள் அந்த இளைஞனை சாப்பிட வைத்தனர். சாப்பிட்டு முடித்து அவரிடம் விடைபெற்றுக் கிளம்பும்போது, தொ.ப. தான் எழுதிய ‘விடுபூக்கள்’ என்ற நூலைக் கொடுத்தார். பதினெட்டாம்படி அவரிடம் கையொப்பம் கேட்டுவாங்கிக்கொண்டான். 

வாசல்வரை வந்து சிரித்தபடி விடைகொடுத்தார் தொ.ப. மாடியிலிருந்து இறங்கி வீதியில் நடக்கத்தொடங்கிய பதினெட்டாம்படியான், தெருமுக்குத் திரும்பிய கணத்தில் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பு கதவு மணிகள் அதிர்ந்து ஒலித்தது. இரவுப்பூசை செய்த பூசாரி கருப்பன் சிரிக்கிறான் எனச் சொல்லிக்கொண்டார்.

-சித்திரவீதிக்காரன்

பின்னூட்டமொன்றை இடுக