Archive for the ‘மதுரையில் சமணம்’ Category

greenwalkers

மலைக்க வைக்குமளவு மழை இந்தாண்டில் மதுரையில் பெய்யாவிட்டாலும் முல்லைப்பெரியாறு பகுதியிலும், மூலவைகைப் பகுதியிலும் மழை பெய்து வைகை அணை ஓரளவு நிரம்பி அவ்வப்போது வைகையாற்றில் நீரோடுவதைப் பார்க்க முடிந்தது. தெப்பக்குளம், மாங்குளம் மீனாட்சிபுரம் பசுமைநடை செல்லும் போது வைகையை ஆற்றங்கரைச்சாலைகளிலும், பாலத்தின் மீதிருந்தும் பார்த்துக் கொண்டே சென்றேன். மீனாட்சிபுரம் பசுமைநடையின் போது அடுத்தடுத்த நடைகள் மருதநிலங்களினூடாக அமைந்த மலைகளை நோக்கியே இருக்குமென பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அறிவித்தார். வைகையை மலைமீதிருந்து பார்க்க சித்தர்மலை சென்றால் நன்றாகயிருக்குமென்று மனதுக்குள் தோன்றிய ஓரிரு நாட்களில் அடுத்தநடை சித்தர்மலையில் என குறுந்தகவல் வந்தது.

sithermalai1

வைகையில் கொஞ்சமாய் நீரோட்டம் இருந்ததை வேடிக்கை பார்த்தபடி அதிகாலைப்பனியினூடாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நோக்கி சகோதரர்கள் செல்லப்பா, பிரசன்னாவுடன் சென்றேன். கூதலான மார்கழியில் நீளமான இராத்திரியை வரவேற்க போர்வைகள் விற்பவர்கள் கிராமங்களை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் முன்பாக நின்றிருந்த குழுவினருடன் இணைந்து கொங்கர்புளியங்குளம், செக்காணூரணி, விக்கிரமங்கலம், சொக்கன்கோவில்பட்டி, பெருமாள்பட்டி, பானாமூப்பன்பட்டி, போலக்காபட்டி வழியாக கல்யாணிப்பட்டி சென்று சித்தர்மலை அடிவாரத்தை அடைந்தோம். பெரியார்நிலையத்திலிருந்து கல்யாணிப்பட்டி தோராயமாக 40 கிலோமீட்டர்கள் வரும்.

பூஞ்சோலைகளுக்கு நடுவே சாலைகள். மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, பிச்சிப்பூ, கோழிக்கொண்டை என வழிநெடுகப் பூந்தோட்டங்கள். வெங்காயம், வெண்டைக்காய், நெல் மற்றும் பயறு வகைகளையும் இப்பகுதிகளில் பயிர் செய்கின்றனர். சமணக்கல்வெட்டுகள் உள்ள உண்டாங்கல்லு மலையையொட்டி உள்ள குளத்தில் நீர் நிறைந்திருந்தது. வழியில் கால்வாய்களில் நீர் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. காலை நேரங்களில் வயல்வெளிகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் காண முடிந்தது. வழியில் பார்த்த அந்திமந்தாரை வண்ணத்தில் இருந்த சுடுகாடு கட்டிடம் மிகவும் ஈர்த்தது. ஆனாலும், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது.

சுடுகாடு

இருநூறுக்கும் அதிகமானோர் இந்நடைக்கு வந்திருந்தனர். எல்லோரும் உற்சாகமாக மலையேறத்தொடங்கினோம். கொஞ்சம் பெரிய மலை. ஏற்கனவே சென்ற மலையென்பதால் சிரமமாகயில்லை. கொஞ்சதூரம் படிகள்; அதன்பின் பாறைகள். அதைப்பிடித்து ஏற இரும்புக்கம்பியிருக்கிறது. நரந்தம்புற்கள் செழித்து வளர்ந்திருந்தன. பறித்து நுகர்ந்து பார்த்தால் எலுமிச்சை நறுமணம். அதனால்தான் ஆங்கிலத்தில் லெமன்கிராஸ் என்கிறார்கள். மனதிற்கு புத்துணர்வு ஊட்டக்கூடியதாம். தேநீராக இதை அருந்தலாமாம். செதுக்கப்பட்ட சமணப்படுகையில் போய் படுத்தேன். வியர்வை பொங்கி வழிந்தது. எழுத்தாளர் அர்ஷியா அவர்களுடன் பாறைகளில் கிறுக்கியிருந்த பெயர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பெயிண்ட் டப்பா சகிதம் மலைகளுக்கு வந்து தங்கள் வருகைப் பதிவு செய்யும் காதல்கிறுக்கர்கள் நம்ம நாட்டில் அதிகம்.

sithermalai

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா சித்தர்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களைக் கூறினார். மேலும், சேரநாட்டிற்கும் பாண்டியநாட்டிற்குமான பெருவழிப்பாதை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சமீபத்தில் தந்தி தொலைக்காட்சியில் யாத்ரீகன் நிகழ்ச்சியில் ‘கண்ணகி சென்ற பாதை’ குறித்து பேசியதைக் குறிப்பிட்டார். அக்கதையில் உள்ளபடி பார்த்தால் கண்ணகி இவ்வழியாகத்தான் சேரநாட்டிற்குள் சென்றிருக்க முடியும். அக்காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதையில் இம்மலை அமைந்திருக்கிறது என்றார்.

map

பசுமைநடைக்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த விஜயகுமார் அவர்களை பல்மருத்துவர் ராஜன்னா அறிமுகம் செய்து வைத்தார். POETRY IN STONE எனும் தளத்தில் தொடர்ந்து சிலைகள், கோயில்கள் மற்றும் நம் கலைச்செல்வங்கள் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்து வருகிறார். மேலும், சிலைத் திருட்டை தடுத்து நம் வரலாற்றுப் பொக்கிஷங்களை காக்கும் பணியையும் செய்து வருகிறார். இத்தளத்தை முன்பு தொடர்ந்து வாசித்திருக்கிறேன். படங்கள் மிகவும் தெளிவாகவும், அந்த இடத்தின் வரலாறு மிக எளிமையாகவும் பதிவு செய்திருப்பார்.

விஜயகுமார் அவர்கள் பசுமைநடை குழுவினருடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். “பசுமைநடைக்கு பத்து இருபது பேர் வருவார்களென்று நினைத்தேன். ஆனால், இங்கு கடலே திரண்டிருக்கிறது. மதுரையில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். நான் சிங்கையிலே ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒருமுறை எங்க அலுவலக வாசலில் சாலைப்பணி செய்யும் நம்மாள் ஒருவர் அந்த ஊர்க்கார மேலதிகாரியிடம் உடைந்த ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மேலதிகாரி புரிந்தாலும் புரியாத மாதிரி நடித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் என்ன விசயம் என்று கேட்டேன். அவர் இரண்டு சீருடைகள் கொடுத்திருக்காங்க. ஒன்றை மாற்றி ஒன்றை துவைத்துப் போட்டால் காயமாட்டேங்குது. அதனால் இன்னொரு உடுப்புக்கேட்டேன் என்றார். நான் அந்த மேலதிகாரியிடம் ஆங்கிலத்தில் கூறினேன். உடனே, உனக்கு எப்படி அவன் பேசுவது புரிந்தது என்றார். நானும் அந்த ஊர்க்காரர்தான் என்றேன். அவன் ஏளனமாகப் பார்ப்பது போலத்தெரிந்தது. நான் அந்த மேலதிகாரியிடம் சொன்னேன். எங்க ஊர் 2500 ஆண்டுப் பழமையான ஊர் மட்டுமல்ல, தொடர்ந்து உயிர்ப்புடன் வாழும் தன்மையுடையது என்றேன். அது மேலதிகாரிக்கு தெரியாதது வருத்தமல்ல. நம்மாட்களுக்கே தெரியவில்லையே அதுதான் வருத்தமாக உள்ளது.

திருடுறாங்க. நம்மாட்களே நம்ம ஊர் கலைச்செல்வங்களை திருடி பகிரங்கமா ஏலத்துல விற்கிறாங்க. நாம பார்த்தாலும் இந்தியாக்காரன்தானே அதன் மதிப்புத் தெரியாது என நம்முன்னே விக்குறாங்க. இதையெல்லாம் தடுக்கணும். நம்ம ஆட்கள் முகநூலில் தமிழன் என பல பொய்யான தகவல்கெல்லாம் நெஞ்சை நிமிர்த்துறாங்க. ஆனால், உண்மையான வரலாறு எல்லோருக்கும் தெரியவில்லை. நாம் கோயிலில் உள்ளதை சிலைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவற்றை திருமேனியென நம் முன்னோர்கள் கொண்டாடியிருக்காங்க. காலையில் எழுப்பி குளிப்பாட்டி உணவு கொடுத்து இரவு பாட்டுப்பாடி தூங்க வைத்திருக்காங்க. நாம் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம்.

இந்த மலையில் பாருங்க. பெயிண்ட் கொண்டு வந்து இந்த இடத்தின் அருமை தெரியாமல் கிறுக்கியிருக்காங்க. பின்னாளில் பசுமைநடைக்கு வரும் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து வந்து இதுபோன்ற விசயங்களைத் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. பசுமைநடைப் போல எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும். நான் வியட்நாம் பகுதிக்கு சென்ற போது இதுபோல அங்குள்ள மலையிலுள்ள கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் என்ன சொல்லியிருக்குன்னா ‘இதை நீங்க பார்த்துக் கொள்ளாவிட்டால் நான் செய்த பாவங்கள் எல்லாம் உன்னைச் சூழும்’ என நாலாம் நூற்றாண்டிலேயே நம்மாள் எழுதிவைத்திருக்கான். அந்தக்கோயில் வாசலில் உள்ள அந்த ஊர்க்காரன் நம்மாட்களைப் பார்த்ததும் கந்த சஷ்டி கவசம் போடணும் என்ற அளவிற்காவது பழகியிருக்கான். இன்று மாலை சங்கம் ஹோட்டலில் சோழர்காலச்சிலைகள் குறித்து பாண்டியத்தலைநகரத்தில் பேசுகிறேன். முடிந்தவர்கள் வந்து கலந்து கொள்ளுங்கள்” என்றார்.

sithermalai2

பசுமைநடையின் சார்பாக அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்திலுள்ள மகாவீரர் சிற்பங்களிலே மிகப்பெரியதும், மிக அழகானதுமான கீழக்குயில்குடி மகாவீரர் திருமேனிப் படத்தை விஜயகுமார் அவர்களுக்கு தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வழங்கினார். அவருடைய தளத்தின் பெயரை (POETRY IN STONE) அந்தப் பரிசு நினைவூட்டியது. அவருக்கு மதுர வரலாறு மற்றும் HISTORY OF MADURA நூலை எழுத்தாளர் அஜாதசத்ரு மற்றும் கவிஞர் வழங்கினர்.

சித்தர்மலை

மலைமீது ஏறி வைகையைப் பார்க்க குழுவாகச் சென்றோம். மலைமீது மகாலிங்கங்கோயில் உள்ளது. சிவராத்திரிக்கும், ஆடி அமாவாசைக்கும் இங்கு அன்னதானம் நடப்பதை அங்குள்ள கோயில் பூசாரி சொன்னார். மிக அழகான கோயில். மலைமீதிருக்கும் மகாலிங்கம் மகிழ்வாகியிருக்கிறார். கீழே வைகை நதி கொஞ்சமாக ஓடினாலும், பளிங்கு போல மிகத் தெளிவாகயிருந்தது. கரையோரம் இருந்த தென்னை மரங்கள் சிறு செடிகள் போலவும், வைகை சிறுவாய்க்கால் போலவும் தோன்றியது. ஓவியர் ரவி அவர்களுடன் ஓவிய ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சில தகவல்களைக் கூறினார். வைகை பின்புலமாக குழுவாக நிழற்படம் எடுத்துக் கொண்டோம். அடுத்த நடை மலையடிவாரத்தில் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடலாமா என பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரிடமும் கருத்து கேட்டார். எல்லோரும் மகிழ்வாக சரியென்றனர்.

மகாலிங்கம்

மலைமீதிருந்து மெல்ல இறங்கினோம். பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு மற்றும் HISTORY OF MADURA நூல் விற்பனைப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டே புதிய பசுமைநடைப் பயணிகளிடம் படிவத்தை பூர்த்தி செய்து வாங்கினேன். வரும்போது நானும் கந்தவேலும் வந்தோம். கந்தவேலின் அதீதநிழற்பட ஆர்வத்தால் நின்று நின்று மெல்ல நிழற்படமெடுத்துக் கொண்டே வந்தோம். காலையில் கூட்டமாக வந்ததைக் குறித்து விசாரித்தவர்களிடம் பசுமைநடை மற்றும் சித்தர்மலை குறித்து கூறினோம்.

history of sidhermalai

விக்கிரமங்கலம் அருகே வந்தபோது மழை வந்தது. என்னுடன் வந்த சகோதரர்கள் விக்கிரமங்கலம், காடுபட்டி, தென்கரை வழியாக சோழவந்தான் சென்றுவிட்டனர். கடந்தமுறையைவிட இந்தாண்டு வைகையைப் பார்த்தது மிக மகிழ்வாயிருந்தது. இனியொருமுறை ஆற்றில் நிறைய வெள்ளம் போகும் போது சித்தர்மலைக்குப் போகணும்.

xpress

படங்கள் உதவி – அருண், பிரசன்னா, செல்லப்பா, செல்வம் ராமசாமி, சரவணன், ஹூபர்ட், தமிழ்ச்செல்வம், இந்தியன் எக்ஸ்பிரஸ்

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். ஒரு பெருந்திருவிழாவிற்கு முந்தைய இரவு கொண்டாட்டமானது. சென்றாண்டு பசுமைநடையின் 25வது நடையை விருட்சத் திருவிழாவாக சமணமலை அடிவாரத்திலுள்ள பெரிய ஆலமரத்தடியில் கொண்டாடினோம். நெஞ்சைவிட்டு அகலாத விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக் காட்சிகளை குறித்த சிறுபதிவிற்குள் நுழையலாம்.

விருட்சத்திருவிழாவிற்கு முதல்நாள் மாலையே குழுவினர் எல்லோரும் கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்தில் கூடினோம். கருப்புகோயிலுக்கு அருகிலுள்ள தேனீர் கடையில் சூடான தேனீரோடு மறுநாள் திருவிழாவிற்கு ஆயத்தமானோம். நாடக மேடைக்கு அருகிலுள்ள புங்க மரத்தடியில் பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதல்படி பணிகளைப் பிரித்துக் கொண்டோம்.

நீளவானம் கருநீல வானமானது. மெல்ல சாரல் மழை பெய்யத் தொடங்கி அந்த இடத்தின் புழுதியை அடக்கியது. நாடக மேடையில் காயப்போட்டிருந்த புலுங்கலை குவித்து வைத்துவிட்டு மழைக்கு ஒதுங்கினோம். மழை விட்டதும் பணிகளைத் தொடங்கினோம். விழாவிற்கு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடுவைகளை வண்டியிலிருந்து இறக்கினோம். மின்விளக்கு எடுக்காததால் இரவோடிரவாக மின்பணியாளரை அழைத்து வந்து சரிசெய்தோம். மறுநாள் உணவிற்குத் தேவையான பணிகளை சமையல் கலைஞர்கள் தொடங்கினர்.

விருட்சத்திருவிழாவிற்காக செய்து வைத்திருந்த பதாகைகளை மரங்களில் கோர்பதற்கு வாகாக சணல் கயிறுகளைக் கட்டி வைத்தோம். சமையலுக்கு வந்த விறகுகளை இறக்கிவைத்துவிட்டு சாமியானா பந்தல்காரர்களிடம் மறைப்புத் தட்டி கட்டச் சொல்லிவிட்டு நாகமலைப்புதுக்கோட்டைக்கு குட்டியானையில்(TATA ACE) பதாகைகளை எடுத்துப் போட்டு  எல்லோரும் கிளம்பினோம்.

நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்தோம். வேல்முருகன், இளஞ்செழியன், உதயகுமார், ரகுநாத், கந்தவேல், மதுமலரன், மணி மற்றும் நானும் பதாகை கட்டும் பணிகளைத் தொடங்கினோம். நாகமலைப் புதுக்கோட்டையிலிருந்து சமணமலையடிவாரம் வரை உள்ள மின்கம்பங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் பதாகைகளைக் கட்டினோம். எங்களுடன் உற்சாகமாக வேல்முருகன் அண்ணனும் இணைந்து பதாகைகளைக் கட்ட உதவினார். அந்த இரவை இப்போது நினைத்தாலும் உற்சாகம் வந்து அப்பிக் கொள்கிறது. மறக்க முடியாத பசுமைநடை.

இளஞ்செழியன், ரகுநாத்துடன் வேல்முருகன் அண்ணனும் திருமங்கலத்திற்கு இரவு சென்று தங்கிவிட்டு விடிகாலையில் வருவதாகக் கூறிச் சென்றார். தரைவிரிப்பு பத்தாமல் இருந்ததால் எடுப்பதற்காக நானும், மதுமலரனும் சம்மட்டிபுரத்திற்கு சென்றோம். நேரம் நள்ளிரவை நெருங்கியது. தரைவிரிப்பில் படுத்தபடியே கதைக்கத் தொடங்கினோம். முருகராஜூம், உதயகுமாரும் பேசத் தொடங்கினர். கந்தவேலும், மதுமலரனும் கொஞ்ச நேரத்தில் கண்ணயர்ந்தனர். நான் தூங்காமல் படுத்துக் கொண்டு உதயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஆலமரத்தடிக்காற்று இதமாக வீசியது. மலை இருளில் பதுங்கிக் கொண்டது. விளக்கு வெளிச்சத்தில் கருப்பு கோயிலைப் பார்த்த போது கருப்பு குதிரைகளைப் பூட்டி ஊர்வலம் கிளம்பிக் கொண்டிருந்தார். அமானுஷ்யக் கதைகள் முளைக்கும் வேளையில் அன்றாடக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து ஆகஸ்ட் 25ற்கு வந்துவிட்டது.

உதயகுமார்தான் இளமைக்காலங்களில் விளையாடிய விளையாட்டுகளை பழங்காநத்ததில் தொடங்கி கிராமம் வரையான நினைவுகளையும், அவங்க அய்யாவிடம் கேட்ட ஆளண்டாப்பச்சி கதை தொடங்கி சல்லிக்கட்டுத் தொடர்பாக தான் எழுதிய கட்டுரை வரை பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தார். இடையிடையே என் நினைவுகளையும் கூறிவிட்டு உதயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மணி நாலு ஆனதும் வீட்டில் சென்று குளித்து வருவதாக உதயகுமாரும், கந்தவேலும் கிளம்பினர். நானும் மதுமலரனும் கீழக்குயில்குடி சுடுகாட்டு வாசலில் உள்ள தொட்டியில் குளிக்க அவர்களுடன் வண்டியில் சென்றோம். விடியும் முன் இருளில் சுடுகாட்டு வாசலிலிருந்த சில்லென்ற நீரில் குளித்தோம். மேலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. அப்படியே அங்கிருந்து மலை நோக்கி நடந்தோம். மலை அங்கிருந்து ஒரு மைலுக்கும் மேலிருந்தது. வழியில் எங்கள் பேச்சு சத்தம் கேட்டு நாய்கள் குரைக்கத் தொடங்கியது. பயம் இருந்தாலும் ஓடி ஒளிய இடம் இல்லை. மெல்ல பேசிக் கொண்டே கடிபடாமல் ஒருவழியாக ஆலமரத்தடியை அடைந்தோம். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.

அதிகாலையில் குளிருக்கு இதமாக தேனீரை அருந்திவிட்டு அறிவிப்பு பதாகைகளை எடுத்து கட்டத் தொடங்கினோம். திருமங்கல நண்பர்கள் வந்தனர். ஆட்கள் மெல்ல வரத்தொடங்கினர். ஒரு பெருந்திருவிழா சத்தமில்லாமல் தொடங்கியது. பெரிய ஆலமரத்திற்கு கொண்டாட்டமாக இருந்தது. விருட்சத்திருவிழா என்றால் கேட்கவும் வேண்டுமா?.  குதிரைகளின் மீதிருந்து கருப்பு அதைப் பார்த்து வாய் சிவக்கச் சிரித்துக் கொண்டிருந்தார்.

Green walk 40 Invitation Front

Green walk 40 Invitation inner

அ.முத்துக்கிருஷ்ணன்

இவ்வுலகம் இனியது.

இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

காற்றும் இனிது; தீ இனிது; நீர் இனிது;

நிலம் இனிது; ஞாயிறு நன்று; திங்களும் நன்று;

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

–    மகாகவி பாரதி

மேலக்குயில்குடி சமணமலைக்கருகில் சமணப்பண்பாட்டு மன்றம் அமைந்துள்ளது. 2013ம் ஆண்டு குடியரசு தினவிழாவன்று இம்மன்றத்தைத் தொடங்கினர். மதுரை சமணப்பண்பாட்டு மன்ற ஓராண்டு நிறைவுவிழாவில் பசுமைநடை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மற்றும் சமணத்தலைவர்கள் பலரும் பேசினர். அதில் பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் இலக்கியம், இயற்கை, பொதுவுடமையோடு சமணம் கொண்டிருந்த தொடர்பைக் குறித்து மிக எளிமையாக விளக்கினார். அந்த உரையைக் காண்போம்:

DSCN7612

பசுமைநடையாக பயணிக்கத் தொடங்கியபோது ‘உங்களையெல்லாம் சந்திப்போம், இது போன்ற கூடுகை அமையும்’ என்றெல்லாம் நாங்கள் அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை. உங்களையெல்லாம் சந்திப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சியாகயிருக்கிறது.

இந்த மலைகளுக்கெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பயணித்து வருகிறேன். திருப்பரங்குன்றத்தில்தான் நான் பத்து, பதினைந்து ஆண்டுகள் வசித்தேன். நினைத்தால் திருப்பரங்குன்ற மலையேறி விடுவோம். திருப்பரங்குன்றத்தில் கதை, கவிதை என்று இலக்கியம் தொடர்பான ஆட்களோடு நெருக்கம் ஏற்பட்டது. எல்லோரும் பல இடங்களில் பணிபுரிபவர்கள். ஆனால், எல்லோருக்குள்ளும் இலக்கியம் சார்ந்த ஒரு பெரிய நாட்டம் இருந்தது. எல்லோருக்கும் வேலை பார்க்கும் இடங்களில் நெருக்கடிகள், பிரச்சனைகள் மற்றும் விடுப்பு கிடைக்காது போன்ற நிலை இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் மழைமோடமாகயிருந்து வெயில் திறக்காது எனத் தெரிந்தால் நாங்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டதில்லை. அப்போது செல்போன் இல்லை, எஸ்.எம்.எஸ் இல்லை. மழையடிவாரத்திற்கு போனால் நாங்கள் பத்து, பதினைந்து பேர் சந்தித்துக்கொள்வோம். வேலையே போனாலும் பரவாயில்லையென்று அன்று மழைமேல் ஏறிவிடுவோம். அன்று செல்ஃபோன், கிரெடிட்கார்டு எல்லாம் மழையில் நனைந்துவிடுமென்ற பயம் இல்லை. அதனால், ஒரு விடுதலை உணர்வும் மனதில் இருந்தது.

muthukrishnan speaksமலைமீது காலையில் ஏறிவிட்டால் இறங்க இரவாகிவிடும். இடையிடையே உடன்வந்த இளைஞர்களிடம் பணத்தை கொடுத்து கடலைமிட்டாய், கொய்யாப்பழம், வாழைப்பழம் எனத் திங்க வாங்கி வரச்சொல்வோம். அப்படியே பணமில்லாவிட்டாலும் ஊரிலுள்ள நண்பர் யாரையாவது பிடித்து எதாவது வாங்கி வரச் சொல்லிவிடுவோம். யாருக்கும் மலைமீது ஏறினால் இறங்குவதற்கு மனமே வராது. இதே உணர்வலையை வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் இந்த மலையிலிருந்து பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இந்த மலைக்கு வயது என்ன என்பதை கல்வெட்டுகளை வைத்து தேடிக்கொண்டிருக்கிறோம். ஆயிரம், இரண்டாயிரம் என நீண்டு கொண்டே போகிறது. அறிவியலை மையமாக வைத்துப் பார்த்தால் பல்லாயிரம் ஆண்டுகள் என நீளும். விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வரும் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆடுகள் இதுபோன்ற மலைகளின் உச்சிகளுக்கெல்லாம் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு முன்னரே அவைகள் அங்கு சென்றிருக்கும் என்று தோன்றுகிறது என்றார். அதன் கால்களும் அதற்கேற்ப தகவமைக்கப் பட்டிருக்கிறது.

இலக்கியம் சார்ந்த ஆட்களுக்கிடையே ஒத்திசைவு ஏற்படுவதைப் போலவே இயற்கையை விரும்புவர்களுக்கிடையிலும் ஒத்திசைவு ஏற்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறோம். உதாரணத்திற்கு அருகிலுள்ள சதுரகிரி மலைக்கு போறோம். நம்முடைய வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, ரேஷன்கார்டுகளைவிட்டு மலைமீது செல்லச்செல்ல உடன்வருபவர்கள் சிலமணிநேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள். ரயில்பயணங்களில் கூட நமக்கு இந்த அனுபவம்தான் நிகழ்கிறது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறதென்றால் நாம் தினசரி வாழக்கூடிய வாழ்க்கை நமக்கு அலுப்பாகயிருக்கிறது. எல்லோருக்கும் அந்த வாழ்க்கையின் மீது ஏராளமான குறைகள் இருக்கிறது. அது பிடிக்காமல்தான் வாழ்கிறோம். அதைவிட்டு வெளியே வந்தால் எல்லோர் முகத்திலும் சிரிப்பு வருகிறது, மகிழ்ச்சி வருகிறது. என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட விசயம் என்னவென்றால் எவ்வளவுக்கெவ்வளவு பயணம் செய்கிறோமோ அந்தளவிற்கு எல்லாவிதமான கசடுகளிலிருந்தும் நாம் விடுதலையாவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. உங்கள் முன்னோர்களும் (தமிழ்ச்சமணர்கள்) இந்த தமிழ் நிலத்தில் அதிகம் பயணம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை வாசிப்பினூடாக அறிகிறோம்.

இன்னொருபுறம் பார்த்தால் இன்றைய வாழ்க்கையென்பது பயணங்களையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஒரு முட்டாள் பெட்டியின் முன்னமர்ந்து ரிமோட்டை எடுத்து மேலயும் – கீழயும், மேலயும் – கீழயும் என மலையை ஏறியிறங்க வேண்டியவன் ரிமோட்டில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கிறான். இருநூறு சேனல் ஏற மீண்டும் இருநூறு சேனல் இறங்க என எதையும் உருப்படியாக பார்ப்பதில்லை. எனக்குத் தெரிய தொலைக்காட்சியைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்டேனென யாரும் சொன்னதில்லை. அதற்குள் உள்ள அறிவு தெரியாதளவு குப்பை கூளங்களால் மூடிக்கிடக்கிறது. வர்த்தக உலகம் உருவாக்கிய இந்த முட்டாள்தனங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியிருக்கிறது. குடும்பங்களாக நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் எங்காவது பயணியுங்கள். அது பெரிய விடுதலையாகயிருக்கும்.

602114_4751299936624_1209504232_n

இலக்கியம், இயற்கை போல இளம்வயதில் நாங்களெல்லாம் பொதுவுடமைக்கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். பொதுவுடமையை அந்தக் காலத்திலேயே சமண இலக்கியங்கள் போதிக்கின்றன. எல்லோரும் சமமாக வாழ வேண்டும். நாங்களும் இலக்கியம், அரசியல் வழியாக காண விரும்புவது இதைத்தான். என்னுடைய இளவயதில் ஒருநாள் மதுரை சர்க்யூட் ஹவுஸ் எதிரிலுள்ள டீக்கடையில் ஒரு வயதான மனிதர் டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒருவேளை அவராக இருக்குமோ என நாங்கள் யோசித்துக் கொண்டே அருகில் சென்றோம். அப்போது கேரளத்தின் முதல்வராகயிருந்த ஈ.கே.நாயனார்தான் அங்கு நின்று கொண்டிருந்தார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். ஒரு முதல்வர் இவ்வளவு எளிமையாக இப்படியிருப்பதைப் பார்த்து வியந்தோம். இதைப் போல வேறெந்த முதல்வர்களையும் பார்க்க முடியாது.

வந்தவாசிப்பகுதியிலுள்ள உங்கள் (தமிழ்ச்சமணர்) வீடுகளுக்கெல்லாம் வந்தபிறகுதான் நீங்கள் எளிமையான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தேன். பிழைப்புக்காக தமிழைக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்களுக்குக்கூட சில தமிழ் இலக்கியங்களுக்கு உரையாசிரியர் யாரென கேட்டால் உடனே சொல்லத் தெரியாது. ஆனால், வந்தவாசியில் உள்ள பலரும் தமிழ் இலக்கியங்களில் பேரறிவாளர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். உங்களுடைய இளைய தலைமுறையையும் இங்குள்ள மலைகளுக்கு அழைத்து வாருங்கள். நன்றி.

படங்கள் உதவி – ரகுநாத், பசுமைநடை முகநூல் பக்கம்

1623756_589651444438808_16599272_n

பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. அயற்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது. இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் மனநிலை அப்போது பிறக்கிறது.

–    வெ.இறையன்பு

சமணமலையை இளம்வயதில் எங்க ஊரிலிருந்து பார்க்கும் போது நாகமலைக்கு இடதுபுறமாக வில்போல அமைந்த  சிறுகுன்றாகத்தான் தெரியும். பின்னாட்களில் பணிவிசயமாக மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் சென்றபோதும் அந்த மலையின் பெயர் தெரியாது. ஆனாலும் நாகமலைப்புதுக்கோட்டைக்கு முன் வரும் கால்வாய்கிட்ட நின்று பார்த்துவிட்டுதான் செல்வேன். மதுரையைக் குறித்த தேடலும், வாசிப்பும் அதிகமான போது சமணமலை மிகவும் நெருக்கமானது. விருட்சத்திருவிழாவிற்கு பின் சமணமலையின் மீதான காதல் இன்னும் அதிகமானது.

பசுமைநடையாக குடியரசு தினத்தன்று காளவாசலில் எல்லோரும் கூடி அங்கிருந்து சமணமலையின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மேலக்குயில்குடிக்கு சென்றோம். நாகமலைப்புதுக்கோட்டையிலுள்ள வெள்ளைச்சாமிநாடார் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள சாலையில் சென்றால் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி தாண்டி தெரியும் சமணமலையின் பின்பகுதியில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகள் உள்ளது.

1511726_589650247772261_1814438295_n

1545198_589650944438858_2118255101_nசமணப்பண்பாட்டு மன்றம் அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் மலையை நோக்கி நடந்தோம். பனியைப் பத்திவிட்டு பகலவன் பல்லக்காட்டத் தொடங்கினான். மலையை வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் அப்பகுதி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். படுகைக்கு செல்லும் பாதையில் சீமைக்கருவேலமுள் அதிகம் வளர்ந்திருந்தது. ஒருங்கிணைப்பு குழுவிலுள்ள நண்பர்கள் சிலர் ஏறி பாதையை சரிசெய்தனர்.

1538935_589651264438826_1053547566_n ஏறுவதற்கு சிரமமான இடங்களில் நின்று வந்தவர்களை கைகொடுத்து ஏற்றிவிட்டனர். சரளைக்காக மலையை உடைத்திருந்ததாலும், இடியால் சிதைந்திருந்ததாலும் மலை உருக்குலைந்து காணப்பட்டது. மலைமீது ஏறி படுகைகளைத் தேடினோம். மேற்கூரையில்லாமல் உடைந்து கொஞ்சம் படுகைகள் கீழே கிடந்ததைப் பார்த்து மனமுடைந்து போனது. எல்லோரும் அங்கு கூடியதும் அனைவருக்கும் அந்த இடம் குறித்த கைப்பிரதி வழங்கப்பட்டது.

1536746_589652691105350_901473715_n

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசத் தொடங்கினார். கடினமான பாறை இடிபாடுகளைக் கடந்து இந்த இடம்வரை கிட்டத்தட்ட எல்லாருமே ஏறிவந்திருப்பதைப் பார்க்கும்போது உற்சாகமான மனதை யாராலும் சிறைபிடிக்க முடியாது என்பதை இந்த நடை நிரூபித்திருக்கிறது. தனியாக இந்த இடத்திற்கு வரும்போது தயக்கம் ஏற்படும். ஆனால், குழுவாக இணையும்போது கிடைக்கும் தன்னம்பிக்கை அலாதியானது. மனித சமூக வரலாற்றிலேயே ஒற்றுமையாக இருந்தவர்கள்தான் பல விசயங்களை சாதித்திருக்கிறார்கள்.

1623563_589651604438792_2093625257_n

ஜனவரி 1 அன்று விஜய்டிவி நீயா? நானா? 2013 விருது பசுமைநடை குழுவிற்கு தொன்மையான இடங்களை நோக்கி பயணித்து பாதுகாத்து வருவதற்காக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான அழைப்புகளும், வாழ்த்துகளும் உலகமுழுவதிலுமிருந்தும் வரத்தொடங்கியது. விருட்சத்திருவிழாவிற்குப் பிறகு ஊடகங்கள் பசுமைநடையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.

குங்குமம்

ஜனவரி முதல் வார குங்குமம் இதழிலும் வரலாற்றை சேகரிக்கும் பசுமைநடை என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களில் கட்டுரை வந்துள்ளது. மற்ற ஊரில் இருக்கும் நண்பர்கள் எங்கள் ஊரிலும் பசுமைநடையை நடத்துங்கள் என அழைக்கிறார்கள். இப்போது பசுமைநடைக்காக இருபது நண்பர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுபோல இன்னும் ஐம்பது நண்பர்கள் பசுமைநடைக்காக நேரம் ஒதுக்கினால் நாம் பசுமைநடையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லலாம்.

1654112_772816259414473_1814524161_nமேலக்குயில்குடி மலை இடிந்து விழுகிற நேரம் இந்தப் பகுதியில் உள்ள சர்ச்கிட்டதான் நடந்து சென்று கொண்டிருந்தோம். மிகப் பெரிய சத்தம் கேட்டது. அப்போது அணுகுண்டு வெடித்ததுபோல இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். இதுபோன்ற இடங்களுக்கு யாரும் வராததால்தான் இதுபோன்ற இழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகளையாவது விட்டுவையுங்கள் என நாம் கேட்கிறோம்.

முத்துக்கிருஷ்ணனைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார். Muthukumarசமணமலை முக்கியத்துவம் வாய்ந்த மலை. மதுரையில் யானைமலை, அரிட்டாபட்டி போன்ற பல மலைகளில் சமணத்தின் சுவடுகள் இருந்தாலும் இம்மலைக்குப் பெயரே சமணமலை என்றிருக்கிறது. மேலக்குயில்குடி மலையில் பத்திற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இருந்தன. இங்கு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலை ஆய்வுமாணவராக இருந்த முத்துக்குமார் என்ற இளைஞர் இப்படுகைக்கு மேலுள்ள பாறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டைக் கண்டறிந்தார். (நாம் முன்பு கீழக்குயில்குடி சென்ற போது அதைப் பார்த்தோம்). இந்த மலை அதற்கான பரிசை அவருக்கு வழங்கிவிட்டது. இப்போது அந்த இளைஞர் தில்லி ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி நமது ஆட்கள் பல இடங்களிலும் இருப்பது நமக்கு நல்லது.

இம்மலையை முன்பு சரளை உடைப்பதற்கெடுத்த ஒப்பந்ததாரர் அடியிலிருந்து உடைக்கத்தொடங்கினார். இதனால் மேற்பகுதி வலுவிழந்துகொண்டே வந்தது. நல்லவேளையாக இம்மலை உடைந்த அன்று பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால் தனக்கு வாக்களிப்பதற்காக பணியாட்களையும் கூட்டிக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.  அதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. பொதுவாக எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றியதாகச் சொல்லி இக்கலை நகரத்தை கொலை நகரமாக பலர் சித்தரிக்கும் வேளையில் இயற்கையாகவே ஆளில்லாத நாளில் மலை இடிந்துவிழுந்ததன்மூலம் அன்று இம்மலை அகிம்சை மலை என்று காட்டிவிட்டது. பின் அந்த ஒப்பந்ததாரரே இல்லாமல் போனார். இம்மலை தப்பியது. மலைகளை பாதுகாக்க தனியாக ஆட்களை நியமிப்பதைவிட இதன் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

இதுபோன்ற இடங்களை நோக்கி இப்போது பலரும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். வந்தவாசிப் பகுதியிலுள்ள சமணர்கள் இப்போது அங்குள்ள சமணத்தலங்களை நோக்கி அகிம்சைநடை என்ற பெயரில் பயணிக்கிறார்கள். மதுரையிலுள்ள வழக்கறிஞர்கள் சேர்ந்து குறிஞ்சிக்கூடல் என்ற பெயரில் தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒருமுறை குடும்பத்துடன் பயணிக்கின்றனர். மூன்றாவது நடையாக அரிட்டாபட்டியில் பொங்கல்விழா கொண்டாடிய போது நானும் சென்றிருந்தேன்.

பெருந்தேவூர் குவித்த அயம்

இம்மலை மீதுள்ள ஆடு உரிச்சான் பாறையில் பெருந்தேவூர் குவித்த அயம் என்ற தமிழ்பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. பெருந்தேவூரைச் சேர்ந்தவர்கள் செய்வித்த படுகை என்பது இதன் பொருள். சமணத்துறவிகள் தங்கியிருந்த இடத்திற்கு ஆடுஉரிச்சான் பாறையென பின்னாளில் பெயர்வந்தது நேர்முரணான விசயம். மதுரையை சமணத்தின் தாயகம் என்று சொல்லும் தமிழ்ச்சமணர்களும்  இந்நடைக்கு வந்துள்ளது மற்றுமொரு சிறப்பு.

1535024_589652207772065_585803335_n

வந்தவாசிப்பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் கொஞ்சப்பேரும் இந்நடைக்கு வந்திருந்தனர். அ.முத்துக்கிருஷ்ணன் அறவாழி அய்யாவை எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைத்தார். அறவாழி அய்யா எளிமையான மனிதர், பல முக்கியமான தலைவர்களின் சமகாலத்திய நண்பர், மு.வரதராசனின் மாணவர் என்று அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அறவாழி அய்யா பேசத் தொடங்கினார். மதுரையிலுள்ள மலைகளுக்கெல்லாம் கடந்த 25, 30 ஆண்டுகளாக திங்களுக்கொருமுறை, இரண்டு திங்களுக்கொருமுறை வந்து செல்கிறோம். நாங்கள் தமிழகத்தில் மைக்ரோஸ்கோபிக் மைனாரிட்டி என்று சொல்லும்படி எண்ணிக்கையில் சிறுபான்மையினர்.

நான் பொதுவாக இந்த வரலாற்றுச் சின்னங்களை சமணம் சார்ந்தவை என்று எண்ணுவதில்லை. இவை அனைத்தும் தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் சார்ந்தவை. இயற்கையாகவே இம்மலைக்கு சமணமலை என்ற பெயர் வந்துவிட்டது. சாந்தலிங்கம் அய்யா பேசும்போது இம்மலையை அகிம்சை மலை என்றார். நான் இதை தமிழர்மலை என்கிறேன்.

முதுபெரும் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இம்மலை உடைந்த போது கண்ணீர் விட்டு அழுதார். அருகிலுள்ள விக்கிரமங்கலம் சென்று பார்த்துவிட்டு அழிவின் விளிம்பில் விக்கிரமங்கலம் என தினமணியில் மகாதேவன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்து நான், சாந்தலிங்கம், ஆனந்தராஜ் மூவரும் விக்கிரமங்கலம் சென்றோம். மலையை கொஞ்சம் சரளைக்காக சுக்குச்சுக்காக உடைத்திருந்தார்கள். மலையின் மறுபுறம் உள்ள படுகையில் காணப்படும் தமிழிக்கல்வெட்டுகளைக் காணச் சென்றோம். இப்போது எனக்கு வயது எழுவத்தொன்பது. ஆறேழு வருடங்களுக்கு முன் கொஞ்சம் ஆற்றல் இருந்தது. அப்போது கல்வெட்டுக்களை காணும் ஆவலில் பாறைகளைப் பிடித்து சிரமப்பட்டு ஏறினேன். அதை வியந்து பார்த்த சாந்தலிங்கம் புகைப்படமாக எடுத்துக் கொடுத்தார். அந்த படங்களை சிறப்பு ஆணையர் ஶ்ரீதரிடம் காட்டியபோது இவ்வளவு சிரமமான இடங்களுக்கெல்லாம் இனி ஏறாதீர்கள். தவறிவிழுந்தால் என்ன ஆவது என்று வருத்தப்பட்டார். பசுமைநடைக்கு வருபவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் இங்கு இளைஞர்கள்வட்டம் அதிகமாகத் தெரிகிறது. அது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் இப்போது போனஸ் லைஃபில் இருக்கிறோம். எங்களுடைய ஒழுகலாறுகள் காரணமாக கொஞ்சம் கூடுதல் ஆயுளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், தமிழகம் இனி எங்கள் கையில் இல்லை. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலத் தமிழகம் இருக்கிறது. இங்கே இருக்கிற இளைஞர்களைப் பார்த்து மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன். தமிழர்களுடைய பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.

எல்லோரும் மெல்ல இறங்கினோம். நான், சகோதரர் தமிழ்ச்செல்வம், இளஞ்செழியன் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.  எல்லோரும் விஜய்டிவி விருதை வைத்து புகைப்படமெடுத்துக் கொண்டனர். மதுர வரலாறு நூலை வாங்காத புதிய நண்பர்கள் வாங்கினர். கதிர் பொங்கல் மலரையும் வேண்டியவர்களுக்குக் கொடுத்தோம். காவலர் ஒருவர் நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த கைப்பிரதியை எல்லோருக்கும் வழங்கினார். விழித்தெழு மதுரை குழுவினர் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கான அவர்களது ஏழு அம்ச செயல்திட்டம் குறித்துப் பேசினர்.

1655911_589653754438577_1386311960_n

சமணப்பண்பாட்டு மன்றத்தில் பசுமைநடைக்குழுவினர்க்கு காலை உணவு வழங்கப்பட்டது. கேசரி, வடையையும்; சாம்பார் சட்னியில் குழைத்து வெண்பொங்கலையும் வயிராற உண்டோம். சமணப்பண்பாட்டு மன்றம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்றதை ஒரு விழாவாகக் கொண்டாடினர். அதில் பசுமைநடை ஒருங்கிணைப்புக் குழுவினர் கலந்து கொண்டோம்.

விஜய் டி.வி நீயா? நானா?2013 விருதுக்கான காணொளிக்கான இணைப்பு

தமிழிக் கல்வெட்டுக் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்திக்கான இணைப்பு.

படங்கள் உதவி – ரகுநாத், செல்வம் ராமசாமி

தென்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத்தலங்கள் அருகருகே கொண்ட சமயநல்லிணக்கத் தலம். சங்க இலக்கியங்களாம் அகநானூறு, பரிபாடல் தொடங்கி திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்களில் பாடப்பட்டு குறிஞ்சிமலர், காவல்கோட்டம் போன்ற நாவல்களில் பேசப்பட்ட திருப்பரங்குன்றம் மதுரையின் தொன்மையான இடம்.

திருப்பரங்குன்றத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் போற்றுவோம் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகையை சமீபத்தில் சுத்தம் செய்ததாக நாளிதழில் வாசித்தேன். அதன்பொருட்டு முன்பு எழுதிவைத்த திருப்பரங்குன்றத்தில் சமணநடை என்ற பதிவை சுந்தர்ராஜன் அவர்கள் எடுத்த படங்களுடன் இரண்டாண்டுகளுக்கு பிறகு பதிவிடுகிறேன். சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அக்டோபர் 30, 2011 அன்று பசுமைநடையாக திருப்பரங்குன்றம் சமணப்படுகை மற்றும் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றதைக் குறித்த பதிவு:

பயணத்திற்கு முதல்நாள் மாலையிலிருந்து மழை பெய்துகொண்டேயிருந்தது. அதனால் இம்முறை பசுமைநடை ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் மழை பெய்து கொண்டிருந்தது. மழை விட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். நினைத்தது போல மழை ஆறுமணிப்போல வெறித்துவிட்டது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் எங்கு வருவது என அலைபேசியில் கேட்ட போது திருப்பரங்குன்றம் சுகாதார நிலையம் அருகில் வரச்சொன்னார். திருப்பரங்குன்றத்திலிருக்கும் சகோதரன் வந்ததும் மலை நோக்கி நடந்தோம்.

அமன்பாழி

பசுமைநடை குழுவினரை திருப்பரங்குன்ற ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள அமண்பாழிகிட்ட சந்தித்தோம். எல்லோரும் கூடியதும் மலை ஏறத்தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாகயிருந்தது. மலையேற பாதி தூரத்திற்கு கட்டிய படிகள் உள்ளன. பிறகு பாறையை படிபோல் செதுக்கியிருக்கிறார்கள். மலை மேல் ஏறி குகைகளைப் பார்த்தோம்.

பசுமைநடை_1

சாந்தலிங்கம் அய்யாவிடம் இந்த படுகையில் கல்வெட்டுகள் எங்கு உள்ளன என்று கேட்ட போது எங்களுக்கருகில் இருந்த கல்வெட்டை காண்பித்தார். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.

சமணப்படுகை

முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது.

 ‘ அந்துவன் கொடு பிதவன் ‘

 இதில் அந்துவன் என்பவன் இக்கல்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன் என்ற பெயர் சங்க காலத்தில் ஒரிரு புலவர்களுக்கு வழங்கியுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது கல்வெட்டு இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.

 ‘ மாரயது கய(ம்) ‘

மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம்.

 மூன்றாவது கல்வெட்டு வரிசையாக உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டுள்ளது.

 ‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘

எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் எனப் பொருள் கொள்ளலாம். எருகாட்டூர் என்பது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலை பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார். எக்காட்டூர், எருக்காட்டூர் இரண்டும் ஒன்றே எனக்கருதலாம். இங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது.

இம்முறை மழைபெய்தும் நிறையப்பேர் வந்திருந்தனர். மலையிலிருந்து கீழே பார்க்கும் போது ரயில் வந்தது. அங்கிருந்து அதைக்காணும் போது மிக அழகாக தெரிந்தது. இந்த குகையிலிருந்து காணும் பொழுது தொலைவிலுள்ள சமண மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவ மலை தெரிந்தது. கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தால் தொலைவில் யானைமலை, மற்றும் அதன் பின்னால் உள்ள அழகர்மலை, மாங்குளம் மலைகள் எல்லாம் தெரிந்தன.

குடைவரை

மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரையைக் காணச் சென்றோம். அனைவரும் கூடியதும் அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை.

கல்வெட்டுக்கோயிலில் சரியான கூட்டம். ஷஷ்டி விரத காலம் என்பதால் ஏராளமான முருகபக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். நிறையப்பேர் இந்த சமயத்தில் ஷஷ்டி முடியும் வரை இங்கேயே தங்கி இருப்பர். பஜனைக்குழு முருகனது பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். கல்வெட்டுக்கோயிலுக்கருகில் உள்ள ஓரிடத்தில் கூடி அனைவரும் உணவருந்தினோம். பலமுறை திருப்பரங்குன்றம் வந்திருந்தும் அதன் வரலாற்றுத் தொன்மையை இந்நடையில் அறிய முடிந்தது பெருமகிழ்வைத் தந்தது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களின் இந்நடை குறித்த  பதிவு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் போற்றுவோம் நிகழ்வில் ஜனவரி 26 அன்று மாலை சமணப்படுகையில் ஜோதி ஏற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகளுடன் ரதவீதிகளில் உலாப் போகிறார்கள். அனைவரும் வருக. திருப்பரங்குன்றம் குறித்த முந்தைய பதிவுகள்.

திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

குன்றிலிருந்து குன்றம் நோக்கி

பெருவழித்தடம்

santhalingamதீபாவளி நாயகனைக் காண பதிவு காண்க. கொங்கர்புளியங்குளம் பசுமைநடையின்போது மேலும் பல தகவல்களை சொ.சாந்தலிங்கம் அய்யா அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

சேரன்பாண்டியன் பெருவழித்தடம்

அற்றைநாளில் சேரநாட்டுக்கும் பாண்டியநாட்டுக்கும் இடையே இருந்திருக்கக்கூடிய பெருவழித்தடத்தின் வரலாற்றுச் சுவடுகள் இன்றும் கிடைத்துவருகின்றன. அதன் அடிப்படையில் அமைந்த உத்தேசமான வரைபடந்தான் மேலே இருப்பது.

மேலும் கொங்கர்புளியங்குளம் குறித்து அவர் தந்த தகவல்கள் இங்கே.

தமிழிக் கல்வெட்டுகளின் தந்தை

தமிழிக் கல்வெட்டுகளின் தந்தை என்றழைக்கப்படும் கே.வி.சுப்பிரமணிய ஐயர் கொங்கர்புளியங்குளத்திலுள்ள கல்வெட்டுகளைக் காண வந்ததைக் குறித்து நகைச்சுவையாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மழைக்காலமொன்றில் மதுரையிலிருந்து நாகமலைக்கு குதிரை வண்டியில் வந்தபோது குதிரை வழியில் அடிக்கடி சண்டித்தனம் செய்திருக்கிறது. இதனால் குதிரை வண்டிக்காரர் இவரை நாகமலைப்புதுக்கோட்டை சற்று முன்னே இறக்கி சென்றுவிட்டார். பின்னர் சுப்பிரமணிய ஐயர் இந்த ஊரில் உள்ள தலையாரி போன்றோரை பார்த்து இம்மலைக்கு வந்து இங்குள்ள கல்வெட்டுகளைப் படித்துள்ளார். இதுபோன்ற மலைகளில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழிக் கல்வெட்டுகள் என்று நிறுவியதில் கே.வி.சுப்பிரமணிய ஐயருக்கு பெரும்பங்குண்டு.

kongarpuliyankulam1

ஸ்ரீபாலன் – அன்றும் இன்றும்

ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள்  ஒருமுறை தேனிக்குப் பேருந்தில் சென்ற போது நாகமலைப் பகுதியில் வண்டி கோளாறாகியுள்ளது. ஸ்ரீபால் இறங்கி அருகில் தெரிந்த சமணமலைக்கு சென்றுள்ளார். மலையில் சமணச்சிற்பங்களை பார்த்து பேருவகை கொண்டார். பின்னர் இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளை தொல்லியல் துறை மூலம் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டொன்றில் ஸ்ரீபாலன் செய்வித்த திருமேனி என்ற பெயரைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். தம்முடைய பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் பொறிக்கப்பட்டதன் மூலம் இச்சிலை செய்வித்தவரின் மறுபிறவியாகவே தன்னை எண்ணி மகிழ்ந்தார். இம்மலை சரளைக் கற்களுக்காக அறுபடாமல் காத்த பெருமை ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களையே சேரும். இவர் சமணமலை என்ற பெயரில் ஒரு நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஜீனர் மலைகள் அல்லது அறவோர் பள்ளிகள் என்ற நூலும் எழுதியுள்ளார்.

kathirclicks

கொங்கர்புளியங்குளம் – கொங்கர்கள் – சமணமலை – சோழவந்தான்

kongarpuliyankulam

கொங்கர்புளியங்குளம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தடயங்களை கொண்ட ஊர். சமணமலையில் செயல்பட்டு வந்த மாதேவிப்பெரும்பள்ளிக்கு தானமாக இந்த ஊர் வழங்கப்பட்டதை அங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொங்குநாட்டிலிருந்து வந்த கவுண்டர்கள் இப்பகுதியில் குடியேறியதால் கொங்கர்புளியங்குளம் என அழைக்கப்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இம்மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டப்பட்டுள்ளது.

குற கொடுபிதவன் உபசஅன் உபறுவன்

உபறுவன் என்பவர் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. உபசஅன் என்பது சமய ஆசிரியரைக் குறிக்கும்.

குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்ஓன்

சேர ஆதன் என்பவன் செய்வித்த குகை எனலாம். அந்நாளில் சேர அரசர்களில் பெயர்கள் பெரும்பாலும் ஆதன் என வருவதைக் காணலாம். பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் இடையேயான பெருவழியில் இந்த ஊர் அமைந்துள்ளது.

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவெபோன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பிட்டன் என்பவர் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மூன்றாவதாக உள்ள கல்வெட்டில் பாகனூர் என்ற ஊர்பெயர் காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில், வேள்விக்குடி செப்பேட்டில் பாகனூர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சோழவந்தான்தான் பாகனூர். சோழன்தலைகொண்ட வீரபாண்டியனின் வெற்றியை நினைவு கூறும் பொருட்டு சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. வீரபாண்டியன் காலம் கி.பி.946-கி.பி.964. பொன்னியின் செல்வன் வாசகர்கள் இந்த பாண்டியனை அறிவார்கள். ராஜராஜன் இப்பகுதியை கைப்பற்றிய போது அவன் பெயரில் ஜனநாதசதுர்வேதிமங்கலம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. ராஜராஜனின் பட்டப்பெயர்களுள் ஜனநாதனும் ஒன்று. இதை உறுதிசெய்யும் பொருட்டு இன்னும் சோழவந்தானில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஜனகை மாரியம்மன் கோயில் என்று பெயர்.


a«ña»Ça«¬a«+a«¦a«¦a«+a«¿a«+a«»a«òa«¬a»ì

தீபாவளி = தீபம் + ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள். சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் பகவான் வர்த்தமான மகாவீரர். அந்த நாளில் தான் வீடுபேறு அடைந்தார். அந்த நாளை சமண  மக்கள் யாவரும், அரசன் ஆணைப்படி வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். அந்நன்னாளே இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பது போன்ற சம்பிரதாயங்கள், எல்லாம் பின் நாளில் ஏற்பட்ட வழக்கங்கள்.  

 –  இரா.பானுகுமார், தமிழ்ச்சமணம்

கொங்கர்புளியங்குளம், மதுரையிலிருந்து செக்காணூரணி செல்லும் வழியில் மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. கொங்கர்புளியங்குளத்திற்கு சகோதரரோடு ஒருமுறையும், பசுமைநடைக்குழுவோடும் ஒருமுறையும் சென்றிருக்கிறேன். அதைக்குறித்து மதுரை கொங்கர்புளியங்குளமும் கி.மு.இரண்டாம் தமிழ்பிராமிஎழுத்துருவும், பஞ்சபாண்டவமலையில் பசுமைநடைப்பயணக்குறிப்புகள் என்று இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். இம்முறை கொங்கர்புளியங்குளத்திற்கு பசுமைநடையாக 20.10.2013 அன்று சென்றிருந்தோம். சாந்தலிங்கம் அய்யா வந்ததால் இம்முறை இன்னும் நிறையத் தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

a«¬a«Üa»üa««a»êa«¿a«ƒa»ê

முதல்நாள் பெய்தமழையால் வழியெங்கும் பசுமையாகயிருந்தது. ஈரநப்படித்து மலையைப் பார்ப்பதற்கு மிகவும் இரம்மியமாகயிருந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் இந்நடைக்கு வந்திருந்தனர். மலையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பேர் தங்குமளவிற்கு படுகைகளை செதுக்கியுள்ளனர். இதை செய்வித்தவர்களின் பெயர்கள் பாறையின் முகப்பில் வெட்டப்பட்டுள்ளது. அதை சாந்தலிங்கம் அய்யாவிடம் கல்வெட்டுக்கலை பயிலும் நண்பர் ராஜன்னா தமிழ்பிராமி எழுத்துக்களை ஆர்வமாக பாறையில் வாசித்துப் பார்த்தார். இந்நடை குறித்த அனுபவங்களை அழகான நிழற்படங்களோடு பதிவாகவும் எழுதியுள்ளார். எல்லோரும் கூடியதும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார்.

santhalingam

a«¦a«¦a«¦a«+a«¦a»ìa«¦a»üa«¦a«òa»üa«¬a»ìa«¬a»ü

a«¬a«+a«»a»ìa«Üa»ìa«Üa«¦a»ì

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இம்மலையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். மதுர வரலாறு நூல் முதல் பதிப்பு தீர்ந்து அடுத்த பதிப்பு தயாராகிக் கொண்டிருப்பதை அறிவித்தார். அடுத்த நடை அவனியாபுரம் அருகில் இராணிமங்கமாள் சிலை உள்ள பழமையான கோயிலுக்கு செல்வோம் என்றார். இதுபோல நாம் தொடர்ந்து பயணிப்பதன் மூலம் திறந்தவெளி மதுக்கடைகளாக மாறிவரும் மலைகள்  ஓரளவிற்கு பாதுகாக்கப்படும் என்பதையும் கூறினார். மேலும், இங்குள்ள மதுபானப்புட்டிகள், குப்பைகளை விருப்பமுள்ளவர்கள் அகற்றினால் உதவியாக இருக்கும் என முத்துக்கிருஷ்ணன் கேட்டுக்கொள்ள தன்னார்வமாக பலரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்தோம். பின் அங்கிருந்து மலைமேல் ஏறி சுற்றிப்பார்த்தோம். நாகமலை மிக அருகில் எழிலோடு காட்சியளித்தது. மலைகளிலிருந்து வேடிக்கை பார்க்கும் போது மனம் இலகுவாகிறது. பறவைக்கோணத்தில் ஊர்களைப் பார்க்கும் போது ஏற்படும் இன்பத்தை சொல்லில் அடக்க முடியாது.

a«¿a«+a«òa««a«¦a»êa«»a«+a«¬a»ì a«Äa«¦a«+a«¦a»ì

எல்லோரும் காலை நேரத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டும், படமெடுத்தும் கொண்டும் இருந்தனர். பின் மலையை விட்டு மெல்ல இறங்கினோம். பாறையிலிருந்து மௌனமாக மகாவீரர் தன்னைக் காணவந்த பசுமைநடை குழுவினரைப் பார்த்து புன்னகையோடு விடைகொடுத்தார். மலையடிவாரத்தில் உள்ள நாட்டார் தெய்வத்திற்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அதை கொஞ்சம் வாங்கி உண்டோம்.

a«¿a«+a«ƒa»ìa«ƒa«+a«¦a»ìa«¬a»èa«Öa»ìa«òa«¦a»ì

அனைவரும் மலையடிவாரத்தில் உள்ள மாயன் கோயில் முன்புள்ள மரத்தடியில் உணவருந்தினோம். இட்லியோடு கேப்பை ரொட்டி, கொள்ளுப் பொடி என இயற்கை உணவு கொஞ்சம் வழங்கினர். மிக மகிழ்வோடு உண்டு உரையாடி அங்கிருந்து கிளம்பினோம்.

a«ëa«úa«¦a»ü

இம்முறை பசுமைநடைக்கு எங்கள் வீட்டுக்கருகிலுள்ள சிறுவன் மற்றும் இராஜபாளையத்திலிருந்து பசுமைநடைக்கு தொடர்ந்து வரும் சகோதரியின் மகனுடன் சென்றிருந்தேன். பள்ளி மாணவனான சிறுவனுக்கு இந்நடை பெரும் உற்சாகத்தைத் தந்தது.

a«¬a»üa«ña«+a«»a«¬a«»a«úa«+

கொங்கர் புளியங்குளம் குறித்த மற்ற பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள். கொங்கர் புளியங்குளத்தின் அழகைக் காண நண்பர் இளஞ்செழியனின் ‘குவியம்’ பாருங்கள். கொங்கர்புளியங்குளம் பசுமைநடை குறித்த நண்பர் வேல்முருகன் அவர்களின் பதிவையும் வாசியுங்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

Tiruvadhavur 1

வேண்டத் தக்க தறிவோய்நீ                                    வேண்ட முழுதும் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ                      வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டிநீ யாதருள்செய்தாய் யானும்             அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன் றுண்டென்னில்               அதுவும் உன்றன் விருப்பன்றே  

– திருவாசகம்

சமயக்குரவர் நால்வரில் மாணிக்கவாசகரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அவரும் மதுரை வாசகர். பசுமைநடைக்குழுவாக மதுரையிலுள்ள தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை குழுவாகப் பயணித்து வருகிறோம். இம்முறை திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூருக்குச் சென்றோம். இந்த ஊரில் உள்ள ஓவா மலையில் சமணத்துறவியர் தங்கிய சுவடுகள் காணப்படுகிறது. சனிஸ்வரனுக்கு வாதநோயைப் போக்கிய திருமறைநாதர் ஆலயம் இந்த ஊரில் உள்ளது.

22.09.2013 அன்று அதிகாலை எழுந்து நானும், சகோதரியின் மகனும் கிளம்பி சென்றோம். எங்களுக்கு முன்னதாகவே மாட்டுத்தாவணி முன்னுள்ள டெம்பிள்சிட்டி ஹோட்டல் முன் சென்னையிலிருந்து பாபுவும், முருகராஜூம் வந்திருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வர அரட்டை களைகட்டியது. எல்லோரும் வந்ததும் இரண்டு பேருந்துகளில் திருவாதவூர் நோக்கிச் சென்றோம். மாட்டுத்தாவணிக்கு அருகிலுள்ள தோரணவாயிலுக்குள் யானைமலை அழகாக வரவேற்றது. பார்த்தாலே பரவசம்.

யானைமலை ஒத்தக்கடையிலிருந்து வலப்புறமாக திரும்பி திருமோகூர் – திருவாதவூர் செல்லும் சாலையில் சென்றோம். வழிநெடுக வேடிக்கை பார்த்துக் கொண்டு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டே சென்றேன். திருமோகூர், தாமரைப்பட்டி, இடையபட்டி, மூக்கம்பட்டி தாண்டி திருவாதவூர் சமத்துவபுரத்திற்கு சற்றுமுன் மலைக்கருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓவாமலையை நோக்கி நடந்தோம்.

greenwalk

ஒருபக்கம் சிறுசிறு குன்றுகளாக மலைகள் வரவேற்றது. மறுபுறம் பாளம்பாளமாக கிடக்கும் மலையைப் பார்த்து கண்ணீர் வந்தது. ஓவாமலை தன் கிளைகளை இழந்து ‘ஓ’வென்று  இருந்தது.  வெய்யோனும் பசுமைநடையில் கலந்து கொண்டதால் வெயில் கொஞ்சம் சுள்ளென்று இருந்தது.

சமணப்பள்ளி உள்ள குன்றை நோக்கி பயணித்தோம். நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் இரண்டு பகுதியாக மலையிலுள்ள படுக்கைகளையும், தமிழ்பிராமிக் கல்வெட்டுகளையும் பார்த்தோம். திருவாதவூர் குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திருவாதவூர் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

திருவாதவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். சங்க காலப்புலவர்களில் கபிலர் பிறந்த ஊர். இவரது காலத்தை கி.மு.2-3 ஆம் நூற்றாண்டு எனலாம். பாரிவள்ளலிடம் அமைச்சராக பணியாற்றியவர் கபிலர். பாரி சிங்கம்பிடாரிக்கு அருகிலுள்ள பிரான்மலையை ஆண்டார். கபிலர், பரணர் என்ற இரண்டு புலவர்களையும் சேர்த்தே அக்காலத்தில் சொல்வார்கள்.

திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர். இவர் திருவாதவூரார் என்றே அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு. பாண்டியனிடம் அமைச்சராகப் பணியாற்றிய இவர் தொண்டிக்கருகில் குதிரை வாங்கச் சென்ற போது சிவனால் ஆட்கொள்ளப்பட்டு அறந்தாங்கிக்கருகில் ஆவுடையார் கோயில் கட்டினார். பின் பாண்டியன் குதிரைகளைக் கேட்க நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை சிவன் நிகழ்த்தினார். (இதைக்குறித்து மேலும் அறிய மதுரை வீதிகளில் பசுமைநடை பதிவை வாசிக்கவும்).

padugai

இங்குள்ள சமணப்பள்ளியில் இரண்டு மூன்று பேர் தங்குவதற்கு படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளது. குகையின் விளிம்பில் இரண்டு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நீர்வடிவிளிம்பின் மேலுள்ள கல்வெட்டில் ‘பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்’ என்ற வரி காணப்படுகிறது. பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டது எனப் பொருள் கொள்ளலாம். பாங்காட என்பது இவ்வூருக்கு அருகிலுள்ள பனங்காடி என்ற ஊரையும் குறிக்கலாம். பனங்காடியில் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது.

kalvettu

அடுத்த கல்வெட்டு குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழ் ‘உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்’  என்றுள்ளது. பரசு என்ற உபாசகரால் இந்த உறைவிடம் அமைக்கப்பட்டது எனலாம். உபசன் என்பது சமய ஆசிரியரைக் குறிக்கும். இக்குகைத்தளத்தில் வட்டவட்டமாக சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

திருமறைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பிற்காலப்பாண்டியர்களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டுகள் கொஞ்சம் உள்ளன. வியாபாரிகளும், தேவரடியார்களும் கோயிலுக்கு சிலைகள் வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டுகளும் உள்ளன. இந்தக் கோயிலில் எழுபதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் இக்கோயிலில் சிலைகள் உள்ளன.

திருவாதவூரைத் தாண்டிச் சென்றால் பெரிய ஏரியொன்று வரும். அதற்கு ‘உலகளந்த சோழன் பேரேரி’ என்று பெயர். முதலாம் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்தது. சோழர்கள் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த போது இந்த ஏரி வெட்டப்பட்டிருக்கலாம். இந்த மடையில் புருஷாமிருகம் சிலையுள்ளது. பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்றதை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் ஒன்று இந்த ஊரில் உள்ளது.

அந்தக் காலத்தில் மதுரையிலிருந்து உறையூருக்குச் செல்லும் பாதைகளில் இந்த வழியும் ஒன்றாகயிருக்கலாம். திருமோகூர், திருவாதவூர், பனங்காடி, மேலூர் வழி பெருவழியொன்று இருந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஊர் சங்ககாலத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த ஊராகயிருக்கிறது.

sivan temple

சாந்தலிங்கம் அய்யாவின் உரையைக் கேட்டபின் மலையிலிருந்து இறங்கி பேருந்தை நோக்கி நடந்தோம். அங்கிருந்து திருமறைநாதர் கோயிலுக்கு சென்றோம். குடமுழுக்குக்கான பணிகள் கோயிலில் நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் பழமையான கோயில். மக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் திருமறைநாதர் அமைதியாக வீற்றிருக்கிறார். கோயிலுக்குள் எல்லோரும் கூடினோம்.

அய்யாவுக்கு அவர்படம்

ஒவ்வொரு பசுமைநடையையும் அர்த்தமுள்ள நிகழ்வாக்கும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வை கோயில் வெளிப்பிரகாரத்தில் நடத்தினோம். சமணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வரும் ஜெயஸ்ரீ அவர்கள் ராஜன்னா எடுத்த சாந்தலிங்கம் அய்யாவின் நிழற்படத்தை அவருக்கு வழங்கினார்.

பாபுவுக்குப் படம்

அதற்கடுத்து கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை தேடித்தேடி வாங்கி தந்து அவர்களது ஆய்வுகளுக்கு உதவி வரும் புத்தகத்தாத்தா முருகேசன் அய்யா அடுத்த நினைவுப்பரிசை சாந்தலிங்கம் அய்யாவிடம் வழங்கினார். விருட்சத்திருவிழாவில் புகைப்படகலைஞர் ஜேம்ஸ் எடுத்த படத்தை அற்புதமான ஓவியமாக ஓவியர் ரவி வரைந்திருந்தார். அந்தப் படத்தை அவர் பசுமைநடைக்கு வழங்க ஓவியர் பாபு பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்நிகழ்வுகளை அழகாக ஒருங்கிணைத்தார். அற்புதமான நிகழ்வு மிக எளிமையாக நடந்தது.

எல்லோரும் கோயிலுக்குள் சென்று திருமறைநாதர், வேதநாயகியை வணங்கினோம். குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால் விதானங்களில் வண்ண வண்ண பூக்கோலங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன. கோயில் மிகவும் ரம்மியமாகயிருந்தது. வரவே மனசில்லை. அவ்வளவு அமைதியான இடம். வெளிபிரகாரத்தில் எல்லோரும் சேர்ந்து உணவருந்தினோம். அங்கிருந்து மறக்க முடியாத நினைவுகளோடு கிளம்பினோம். இந்தப் பயணத்தில் எங்களோடு எம்.ஏ.வி.எம்.எம் பள்ளி மாணவர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குகன் & எம்.ஏ.வி.எம்.எம் பள்ளிகளிலிருந்து இந்நடைக்கு பேருந்து உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றிகள் பல.

kulam

பதிவிற்கான நிழற்படங்களை தந்துதவிய நண்பர் ராஜன்னா சிறந்த வாசகர், சூழலியல் ஆர்வலர், பல் மருத்துவர். மதுரக்காரன் என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வருகிறார். மேலும், இவர் எடுக்கும் படங்களில் மந்திரப்பொடியைத் தூவி அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கும்படி செய்துவிடுகிறார்.

ஆவணி புட்டுத்திருவிழாவிற்கு மதுரைக்கு வந்த மாணிக்கவாசகரை மாட்டுவண்டியில் வைத்து மாட்டுத்தாவணிக்கிட்ட சென்ற மாதம் பார்த்தேன். எளிமையாக சென்று கொண்டிருந்தார். சங்ககாலப்புலவர் கபிலர் மீதான காதலை ஜெயமோகனின் ‘காடு’ நாவல் ஏற்படுத்தியது. குறிஞ்சி நிலப்பரப்பில் அலைய வேண்டுமென்ற ஆவலை உண்டாக்கிய நாவல் ‘காடு’. நாலு வருடங்களுக்கு முன் நானும் என் சகோதரனும் திருமோகூரிலிருந்து திருவாதவூருக்கு மாலைப்பொழுதில் சைக்கிளில் சென்றது மறக்க முடியாத அனுபவம்.

தினகரன் நாளிதழில் இப்பயணம் குறித்த பதிவு 23.09.2013 அன்று மதுரை செய்திகளில் வந்திருந்தது. தொடர்ந்து பசுமைநடைப் பயணங்களை பதிவு செய்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

மதுரவரலாறு

தமிழின் தாய்வீடான மதுரைக்கு உலகத்தின் எந்த மூலையிலிருந்து நீங்கள் வந்தாலும் உங்களை வரவேற்பது மதுரையைச் சூழ்ந்த மலைகளே. யானைமலை, நாகமலை, அழகர்மலை, சமணமலை, திருப்பரங்குன்றமலை, பசுமலை போன்ற மலைகளைக் காணாமல் மதுரைக்குள் பயணிக்க இயலாது.

நாலாபக்கமும் நான்மாடக்கூடலைச் சூழ்ந்த இம்மலைகள் மதுரைக்கு அழகாகவும், அரணாகவும்  திகழ்கின்றன. தொல்குடிகளின் பாறைஓவியங்களும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகளும், சமணத்துறவிகளின் காலடித்தடங்களும்  இம்மலையில் உறைந்திருக்கிறது.

அனைவருக்கும் கல்வியையும், மருத்துவத்தையும் கொடையாய் வழங்குவதை தம் பணியாகக் கொண்ட சமணத்துறவிகளின் அன்புதான் இம்மலைகளிலுள்ள பாறையிடுக்குகளில் ஊற்றாய் இன்றும் கசிந்து கொண்டிருக்கிறது.

book wrapperமலைகள் சூழ்ந்த மதுரையின் தொல்லியல் தலங்களை நோக்கி மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை பயணித்த பசுமைநடைக்குழு அந்த பயண அனுபவங்களைத் தொகுத்து ‘மதுர வரலாறு – சமணப் பெருவெளியின் ஊடே…’ என்ற நூலாக வெளியிட்டுள்ளனர். ‘மதுர வரலாறு’ எனும் போதே தித்திப்பாயிருக்கிறது. மதுர என்றாலே இனிமைதானே.

பசுமைநடையின் 25வது நடையைக் சிறப்பிக்கும் விதமாக கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் உள்ள ஆலமரத்தோப்பில் கொண்டாடிய விருட்சத் திருவிழாவில் மதுர வரலாறு நூலை பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா வெளியிட சமணமலை அடிவாரத்தில் பருத்திபால் விற்கும் ஜெயமணி அம்மா பெற்றுக் கொண்டார். அற்புதமான நிகழ்வு.

அழகர்மலை, யானைமலை, கீழக்குயில்குடி சமணமலை, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி, விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், மேட்டுப்பட்டி சித்தர்மலை, திருப்பரங்குன்றம், வரிச்சூர் குன்னத்தூர், மாங்குளம் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவூர், குப்பல்நத்தம், மாடக்குளம் என மதுரையின் வரலாற்றுத்தலங்களைக் குறித்து கல்வெட்டுத் தகவல்களோடும், பேருந்து வழித்தட எண்களோடும் இந்நூல் வந்துள்ளது.

இந்நூலில் சமணமதத்தின் தோற்றமும், தென்னகப் பரவலும் குறித்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவின் கட்டுரை மதுரையில் சமண வரலாறை எளிமையாக எல்லோருக்கும் எடுத்துரைக்கிறது. பசுமைநடை உருவான விதம் மற்றும் பசுமைநடைப் பயணக்குறிப்புகளை வாசிக்கும் போது மகிழ்ச்சியாகயிருக்கிறது. பசுமைநடைக்குழுவினருடன் இந்த இடங்களுக்கெல்லாம் பயணித்ததால் இந்நூல் இன்னும் எனக்கு நெருக்கமாகிறது.

மதுர வரலாறு நூலை புதிதாக வாசிப்பவர்கள் பசுமைநடையில் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும். பசுமைநடையில் இணைய 97897 30105 என்ற அலைபேசி எண் அல்லது greenwalkmdu@gmail.com மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும். இந்நூல் வெளிவர காரணமாக இருந்த அனைவருக்கும், விளம்பரங்கள் தந்துதவிய நிறுவனங்களுக்கும், பசுமைநடையை தொடங்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் நன்றிகள் பல.

maduraibookfair

மதுர வரலாறு – சமணப்பெருவழியின் ஊடே…

விலை – 100 ரூபாய், பசுமைநடை வெளியீடு

கிடைக்குமிடம்

சர்வோதய இலக்கியப் பண்ணை, மல்லிகை புக் சென்டர்

மேலவெளிவீதி, மதுரை.