தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி
என்னைப் புதிய உயிராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
மகாகவி பாரதியின் கவிதை வரிகளை கமல்ஹாசனின் குரலில் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கும். என்னுடைய அலைபேசியின் அழையோசையே இந்தக்கவிதைதான். கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். அவரது திரைப்படங்கள், பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்!
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்!
எனக்கு பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்தரராஜனைப் பிடிக்கும். இசைஞானி இளையராஜாவும், கலைஞானி கமல்ஹாசனும் பாடிய பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் படிக்கையில் பாட்டுப்புத்தகம் வாங்கி வைத்து படிப்பது வழக்கம். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஆளவந்தான் பாட்டு புத்தகம் வைத்து படித்துக் கொண்டிருந்தோம். அதைப்பார்த்த ஆசிரியை பாட்டுப்புத்தகத்தை வாங்கி கிழித்துப்போட்டு விட்டார். மனப்பாடப்பகுதி பாடல்களைவிட ஆளவந்தான் பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம் என்று அவங்களுக்கு தெரியாது.
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்!
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்!
கமல்ஹாசனின் குரலின் மீது எனக்கு தனி ஈர்ப்பு உள்ளது. மனதிற்கு மிகவும் நெருக்கமான காந்தக்குரல். கமல்ஹாசனின் குரலில் வந்த பாடல்கள் எல்லாமே தனித்துவமானவை. கமல்ஹாசன் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களை தொகுத்துள்ளேன்.
- நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்
- நரிக்கதை – மூன்றாம் பிறை
- விக்ரம், விக்ரம் – விக்ரம்
- கண்ணே தொட்டுக்கவா – விக்ரம்
- அம்மம்மா வந்ததிங்கு – பேர் சொல்லும் பிள்ளை
- தென்பாண்டிச்சீமையிலே – நாயகன்
- போட்டா மடியுது – சத்யா
- ராஜா கையவச்சா – அபூர்வ சகோதரர்கள்
- சுந்தரி நீயும் – மைக்கேல் மதன காமராஜன்
- கண்மனி அன்போடு – குணா
- போட்டுவைத்த காதல் திட்டம் – சிங்காரவேலன்
- சொன்னபடிகேளு – சிங்காரவேலன்
- சாந்துப்பொட்டு – தேவர்மகன்
- இஞ்சி இடுப்பழகி – தேவர்மகன்
- கொக்கரக்கோ – கலைஞன்
- தன்மானம் உள்ள நெஞ்சம் – மகாநதி
- எங்கேயோ – மகாநதி
- பேய்களை நம்பாத – மகாநதி
- எதிலேயும் வல்லவன்டா – நம்மவர்
- ருக்கு ருக்கு – அவ்வை சண்முகி
- காசுமேலே காசுவந்து – காதலா காதலா
- மெடோனா மாடலா நீ – காதலா காதலா
- ராம்…ராம்… – ஹேராம்
- நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி – ஹேராம்
- ராமரானாலும் பாபரானாலும் – ஹேராம்
- கடவுள்பாதி மிருகம்பாதி – ஆளவந்தான்
- சிரி…சிரி…சிரி – ஆளவந்தான்
- ஆழங்கட்டி மழை – தெனாலி
- இஞ்சிருங்கோ – தெனாலி
- கந்தசாமி மாடசாமி – பம்மல் கே சம்மந்தம்
- ஏண்டி சூடாமணி – பம்மல் கே சம்மந்தம்
- வந்தேன் வந்தேன் – பஞ்சதந்திரம்
- காதல்பிரியாமல் – பஞ்சதந்திரம்
- ஏலே மச்சி மச்சி – அன்பே சிவம்
- யார்யார் சிவம் – அன்பே சிவம்
- நாட்டுக்கொரு சேதி சொல்ல – அன்பே சிவம்
- உன்னவிட இந்த உலகத்தில் – விருமாண்டி
- மாடவிளக்க – விருமாண்டி
- கொம்புலபூவசுத்தி – விருமாண்டி
- அன்னலட்சுமி – விருமாண்டி
- பாண்டி மலையாளம் – விருமாண்டி
- ஆழ்வார்பேட்டை ஆளுடா – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- கலக்கப்போவது யாரு – வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- ஏலேய் நீ எட்டிப்போ – மும்பை எக்ஸ்பிரஸ்
- குரங்கு கையில் மாலை – மும்பை எக்ஸ்பிரஸ்
- ஓஹோசனம் ஓஹோசனம் – தசாவதாரம்
- அல்லா ஜானே – உன்னைப்போல் ஒருவன்
- தகிடுதத்தம் – மன்மதன் அம்பு
- கண்ணோடு கண்ணை – மன்மதன் அம்பு
- நீலவானம் – மன்மதன் அம்பு
இந்த 50 பாடல்களையும் பார்க்கும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது. சில பாடல்களை கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் பாடியிருந்தால் இவ்வளவு நன்றாக வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையிலும், முண்ணனி பாடகர் – பாடகிகளோடும் இணைந்து பாடல்கள் பாடியிருக்கிறார். கமல்ஹாசன் சிறந்த பாடகர் என்று இசையாளுமைகள் பலரும் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.
அன்று சொன்னான் பாரதி
சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும்
தோல்வி என்பதை ஏற்றதில்லையடி!
மகாகவி பாரதியாரின் வசனகவிதை மேல் கமல்ஹாசனுக்கு காதல் அதிகமென நினைக்கிறேன். கமலின் நிறையப் பாடல்களில் வசனநடையைக் காணலாம். வசனநடையில் வந்த பாடல்களை எல்லாம் படிக்கும்போதே மனதில் உற்சாகம் பிறக்கும். கமல்ஹாசனின் பாடல்களுக்கிடையே உரையாடல்களும் அதிகம் வரும். சென்னைவட்டார வழக்கில் ‘ராஜா கையவச்சா, காசுமேலே, ஆழ்வார்பேட்டை ஆளுடா’ போன்ற பாடல்களை பாடியுள்ளார்.
கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை!
மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!
ஓடிஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை!
அன்பேசிவம் படத்தில் ‘நாட்டுக்கொரு சேதி சொல்ல’ பாடலில் வரும் ‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை’ என்ற வரிகளை அலைபேசியில் எனது குரலில் பதிந்து அழையோசையாக வைத்திருந்தேன். நிறையப்பேர் அது கமல்ஹாசனின் குரல் என்றெண்ணியதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. கமல்ஹாசன் பிற நடிகர்களுக்காக பாடிய பாடல்களும் சிறப்பானவை. அஜித்திற்காக உல்லாசம் படத்தில் ‘முத்தே முத்தம்மா’, தனுஷின் புதுப்பேட்டை படத்தில் ‘நெருப்புவாயினில்’ பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
துடிக்குது புஜம்! ஜெயிப்பது நிஜம்!
விரைவில் விஸ்வரூபம் படப்பாடல்கள் மதுரையிலிருந்து முதலில் ஒலிக்கப் போகிறது. கமல்ஹாசன் நம்ம வைகைகரையைச் சேர்ந்தவர் எனும்போது பெருமையாய் இருக்கிறது. நவம்பர் 7 அன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!
நன்றி – விகடன்.காம்
நல்லதொரு தொகுப்பு & பகிர்வு… எனக்குப் பிடித்த நடிகர்களில் கமல் அவர்களும் ஒருவர்… ரசித்திப் படித்தேன்… நன்றி…
கமல்ஹாசனின் பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். இடைஇடையே உள்ள வரிகளை தனிப்பதிவாக தொகுத்து வெளியிட்டால் இன்னும் நன்றாகயிருக்கும்.
திரு கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தொகுப்பு நன்றாக இருக்கிறது.
இஞ்சி இடுப்பழகி, சுந்தரி நீயும், நினைவோ ஒரு பறவை பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.
கமல்ஹாசனின் விசிறியான உங்களுக்கு இந்த தொகுப்பிற்காக பாராட்டுக்கள்!
அன்பின் சித்திர வீதிக்கார,
அருமையான பதிவு. கலை ஞானி கமலஹாசனின் பிறந்த நாளன்று – அவரது பல்வேறு தோற்றங்களைப் பதிவாக்கி வெளியிட்டமை நன்று. அலைபேசியின் அழையோசை – அருமையான தமிழாக்கம்,
//மனப்பாடப்பகுதி பாடல்களைவிட ஆளவந்தான் பாடல்கள் எங்களுக்கு மனப்பாடம் // ஆகா ஆகா – என்ன ஒரு கர்வம். விருப்பத்தினை நிறைவேற்றி கர்வப்படுவது நன்று.
கமலஹாசன் பாடிய 50 பாடல்களைத் தொகுத்து வழங்கியமைக்குப் பாராட்டுகள்.
நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
கமல்ஹாசன் இத்தனை பாடியிருக்கிறார் என்பதே பெரிய வியப்பு! நீங்கள் தொகுத்திராவிட்டால் தெரிந்தே இருக்காது. இதில் ஐந்தாவது கேட்டிருப்பேனா என்பது சந்தேகமே.
எனக்கு நினைவிருப்பது ஞாயிறு ஒளி மழையில் என்று ஒரு பாட்டு.. விக்ரம் விக்ரம் கூட நினைவிருக்கிறது. மற்றபடி பட்டியலில் ஒன்று கூட நினைவில் கீறவில்லை.
விஜயசாந்தி-கமல் தெலுங்கு டப்பிங் (moon over paramour ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காபி) படமொன்றில் கமல் பாடியதும் நினைவிருக்கிறது. டப்பா படம், டப்பா பாட்டு 🙂
காதல் வந்திருச்சுனு ஒரு பாட்டு ரொம்ப பேமசாச்சே?
சித்திரவீதிகாரருக்கு நன்றி!!!! தலைவரின் கானமழைப் பதிவிற்கு….
எங்கள் தலைவன் பாடிய “அடிக்கிது குளிரு…துடிக்கிது தளிரு” என்ற பாடல் இதுபோன்ற ஆயிரம் பாடல்களுக்குச் சமானம்.
எனக்கு பிடித்த ரஜினிகாந்தின் 12 பாடல்கள்
1. தேடினேன் தேவதேவா – ராகவேந்திரர்
2. மானின் இரு கண்கள் – மாப்பிள்ளை
3. மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா
4. சுந்தரி கண்ணால் ஒரு சேதி – தளபதி
5. ராக்கம்மா கையதட்டு – தளபதி
6. சந்தைக்கு வந்த கிளி – தர்மதுரை
7. காதலின் தீபம் ஒன்று – தம்பிக்கு எந்த ஊரு
8. சுத்தி சுத்தி வந்தீக – படையப்பா
9. மின்சாரக்கண்ணா – படையப்பா
10. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா – ராஜா சின்ன ரோஜா
11. நான் ஆட்டோக்காரன் – பாட்ஷா
12. உழைப்பாளி இல்லாத நாடு – உழைப்பாளி
இதில் ‘நான் ஆட்டோக்காரன்’ பாடலுக்கும், ‘உழைப்பாளி இல்லாத நாடு’ பாடலுக்கும் பள்ளி நாட்களில் சுதந்திரதினவிழா & குடியரசு தினவிழா நாட்களில் ஆடியிருக்கிறோம்.
ரஜினி படங்களில் ராகவேந்திராவும் & பாட்ஷாவும் ரொம்பப் பிடிக்கும். கமலும் ரஜினியும் தமிழ் திரையுலக இணைகளிலேயே மிகவும் நண்பர்கள் அல்லவா?
kamal n iru kangal