மதுரவரலாறு

தமிழின் தாய்வீடான மதுரைக்கு உலகத்தின் எந்த மூலையிலிருந்து நீங்கள் வந்தாலும் உங்களை வரவேற்பது மதுரையைச் சூழ்ந்த மலைகளே. யானைமலை, நாகமலை, அழகர்மலை, சமணமலை, திருப்பரங்குன்றமலை, பசுமலை போன்ற மலைகளைக் காணாமல் மதுரைக்குள் பயணிக்க இயலாது.

நாலாபக்கமும் நான்மாடக்கூடலைச் சூழ்ந்த இம்மலைகள் மதுரைக்கு அழகாகவும், அரணாகவும்  திகழ்கின்றன. தொல்குடிகளின் பாறைஓவியங்களும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகளும், சமணத்துறவிகளின் காலடித்தடங்களும்  இம்மலையில் உறைந்திருக்கிறது.

அனைவருக்கும் கல்வியையும், மருத்துவத்தையும் கொடையாய் வழங்குவதை தம் பணியாகக் கொண்ட சமணத்துறவிகளின் அன்புதான் இம்மலைகளிலுள்ள பாறையிடுக்குகளில் ஊற்றாய் இன்றும் கசிந்து கொண்டிருக்கிறது.

book wrapperமலைகள் சூழ்ந்த மதுரையின் தொல்லியல் தலங்களை நோக்கி மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை பயணித்த பசுமைநடைக்குழு அந்த பயண அனுபவங்களைத் தொகுத்து ‘மதுர வரலாறு – சமணப் பெருவெளியின் ஊடே…’ என்ற நூலாக வெளியிட்டுள்ளனர். ‘மதுர வரலாறு’ எனும் போதே தித்திப்பாயிருக்கிறது. மதுர என்றாலே இனிமைதானே.

பசுமைநடையின் 25வது நடையைக் சிறப்பிக்கும் விதமாக கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் உள்ள ஆலமரத்தோப்பில் கொண்டாடிய விருட்சத் திருவிழாவில் மதுர வரலாறு நூலை பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா வெளியிட சமணமலை அடிவாரத்தில் பருத்திபால் விற்கும் ஜெயமணி அம்மா பெற்றுக் கொண்டார். அற்புதமான நிகழ்வு.

அழகர்மலை, யானைமலை, கீழக்குயில்குடி சமணமலை, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி, விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், மேட்டுப்பட்டி சித்தர்மலை, திருப்பரங்குன்றம், வரிச்சூர் குன்னத்தூர், மாங்குளம் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவூர், குப்பல்நத்தம், மாடக்குளம் என மதுரையின் வரலாற்றுத்தலங்களைக் குறித்து கல்வெட்டுத் தகவல்களோடும், பேருந்து வழித்தட எண்களோடும் இந்நூல் வந்துள்ளது.

இந்நூலில் சமணமதத்தின் தோற்றமும், தென்னகப் பரவலும் குறித்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவின் கட்டுரை மதுரையில் சமண வரலாறை எளிமையாக எல்லோருக்கும் எடுத்துரைக்கிறது. பசுமைநடை உருவான விதம் மற்றும் பசுமைநடைப் பயணக்குறிப்புகளை வாசிக்கும் போது மகிழ்ச்சியாகயிருக்கிறது. பசுமைநடைக்குழுவினருடன் இந்த இடங்களுக்கெல்லாம் பயணித்ததால் இந்நூல் இன்னும் எனக்கு நெருக்கமாகிறது.

மதுர வரலாறு நூலை புதிதாக வாசிப்பவர்கள் பசுமைநடையில் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும். பசுமைநடையில் இணைய 97897 30105 என்ற அலைபேசி எண் அல்லது greenwalkmdu@gmail.com மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும். இந்நூல் வெளிவர காரணமாக இருந்த அனைவருக்கும், விளம்பரங்கள் தந்துதவிய நிறுவனங்களுக்கும், பசுமைநடையை தொடங்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் நன்றிகள் பல.

maduraibookfair

மதுர வரலாறு – சமணப்பெருவழியின் ஊடே…

விலை – 100 ரூபாய், பசுமைநடை வெளியீடு

கிடைக்குமிடம்

சர்வோதய இலக்கியப் பண்ணை, மல்லிகை புக் சென்டர்

மேலவெளிவீதி, மதுரை.

பின்னூட்டங்கள்
  1. udayabaski சொல்கிறார்:

    மதுர வரலாறு மதுரமான வரலாறு…

  2. Asin sir சொல்கிறார்:

    நல்ல முயற்சி. ஆனால், இடையிடையே விளம்பரங்கள் இருப்பது படிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தது. பொக்கிஷமான இந்த மாதிரி நூல்களில் விளம்பரங்களை கடைசியில் ஒதுக்கி விட வேண்டும். இருந்தாலும், இதற்காக உழைத்த அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

  3. ramani சொல்கிறார்:

    பகிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்களுடன்

  4. வேல்முருகன்.கு சொல்கிறார்:

    மதுர வரலாறு நூல் நம் கையில் இருந்தால் மதுரைவரலாறு நம் கையில்

  5. dr.k.vellaichamy r h m p ,r s m p . சொல்கிறார்:

    மதுர வரலாறு இப்பொழதே வாங்க வேண்டும் போல் இருக்கு..

பின்னூட்டமொன்றை இடுக