நாவலினை நுட்பமாக வாசித்தால், ‘வில்லன்’ எனத் தனித்து யாரும் சித்தரிக்கப்படாததைக் கண்டறிய முடியும். எல்லாவிதமான பலவீனங்களும் மேன்மைகளும் நிரம்பிய மனிதன் இயல்பிலேயே துக்கமும் கொண்டாட்டமும் மிக்கவன். எதிலும் திருப்தியற்ற மனநிலையில், அடுத்தடுத்த தளங்களில் காலூன்றி எதையோ சாதிக்கத்துடிக்கும் நிலையில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அளவற்று விரிகின்றன. 

– ந.முருகேசபாண்டியன்

பலவகையான மரங்கள், பலவகையான உயிரினங்கள் வாழும் அடர்ந்த தோப்பை போலவே மதுரை அப்பாஸ்பாய்தோப்பு முழுக்க பலவகையான மனிதர்கள், அதற்கேற்ப பலவகையான குணநலன்களோடு வாழ்கிறார்கள். கண்மாய்களுக்கு மறுகாலாக கலிங்குகள் இருப்பதைப் போல இஸ்மாயில்புரத்துக்கு பின்னால் அப்பாஸ்பாய்தோப்பு போல பல தோப்புகள் இருக்கிறது. ஏழரைப்பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் கொஞ்சப்பேர் இத்தோப்பில் வசிக்கிறார்கள். குருவிக்காரன்சாலையிலிருந்து ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அமைந்திருக்கிறது அப்பாஸ்பாய்தோப்பு. வெள்ளப்பெருக்கால் கரையோரங்களில் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது அப்பாஸ்தோப்பும் அதில் பாதி காலியானது. அந்தச்சாலை வருவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் கதையைச் சொல்கிறது இந்நாவல்.

abbasbhai thoppu 2

உசேன் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியோடு தொடங்கும் கதை அவரது திருமணத்தோடு முடிகிறது. அப்படியென்றால் இது உசேனின் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் மைய இழையாகத்தான் அச்செய்தி வருகிறது. மற்றபடி இது அப்பாஸ்பாய்தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை. அதிலும் உசேன், நெக்லஸ்காரம்மா, ரோசாப்பூ பாய், அழுக்குமூட்டை ராமையா, பூசா என்ற பூவராகன், ஒடுக்கி போன்ற அத்தோப்பில் உள்ள மாந்தர்கள் நம் மனதை கவர்ந்து விடுகிறார்கள். இந்நாவலைக் குறித்து எழுதும் போது ஒவ்வொரு மாந்தர்களும், நிகழ்வுகளும் எல்லாவற்றையும் எழுதத் தூண்டும்படியாகயிருக்கிறது. அப்படி எழுதினால் அது நாவலின் கதைச்சுருக்கம் போல ஆகிவிடும் என்பதால் சில காட்சிகள், சில மனிதர்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.

திரைப்படங்களில் மதுரை என்றாலே அரிவாள், பட்டாக்கத்தியோடு ஆட்களைப் போட்டுத் தள்ளுவது போல இரத்தக்களரியாக காட்டுகிறார்கள். ஆனால், மதுரையில் போடும் வடை, பஜ்ஜி அதற்கு குழப்பியடிக்க ஊற்றும் சட்னி, சாம்பார் மற்றும் சால்னாவோடு சேர்த்து வெளுத்து வாங்கும் அசல் மதுரைக்காரர்களை முதல் பக்கத்திலேயே படம் பிடிக்கிறார் அர்ஷியா. மதுரையை மையங்கொண்டு திரைப்படம் எடுக்க முனைபவர்கள் இதுபோன்ற நல்ல கதைகளை, நாவல்களைப் படித்து அப்படியே எடுக்காவிட்டாலும் மதுரையின் வாழ்வியலை கொஞ்சமாவது படம்பிடித்தால் நன்றாகயிருக்கும்.

அப்பாஸ்பாய் தோப்பில் சில்வர் பட்டறை வைத்து நன்றாக வாழும் அபூன் தன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மூலம் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். அபூன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவனுடைய அம்மா மற்றும் நண்பனை பார்த்துச் செல்லும் காட்சி நம்மைக் கலங்க வைக்கிறது. அந்தப் பகுதிகளை வாசிக்கும் போது சந்தைப்பேட்டை பகுதியில் சில்வர் பட்டறையில் பணிபுரிந்து பின் அனுப்பானடி, இப்போ ஒத்தக்கடை வரை ஓடாத சில்வர் பட்டறையை கட்டி அழும் எங்க சித்தப்பாவின் நினைவுகளும் பிசிறுபிசிறாய் நினைவிற்கு வந்தது. எங்கப்பாவும் சில்வர்பட்டறையில்தான் பல வருடங்கள் வெல்டராக வேலை பார்த்தார்.

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%af%88

முன்பொருமுறை வைகையில் வெள்ளம் வந்த போது அதில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழுதியுள்ளார். ஆற்றின் நடுவே தனியாக மரத்தில் சிக்கியிருந்த பெண்ணை தூக்கும்போது அவளுடைய சேலை பறந்துவிட்டதால் தன் மானம் காக்க ஆற்றுக்குள் மாய்ந்த பெண்ணை மீட்க வந்த ஹெலிகாப்டரும் அவளாள் வைகைக்கு இரையாகிறது. வெள்ளக்காட்சிகளை உடன்பணிபுரியும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்து பற்றி இந்நாவலில் உள்ளதைத்தான் அவரும் சொன்னார்.

திருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா. இந்நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவுக்கு சுல்தான் அவுலியா மீது அதீத நம்பிக்கை. எந்தப்பிரச்சனையென்றாலும் வியாழனன்று இரவு இராத்தங்கி வேண்டினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ள மனுஷி. சிக்கந்தர் அவுலியாவின் சாகசங்களை தன் தாதீமாவிடம் கேட்கும் சிறுமி போல நாமும் மாறிப் போகிறோம். மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் நம்முன் காட்சிகளாய் விரிகிறது. பசுமைநடையாக மூன்று முறை எஸ்.அர்ஷியா அவர்களுடன் இம்மலையில் பயணித்த அனுபவமும் எனக்குண்டு.

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be

மதுரைப் பகடியை மிக எளிதாக தம் எழுத்தில் பதிவு செய்கிறார் எஸ்.அர்ஷியா. பார்க்கும் எல்லோரிடமும் எதாவது தோது செய்து விடச் சொல்லும் ‘தோது’சுப்புணியை அவனுடைய நண்பன் கருப்பட்டி அவன்பின்னால் சைக்கிளில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று அழுத்தி ஓட்டவைத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து குளத்தின் நீள அகலத்தை அவனிடம் கேட்டு மூடி போடச் சொல்வதை வாசிக்கும் போது உங்களுக்கு வடிவேல் நினைவுக்கு வரலாம். திரைப்படங்களில் மதுரைப் பகடியை மிக அருமையாக பயன்படுத்திய பெருமை வடிவேலுக்கு உண்டு.

இஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் ரசிகர்கள், கலக்குமுட்டி, கஞ்சா என அக்கால போதை வஸ்துகள், தெப்பக்குளத்தில் விட்டிருந்த போட் சர்வீஸ், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றுக்குள்ளே துணி துவைக்கும் மனிதர்களின் சிரமங்கள் போன்ற பலவிசயங்களை இந்நாவலினூடாக பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அப்பாவின் இளமைக்காலம் முதல் என்னுடைய பால்ய காலம் வரை இப்பகுதியில் கழிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஏழரைப்பங்காளி வகையறாவுக்கும், அப்பாஸ்பாய்தோப்புக்கும் தனியிடம் உண்டு. என்னை சைக்கிளில் வைத்து ஊரைச் சுற்றும் போது எங்கப்பா முனிச்சாலை – சந்தைப்பேட்டை பகுதியில் அவர் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டே வருவார். அதனால், இந்நாவலை வாசிக்கும் போது எல்லா கதாமாந்தர்களும் பழக்கமானவர்களாகவே இருந்தார்கள்.

abbasbhai thoppu

சாயபுமார்களோடு எல்லா சாதிக்காரர்களும் கலந்து வாழும் அப்பாஸ்பாய்தோப்பு, நாவலை முடித்து புத்தகத்தை மூடினாலும் மனது முழுக்க தோப்புக்குள்ளேயே சுற்றி வருகிறது. ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் விட்ட கதையை கொஞ்சம் இதில் தொட்டிருக்கிறார். ஏழரைப்பங்காளி வகையறாவில் வரும் உசேன் இந்நாவலில் வளர்ந்து சமூக – அரசியல் கட்டுரைகளை எழுதும் பத்திரிக்கைகாரராகிறார். உசேனிடம் நாவலாசிரியர் அர்ஷியாவின்  சாயல் தெரிகிறது.

ந.முருகேசபாண்டியனின் ‘சுழித்தோடும் ஆற்றுவெள்ளம்’ என்ற முன்னுரை கட்டுரை வாசித்தபின் இந்நாவல் குறித்து எழுதுவதற்கு தயக்கம் இருந்தது. அந்தளவிற்கு மிகச்சிறப்பாக இந்நாவலைப் பற்றி நான் சொல்ல நினைத்த விசயங்களை எல்லாம் குறிப்பிட்டுருந்தார். அருமையான மதிப்புரை. என்னளவில் நான் வாசித்த அர்ஷியாவின் நான்கு நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவை.

பின்னூட்டமொன்றை இடுக