சமணமலை – அகிம்சைமலை – தமிழர்மலை

Posted: ஜனவரி 31, 2014 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்
குறிச்சொற்கள்:, ,

1623756_589651444438808_16599272_n

பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. அயற்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது. இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் மனநிலை அப்போது பிறக்கிறது.

–    வெ.இறையன்பு

சமணமலையை இளம்வயதில் எங்க ஊரிலிருந்து பார்க்கும் போது நாகமலைக்கு இடதுபுறமாக வில்போல அமைந்த  சிறுகுன்றாகத்தான் தெரியும். பின்னாட்களில் பணிவிசயமாக மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் சென்றபோதும் அந்த மலையின் பெயர் தெரியாது. ஆனாலும் நாகமலைப்புதுக்கோட்டைக்கு முன் வரும் கால்வாய்கிட்ட நின்று பார்த்துவிட்டுதான் செல்வேன். மதுரையைக் குறித்த தேடலும், வாசிப்பும் அதிகமான போது சமணமலை மிகவும் நெருக்கமானது. விருட்சத்திருவிழாவிற்கு பின் சமணமலையின் மீதான காதல் இன்னும் அதிகமானது.

பசுமைநடையாக குடியரசு தினத்தன்று காளவாசலில் எல்லோரும் கூடி அங்கிருந்து சமணமலையின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மேலக்குயில்குடிக்கு சென்றோம். நாகமலைப்புதுக்கோட்டையிலுள்ள வெள்ளைச்சாமிநாடார் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள சாலையில் சென்றால் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி தாண்டி தெரியும் சமணமலையின் பின்பகுதியில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகள் உள்ளது.

1511726_589650247772261_1814438295_n

1545198_589650944438858_2118255101_nசமணப்பண்பாட்டு மன்றம் அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் மலையை நோக்கி நடந்தோம். பனியைப் பத்திவிட்டு பகலவன் பல்லக்காட்டத் தொடங்கினான். மலையை வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் அப்பகுதி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். படுகைக்கு செல்லும் பாதையில் சீமைக்கருவேலமுள் அதிகம் வளர்ந்திருந்தது. ஒருங்கிணைப்பு குழுவிலுள்ள நண்பர்கள் சிலர் ஏறி பாதையை சரிசெய்தனர்.

1538935_589651264438826_1053547566_n ஏறுவதற்கு சிரமமான இடங்களில் நின்று வந்தவர்களை கைகொடுத்து ஏற்றிவிட்டனர். சரளைக்காக மலையை உடைத்திருந்ததாலும், இடியால் சிதைந்திருந்ததாலும் மலை உருக்குலைந்து காணப்பட்டது. மலைமீது ஏறி படுகைகளைத் தேடினோம். மேற்கூரையில்லாமல் உடைந்து கொஞ்சம் படுகைகள் கீழே கிடந்ததைப் பார்த்து மனமுடைந்து போனது. எல்லோரும் அங்கு கூடியதும் அனைவருக்கும் அந்த இடம் குறித்த கைப்பிரதி வழங்கப்பட்டது.

1536746_589652691105350_901473715_n

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசத் தொடங்கினார். கடினமான பாறை இடிபாடுகளைக் கடந்து இந்த இடம்வரை கிட்டத்தட்ட எல்லாருமே ஏறிவந்திருப்பதைப் பார்க்கும்போது உற்சாகமான மனதை யாராலும் சிறைபிடிக்க முடியாது என்பதை இந்த நடை நிரூபித்திருக்கிறது. தனியாக இந்த இடத்திற்கு வரும்போது தயக்கம் ஏற்படும். ஆனால், குழுவாக இணையும்போது கிடைக்கும் தன்னம்பிக்கை அலாதியானது. மனித சமூக வரலாற்றிலேயே ஒற்றுமையாக இருந்தவர்கள்தான் பல விசயங்களை சாதித்திருக்கிறார்கள்.

1623563_589651604438792_2093625257_n

ஜனவரி 1 அன்று விஜய்டிவி நீயா? நானா? 2013 விருது பசுமைநடை குழுவிற்கு தொன்மையான இடங்களை நோக்கி பயணித்து பாதுகாத்து வருவதற்காக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான அழைப்புகளும், வாழ்த்துகளும் உலகமுழுவதிலுமிருந்தும் வரத்தொடங்கியது. விருட்சத்திருவிழாவிற்குப் பிறகு ஊடகங்கள் பசுமைநடையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.

குங்குமம்

ஜனவரி முதல் வார குங்குமம் இதழிலும் வரலாற்றை சேகரிக்கும் பசுமைநடை என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களில் கட்டுரை வந்துள்ளது. மற்ற ஊரில் இருக்கும் நண்பர்கள் எங்கள் ஊரிலும் பசுமைநடையை நடத்துங்கள் என அழைக்கிறார்கள். இப்போது பசுமைநடைக்காக இருபது நண்பர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுபோல இன்னும் ஐம்பது நண்பர்கள் பசுமைநடைக்காக நேரம் ஒதுக்கினால் நாம் பசுமைநடையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லலாம்.

1654112_772816259414473_1814524161_nமேலக்குயில்குடி மலை இடிந்து விழுகிற நேரம் இந்தப் பகுதியில் உள்ள சர்ச்கிட்டதான் நடந்து சென்று கொண்டிருந்தோம். மிகப் பெரிய சத்தம் கேட்டது. அப்போது அணுகுண்டு வெடித்ததுபோல இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். இதுபோன்ற இடங்களுக்கு யாரும் வராததால்தான் இதுபோன்ற இழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகளையாவது விட்டுவையுங்கள் என நாம் கேட்கிறோம்.

முத்துக்கிருஷ்ணனைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார். Muthukumarசமணமலை முக்கியத்துவம் வாய்ந்த மலை. மதுரையில் யானைமலை, அரிட்டாபட்டி போன்ற பல மலைகளில் சமணத்தின் சுவடுகள் இருந்தாலும் இம்மலைக்குப் பெயரே சமணமலை என்றிருக்கிறது. மேலக்குயில்குடி மலையில் பத்திற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இருந்தன. இங்கு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலை ஆய்வுமாணவராக இருந்த முத்துக்குமார் என்ற இளைஞர் இப்படுகைக்கு மேலுள்ள பாறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டைக் கண்டறிந்தார். (நாம் முன்பு கீழக்குயில்குடி சென்ற போது அதைப் பார்த்தோம்). இந்த மலை அதற்கான பரிசை அவருக்கு வழங்கிவிட்டது. இப்போது அந்த இளைஞர் தில்லி ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி நமது ஆட்கள் பல இடங்களிலும் இருப்பது நமக்கு நல்லது.

இம்மலையை முன்பு சரளை உடைப்பதற்கெடுத்த ஒப்பந்ததாரர் அடியிலிருந்து உடைக்கத்தொடங்கினார். இதனால் மேற்பகுதி வலுவிழந்துகொண்டே வந்தது. நல்லவேளையாக இம்மலை உடைந்த அன்று பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால் தனக்கு வாக்களிப்பதற்காக பணியாட்களையும் கூட்டிக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.  அதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. பொதுவாக எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றியதாகச் சொல்லி இக்கலை நகரத்தை கொலை நகரமாக பலர் சித்தரிக்கும் வேளையில் இயற்கையாகவே ஆளில்லாத நாளில் மலை இடிந்துவிழுந்ததன்மூலம் அன்று இம்மலை அகிம்சை மலை என்று காட்டிவிட்டது. பின் அந்த ஒப்பந்ததாரரே இல்லாமல் போனார். இம்மலை தப்பியது. மலைகளை பாதுகாக்க தனியாக ஆட்களை நியமிப்பதைவிட இதன் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

இதுபோன்ற இடங்களை நோக்கி இப்போது பலரும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். வந்தவாசிப் பகுதியிலுள்ள சமணர்கள் இப்போது அங்குள்ள சமணத்தலங்களை நோக்கி அகிம்சைநடை என்ற பெயரில் பயணிக்கிறார்கள். மதுரையிலுள்ள வழக்கறிஞர்கள் சேர்ந்து குறிஞ்சிக்கூடல் என்ற பெயரில் தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒருமுறை குடும்பத்துடன் பயணிக்கின்றனர். மூன்றாவது நடையாக அரிட்டாபட்டியில் பொங்கல்விழா கொண்டாடிய போது நானும் சென்றிருந்தேன்.

பெருந்தேவூர் குவித்த அயம்

இம்மலை மீதுள்ள ஆடு உரிச்சான் பாறையில் பெருந்தேவூர் குவித்த அயம் என்ற தமிழ்பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. பெருந்தேவூரைச் சேர்ந்தவர்கள் செய்வித்த படுகை என்பது இதன் பொருள். சமணத்துறவிகள் தங்கியிருந்த இடத்திற்கு ஆடுஉரிச்சான் பாறையென பின்னாளில் பெயர்வந்தது நேர்முரணான விசயம். மதுரையை சமணத்தின் தாயகம் என்று சொல்லும் தமிழ்ச்சமணர்களும்  இந்நடைக்கு வந்துள்ளது மற்றுமொரு சிறப்பு.

1535024_589652207772065_585803335_n

வந்தவாசிப்பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் கொஞ்சப்பேரும் இந்நடைக்கு வந்திருந்தனர். அ.முத்துக்கிருஷ்ணன் அறவாழி அய்யாவை எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைத்தார். அறவாழி அய்யா எளிமையான மனிதர், பல முக்கியமான தலைவர்களின் சமகாலத்திய நண்பர், மு.வரதராசனின் மாணவர் என்று அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அறவாழி அய்யா பேசத் தொடங்கினார். மதுரையிலுள்ள மலைகளுக்கெல்லாம் கடந்த 25, 30 ஆண்டுகளாக திங்களுக்கொருமுறை, இரண்டு திங்களுக்கொருமுறை வந்து செல்கிறோம். நாங்கள் தமிழகத்தில் மைக்ரோஸ்கோபிக் மைனாரிட்டி என்று சொல்லும்படி எண்ணிக்கையில் சிறுபான்மையினர்.

நான் பொதுவாக இந்த வரலாற்றுச் சின்னங்களை சமணம் சார்ந்தவை என்று எண்ணுவதில்லை. இவை அனைத்தும் தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் சார்ந்தவை. இயற்கையாகவே இம்மலைக்கு சமணமலை என்ற பெயர் வந்துவிட்டது. சாந்தலிங்கம் அய்யா பேசும்போது இம்மலையை அகிம்சை மலை என்றார். நான் இதை தமிழர்மலை என்கிறேன்.

முதுபெரும் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இம்மலை உடைந்த போது கண்ணீர் விட்டு அழுதார். அருகிலுள்ள விக்கிரமங்கலம் சென்று பார்த்துவிட்டு அழிவின் விளிம்பில் விக்கிரமங்கலம் என தினமணியில் மகாதேவன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்து நான், சாந்தலிங்கம், ஆனந்தராஜ் மூவரும் விக்கிரமங்கலம் சென்றோம். மலையை கொஞ்சம் சரளைக்காக சுக்குச்சுக்காக உடைத்திருந்தார்கள். மலையின் மறுபுறம் உள்ள படுகையில் காணப்படும் தமிழிக்கல்வெட்டுகளைக் காணச் சென்றோம். இப்போது எனக்கு வயது எழுவத்தொன்பது. ஆறேழு வருடங்களுக்கு முன் கொஞ்சம் ஆற்றல் இருந்தது. அப்போது கல்வெட்டுக்களை காணும் ஆவலில் பாறைகளைப் பிடித்து சிரமப்பட்டு ஏறினேன். அதை வியந்து பார்த்த சாந்தலிங்கம் புகைப்படமாக எடுத்துக் கொடுத்தார். அந்த படங்களை சிறப்பு ஆணையர் ஶ்ரீதரிடம் காட்டியபோது இவ்வளவு சிரமமான இடங்களுக்கெல்லாம் இனி ஏறாதீர்கள். தவறிவிழுந்தால் என்ன ஆவது என்று வருத்தப்பட்டார். பசுமைநடைக்கு வருபவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் இங்கு இளைஞர்கள்வட்டம் அதிகமாகத் தெரிகிறது. அது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் இப்போது போனஸ் லைஃபில் இருக்கிறோம். எங்களுடைய ஒழுகலாறுகள் காரணமாக கொஞ்சம் கூடுதல் ஆயுளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், தமிழகம் இனி எங்கள் கையில் இல்லை. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலத் தமிழகம் இருக்கிறது. இங்கே இருக்கிற இளைஞர்களைப் பார்த்து மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன். தமிழர்களுடைய பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.

எல்லோரும் மெல்ல இறங்கினோம். நான், சகோதரர் தமிழ்ச்செல்வம், இளஞ்செழியன் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.  எல்லோரும் விஜய்டிவி விருதை வைத்து புகைப்படமெடுத்துக் கொண்டனர். மதுர வரலாறு நூலை வாங்காத புதிய நண்பர்கள் வாங்கினர். கதிர் பொங்கல் மலரையும் வேண்டியவர்களுக்குக் கொடுத்தோம். காவலர் ஒருவர் நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த கைப்பிரதியை எல்லோருக்கும் வழங்கினார். விழித்தெழு மதுரை குழுவினர் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கான அவர்களது ஏழு அம்ச செயல்திட்டம் குறித்துப் பேசினர்.

1655911_589653754438577_1386311960_n

சமணப்பண்பாட்டு மன்றத்தில் பசுமைநடைக்குழுவினர்க்கு காலை உணவு வழங்கப்பட்டது. கேசரி, வடையையும்; சாம்பார் சட்னியில் குழைத்து வெண்பொங்கலையும் வயிராற உண்டோம். சமணப்பண்பாட்டு மன்றம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்றதை ஒரு விழாவாகக் கொண்டாடினர். அதில் பசுமைநடை ஒருங்கிணைப்புக் குழுவினர் கலந்து கொண்டோம்.

விஜய் டி.வி நீயா? நானா?2013 விருதுக்கான காணொளிக்கான இணைப்பு

தமிழிக் கல்வெட்டுக் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்திக்கான இணைப்பு.

படங்கள் உதவி – ரகுநாத், செல்வம் ராமசாமி

பின்னூட்டங்கள்
  1. சிறப்பை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி நண்பரே…

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்… விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்…

  2. cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்க்கார,

    அருமையான பதிவு – அழகு தமிழில் பசுமை நடை நிகழ்வினைப் பதிவாக்கியமை நன்று – சொற்கள் அத்தனையும் அருமை – இறையன்பின் முன்னுரையோடு துவங்கப் பட்ட பதிவு – அனைவரும் படித்து மகிழ்ந்து – பசுமை நடையில் கலந்து கொண்டு மகிழ வேண்டும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

  3. இளஞ்செழியன் சொல்கிறார்:

    அருமையான் நிகழ்வை ப்திவிட்ட்மைக்கு வாழ்த்துக்கள் தோழ்ரே. இது போன்ற உங்கள் பதிவுகள் வாழ்வில் எப்போது அசைபோட்டு கொண்டே இருப்பதற்கு உதவியாக உள்ளது. நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த அருமையான தகவல்களை பதிவிட்டமைக்கு….

பின்னூட்டமொன்றை இடுக