Posts Tagged ‘பசுமைநடை’

சமணமலை மதுரையில் எனக்கு நெருக்கமான இடம், மிகவும் பிடித்தமான இடம். 14.11.2010இல் நானும் தமிழ்ச்செல்வ அண்ணனும் பசுமை நடை சென்றபோது செட்டிப்பொடவு, பேச்சிப்பள்ளம் எல்லாம் போய் பார்த்தோம். செட்டிப்பொடவில் திருவிழாக்களின் தலைநகரம் முதல்பதிப்பு 2019இல் வெளியானதும், இரண்டாம்பதிப்பு 2022இல் பேச்சிப்பள்ளத்தில் வெளியானதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

இரண்டாண்டுகளுக்குப்பின் சமணமலையில் நடந்த பசுமை நடை நிகழ்வில் “திருவிழாக்களின் தலைநகரம் மதுரை” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமையன்று இந்நூலை டோக்பெருமாட்டி கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் நிம்மா எலிசபெத் அவர்கள் வெளியிட இயற்பியல் துறை பேராசிரியை முனைவர் ஆரோக்கிய சியாமளாவும், பசுமை நடைத் தோழமைகளும் பெற்றுக்கொண்டனர்.

திருவிழாக்களின் தலைநகரம் முதலாம் பதிப்பு 1000 நூல்கள் விற்று, அடுத்த பதிப்பு வந்த அன்று இந்நூல் எழுதியதற்கான ராயல்டி தொகையாக 13,000 ரூபாய் பசுமை நடையினரால் சமணமலை அடிவாரத்தில் தேநீர்கடை நடத்திவரும் ஜெயமணி அம்மாவின் கரங்களால் எனக்கு வழங்கப்பட்டது. இது எதிர்பாராமல் வந்த பரிசு. பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் ’மதுர வரலாறு’ நூலை வெளியிட்ட போது முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் ஜெயமணி அம்மா என்பது என் நினைவிற்கு வருகிறது.

திருவிழாக்களின் தலைநகரம் நூல் தந்த விதை நெல்லை அடுத்த வெளியீட்டில் சமூகத்திற்கு சரியான வகையில் திருப்பியளிப்பேன் என்ற உறுதியை இக்கணம் கூறிக்கொள்கிறேன்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

டோக் பெருமாட்டி கல்லூரி இயற்பியல் குடும்பத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இக்கணத்தில் இந்நூல் உருவாக உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனை காக்கும் மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இனிமேலும் வரங்கேட்கத் தேவையில்லை! இதுபோல் வேறெங்கும் சொர்க்கம் இல்லை!

பொங்கல்

தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறெந்தப் பண்டிகைகளையும் விடவும் பொங்கலுக்குச் சிறப்பான தனித்துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. முதலாவதாக இது ஒரு தேசிய இனத்திருவிழா. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண்டிகைகள் சிறைப்பட்டுக்கிடக்க, பொங்கல் மட்டும் ஓர் இனத்திருவிழாவாகத் கொண்டாடப்படுகிறது. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்தாலும், மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.

பொங்கல்விழா
சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங்கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் வேண்டும் இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி.

– தொ.பரமசிவன் (பண்பாட்டு அசைவுகள்)

முத்துக்கிருஷ்ணன்
தொன்மையான தலங்களையும், இடங்களையும் நோக்கி பயணிக்கும் பசுமைநடைக்குழு இம்முறை மதுரைக்கு அருகிலுள்ள சிறு கிராமமான வடபழஞ்சிக்கு அருகிலுள்ள வெள்ளப்பாறைப்பட்டியில் பொங்கல்விழா கொண்டாட முடிவு செய்தது. அந்தக் கிராம மக்களின் ஒத்துழைப்பினால் பொங்கல் விழா மிகச்சிறப்பாக 11.01.2015 கொண்டாடப்பட்டது. வெள்ளப்பாறைப்பட்டியின் வரலாறு குறித்து பேராசிரியர் முத்தையா அவர்களின் கருத்தை அறியலாம்.

பசுமைநடை
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளப் பாறைப்பட்டி ஒரு அழகான கிராமம். இந்த ஊர் தென்பழஞ்சி-வடபழஞ்சி என்ற இரு கிராமங்களின் நடுவே அமைந்துள்ளது. முழுக்க முழுக்க விவசாயம் தான் இவர்களின் முக்கிய தொழில். இன்றும் கூட இந்த ஊரின் எல்லாத் திசைகளிலும் சம்பங்கிப்பூ, கோழிக்கொண்டை, மல்லிகை, கடலை, துவரை என விதவிதமான வெள்ளாமைகளை காணலாம்.

வழிபாடு
இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு பாறை அமைந்துள்ளது. இந்த பாறைதான் வெள்ளப்பாறைப்பட்டி கிராமத்தின் முகவரியே. ஒரு பெரும் வெள்ளம் உலகையே அழித்த போது இந்தப் பாறைதான் வெள்ளம் பெருகப் பெருக மிதந்து கொண்டே இருந்து இந்த ஊரின் மக்களை காத்தது என்பது இந்தக் கிராமத்தின் நம்பிக்கை.
இந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு சோற்றுடன் இந்த கதைகளையும் சேர்த்தே ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த ஊர் மந்தையில் உள்ள காற்றுடனும் இந்த கதை கலந்தே இருக்கிறது. அதனால் தான் இந்த கிராமத்தின் கருப்பையாக இந்தப் பாறை கருதப்படுகிறது.

போட்டிகள்பானைஉடைத்தல்
இந்தப் பாறையை, நோவாவின் புனிதக் கப்பல், அல்லா அனுப்பிய சஃபினா படகு, புனித ஜூட் குன்று, மெசப்படோனிய அஸ்ட்ராசிஸின் மிதவை, வள்ளுவர் தம் மக்களைக் காப்பாற்ற வடிவமைத்த சுரைக்கூடு என்றால் கூட மிகையில்லை.

விடாமுயற்சி
கிராமம் – கிராமத்தின் தற்சார்பு என்பதெல்லாம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கேலியாக்கப்பட்டு விட்டது. இன்று பெருவளர்ச்சி என்னும் பெயரில் இப்படியான கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்த மாதிரியான கிராமங்களை காண்பதே அரிதாகிவிடுமோ என்கிற அச்சம் எல்லோர் மனதிலும் உள்ளது.

இளவட்டக்கல்பொங்கல்பரிசு
இன்றைய தேவை நம் குழந்தைகளுக்கு ஷாப்பிங் மால்களை காட்டுவது மட்டும் அல்ல, மாறாக கிராமங்களை, வரலாற்று சின்னங்களை, நம் வரலாற்றை அறிமுகம் செய்வதே.

மதுரவரலாறு

வெள்ளப்பாறைப் பட்டியில் கொண்டாடிய பொங்கல்விழா அனுபவங்களை விரைவில் தனிப்பதிவாகக் காணலாம்.

நன்றி – அருண் போட்டோகிராஃபி, ஓவியன் போட்டோகிராஃபி

பசுமைநடை

பசுமைமலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் மனதில் உதிக்கும். திக்கெட்டும் மலைகள் சூழ அமைந்த மதுரைக்கருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலை சுற்றுலாத் தலமாகவும், கோடைவாழிடமாகவும்தான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால், இம்மலைத்தொடரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும், முதுமக்கள் தாழிகளும் உள்ளதென அறிந்தபோது ஆச்சர்யமானேன்.

தொன்மையான இடங்களை நோக்கி பயணிக்கும் பசுமைநடைக்குழுவோடு மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழமையான இடங்களைக் காணச் சென்றது மறக்கமுடியாத அனுபவம். கோடைக்காலத்தில் கொடைக்கானலை நோக்கி 17.05.2014 அன்று ஒரு பேருந்தில் குழுவாகச் சென்றோம்.

‘வளையோசை கலகலவென குளுகுளு தென்றல் காற்றும் வீசுதே’ என சூழலுக்கேற்ற பாடல்களோடு மலையேறினோம். மலைக்காற்றும், மரங்களின் நறுமணமும், தொலைவில் தெரியும் மஞ்சளாறும், உயர்ந்த மலைத்தொடர்களும், பறவைகளின் ஓசையும் ஐம்புலன்களுக்கும் விருந்தளித்தன. பண்ணைக்காட்டிலிருந்து தாண்டிக்குடி செல்லும்வழியிலுள்ள சங்கரன்பொத்து எனும் இடத்தில் காலை சிற்றுண்டியை உண்டோம். பின் அங்குள்ள கற்பதுக்கைகளைக் காண குழுவாகச் சென்றோம்.

தொல்லெச்சம்

மலையின்மீது கல்வீடு போல் காணப்பட்டதை கண்டதும் கிராமப்புறங்களில் பட்டியக்கல்லில் அமைந்த திண்ணைகளின் ஞாபகம் வந்தது. நாலுபக்கமும் கற்களை ஊன்றி மேலே ஒரு பெரிய கல்லில் மூடியிருக்கிறார்கள். இவைகளை கற்பதுக்கைகள் என்று அழைக்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை அடக்கம் செய்த இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த இடங்களை பழங்குடி மக்கள் வாலியர்வீடு, பேத்து, குகை என்றழைக்கின்றனர்.

எல்லோரும் கற்பதுக்கைகளைப் பார்த்து அதனருகில் கூடினோம். கோடைகால மலைக்கூட்டத்தொடர் அங்கு தொடங்கியது. எழுத்தாளரும் பசுமைநடை அமைப்பாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் இந்த இடங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

மலைவகுப்பு

கி.பி.1821ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவிலிருந்த அரசு பணியிலிருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என அவர் தேர்வு செய்து 1845ல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். முதலில் குதிரைகளில் வந்த ஆங்கிலேயர்கள் பின் 1914ல் முழுமையான சாலைவசதிகள் செய்தனர். பழங்குடிகள் வாழ்ந்த மலை அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியேறியவர்களால் இன்று வரை ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

கற்திட்டை

1928ல் ஆங்கிலேடு என்ற ஆங்கிலேயர் தாண்டிக்குடிப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் இருப்பதை கண்டறிந்தார். இவர் அக்காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர். கொடைக்கானல் மலையில் பல்வேறு காலகட்டத்தை சேர்ந்த ஈமக்குழி, கற்பதுக்கைகள், கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் காணப்படுகிறது. இவை கி.மு.2000 முதல் கி.மு.500 வரையான காலகட்டத்தை சார்ந்தவை. இம்மலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற கற்பதுக்கைகள் காணப்படுகிறது. இவைகளைத் தேடிப் பார்த்து ஆவணப்படுத்துவதும் நம் கடமை என எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கூறினார்.

சங்கரன்பொத்திலிருந்து மச்சூர் என்ற மலைக்கிராமத்திற்கு சென்றோம். அங்கும் கற்பதுக்கைகளைப் பார்த்தோம். அதனருகில் பழங்குடி மக்களின் வழிபாட்டுத் தலம் உள்ளது. அதனருகில் நடுகல் ஒன்றும் உள்ளது. மிகத் தொன்மையான இடத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் பரவியது. எல்லோரும் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம். அங்கிருந்து செண்பகனூர் அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அங்கு பல்வகையான உயிரினங்களை பாடம் செய்து வைத்துள்ளனர். மேலும், அரிய நாணயங்கள், முதுமக்கள்தாழி, கற்பதுக்கைகளின் மரச்சிற்பங்களை கண்டோம்.

தீ

அங்கிருந்து கொடைக்கானல் சென்றோம். மாலை வேளையில் படகுகுழாம் இருந்த ஏரியை சுற்றி வந்தோம். மிக இரம்மியமாகயிருந்தது.  இதை கி.பி.1860ல் சர்.லிவேன்ச் என்ற ஆங்கிலேயர் தனக்காக கட்டியிருக்கிறார். அதற்குமுன் காட்டு எருமைகள் தண்ணீர் குடித்த ஓடைதான் பின் ஏரியாகியிருக்கிறது. சைக்கிளில் சுற்றுபவர்கள், குதிரைகளில் வலம் வருபவர்கள், மாங்காய் கீத்துகளையும், இனிப்பு சோளக்கருதுகளை விற்பவர்களையும், புதிய முகங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தது தனி சுகம்.

பூங்கா

மறுநாள் நிறைய இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தோம். போக்குவரத்து நெரிசலால் எங்கும் செல்ல முடியவில்லை. அதனால் பிரையண்ட் பூங்காவில் கூடினோம். குழுவிளையாட்டுகள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள உதவியது. கடைவீதிகளில் எல்லோரும் அங்கு தயாரிக்கப்படும் சாக்லேட், யூகலிப்டஸ் எண்ணெய், குளிராடைகளை வாங்கினர். மீண்டுமொருமுறை இதுபோல வர வேண்டுமென்ற உணர்வோடு அங்கிருந்து கிளம்பினோம். மதுரை வந்ததும் தாய் மடியைக் கண்ட குழந்தை போல நிம்மதியாக வீடு திரும்பினேன்.

சஞ்சிகை சிற்றிதழுக்காக எழுதப்பட்டது

அரண்மனை

மதுரை சித்திரைத் திருவிழா தமிழகத்தின் பெருந்திருவிழாவாகும். மாசி மாதத்தில் நடந்து கொண்டிருந்த மீனாட்சி திருக்கல்யாணத்தையும், சித்திரை மாதத்தில் தேனூருக்கருகில் வைகையில் இறங்கி கொண்டிருந்த அழகர் திருவிழாவையும் ஒருங்கினைத்து பெருந்திருவிழாவாக்கிய பெருமை திருமலைநாயக்கரையே சேரும். பாண்டியர்களுக்குப் பின் பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கிடையில் அல்லல்பட்டுக்கிடந்த மதுரை மக்களுக்கு நிலையான ஆட்சியை அமைத்து கோயில், திருவிழாவென்று மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவர் மன்னர் திருமலை.

பசுமைநடையாக இம்முறை 06.04.2014 அன்று விளக்குத்தூணிலிருந்து பத்துத்தூண் வழியாக திருமலைநாயக்கர் அரண்மனைக்கு தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மூலம் சிறப்பு அனுமதி பெற்று சென்றோம். அரண்மனையின் முற்றத்தில் உள்ள இருக்கைகளில் பசுமைநடைக்குழுவினர் அமர்ந்தோம். இம்முறை 250க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

நாடகசாலை


பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மதுரையின் வரலாறை பாண்டியர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை சுருக்கமாகச் சொன்னார். திருமலைநாயக்கர் மற்றும் அரண்மனை குறித்த தகவல்களை மிகவிரிவாகச் சொன்னார். மிகஅதிக பொருட்செலவில் நடத்தப்படும் வரலாற்று கருத்தரங்குகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது அய்யாவின் உரையும் அன்றைய நிகழ்வுகளும். பல்வேறுவகையான சூழல்களிலிருந்து வந்த பலதரப்பட்ட மக்கள் மனதினிலும் மதுரை வரலாற்றை பசுமரத்தாணிபோல சாந்தலிங்கம் அய்யா பதிய வைத்துவிட்டார்.

கூடல்


மதுரையில் பாண்டியர்கள் அரண்மனை இருந்ததை பரிபாடலில் வரும் அண்ணல் கோயில் என்ற வரிகள் மூலம் அறியலாம். மீனாட்சியம்மன் கோயில் அருகிலுள்ள கமிஷனர் அலுவலகம் இருந்த இடத்தில் அந்த அரண்மனை இருந்திருக்கலாம். பாண்டியர் ஆட்சிக்கு இடையிடையே பலரும் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசுக்காலத்தில் கிருஷ்ண தேவராயர் மதுரையை நிர்வகிக்க நாகம நாயக்கரை அனுப்பினார். அவர் தானே இராஜா என்று அறிவித்துக் கொண்டார். அவரை மற்ற மந்திரிகள் போட்டுக் கொடுக்க அவரை பிடிக்க அவரது மகன் விஸ்வநாத நாயக்கர் மதுரை வருகிறார். நாகம நாயக்கரை கைது செய்து விஜயநகரம் செல்கிறார். கிருஷ்ண தேவராயரிடம் தந்தையை விடுவிக்கவும், மேலும் மதுரைக்கு தலைமை ஒன்று தேவைப்படுவதாகவும் சொன்னார். அதன்பின் விஸ்வநாத நாயக்கரையே மதுரையை நிர்வகிக்க கிருஷ்ண தேவராயர் அனுப்பினார். கி.பி.1530லிருந்து கி.பி.1736 வரை மதுரையை நாயக்கவம்சத்தைச் சேர்ந்த 13 பேர் ஆட்சி புரிந்தனர். அதில் ஏழாவது மன்னரான திருமலைநாயக்கர் நாயக்க மன்னர்களுள் முக்கியமானவராவார்.

திருமலைநாயக்கர் கி.பி.1623ல் அரச பொறுப்பேற்றார். திருச்சியில் சூழல் இவருக்கு ஒத்துவரவில்லை. மண்டைச்சளி பிடித்திருந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம் மீனாட்சி அம்மனை தொழுது செல்வார். திண்டுக்கல்லில் திருமலைநாயக்கர் இருந்தபோது ஒருநாள் கனவில் மீனாட்சி சுந்தரர் ‘இனி திருச்சிக்குப் போக வேண்டாம். மதுரைக்கு நிலையாக வந்துவிட்டால் நோய் தீரும்’ எனச் சொன்னார். காலையில் முகங்கழுவி மூக்கைச் சிந்திய போது அவரது நோய் பூண்டோடு போய்விட்டதாக கதை சொல்கிறார்கள். திருச்சியிலிருந்த தலைநகரத்தை மதுரைக்கு மாற்றி கி.பி1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.

மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம், இராயகோபுரம், தமுக்கம், தெப்பக்குளம், அழகர்கோயில், ஶ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம் போன்ற பல இடங்களில் கோயில் திருப்பணிகள் செய்தார். திருமலைநாயக்கர் காலத்திலேயே மதுரைப்பகுதிக்கு கிறிஸ்துவர்கள் வந்துவிட்டனர். திருமலைநாயக்கர் அரண்மனை இத்தாலியப் பொறியாளரின் உதவிகொண்டு இந்து இஸ்லாமிய ஜெர்மானிய கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகும்.

குவிமாடங்கள் இஸ்லாமியக் கலைமரபிலும், தூண்கள் கோதிக் கலைமரபிலும், யாளி போன்ற சிலைகள் இந்தியக் கலைமரபிலும் கட்டப்பட்டது. மரம் இல்லாமல் செங்கலிலும், சுண்ணாம்பிலும் கட்டப்பட்ட அரண்மனை. மிக அழகிய இந்த அரண்மனை ரங்க விலாசம், சொர்க்க விலாசம் என்ற இரண்டு பகுதிகளை கொண்டிருந்தது. சொர்க்க விலாசம் பகுதியில் தர்பார் மண்டபம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்துதான் திருமலைமன்னர் கிடாசண்டை, சேவல்சண்டையெல்லாம் பார்ப்பாராம். மந்திரி மண்டபம் இருபுறமும் உள்ளது. 248 தூண்கள் இன்றுள்ளன.

திருமலைநாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் அரண்மனையை திருச்சிக்கு மாற்ற முயற்சித்து பாதியை இடித்துவிட்டார். அதனால் கட்டிய கொஞ்ச காலத்திலேயே பாதி இடிக்கப்பட்ட அரண்மனை இதுவாகத்தான் இருக்கும். நாயக்கர்கள் ஆட்சிக்குப்பின் மருதநாயகம் யூசுப்கான், மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இந்த அரண்மனை இருந்தது. சென்னை ஆளுநராகயிருந்த நேப்பியர் பிரபு மதுரைக்கு வந்து இந்த அரண்மனையை பார்த்து வியந்து சிதைந்து போயிருந்ததை புதுப்பிக்க ஐந்து லட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கினார். அதன்பின் 1975 வரை நீதிமன்றமாக செயல்பட்டது. அதன்பின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

(தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவின் உரையிலிருந்து சிறுதுளியை மட்டும் சித்திரைச் சிறப்பிதழுக்காக இப்பதிவில் தொகுத்துள்ளேன். மொத்த உரையையும் தனியொரு பதிவாக பின்னாளில் தொகுத்து வைக்கிறேன்)

திருமலைநாயக்கர் அரண்மனை

அன்பு

சாந்தலிங்கம்திருமலைநாயக்கர் அரண்மனையின் மிகப்பெரிய தூண்களையும், மேற்கூரைகளில் வரையப்பட்ட சித்திரங்களையும், சிலைகளையும் பசுமைநடைப் பயணிகள் இரசித்துப் பார்த்தனர். பசுமைநடைப்பயணம் ஒளிஓவியர்களையும், பதிவர்களையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. தர்பார் மண்டபத்தில் வைத்து வாழும் வரலாறாக உள்ள சாந்தலிங்கம் அய்யாவின் பிறந்தநாளை கொண்டாடினோம். வரலாற்றுப் பயணத்தில் வரலாற்று நாயகனை கொண்டாடிய மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் பூத்தது. ஒரு சிறுவன் வாழ்க வாழ்கவே என்று பாடிய வாழ்த்துப்பா எல்லோரையும் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தொல்லெச்சங்கள்

சம்பந்திஅங்கிருந்து எல்லோரும் நாடகசாலையையும், பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவந்த தொன்மையான சிலைகளையும் பார்த்தனர்.

பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு நூலை புதிதாக வந்த நிறைய நண்பர்கள் வாங்கினர். எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது.

எல்லோர் முகத்திலும் முக்கியமான நிகழ்வில் தாங்களும் பங்கேற்ற உணர்வு தெரிந்தது.

படங்கள் உதவி – அருண்

சிக்கந்தர்தர்ஹா

அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்!

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்!

தலைவணங்கிக் கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்!  

தரணியெங்கும் நிறைந்திருக்கும் மகாவல்லவன்!

திருப்பரங்குன்றம், பால்யத்திலிருந்து இன்றுவரை மிக நெருக்கமான இடங்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது. தினசரி பார்வையில் படும் மலைகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. திருப்பரங்குன்றத்திற்கு பசுமைநடையாக  முதல்முறை சமணப்படுகைக்கும், தென்பரங்குன்றம் குடைவரைக்கும் சென்றோம். அடுத்த நடையில் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலையும், சமணச் சிற்பங்களையும் கண்டோம். இம்முறை 16.02.2014 அன்று மலைமீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவைக் காணச் சென்றோம்.

விடியலைநோக்கி

திருப்பரங்குன்றத்திற்குச் செல்ல புதிதாக கட்டியுள்ள பாலத்தில் முதல்முறையாக சென்றேன். மிக நீளமான பாலம். பாலத்திலிருந்து பார்க்கும் போது மலை மிகவும் இரம்மியமாக காட்சி தந்தது. திருப்பரங்குன்றம் பேருந்து நிலையமருகில் எல்லோரும் கூடினோம். அங்கிருந்து பசுமைநடையாக இளங்கதிரவனின் பார்வைபட மலைமீது ஏறினோம். படிகளைக் கடக்கும் போது கொஞ்சம் மூச்சு வாங்கியது. கொஞ்சம் நேரம் இளைப்பாறிப் பின் கிளம்பினோம். ஓய்வெடுக்கும் இடங்களிலெல்லாம் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம்.

மலைப்பயணம்

மலையிலுள்ள தர்ஹாவிற்கு எல்லோரும் சென்றோம். அங்குள்ள இஸ்லாமிய பெரியோர்களின் நினைவிடங்களை பார்த்தோம். வணங்கினோம். உள்ளே உள்ள தூண்களைப் பார்க்கும்போது தமிழர் கட்டடக்கலை நன்றாகத் தெரிந்தது. எல்லோரும் அங்கு கூடியதும் தர்ஹாவிலுள்ள இஸ்லாமியப் பாடகர் அப்துல் ஜப்பார் அந்த இடம் குறித்த வரலாறைச் சுருக்கமாகச் சொன்னார். தர்ஹாவிலிருந்து பசுமைநடைக்குழுவினர்க்கு சர்க்கரையும், திருநீறும் கொடுத்தனர். பின் எல்லோரும் தர்ஹாவின் முற்றத்தில் கூடினோம்.

கூடல்

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பசுமைநடைக்கு வந்தவர்களை வரவேற்றார். இங்கிருக்கிறவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஈரானியத் திரைப்படம் ஒன்று ஞாபகம் வருகிறது. ப்ளாக் போர்டு என்னும் படம். அந்தப் படத்தில் ஒரு ஆசிரியர் முதுகில் கரும்பலகையைத் தூக்கி கொண்டு பயணித்து கொண்டே இருப்பார். நாடோடியின மக்கள் மற்றும் விளிம்புநிலை மனிதர்கள் பத்து பேரைப் பார்த்தால் அங்கேயே அவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களையும் கற்ற விசயங்களையும் சொல்லிக் கொடுத்துவிட்டு செல்வார். அதுபோலத்தான் இந்த இடம் இன்றைக்கு நமக்கு காட்சி அளிக்கிறது. மிக உயரமான மலை. ஏறுவதற்கு வயதானவர்கள் சிரமப்படுவார்கள் என்று பார்த்தோம். ஆனால், எல்லோரும் உற்சாகத்தோடு ஏறி வந்தது நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னையிலிருந்து மற்றும் பல வெளியூர்களிலிருந்தும் பசுமைநடைக்கு மக்கள் வருவது நமக்கு நம்பிக்கையளிக்கிறது. 1935ல் இம்மலையையும் அறுத்துக் கூறுபோட இருந்தார்கள்.  அப்போது அதை லண்டன் வரை போய் தடுத்து நிறுத்திய பெருமை இஸ்லாமியப் பெருமக்களையே சேரும். 

அர்ஷியா

அதைத் தொடர்ந்து எழுத்தாளர் அர்ஷியா இம்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். எந்த ஒரு தேசத்திற்கும், எந்த ஒரு இடத்திற்கும் ஒரு வரலாறும், அடையாளமும் இருக்கவே செய்யும். வரலாறும் அடையாளமும் இல்லாத ஒரு பருப்பொருள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்பது அறிவியல் நமக்கு கற்றுத்தரும் பாடமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையராது இயங்கிவரும் நம் தொல் மதுரையின் இந்த மலையில் கிறிஸ்துவத்திற்கு மட்டும் ஒரு அடையாளம் இல்லையென்பது கட்டுரையாளனாகவும், படைப்பாளனாகவும் எனக்கு வருத்தத்தை தருகிறது. பசுமலையிலிருந்து வரும் போது இம்மலை எனக்கு மேரிமாதாவின் கைகளிலிருந்து இயேசு அழைப்பதைப் போலத் தோன்றியது.

நாம் கூடியிருக்கும் இந்த இடம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவின் தர்ஹா. பள்ளிவாசலுக்கும், தர்ஹாவுக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பள்ளிவாசல் என்பது பிரார்த்தனை செய்யும் கூடம். தர்ஹாவென்பது மதத்திற்காக, சமயத்திற்காக சேவை செய்தவர்கள் மரணித்தவர்களின் நினைவிடமாகும். கிறிஸ்துவம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பாகவே அரபு நாட்டிலிருந்து வணிகர்களாக உலகம் முழுவதும் அரேபியர்கள் சென்றிருக்கிறார்கள். ‘சீன தேசம் சென்றேனும் கல்வியைத் தேடு’ என்பது நபியின் பொன்வாக்கு. இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டில்தான் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமயம் பரப்பத் தொடங்கினார்கள்.

நினைவிடம்

இந்தியாவிற்கு சமயம் பரப்ப வந்தவர்களை வரவேற்றது அரபிக்கடல். கேரளத்தை ஆண்ட சேரமன்னர் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மன்தான் (கி.பி.780லிருந்து கி.பி.834)  இஸ்லாத்தை மிகவும் நேசித்திருக்கிறான். அதைக்குறித்து தொன்மைக்கதை ஒன்றுள்ளது. சேரமன்னன் மாடமாளிகையின் உச்சியில் ஒரு மாலைப்பொழுதில் வானத்தில் பௌர்ணமி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த போது அது இரண்டாக கிழிந்து சற்று நேரத்தில் ஒட்டிக்கொண்டது. அதைக்குறித்து தனது அரசவையில் கேட்டபோது அவரிடையேயிருந்த அந்தண அமைச்சர் மேற்கு கரையோரத்தில் ஒரு மதம் தோன்றியிருக்கிறது அதன் அற்புதமிது என்று கூறியிருக்கிறார்.  அந்த மதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இப்போதைய சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் இஸ்லாமியராக மாறி அப்துல் ரகுமான் சாமிரி என்ற பெயரும் ஏற்கிறார். ஹிஜ்ரி 212 – 216 வரை நான்காண்டு காலம் அங்கேயே இருந்தார்.  சாமிரி என்றால் புதியவர் அல்லது வெளிநாட்டவர் என்று பொருள். அவர் கி.பி.834ல் அங்கேயே காலமாகிறார். அதைக்குறித்த கல்வெட்டு அங்குள்ளது.

கண்ணனூர், கொல்லம், முசிறி துறைமுகங்களின் வழியாக மதம் பரப்ப வருபவர்களை சேரமன்னர்கள் வரவேற்கிறார்கள். கி.பி.1182ல் மதீனாவின் ஆளுநராகயிருந்த சையது சுல்தான் இப்ராஹீம் மதம் பரப்ப கிளம்புகிறார். இவர் முகம்மது நபி மகள் வழிவழிப் பேரன்களில் ஒருவர். ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்த சையது சிக்கந்தர் பாதுஷாவும் இப்ராஹீமுடன் சேர்ந்து மதம் பரப்ப வருகிறார். சேரமன்னன் கொல்லத்தில் இவர்களை வரவேற்கிறான்.

சேரநாட்டிலிருந்து பாண்டியநாட்டிற்கு வருபவர்கள் புன்னைக்காயலில் குலசேகரபாண்டியனின் ஆதரவுடன் மதம் பரப்புகிறார்கள். பின் அங்கிருந்து மதுரைக்கு வரும்போது இங்கு குழப்பநிலை நிலவுகிறது. சோழர் படை படையெடுத்து ஒருபுறம் இருக்க மதம் பரப்ப வந்தவர்கள் மீது பாண்டியன் எரிச்சலடைகிறான். ஒருபுறம் சோழன், மறுபுறம் இப்ராஹீம் என்று வர வீரபாண்டியன் சங்கடத்திற்குள்ளாகிறான். சோழநாட்டிற்கு சென்றதுபோக மீதமிருந்த படையுடன் பாண்டியன் மதம்பரப்ப வந்தவர்களுடன் மோத சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியப் படை வென்று மதுரை முகமதியர்கள் வசம் வருகிறது. சையது இப்ராஹீம் சிக்கந்தர் பாதுஷாவை சுல்தானாக்கிவிட்டு அவரது தளபதி அமீர் அப்பாஸூடன் இராமநாதபுரத்திலுள்ள ஏர்வாடிக்கு சென்று விடுகிறார்கள்.

1182லிருந்து சையது சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்கிறார்.  அவரது ஆட்சி குறித்த பதிவு ஏதுமில்லை. வீரபாண்டியன் திருப்பதிக்கு சென்று பெரும்படை திரட்டி வந்து தன் மகன் குலசேகரனுடன் சேர்ந்து சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு இப்ராஹிமிடம் ஏழு பேரை அனுப்புகிறார். பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் மற்றவர்களை மானாமதுரைக்கு முன்னும் கொல்கிறார்கள். சிக்கந்தர் சுல்தான் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். வீரபாண்டியனும் குலசேகரபாண்டியனும் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். (சிக்கந்தர் பாதுஷா இம்மலைக்கு குதிரையில் வந்த சென்றதாக நம்பிக்கையிருக்கிறது) மன்னரின் குதிரைகள் மலைமீதுள்ள குளமருகில் கட்டப்பட்டிருந்தது. மலைமீது வந்து இறைநேசரான சிக்கந்தரையும் கொல்கிறார்கள். அவரது நினைவிடத்தில் தான் இந்த தர்ஹா அமைந்துள்ளது.

சிக்கந்தரைக் குறித்த பதிவுகள் நிறைய நூல்களில் காணப்படுகிறது. 1866ல் பார்ஸி அரபி மொழியில் மதுரை மகான் அப்துல் ஸலாம் எழுதிய மனாகிப் என்னும் நூலில் ‘ஸலாமி அலாரூஹி இஸ்கந்தரி ஸலாமி அலா ஜிஸ்மார்த்த அத்ஹரி’  என்றால் தமிழில் சிக்கந்தருக்கு ஆத்மார்த்த வந்தனம் மதுரையில் தலம் கொண்ட நாயகனே வந்தனம் என்று பொருள். மனாகிப் என்றால் புகழ்மாலை. 16ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பயணி சிக்கந்தரின் வரலாறை ஒரு பகுதியாக ஷஹாதத் நாமா என்ற நூலில் எழுதியிருக்கிறார். கி.பி.1820ல் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய தீன்நெறி விளக்கத்தில் ஷஹீத் சரிதை என்று சிக்கந்தரின் வீரமரணம் குறித்து காணப்படுகிறது. கோயிற் சாசனக் குறிப்புகளில் குடுமியான்மலை சிகாநாதசாமி கோயில் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானக்கல்வெட்டுகளில் சிக்கந்தரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

‘இஸ்லாம் வளர்ச்சியடைந்து அட்லாண்டிக் சமுத்திரம் முதல் பசுபிக் சமுத்திரம் வரை பரவியிருந்தது. ஆனாலும், இஸ்லாமின் செல்வாக்கு நிலையாக இருந்தது, இந்து சமுத்திர நாடுகளில்தான். இந்து சமுத்திரம் ஒரு மாபெரும் அரபுக் கடலாக மாறியது’ என வரலாற்று ஆய்வாளர்கள் ஶ்ரீகந்தையா மற்றும் கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளனர்.

‘கி.பி.1182ல் அரபுநாட்டினின்று வந்த ஸையது இப்ராஹீம் என்பவர் மதுரையில் ஆண்ட விக்கிரம பாண்டியனை வென்று தமிழகத்தின் கிழக்குப் பகுதியை ஆண்டார்’ என முனைவர் எஸ்.எச்.ஏ.ஹுசைனி தன்னுடைய பாண்டிய நாட்டு வரலாறு நூலில் பக்கம் 17-19ல் குறிப்பிட்டுள்ளார்.

‘மதுரையில் பாண்டியர்படை பிரச்சாரக்குழுவினரைத் தாக்க அதற்கு தற்காப்புப் போர் செய்து வீரபாண்டியனை வென்று சிக்கந்தர் பாதுஷாவை அரசராக்கினார்’ என முனைவர் எஸ்.எம்.ஏ.காதர், தஞ்சை, தமிழ்ப்பல்கலை இஸ்லாமிய இருக்கை சிறப்பாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத் துறை வெளியிட்ட முகம்மது உவைஸ் மற்றும் பீ.மு.அஜ்மல்கான் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இப்ராஹீமைப் பற்றியும் சிக்கந்தரைப் பற்றியும் பேசுகின்றது.

பழனியில் வாழ்ந்த சித்தர் போகர் ஏழாயிரம் நூலில் 326 – 350ம் வரிகளில் சிக்கந்தரைப் பற்றி எழுதியுள்ளார். சிக்கந்தர் நினைவிடத்தில்தான் அமைதியாக தரிசித்து ஆத்ம அமைதி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் குணங்குடி மஸ்தான் இம்மலையில் வந்து நாற்பது நாட்கள் தியானம் செய்ததாக வரலாறு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டி மோனகுரு மஸ்தான் இங்கு வந்திருக்கிறார்.

வரலாற்றில் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா மதுரையின் கடைசி மன்னர் என்று பிழையாகயிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சையது சிக்கந்தர் பாதுஷா. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுல்தான் அலாவுதீன் சிக்கந்தர் ஷா. இருவரது பெயரிலும் சிக்கந்தர் என்றிருப்பதால் வரலாறுகளில் இம்மலையில் மறைந்த சிக்கந்தரை கடைசி சுல்தான் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். விஜயநகர பேரரசிலிருந்து வந்த குமார கம்பணனால்தான் கடைசி சுல்தான் சிக்கந்தர் அலாவுதீன் ஷா கொல்லப்படுகிறார்.

திருப்பரங்குன்றம்

இஸ்லாம் என்பது மக்கள் மதம். நம்பிக்கையின் மதம். சூஃபிகள், இறைநேசர்கள் மறைந்த நினைவிடத்திற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வருகிறார்கள். மலப்புரம், கண்ணனூர் போன்ற வடக்கு கேரளத்திலிருந்து மக்கள் இங்கு வந்து செல்வதை இன்றும் காணமுடிகிறது. ஏர்வாடியிலுள்ள சையது இப்ராஹீம் தர்ஹா செல்லும் அனைவரும் இந்த மலைக்கு வந்து செல்வதையும், இஸ்லாமிய மக்கள் வியாழன்று இரவு தங்கி மறுநாள் காலை செல்வதையும் காணலாம். 18ஆம் நூற்றாண்டளவில் ஆற்காட்டை ஆண்ட நவாப்புகள் தணக்கன்குளம் பகுதியில் இம்மலைக்கு மானியங்களை அளித்துள்ளனர். சிக்கந்தர் பாதுஷாவிற்கு நிறைய விழாக்கள் இம்மலையில் நடக்கிறது. இம்மலை மிகச் சிறப்பு வாய்ந்த மலை.

பசுமைநடை

நாவலாசிரியர் அர்ஷியா கூறிய தகவல்களை கேட்ட போது தர்ஹா குறித்த அவரது மிக நீண்ட தேடலை அறிந்து கொள்ள முடிந்தது. திருமங்கலத்தைச் சேர்ந்த கவிஞர் ஷாஜகான் தர்ஹா குறித்த தகவல்களை சுருக்கமாக பேசினார். கீழே கந்தர் இருக்கிறார். மேலே சிக்கந்தர் இருக்கிறார். தர்ஹாக்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது. தர்ஹாக்கள் கூடாது என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் சொல்கின்றனர். தர்ஹாக்கள் குரான் அடிப்படையில் இல்லையென்பது அவர்கள் வாதம். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். தர்ஹா அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் இடமாக இருப்பதால் நம்மை போன்ற பொது சிந்தனையாளர்களாளும் கொண்டாட வேண்டிய விசயம். எளிய மனிதர்களிடம் மதம் என்பது கையெடுத்து கும்பிட்டுச் செல்வதாகத்தானிருக்கிறது. மதவாதம் தலைதூக்கிற இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடமாக தர்ஹாக்கள் இருக்கிறது.

வழிபாடு

சிக்கந்தர் பாதுஷாவின் நினைவிடத்திற்கு சென்று ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வணங்கிப்பின் கீழே இறங்கத் தொடங்கினேன். தர்ஹாவில் ஒரு பெட்டிக்கடையிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இஸ்லாமிய மக்கள் இங்கு வந்து சமைத்து உண்கிறார்கள். அடிவாரத்திலிருந்து உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை தலைசுமையாக கொண்டுவந்து இங்கு வைத்து சமைத்து சேர்ந்து உண்கிறார்கள். பார்க்கும்போதே நமக்கும் குடும்பத்தோடு இப்படி வந்து திரிய வேண்டுமென்ற ஆசையேற்படுகிறது. பசுமைநடைக்குழுவோடு மதுரையிலுள்ள எல்லா மலைகளிலும் சுற்றி திரிந்து அங்குள்ள மரத்தடிகளில் உரையாடிக்கொண்டே இட்லி தின்றதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

வானரம்திருப்பரங்குன்றம் மலைமீது தெரியும் பெரிய மரத்தைப் போய் பார்த்தோம். சிறுமிகள் யாராவது ஒற்றைக்குடுமி போட்டிருந்தால் என்ன திருப்பரங்குன்ற மலை மாதிரியிருக்கு என கேலி செய்வேன்? அந்த மரத்தை இந்நடையில் அருகில் பார்த்தேன். மலையை விட்டு இறங்கும் போது எங்கும் அமராமல் ஒரே மூச்சோடு இறங்கினேன். கீழே உள்ள பழனியாண்டவர் கோயிலில் உணவு அருந்தினோம். நடை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சென்றாண்டு பிப்ரவரியில் இம்மலைக்கு வந்த போது அடுத்து ஒருமுறை தர்ஹாவிற்கென தனியே வரவேண்டுமென பேசியது நினைவிற்கு வருகிறது. ஒருவருடம் கழித்து அதுவும் சாத்தியமாகிவிட்டது. தர்ஹா குறித்த தகவல்களை என்னிடம் தந்து அதைக்குறித்து மேலும் உரையாடிய எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கு நன்றி. இந்த நடையை அற்புதமாக நிழற்படங்களில் காட்சிப்படுத்திய அருண் அவர்களின் படங்களை அவரது அனுமதியோடு பகிர்ந்துள்ளேன். அவருக்கும் நன்றி. நீண்ட பதிவை பொறுமையுடன் வாசித்த அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

1623756_589651444438808_16599272_n

பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. அயற்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது. இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி நிகழ்காலத்தில் முழுமையாக வாழும் மனநிலை அப்போது பிறக்கிறது.

–    வெ.இறையன்பு

சமணமலையை இளம்வயதில் எங்க ஊரிலிருந்து பார்க்கும் போது நாகமலைக்கு இடதுபுறமாக வில்போல அமைந்த  சிறுகுன்றாகத்தான் தெரியும். பின்னாட்களில் பணிவிசயமாக மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் சென்றபோதும் அந்த மலையின் பெயர் தெரியாது. ஆனாலும் நாகமலைப்புதுக்கோட்டைக்கு முன் வரும் கால்வாய்கிட்ட நின்று பார்த்துவிட்டுதான் செல்வேன். மதுரையைக் குறித்த தேடலும், வாசிப்பும் அதிகமான போது சமணமலை மிகவும் நெருக்கமானது. விருட்சத்திருவிழாவிற்கு பின் சமணமலையின் மீதான காதல் இன்னும் அதிகமானது.

பசுமைநடையாக குடியரசு தினத்தன்று காளவாசலில் எல்லோரும் கூடி அங்கிருந்து சமணமலையின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மேலக்குயில்குடிக்கு சென்றோம். நாகமலைப்புதுக்கோட்டையிலுள்ள வெள்ளைச்சாமிநாடார் கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள சாலையில் சென்றால் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி தாண்டி தெரியும் சமணமலையின் பின்பகுதியில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகள் உள்ளது.

1511726_589650247772261_1814438295_n

1545198_589650944438858_2118255101_nசமணப்பண்பாட்டு மன்றம் அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு எல்லோரும் மலையை நோக்கி நடந்தோம். பனியைப் பத்திவிட்டு பகலவன் பல்லக்காட்டத் தொடங்கினான். மலையை வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் அப்பகுதி இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். படுகைக்கு செல்லும் பாதையில் சீமைக்கருவேலமுள் அதிகம் வளர்ந்திருந்தது. ஒருங்கிணைப்பு குழுவிலுள்ள நண்பர்கள் சிலர் ஏறி பாதையை சரிசெய்தனர்.

1538935_589651264438826_1053547566_n ஏறுவதற்கு சிரமமான இடங்களில் நின்று வந்தவர்களை கைகொடுத்து ஏற்றிவிட்டனர். சரளைக்காக மலையை உடைத்திருந்ததாலும், இடியால் சிதைந்திருந்ததாலும் மலை உருக்குலைந்து காணப்பட்டது. மலைமீது ஏறி படுகைகளைத் தேடினோம். மேற்கூரையில்லாமல் உடைந்து கொஞ்சம் படுகைகள் கீழே கிடந்ததைப் பார்த்து மனமுடைந்து போனது. எல்லோரும் அங்கு கூடியதும் அனைவருக்கும் அந்த இடம் குறித்த கைப்பிரதி வழங்கப்பட்டது.

1536746_589652691105350_901473715_n

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசத் தொடங்கினார். கடினமான பாறை இடிபாடுகளைக் கடந்து இந்த இடம்வரை கிட்டத்தட்ட எல்லாருமே ஏறிவந்திருப்பதைப் பார்க்கும்போது உற்சாகமான மனதை யாராலும் சிறைபிடிக்க முடியாது என்பதை இந்த நடை நிரூபித்திருக்கிறது. தனியாக இந்த இடத்திற்கு வரும்போது தயக்கம் ஏற்படும். ஆனால், குழுவாக இணையும்போது கிடைக்கும் தன்னம்பிக்கை அலாதியானது. மனித சமூக வரலாற்றிலேயே ஒற்றுமையாக இருந்தவர்கள்தான் பல விசயங்களை சாதித்திருக்கிறார்கள்.

1623563_589651604438792_2093625257_n

ஜனவரி 1 அன்று விஜய்டிவி நீயா? நானா? 2013 விருது பசுமைநடை குழுவிற்கு தொன்மையான இடங்களை நோக்கி பயணித்து பாதுகாத்து வருவதற்காக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான அழைப்புகளும், வாழ்த்துகளும் உலகமுழுவதிலுமிருந்தும் வரத்தொடங்கியது. விருட்சத்திருவிழாவிற்குப் பிறகு ஊடகங்கள் பசுமைநடையைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.

குங்குமம்

ஜனவரி முதல் வார குங்குமம் இதழிலும் வரலாற்றை சேகரிக்கும் பசுமைநடை என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களில் கட்டுரை வந்துள்ளது. மற்ற ஊரில் இருக்கும் நண்பர்கள் எங்கள் ஊரிலும் பசுமைநடையை நடத்துங்கள் என அழைக்கிறார்கள். இப்போது பசுமைநடைக்காக இருபது நண்பர்கள் தங்கள் நேரங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுபோல இன்னும் ஐம்பது நண்பர்கள் பசுமைநடைக்காக நேரம் ஒதுக்கினால் நாம் பசுமைநடையை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லலாம்.

1654112_772816259414473_1814524161_nமேலக்குயில்குடி மலை இடிந்து விழுகிற நேரம் இந்தப் பகுதியில் உள்ள சர்ச்கிட்டதான் நடந்து சென்று கொண்டிருந்தோம். மிகப் பெரிய சத்தம் கேட்டது. அப்போது அணுகுண்டு வெடித்ததுபோல இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். இதுபோன்ற இடங்களுக்கு யாரும் வராததால்தான் இதுபோன்ற இழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகளையாவது விட்டுவையுங்கள் என நாம் கேட்கிறோம்.

முத்துக்கிருஷ்ணனைத் தொடர்ந்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்களை கூறினார். Muthukumarசமணமலை முக்கியத்துவம் வாய்ந்த மலை. மதுரையில் யானைமலை, அரிட்டாபட்டி போன்ற பல மலைகளில் சமணத்தின் சுவடுகள் இருந்தாலும் இம்மலைக்குப் பெயரே சமணமலை என்றிருக்கிறது. மேலக்குயில்குடி மலையில் பத்திற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் இருந்தன. இங்கு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு தஞ்சைத் தமிழ்ப் பல்கலை ஆய்வுமாணவராக இருந்த முத்துக்குமார் என்ற இளைஞர் இப்படுகைக்கு மேலுள்ள பாறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டைக் கண்டறிந்தார். (நாம் முன்பு கீழக்குயில்குடி சென்ற போது அதைப் பார்த்தோம்). இந்த மலை அதற்கான பரிசை அவருக்கு வழங்கிவிட்டது. இப்போது அந்த இளைஞர் தில்லி ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி நமது ஆட்கள் பல இடங்களிலும் இருப்பது நமக்கு நல்லது.

இம்மலையை முன்பு சரளை உடைப்பதற்கெடுத்த ஒப்பந்ததாரர் அடியிலிருந்து உடைக்கத்தொடங்கினார். இதனால் மேற்பகுதி வலுவிழந்துகொண்டே வந்தது. நல்லவேளையாக இம்மலை உடைந்த அன்று பஞ்சாயத்து தேர்தல் நடந்ததால் தனக்கு வாக்களிப்பதற்காக பணியாட்களையும் கூட்டிக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.  அதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. பொதுவாக எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றியதாகச் சொல்லி இக்கலை நகரத்தை கொலை நகரமாக பலர் சித்தரிக்கும் வேளையில் இயற்கையாகவே ஆளில்லாத நாளில் மலை இடிந்துவிழுந்ததன்மூலம் அன்று இம்மலை அகிம்சை மலை என்று காட்டிவிட்டது. பின் அந்த ஒப்பந்ததாரரே இல்லாமல் போனார். இம்மலை தப்பியது. மலைகளை பாதுகாக்க தனியாக ஆட்களை நியமிப்பதைவிட இதன் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

இதுபோன்ற இடங்களை நோக்கி இப்போது பலரும் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். வந்தவாசிப் பகுதியிலுள்ள சமணர்கள் இப்போது அங்குள்ள சமணத்தலங்களை நோக்கி அகிம்சைநடை என்ற பெயரில் பயணிக்கிறார்கள். மதுரையிலுள்ள வழக்கறிஞர்கள் சேர்ந்து குறிஞ்சிக்கூடல் என்ற பெயரில் தொன்மையான இடங்களை நோக்கி மாதம் ஒருமுறை குடும்பத்துடன் பயணிக்கின்றனர். மூன்றாவது நடையாக அரிட்டாபட்டியில் பொங்கல்விழா கொண்டாடிய போது நானும் சென்றிருந்தேன்.

பெருந்தேவூர் குவித்த அயம்

இம்மலை மீதுள்ள ஆடு உரிச்சான் பாறையில் பெருந்தேவூர் குவித்த அயம் என்ற தமிழ்பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. பெருந்தேவூரைச் சேர்ந்தவர்கள் செய்வித்த படுகை என்பது இதன் பொருள். சமணத்துறவிகள் தங்கியிருந்த இடத்திற்கு ஆடுஉரிச்சான் பாறையென பின்னாளில் பெயர்வந்தது நேர்முரணான விசயம். மதுரையை சமணத்தின் தாயகம் என்று சொல்லும் தமிழ்ச்சமணர்களும்  இந்நடைக்கு வந்துள்ளது மற்றுமொரு சிறப்பு.

1535024_589652207772065_585803335_n

வந்தவாசிப்பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் கொஞ்சப்பேரும் இந்நடைக்கு வந்திருந்தனர். அ.முத்துக்கிருஷ்ணன் அறவாழி அய்யாவை எங்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைத்தார். அறவாழி அய்யா எளிமையான மனிதர், பல முக்கியமான தலைவர்களின் சமகாலத்திய நண்பர், மு.வரதராசனின் மாணவர் என்று அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அறவாழி அய்யா பேசத் தொடங்கினார். மதுரையிலுள்ள மலைகளுக்கெல்லாம் கடந்த 25, 30 ஆண்டுகளாக திங்களுக்கொருமுறை, இரண்டு திங்களுக்கொருமுறை வந்து செல்கிறோம். நாங்கள் தமிழகத்தில் மைக்ரோஸ்கோபிக் மைனாரிட்டி என்று சொல்லும்படி எண்ணிக்கையில் சிறுபான்மையினர்.

நான் பொதுவாக இந்த வரலாற்றுச் சின்னங்களை சமணம் சார்ந்தவை என்று எண்ணுவதில்லை. இவை அனைத்தும் தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் சார்ந்தவை. இயற்கையாகவே இம்மலைக்கு சமணமலை என்ற பெயர் வந்துவிட்டது. சாந்தலிங்கம் அய்யா பேசும்போது இம்மலையை அகிம்சை மலை என்றார். நான் இதை தமிழர்மலை என்கிறேன்.

முதுபெரும் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இம்மலை உடைந்த போது கண்ணீர் விட்டு அழுதார். அருகிலுள்ள விக்கிரமங்கலம் சென்று பார்த்துவிட்டு அழிவின் விளிம்பில் விக்கிரமங்கலம் என தினமணியில் மகாதேவன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்து நான், சாந்தலிங்கம், ஆனந்தராஜ் மூவரும் விக்கிரமங்கலம் சென்றோம். மலையை கொஞ்சம் சரளைக்காக சுக்குச்சுக்காக உடைத்திருந்தார்கள். மலையின் மறுபுறம் உள்ள படுகையில் காணப்படும் தமிழிக்கல்வெட்டுகளைக் காணச் சென்றோம். இப்போது எனக்கு வயது எழுவத்தொன்பது. ஆறேழு வருடங்களுக்கு முன் கொஞ்சம் ஆற்றல் இருந்தது. அப்போது கல்வெட்டுக்களை காணும் ஆவலில் பாறைகளைப் பிடித்து சிரமப்பட்டு ஏறினேன். அதை வியந்து பார்த்த சாந்தலிங்கம் புகைப்படமாக எடுத்துக் கொடுத்தார். அந்த படங்களை சிறப்பு ஆணையர் ஶ்ரீதரிடம் காட்டியபோது இவ்வளவு சிரமமான இடங்களுக்கெல்லாம் இனி ஏறாதீர்கள். தவறிவிழுந்தால் என்ன ஆவது என்று வருத்தப்பட்டார். பசுமைநடைக்கு வருபவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் இங்கு இளைஞர்கள்வட்டம் அதிகமாகத் தெரிகிறது. அது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் இப்போது போனஸ் லைஃபில் இருக்கிறோம். எங்களுடைய ஒழுகலாறுகள் காரணமாக கொஞ்சம் கூடுதல் ஆயுளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், தமிழகம் இனி எங்கள் கையில் இல்லை. இளைஞர்களை நம்பித்தான் எதிர்காலத் தமிழகம் இருக்கிறது. இங்கே இருக்கிற இளைஞர்களைப் பார்த்து மகிழ்கிறேன். வாழ்த்துகிறேன். தமிழர்களுடைய பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.

எல்லோரும் மெல்ல இறங்கினோம். நான், சகோதரர் தமிழ்ச்செல்வம், இளஞ்செழியன் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.  எல்லோரும் விஜய்டிவி விருதை வைத்து புகைப்படமெடுத்துக் கொண்டனர். மதுர வரலாறு நூலை வாங்காத புதிய நண்பர்கள் வாங்கினர். கதிர் பொங்கல் மலரையும் வேண்டியவர்களுக்குக் கொடுத்தோம். காவலர் ஒருவர் நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த கைப்பிரதியை எல்லோருக்கும் வழங்கினார். விழித்தெழு மதுரை குழுவினர் நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கான அவர்களது ஏழு அம்ச செயல்திட்டம் குறித்துப் பேசினர்.

1655911_589653754438577_1386311960_n

சமணப்பண்பாட்டு மன்றத்தில் பசுமைநடைக்குழுவினர்க்கு காலை உணவு வழங்கப்பட்டது. கேசரி, வடையையும்; சாம்பார் சட்னியில் குழைத்து வெண்பொங்கலையும் வயிராற உண்டோம். சமணப்பண்பாட்டு மன்றம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்றதை ஒரு விழாவாகக் கொண்டாடினர். அதில் பசுமைநடை ஒருங்கிணைப்புக் குழுவினர் கலந்து கொண்டோம்.

விஜய் டி.வி நீயா? நானா?2013 விருதுக்கான காணொளிக்கான இணைப்பு

தமிழிக் கல்வெட்டுக் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்திக்கான இணைப்பு.

படங்கள் உதவி – ரகுநாத், செல்வம் ராமசாமி

முத்துக்கிருஷ்ணன்

குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள். கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.             

– பூமணி (அஞ்ஞாடி)

மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு 23.06.2013 ஞாயிறன்று சென்ற அனுபவப் பதிவு.

மந்தை

அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.

காரைவீடு

கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.

அன்பின் பாதை

வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.

ஊருணி

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.

சமணமுனி

சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது. ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.

தமிழிக்கல்வெட்டு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

அச்சணந்தி செய்வித்த திருமேனி

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாததால் இது சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். நாகர்கோயில் சிதறால் மலையிலிருந்து வேலூர் வள்ளிமலை வரையிலான பல மலைகளில் அச்சணந்தி செய்த சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் காணலாம். கழுகுமலையில் இவர் செதுக்கிய சிற்பமெதுவுமில்லை.

மலையின் மீதுள்ள படுக்கையொன்றில் நாலு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் பள்ளித்தரையன் என்ற வரி காணப்படுகிறது. அரையன் என்பவர் பாண்டியர்களின் கீழிருந்த சிற்றசர்களில் ஒருவராயிருக்கலாம்.

வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அச்சமயம் மக்கள் வழக்கத்திலிருந்த தமிழ் மிகவும் எளிமையாய் இருந்ததால் வட்டெழுத்து மறைந்து போனது. வட்டெழுத்து மேற்கே நாகர்கோயில், கேரளா பகுதிகளில்  பதினாறாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இன்றும் சுசீந்தரம் கோயிலிலும், கேரளப்பகுதியிலுள்ள பாறைகளிலும் காணப்படுகிறது. வட்டெழுத்து கேரளத்தில் கிரந்தத்தோடு இணைந்து மலையாளமாகியது.

பாண்டியர்களுக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி காலத்தில் லிங்கம நாயக்கர் நத்தம் பகுதியை ஆண்டார். மகாபாரதக் கண்ணனின் நினைவாக இப்பகுதி அப்போது துவராபதிவளநாடு என்றழைக்கப்பட்டது. நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிராக உள்ள மண்கோட்டை, சத்திரம் எல்லாம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் மக்கள் குடிநீர் வசதிக்கு கிணறு, பொது செக்கு ஆகியவைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதன்பின் இராவுத்தர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட போது கொடைகளை செய்துள்ளார்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள திருச்சுனை என்னும் ஊரில் பிற்கால பாண்டியர்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. சூழும் அரசர் கண்டம் என்ற வரலாற்று பெயர் எப்படி திருச்சுனை என்றானது எனத் தெரியவில்லை.

பசுமைநடை

கருங்காலக்குடி குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற படிகள் செதுக்கியுள்ளனர். குகை போன்றமைந்த பாறையின் அடியில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பாறைஓவியம்

பாறை ஓவியங்கள் குறித்து ஓவியர் பாபு பேசினார். இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள altamira, chauvet குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஓவியங்கள் குறித்தும் பசுமைநடைப் பயணம் குறித்தும் பேசினார். இதுபோன்ற மலைகள் நம் வீட்டு சமையலறை மேடையாகவோ, தளமாகவோ மாறாமலிருக்க நாம் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் தமிழை செம்மொழியாக நிரூபிக்க உதவியதுபோல இதுபோன்ற பாறை ஓவியங்கள் நம் நீண்ட வரலாற்றை அறிய உதவுகிறது. ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள தனிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யலாம். அடுத்த நடை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிட்டாபட்டி என்றார். சுற்றிலும் மலைகள், மழைமேகம் சூழ்ந்த வானம், சிலுசிலுவென காத்து அடிக்க அங்கிருந்து வர மனசேயில்லை. மெல்ல இறங்கினோம்.

மலைகள்

எல்லோரும் ஊருணிக்கருகிலிருந்த மலைக்குன்றைச் சுற்றி உணவருந்தினோம். தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் அய்யாவும், இராஜேந்திரன் அவர்களும் எழுதிய கல்வெட்டுக்கலை என்னும் நூல் வாங்கினேன். கருங்காலக்குடி மந்தைக்கருகிலுள்ள பழைய கோயிலொன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சப்பேர் தேனீர் கடையிலும், மந்தையில் விற்ற மாம்பழங்களையும் வாங்கி அந்த ஊரோடு ஐக்கியமாயினர். வருகையில் பேருந்தில் நண்பர்களோடு கதைத்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு பசுமைநடையும் நிறைய புதிய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. கருங்காலக்குடி பசுமைநடை குறித்து நண்பர்கள் இளஞ்செழியன்(கதிர்), வேல்முருகன்(நெடுஞ்சாலை) பதிவுகளையும் வாசியுங்கள்.

படங்களை எடுத்துத் தந்த சகோதரன் செல்லப்பாவிற்கு நன்றிகள் பல.

பசுமைநடையில் முகநூல் பக்கத்தில் இணைய http://www.facebook.com/groups/251761754837926
மின்னஞ்சல் : greenwalkmdu@gmail.com

அற்புத மரங்களின் அணைப்பில்

நான் ஒரு காற்றாடி

வேப்ப மரக்கிளைகளின் இடையே

நான் ஒரு சூரியரேகை.

பப்பாளிச் செடிகளின் நடுவே

நான் ஒரு இனிமை

சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்  

நான் ஒரு நட்சத்திரம்.

–    ஆத்மாநாம்

பசுமைநடை குழுவும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வுமையமும் இணைந்து புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருநாள் வரலாற்றுப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். முதலில் கொடும்பாளூர் மூவர்கோயிலைப் பார்த்துவிட்டு பிறகு குடுமியான்மலை வந்தோம்.

சாந்தலிங்கம்

குகைத்தளத்தில் குழு

குடுமியான்மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி நடந்தோம். கொஞ்சம் சறுகலாக இருந்தாலும் ஏறுவதற்கு சிரமமில்லாமல் இருந்தது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா குகைத்தளத்தில் வெட்டப்பட்டிருந்த தமிழ்பிராமிக்கல்வெட்டை சுட்டிக்காட்டினார். பின் அங்கிருந்த படுகைகளைப் பார்த்தோம்.

படுகை

தமிழ் பிராமி கல்வெட்டு

எல்லோரும் அக்குகைத்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் சாந்தலிங்கம் அய்யா அவ்விடம் குறித்த தகவல்களை கூறத்தொடங்கினார்.

இந்த ஊரின் பெயர் சங்க காலப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் பெயரால் அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. (நிலவிவரும் இன்னொரு கருத்து பற்றி அடுத்த பதிவில் காண்போம்) சமணர்கள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளுக்கு அருகில் உள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டில் ‘நாழள் கொற்றந்தய் பளிய்’ என்றுள்ளது. இக்கல்வெட்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இம்மலைமீது குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன்கோயில் ஒன்று உள்ளது. இது எழுநூறு ஆண்டுகள் பழமையானது.

மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள். மலையைச்சுற்றி முன்பு முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகயிருக்கலாம்

மலையிலிருந்து மெல்ல இறங்கினோம். அங்கிருந்து குடுமிநாதர்கோயில் சென்றோம். (குடுமிநாதர்கோயிலைக் குறித்து அடுத்த பதிவில் காண்போம்) குடுமிநாதர்கோயிலுக்குள் சென்று மலையின் கிழக்குச்சரிவில் வெட்டப்பட்டுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றோம்.

குடுமியான்மலை

வாயிலோன்சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். இக்குடைவரையிலுள்ள ஈசனுக்கு திருமூலட்டானத்து எம்பெருமான் என்று பெயர். இக்குடைவரை மேலைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்குடைவரை ஒரு கருவறையும், முன்மண்டபமும் கொண்டுள்ளது. இங்குள்ள வாயில் காவலர் உருவங்கள் மிகவும் எழிலார்ந்தவை. இங்குள்ள தூண்களில் கி.பி.எட்டாம்நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையன் மாறனின் கல்வெட்டு உள்ளது.

தேவதூதர்கள்வாயில்காவலர் சிலை ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையை ஒரு தூணில் சாய்ந்து ஒயிலாக நிற்கிறார். மிகவும் அழகாகயிருந்தது. சிவலிங்கம் இருக்கும் கருவறையின் வாசலில் படிபோல செதுக்கப்பட்டுள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். கருவறை வாசல் முகப்பில் மேலே தேவதூதர்கள் பறந்து வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள் மிகவும் அழகாக வெட்டப்பட்டுள்ளது. அதிலும் கல்வெட்டுகள் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

பிள்ளையார்வாயில்காப்போன் சிலைக்கு இடதுபுறம் ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

குடைவரையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். குடைவரைக்கு இடதுபுறம் மலையில் ஒரு பெரிய பிள்ளையார் சிலையும் அதனருகில் இசைக்கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏழுபத்திகளில் சமஸ்கிருதக்கல்வெட்டு உள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். இதைக் குறித்து இசைப்பேராசிரியர் ராமநாதன் போன்றோர் எழுதியிருப்பதையும் குறிப்பிட்டார். இங்குள்ள இசைக்கல்வெட்டுகள் மிகவும் புகழ் பெற்றவை. ஏழுசுவரங்களையும், ஏகப்பட்ட ராகங்களையும் இக்கல்வெட்டில் அந்தக்காலத்தே பதிவு செய்திருக்கிறார்கள்.

(பெரிய தேன்கூடு இருந்ததால் கலைந்துவிடும் அபாயம் கருதி கூட்டமாக மிக அருகில் செல்லவில்லை)

இசைக்கல்வெட்டு உள்ள மண்டபம்

மலைமீது மலைப்பாறையில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் சிலைகளுக்கு மத்தியில் சிவன் உமையுடன் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது போல சிலை வெட்டப்பட்டிருக்கிறதைப் பார்த்தோம். மலைமீது வரிசையாக அச்சிற்பங்களைப் பார்த்ததும் அக்காலச் சிற்பிகளை எண்ணி வியப்பாகயிருக்கிறது. இந்த சிற்பங்களின் படத்தை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் சகோதரன் அனுப்பியிருந்தான். பதில் மின்னஞ்சலாக கழுகுமலை-சங்கரன்கோயில் பசுமைநடைப் பயண நிழற்படங்களுடன் டிசம்பர் மாதத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை பயணம் நிகழவுள்ள தகவலையும் அனுப்பினேன். படங்களையும் பதிவையும் வாசித்து இம்முறைப் வரலாற்றுப் பயணத்திற்கு மிக ஆர்வமுடன் கலந்துகொண்டான். (சகோதரன் அனுப்பிய நிழற்படத்தை எடுத்த முகமறியாத அந்தக் கலைஞனுக்கு நன்றி) சிற்பங்களின் அழகைக் கண்டுவிட்டு சித்திரங்களின் அழகைக் காண சித்தண்ணவாசல் சென்றோம்.