2022: மதுரை புத்தகத் திருவிழா

Posted: திசெம்பர் 28, 2022 in பார்வைகள், பகிர்வுகள்

செப்டம்பர் 8 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநாட்டு அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதில் முதல் நிகழ்வாக மதுரை புத்தகத் திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெற்றது. 200க்கும் மேலான அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் இவற்றோடு மாமதுரை அரங்கு, கல்லூரி மாணவர்களுக்கான படைப்பூக்கப் பயிலரங்கு, பள்ளி மாணவர்களுக்கான சிறார் அரங்கு, உரையரங்கு, கலைநிகழ்ச்சிகள் என மதுரை புத்தகத் திருவிழா பெருங்கொண்டாட்டமாக நடந்தது. எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துக்கிருஷ்ணன், பவா செல்லத்துரை, சு.வெங்கடேசன் என பலரின் உரைகளை கேட்க வாய்ப்பு கிட்டியது.

மாமதுரை போற்றுதும்

மதுரையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் மாமதுரை போற்றுதும் அரங்கை அமைக்க ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்களில் என்னையும் தேர்வு செய்திருந்தார்கள். பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம், பேராசிரியர் இரத்தினக்குமார், பேராசிரியர் பெரியசாமி ராஜா இவர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது எங்களுக்கு பெருவாய்ப்பாக அமைந்தது. வரலாற்றுக்கு முந்தைய கால மதுரை தொடங்கி சமகால மதுரை வரை பல்வேறு விசயங்களை பதாகைகளாக வடிவமைத்தோம். ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்தோடு வந்து பார்த்தனர்.

மண்ணின் மைந்தர் விருது

மதுரை புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளுமைகளை சிறப்பிக்கும் பொருட்டு மண்ணின் மைந்தர் விருது பத்து பேருக்கு வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், தொல்லியல் அறிஞர் வேதாச்சலம், எழுத்தாளர்கள் சுப்பாராவ், ந.முருகேசபாண்டியன், அ.முத்துக்கிருஷ்ணன், யுவன் சந்திரசேகரன், சுரேஷ்குமார் இந்திரஜித், இந்திரா சௌந்திரராஜன், லெட்சுமி சரவணக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக புத்தகங்களை வெளியிட்ட கல்லூரி மாணவிகள் எம். தீபிகா, எஸ்.சோபனா, என்.நிசாலினி, எஸ்.என்.அறிவுமதி, எம்.அனு, எம்.தீபிகா, ஆர்.எஸ்.சுவேதா, எஸ்.பி.தமிழ்ச்செல்வி ஆகிய எட்டு மாணவிகளுக்கு மண்ணின் மைந்தர் விருது வழங்கப்பட்டது.

படைப்பூக்கப் பயிலரங்கு

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, சினிமா, நாடகம், புனைவு, தொல்லியல், பேச்சு, நுண்கலை என பலதுறைகளிலும் துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்துவந்து படைப்பூக்க பயிலரங்கு நடத்தினர். படைப்பூக்கப் பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சில நிகழ்வுகளின் உரைகளை கொஞ்ச நேரம் கேட்கவும் முடிந்தது. பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறார் பயிலரங்கு

பள்ளி மாணவர்களுக்கு காகிதக்கலை, ஓலைக்கலை, கதையாக்கம், சிறார் நாடகம், காமிக்ஸ் வரைதல், கதை சொல்லுதல், எழுத்தாக்கம் என பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. கூடுதலாக சிறார் திரைப்படங்கள் மதியத்திற்கு மேல் காண்பிக்கப்பட்டன. கதை வாசித்தல் போன்ற நிகழ்வுகளுடன் சிறார் அரங்கு உற்சாகமாக நிகழ்ந்தது.

வாங்கிய புத்தகங்கள்

ஒவ்வொரு அரங்கிலும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறைய இருந்தாலும் கைவசம் இருந்த தொகைக்கு ஏற்ப சொற்ப புத்தகங்களே வாங்கினேன். வெகுநாட்களாக வாசிக்க நினைத்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் மண்டியிடுங்கள் தந்தையே, நான் திரு.வி.க. பள்ளியில் பயின்ற போது முன்னாள் மாணவராகயிருந்த வீரபாண்டியன் எழுதிய சலூன் என்ற இரண்டு நாவல்களையும்; மணிவாசகர் பதிப்பகத்தில் சங்க இலக்கியத்தில் யானைகள், தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு தூண்கள், கல்வெட்டில் வாழ்வியல் போன்ற நூல்களையும்; செண்பகா பதிப்பகத்தில் பதிமூன்று சிறுநூல்கள், யுரேகா பதிப்பகத்தில் அறிவியல்சார்ந்த குறுவெளியீடுகள், அதோடு மனங்கவர்ந்த அன்பின் வண்ணதாசனிடம் கையொப்பம் பெற்று ஒரு சிறு இசையில் நூல் ஆகியவற்றையும் வாங்கினேன்.

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை

2019ல் நடைபெற்ற 14வது மதுரை புத்தகத் திருவிழாவில் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூல் இடம்பெற்றது. இரண்டாண்டு கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு நடந்த 15வது மதுரை புத்தகத்திருவிழாவில் இரண்டாம் பதிப்பான திருவிழாக்களின் தலைநகரம் இடம்பெற்றது பெருமகிழ்ச்சி. 2023இல் இன்னும் விரிவாக 40 திருவிழாக்களோடு நூலைக் கொண்டுவரும் ஆசையை மதுரையும் தமிழும் நிறைவேற்றட்டும்.

பின்னூட்டமொன்றை இடுக