Posts Tagged ‘அ.முத்துக்கிருஷ்ணன்’

அ.முத்துக்கிருஷ்ணன்

இவ்வுலகம் இனியது.

இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

காற்றும் இனிது; தீ இனிது; நீர் இனிது;

நிலம் இனிது; ஞாயிறு நன்று; திங்களும் நன்று;

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

–    மகாகவி பாரதி

மேலக்குயில்குடி சமணமலைக்கருகில் சமணப்பண்பாட்டு மன்றம் அமைந்துள்ளது. 2013ம் ஆண்டு குடியரசு தினவிழாவன்று இம்மன்றத்தைத் தொடங்கினர். மதுரை சமணப்பண்பாட்டு மன்ற ஓராண்டு நிறைவுவிழாவில் பசுமைநடை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மற்றும் சமணத்தலைவர்கள் பலரும் பேசினர். அதில் பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் இலக்கியம், இயற்கை, பொதுவுடமையோடு சமணம் கொண்டிருந்த தொடர்பைக் குறித்து மிக எளிமையாக விளக்கினார். அந்த உரையைக் காண்போம்:

DSCN7612

பசுமைநடையாக பயணிக்கத் தொடங்கியபோது ‘உங்களையெல்லாம் சந்திப்போம், இது போன்ற கூடுகை அமையும்’ என்றெல்லாம் நாங்கள் அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை. உங்களையெல்லாம் சந்திப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சியாகயிருக்கிறது.

இந்த மலைகளுக்கெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பயணித்து வருகிறேன். திருப்பரங்குன்றத்தில்தான் நான் பத்து, பதினைந்து ஆண்டுகள் வசித்தேன். நினைத்தால் திருப்பரங்குன்ற மலையேறி விடுவோம். திருப்பரங்குன்றத்தில் கதை, கவிதை என்று இலக்கியம் தொடர்பான ஆட்களோடு நெருக்கம் ஏற்பட்டது. எல்லோரும் பல இடங்களில் பணிபுரிபவர்கள். ஆனால், எல்லோருக்குள்ளும் இலக்கியம் சார்ந்த ஒரு பெரிய நாட்டம் இருந்தது. எல்லோருக்கும் வேலை பார்க்கும் இடங்களில் நெருக்கடிகள், பிரச்சனைகள் மற்றும் விடுப்பு கிடைக்காது போன்ற நிலை இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் மழைமோடமாகயிருந்து வெயில் திறக்காது எனத் தெரிந்தால் நாங்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டதில்லை. அப்போது செல்போன் இல்லை, எஸ்.எம்.எஸ் இல்லை. மழையடிவாரத்திற்கு போனால் நாங்கள் பத்து, பதினைந்து பேர் சந்தித்துக்கொள்வோம். வேலையே போனாலும் பரவாயில்லையென்று அன்று மழைமேல் ஏறிவிடுவோம். அன்று செல்ஃபோன், கிரெடிட்கார்டு எல்லாம் மழையில் நனைந்துவிடுமென்ற பயம் இல்லை. அதனால், ஒரு விடுதலை உணர்வும் மனதில் இருந்தது.

muthukrishnan speaksமலைமீது காலையில் ஏறிவிட்டால் இறங்க இரவாகிவிடும். இடையிடையே உடன்வந்த இளைஞர்களிடம் பணத்தை கொடுத்து கடலைமிட்டாய், கொய்யாப்பழம், வாழைப்பழம் எனத் திங்க வாங்கி வரச்சொல்வோம். அப்படியே பணமில்லாவிட்டாலும் ஊரிலுள்ள நண்பர் யாரையாவது பிடித்து எதாவது வாங்கி வரச் சொல்லிவிடுவோம். யாருக்கும் மலைமீது ஏறினால் இறங்குவதற்கு மனமே வராது. இதே உணர்வலையை வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் இந்த மலையிலிருந்து பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இந்த மலைக்கு வயது என்ன என்பதை கல்வெட்டுகளை வைத்து தேடிக்கொண்டிருக்கிறோம். ஆயிரம், இரண்டாயிரம் என நீண்டு கொண்டே போகிறது. அறிவியலை மையமாக வைத்துப் பார்த்தால் பல்லாயிரம் ஆண்டுகள் என நீளும். விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வரும் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆடுகள் இதுபோன்ற மலைகளின் உச்சிகளுக்கெல்லாம் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு முன்னரே அவைகள் அங்கு சென்றிருக்கும் என்று தோன்றுகிறது என்றார். அதன் கால்களும் அதற்கேற்ப தகவமைக்கப் பட்டிருக்கிறது.

இலக்கியம் சார்ந்த ஆட்களுக்கிடையே ஒத்திசைவு ஏற்படுவதைப் போலவே இயற்கையை விரும்புவர்களுக்கிடையிலும் ஒத்திசைவு ஏற்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறோம். உதாரணத்திற்கு அருகிலுள்ள சதுரகிரி மலைக்கு போறோம். நம்முடைய வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, ரேஷன்கார்டுகளைவிட்டு மலைமீது செல்லச்செல்ல உடன்வருபவர்கள் சிலமணிநேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள். ரயில்பயணங்களில் கூட நமக்கு இந்த அனுபவம்தான் நிகழ்கிறது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறதென்றால் நாம் தினசரி வாழக்கூடிய வாழ்க்கை நமக்கு அலுப்பாகயிருக்கிறது. எல்லோருக்கும் அந்த வாழ்க்கையின் மீது ஏராளமான குறைகள் இருக்கிறது. அது பிடிக்காமல்தான் வாழ்கிறோம். அதைவிட்டு வெளியே வந்தால் எல்லோர் முகத்திலும் சிரிப்பு வருகிறது, மகிழ்ச்சி வருகிறது. என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட விசயம் என்னவென்றால் எவ்வளவுக்கெவ்வளவு பயணம் செய்கிறோமோ அந்தளவிற்கு எல்லாவிதமான கசடுகளிலிருந்தும் நாம் விடுதலையாவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. உங்கள் முன்னோர்களும் (தமிழ்ச்சமணர்கள்) இந்த தமிழ் நிலத்தில் அதிகம் பயணம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை வாசிப்பினூடாக அறிகிறோம்.

இன்னொருபுறம் பார்த்தால் இன்றைய வாழ்க்கையென்பது பயணங்களையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டு ஒரு முட்டாள் பெட்டியின் முன்னமர்ந்து ரிமோட்டை எடுத்து மேலயும் – கீழயும், மேலயும் – கீழயும் என மலையை ஏறியிறங்க வேண்டியவன் ரிமோட்டில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கிறான். இருநூறு சேனல் ஏற மீண்டும் இருநூறு சேனல் இறங்க என எதையும் உருப்படியாக பார்ப்பதில்லை. எனக்குத் தெரிய தொலைக்காட்சியைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்டேனென யாரும் சொன்னதில்லை. அதற்குள் உள்ள அறிவு தெரியாதளவு குப்பை கூளங்களால் மூடிக்கிடக்கிறது. வர்த்தக உலகம் உருவாக்கிய இந்த முட்டாள்தனங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியிருக்கிறது. குடும்பங்களாக நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் எங்காவது பயணியுங்கள். அது பெரிய விடுதலையாகயிருக்கும்.

602114_4751299936624_1209504232_n

இலக்கியம், இயற்கை போல இளம்வயதில் நாங்களெல்லாம் பொதுவுடமைக்கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். பொதுவுடமையை அந்தக் காலத்திலேயே சமண இலக்கியங்கள் போதிக்கின்றன. எல்லோரும் சமமாக வாழ வேண்டும். நாங்களும் இலக்கியம், அரசியல் வழியாக காண விரும்புவது இதைத்தான். என்னுடைய இளவயதில் ஒருநாள் மதுரை சர்க்யூட் ஹவுஸ் எதிரிலுள்ள டீக்கடையில் ஒரு வயதான மனிதர் டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒருவேளை அவராக இருக்குமோ என நாங்கள் யோசித்துக் கொண்டே அருகில் சென்றோம். அப்போது கேரளத்தின் முதல்வராகயிருந்த ஈ.கே.நாயனார்தான் அங்கு நின்று கொண்டிருந்தார். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். ஒரு முதல்வர் இவ்வளவு எளிமையாக இப்படியிருப்பதைப் பார்த்து வியந்தோம். இதைப் போல வேறெந்த முதல்வர்களையும் பார்க்க முடியாது.

வந்தவாசிப்பகுதியிலுள்ள உங்கள் (தமிழ்ச்சமணர்) வீடுகளுக்கெல்லாம் வந்தபிறகுதான் நீங்கள் எளிமையான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்தேன். பிழைப்புக்காக தமிழைக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்களுக்குக்கூட சில தமிழ் இலக்கியங்களுக்கு உரையாசிரியர் யாரென கேட்டால் உடனே சொல்லத் தெரியாது. ஆனால், வந்தவாசியில் உள்ள பலரும் தமிழ் இலக்கியங்களில் பேரறிவாளர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். உங்களுடைய இளைய தலைமுறையையும் இங்குள்ள மலைகளுக்கு அழைத்து வாருங்கள். நன்றி.

படங்கள் உதவி – ரகுநாத், பசுமைநடை முகநூல் பக்கம்

மூவர் கோயில்

விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைதிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம்.

இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளோடு தொடர்ந்த மதுரைப் பயணத்தின் போது ‘கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே’ தங்கியதாகச் சிலம்பிலே குறிப்பு உண்டு. கொடும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று பெருவழிகள் சிவபெருமானின் மூவிலைச் சூலம் போலப் பிரிந்து செல்வதாகவும் அக்குறிப்புக் கூறும். எனவே, நீண்ட காலமாகச் சோழநாட்டையும் பாண்டியநாட்டையும் இணைத்த பெருவழியில் அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் தலைநகராக அமைந்தது. அவர்கள் இங்கு தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து எல்லை காவலர்களாகவும் விளங்கினர். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் பெரும்பங்காற்றினர்.

சோழ அரச குடும்பத்தினரோடு மண உறவும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பூதிவிக்கிரம கேசரி என்னும் பெரும்வீரன். இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன். அவனுக்கு இருமனைவியர். கற்றளிபிராட்டி, வரகுண நங்கை என்பது அவர்களின் பெயர்கள். பூதிவிக்கிரமகேசரியும், அவன் மனைவியர் இருவரும் சேர்ந்து எடுத்த கோயிலே மூவர் கோயில் என்பது. மூன்றும் சிவன் கோயில்களே. மூன்றும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளிவிட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை. மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்றும் கட்டப்பட்டது. ஆனால், இன்று முதல் கோயிலும், திருச்சுற்றும் முற்றிலும் அழிந்து இரண்டு கோயில்கள் மட்டுமே அதுவும் விமானம்(கருவறை உள்பட) மட்டுமே எஞ்சியுள்ளன. பிறமண்டபங்கள் எல்லாம் அழிந்துபட்டன. இவை சோழர்கோவில் கலைவரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாய்த திகழ்கின்றன.

சோழர்களின் கோயில்கட்டடக் கலைப்பாணியை ஆராய்ந்தவர்கள் அதனை முற்சோழர்பாணி, இடைச்சோழர்பாணி, பிற்சோழர்பாணி என மூவகைப் படுத்துவர். இதில் முற்சோழர்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்வது மூவர்கோயில். அதிட்டான வரியில் விரிந்த தாமரை இதழ்களும், உருள் குமுதமும், அதற்கும் மேலாக வரிசையாக அமைந்த யாளி வரியும் அமைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கோயில்களில் தேவகோட்டச் சிற்பங்களின் எழிலும் கலைநேர்த்தியும் கண்டோரைக் களிப்படையச் செய்வன. ஸ்தூபி வரை கல்லிலேயே கட்டப்பட்டுள்ளன. விமானத்தின் உள்கட்டமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடியாய் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. இங்குள்ள தமிழ், கிரந்தக் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற பெயரில் தமிழகமெங்கும் வணிகம் செய்த குழுவினர் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. இதன் முக்கியத்துவம் கருதி இது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

–    சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.

பசுமைநடை குழுவும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து ஒருநாள் பயணமாக வரலாற்றுச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இந்த ஆய்வு மையத்தின் செயலராகயிருக்கிறார். மதுரையிலிருந்து கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை, திருமெய்யம் செல்வதாகத் திட்டம். 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை காளவாசல் அருகிலுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய அலுவலக வாசலிலிருந்து ஒரு பேருந்து மற்றும் ஒரு சிற்றுந்திலும் கிளம்பினோம். கிட்டத்தட்ட எண்பதுபேர் குழுவாகச் சென்றோம். சென்னை, கோவையிலிருந்தெல்லாம் நண்பர்கள் வந்திருந்தார்கள். செல்லும் இடங்களைக் குறித்த வரலாற்றுத்தகவல்கள் அடங்கிய குறிப்பேடு எல்லோருக்கும் பேருந்திலேயே வழங்கப்பட்டது. மூவர்கோயில் குறித்து சாந்தலிங்கம் அய்யா எழுதிய அக்குறிப்பை முன்புள்ள பத்திகளில் வாசித்திருப்பீர்கள்.

கொடும்பாளூர் கோயில்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ கட்டுரைத் தொகுப்பில் மூவர்கோயில் குறித்து வாசித்திருக்கிறேன். அன்றிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுச்சுவடுகளைக் காண வேண்டுமென்று ஆசை. அந்த ஆசை இப்பயணம் மூலம் நிறைவேறியது. மதுரையிலிருந்து முதலில் கொடும்பாளூர் சென்றோம். என்னோடு இம்முறை சகோதரர்களும் வந்திருந்தனர்.

விமானம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வேளிர்மன்னர்களின் தலைநகரமாகயிருந்த கொடும்பாளூர் இன்று சிறு கிராமமாக ஒடுங்கி ஆழ்ந்த மோனத்தில் உள்ளது. மூவர்கோயிலைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் விழிகள் அகன்றன. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரையிலுள்ள இரட்டைக் கற்கோயிலின் ஞாபகம் வந்தது. சுற்றி சிதிலமடைந்துள்ள கோட்டை, புல்வெளித் தோட்டம் என மாமல்லையை நினைவுபடுத்தியது வேளிர்களின் கலைக்கோயில். தொல்லியல் துறையின் பராமரிப்பில் இன்று இக்கோயில் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

அ.மு.கியும் அய்யாவும்

கோயிலைச் சென்று காண்பதற்குமுன் ஒரு மரத்தடியில் எல்லோரும் கூடினோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரையும் வரவேற்று பேசினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் துறையில் அனுபவமுள்ள சாந்தலிங்கம் அய்யா நம்முடன் இப்பயணத்திற்கு வருவது நமக்கு இன்னும் பெருமை தருவதாகக் கூறினார். சாந்தலிங்கம் அய்யா மூவர்கோயில் குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். குறிப்பேட்டிலுள்ள தகவல்களோடு மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சைவத்தில் உள்ள காளாமுகம் என்னும் பிரிவைச் சேர்ந்த துறவிகளுக்கான மடம் இந்த ஊரில் இருந்துள்ளது. மல்லிகார்ஜூனர் என்ற துறவி இங்கு தங்கியிருந்ததாகவும் மடத்தை பராமரிக்க மதுரையிலிருந்தெல்லாம் நன்கொடை வழங்கப்பட்டதாகவும் சொல்வார்கள். காளாமுகர்கள் முகத்தில் கரிய மையை பூசி மேனியெங்கும் திருநீறு அணிந்து மண்டையோட்டு மாலை சூடியிருப்பார்கள். இவர்களுக்கு மது, மாமிசம் எல்லாம் விலக்கில்லை. வேளிர்கள் ஆட்சிக்குப் பின் இப்பகுதியை பாண்டியர்கள், அதன்பின் நாயக்க மன்னர்கள் ஆண்டனர். மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது இந்த ஊர் மங்கம்மா சமுத்திரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரை ஒரு பாளையக்காரருக்கு மங்கம்மா தானமாக வழங்கியதாக குறிப்பு உள்ளது. இங்கு ஐந்தளி என்ற கோயில் இருந்துள்ளது அது முற்றிலும் அழிந்து போய்விட்டது. இந்த ஊருக்கு வரும் வழியில் முசுகுந்தேஸ்வரம் என்ற கோயில் உள்ளது. (முதுகுன்றம் என்பது சிதைந்து வடமொழியாக்கப்பட்டு இருக்கிறது) இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழநாட்டுக்கும் பாண்டியநாட்டுக்கும் நடுவில் இருந்ததால் வணிக மையமாக கொடும்பாளூர் இருந்திருக்கிறது. மூவர்கோயிலின் உள்விமானம் கூடு போல உள்ளது. இந்த முறையைப் பின்பற்றி தஞ்சைப் பெரிய கோயில் கட்டியிருக்கிறார்கள்.

வதம் புரியும் சிவன்

சிவன் சன்னிதி

விமானத்தின் உள்ளமைப்பு

சாந்தலிங்கம் அய்யாசாந்தலிங்கம் அய்யாவுடன் சேர்ந்து மூவர்கோயிலை நோக்கி நடந்தோம். கோயிலின் அமைப்பு, அங்குள்ள சிலைகள், புராணத்தகவல்கள், கல்வெட்டுகள், வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு சிலையின் கலையழகையும், அதன் வரலாறு, புராணக்கதைகளுடன் சேர்த்துக் கேட்கும்போது மனதில் பதிகிறது.   இங்கிருந்த கோயில் சிற்பங்கள் கொஞ்சம் சென்னை அருங்காட்சியகத்திலும், புதுக்கோட்டை அருங்காட்சியகத்திலும் உள்ளது. இங்கு முன்பு நூறு சிற்பங்களுக்கு மேல் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இப்பொழுது அது திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாம்.

பாடப்புத்தகங்களில் வரலாற்றை மனனம் செய்து படித்து பரிட்சை எழுதி மறைந்து போனதுபோலில்லாமல் நேரடியாய் பயணித்து காட்சியாய் காணும்போது ஏற்படும் பரவசத்தை சொல்லில் அடக்க முடியாது. கல்கியின் பொன்னியின் செல்வனின் நாயகியான  வானதி கொடும்பாளூரைச் சேர்ந்தவள் என்பது வாசித்த அனைவருக்கும் நினைவிலிருக்கும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும், பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

சிற்ப வேலைப்பாடு

 யாளி

 
பசுமை நடை முகநூல்முகநூலில் பசுமைநடையில் இணைய http://www.facebook.com/groups/251761754837926