நாம் இவ்வுலகில் வாழ்வது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் ‘காத்திருத்தல்’ போன்றது…!
– கலீல் கிப்ரான்
பேருந்தில் பயணிக்கையில் வழியில் தெரியும் மலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதன்மீது ஏறிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குத் தோன்றும். அந்த ஆசையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது பசுமைநடைப்பயணங்களே! மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பெரும்பாலான மலைகளுக்கு பசுமைநடைப்பயணக்குழுவோடு சென்றிருக்கிறேன்.
பேரையூர் மொட்டைமலை மீதுள்ள பழமையான சிவன் கோயிலுக்கு பசுமைநடையாக இம்முறை 29.06.2014 அன்று சென்றோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டமொம்மன் சிலைக்கருகில் அதிகாலை கூடினோம். அங்கிருந்து பேருந்தில் பேரையூர் சென்றோம். வெயில் கூடவே வந்தது.
தொலைவில் சிறிதாகத் தெரிந்த மலை அருகில் சென்றதும் மிக உயரமாகத் தெரிந்தது. மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. பிடித்து நடப்பதற்கு வாகாக இரும்பு கைபிடியும் உள்ளது. மலையில் ஏறும்பாதை செங்குத்தாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தளரச் செய்தது.
மலையிருந்து பார்க்கும்போது தெரிந்த பரந்துவிரிந்த வெளியும், மலைக்கு பின்னால் தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலைத்தொடரும் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.
ஒற்றைக்கருவறையும் சிறிய முன்மண்டபமும் கொண்ட பழமையான கோயில். கருவறையில் சிவலிங்கமும் முன்மண்டபத்தில் பிள்ளையாரும் இருந்தனர். கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி கொஞ்சம் சிதைந்திருந்தது.
நந்திக்கு அருகிலிருந்த காவல்தெய்வத்தின் சிலையின் கரங்களில் அம்பு போன்ற ஆயுதம் இருந்தது.
மலையில் இரண்டு சுனைகள் இருந்தன. வெயில்காலத்தில் அதில் நீரும் அல்லிப்பூக்களும் இருந்தது ஆச்சர்யமளித்தது. இரண்டு சுனைகளுக்கும் படிக்கட்டுகள் சிறிதாக அமைக்கப்பட்டு மிக அழகாகயிருந்தது. சுனைக்கருகில் கன்னிமார் சிலையிருந்தது. கோயிலுக்கு பின்புறம் உள்ள பாறையில் முப்பதிற்கு மேற்பட்ட வரியில் வெட்டப்பட்ட கல்வெட்டு உள்ளது.
சூரியனுக்கு பயந்து கோயிலுக்கு பின்புறம் விழுந்த நிழலில் அமர்ந்தோம். பசுமைநடை அமைப்பாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் மலை குறித்த வரலாற்றுத் தகவல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சமாவது:
எனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது. இப்பகுதியிலுள்ள மலைகளிலெல்லாம் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். இந்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மைக்கு சான்றாகும். மலையில் உள்ள இந்த சிவன் கோயில் மல்லிகார்சுனர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1280) 27ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.
இக்கல்வெட்டின் மூலம் இந்த ஊரின் பழைய பெயர் கடுங்கோ மங்கலம் என அறியலாம். சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்குப் பின் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. அவர்களை முறியடித்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆவான். அவனது பெயரால் அமைந்த ஊராக இருக்கலாம். இந்தஊர் செங்குடி நாட்டுப் பிரிவுகளுள் அடங்கியிருக்கிறது. இவ்வூர் நிலங்களையும் குளத்தையும் முத்துடையார் விக்கிரமச்சிங்கத்தேவன் என்பவர் இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
மலையடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. முன்னர் ஒருமுறை பெய்த மலையின் போது ஆலம்பட்டி நீர்நிலையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்ல இயலாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் இங்கேயே காட்சியளித்தாக ஐதீகம். மேலே உள்ள மலையிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் தெரியும்.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகளைக் காண இங்கு வந்தபோது இப்போது இருப்பதைப் போன்று படிக்கட்டுகள் இல்லை. மிகவும் சிரமப்பட்டு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவரைப் போன்ற அறிஞர்கள் நம்முடன் பசுமைநடையில் பயணிப்பது நமக்கு சிறப்பாகும். தொல்லியல் துறையிலிருந்து மதுரை மாவட்டத்தொல்லியல் கையேடு போன்ற புத்தகங்களில் இதுபோன்ற இடங்களைக் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவே தனி.
மேலும், அதிகாலையில் இதுபோன்ற இடங்களுக்கு சீக்கிரம் வரவேண்டியதன் அவசியத்தையும், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கற்திட்டைகளைக் காணச் செல்வதற்கான ஒருநாள் பயண அறிவிப்பையும் கூறினார்.
எல்லோரும் மலையை வெயிலோடு சுற்றிப்பார்த்தோம். மலையில் ஒரு தர்ஹாவும் இருந்தது. யாக்கோபு என்ற இஸ்லாமியப் பெரியவருக்கு எடுக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள். அதையும் பார்த்தோம். மெல்ல மலைமீதிருந்து கிறக்கத்தோடு இறங்கினோம். எல்லோருக்கும் எலுமிச்சைப் பழச்சாறு கொடுத்து தெம்பூட்டினர்.
மேலப்பரங்கிரி முருகன் கோயிலில் கல்யாண முகூர்த்தம் என்பதால் நல்ல கூட்டம். உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. கோயிலுக்குள் இருந்த வளாகத்துக்குள் எல்லோரும் கூடி உணவருந்தினோம். அடுத்தமுறை இதைச்சுற்றியுள்ள மற்ற மலைகளுக்கும் வரவேண்டுமென்ற நினைவுடன் கிளம்பினோம்.
படங்கள் உதவி – க்ரூஸ் அந்தோணி ஹூபர்ட்