Posts Tagged ‘பசுமை நடை’

பரந்தவெளி

நாம் இவ்வுலகில் வாழ்வது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் ‘காத்திருத்தல்’ போன்றது…!

–    கலீல் கிப்ரான்

பேருந்தில் பயணிக்கையில் வழியில் தெரியும் மலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதன்மீது ஏறிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குத் தோன்றும். அந்த ஆசையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது பசுமைநடைப்பயணங்களே! மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பெரும்பாலான மலைகளுக்கு பசுமைநடைப்பயணக்குழுவோடு சென்றிருக்கிறேன்.

கோயில்

பேரையூர் மொட்டைமலை மீதுள்ள பழமையான சிவன் கோயிலுக்கு பசுமைநடையாக இம்முறை 29.06.2014 அன்று சென்றோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டமொம்மன் சிலைக்கருகில் அதிகாலை கூடினோம். அங்கிருந்து பேருந்தில் பேரையூர் சென்றோம். வெயில் கூடவே வந்தது.

மலையேற்றம்

தொலைவில் சிறிதாகத் தெரிந்த மலை அருகில் சென்றதும் மிக உயரமாகத் தெரிந்தது. மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. பிடித்து நடப்பதற்கு வாகாக இரும்பு கைபிடியும் உள்ளது. மலையில் ஏறும்பாதை செங்குத்தாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தளரச் செய்தது.

மலைகள்

சிவன்மலையிருந்து பார்க்கும்போது தெரிந்த பரந்துவிரிந்த வெளியும், மலைக்கு பின்னால் தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலைத்தொடரும் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.

ஒற்றைக்கருவறையும் சிறிய முன்மண்டபமும் கொண்ட பழமையான கோயில். கருவறையில் சிவலிங்கமும் முன்மண்டபத்தில் பிள்ளையாரும் இருந்தனர். கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி கொஞ்சம் சிதைந்திருந்தது.

நந்திக்கு அருகிலிருந்த காவல்தெய்வத்தின் சிலையின் கரங்களில் அம்பு போன்ற ஆயுதம் இருந்தது.

காவல்தெய்வம்

சுனை

மலையில் இரண்டு சுனைகள் இருந்தன. வெயில்காலத்தில் அதில் நீரும் அல்லிப்பூக்களும் இருந்தது ஆச்சர்யமளித்தது. இரண்டு சுனைகளுக்கும் படிக்கட்டுகள் சிறிதாக அமைக்கப்பட்டு மிக அழகாகயிருந்தது. சுனைக்கருகில் கன்னிமார் சிலையிருந்தது. கோயிலுக்கு பின்புறம் உள்ள பாறையில் முப்பதிற்கு மேற்பட்ட வரியில் வெட்டப்பட்ட கல்வெட்டு உள்ளது.

கன்னிமார்

கல்வெட்டு

முத்துக்கிருஷ்ணன்சூரியனுக்கு பயந்து கோயிலுக்கு பின்புறம் விழுந்த நிழலில் அமர்ந்தோம். பசுமைநடை அமைப்பாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் மலை குறித்த வரலாற்றுத் தகவல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சமாவது:

எனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது. இப்பகுதியிலுள்ள மலைகளிலெல்லாம் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். இந்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மைக்கு சான்றாகும். மலையில் உள்ள இந்த சிவன் கோயில் மல்லிகார்சுனர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1280) 27ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.

இக்கல்வெட்டின் மூலம் இந்த ஊரின் பழைய பெயர் கடுங்கோ மங்கலம் என அறியலாம். சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்குப் பின் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. அவர்களை முறியடித்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆவான். அவனது பெயரால் அமைந்த ஊராக இருக்கலாம். இந்தஊர் செங்குடி நாட்டுப் பிரிவுகளுள் அடங்கியிருக்கிறது. இவ்வூர் நிலங்களையும் குளத்தையும் முத்துடையார் விக்கிரமச்சிங்கத்தேவன் என்பவர் இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

மலையடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. முன்னர் ஒருமுறை பெய்த மலையின் போது ஆலம்பட்டி நீர்நிலையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்ல இயலாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் இங்கேயே காட்சியளித்தாக ஐதீகம். மேலே உள்ள மலையிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் தெரியும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகளைக் காண இங்கு வந்தபோது இப்போது இருப்பதைப் போன்று படிக்கட்டுகள் இல்லை. மிகவும் சிரமப்பட்டு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவரைப் போன்ற அறிஞர்கள் நம்முடன் பசுமைநடையில் பயணிப்பது நமக்கு சிறப்பாகும். தொல்லியல் துறையிலிருந்து மதுரை மாவட்டத்தொல்லியல் கையேடு போன்ற புத்தகங்களில் இதுபோன்ற இடங்களைக் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவே தனி.

மேலும், அதிகாலையில் இதுபோன்ற இடங்களுக்கு சீக்கிரம் வரவேண்டியதன் அவசியத்தையும், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கற்திட்டைகளைக் காணச் செல்வதற்கான ஒருநாள் பயண அறிவிப்பையும் கூறினார்.

Dargah

எல்லோரும் மலையை வெயிலோடு சுற்றிப்பார்த்தோம். மலையில் ஒரு தர்ஹாவும் இருந்தது. யாக்கோபு என்ற இஸ்லாமியப் பெரியவருக்கு எடுக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள். அதையும் பார்த்தோம். மெல்ல மலைமீதிருந்து கிறக்கத்தோடு இறங்கினோம். எல்லோருக்கும் எலுமிச்சைப் பழச்சாறு கொடுத்து தெம்பூட்டினர்.

மலையடிவாரம்

மேலப்பரங்கிரி முருகன் கோயிலில் கல்யாண முகூர்த்தம் என்பதால் நல்ல கூட்டம். உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. கோயிலுக்குள் இருந்த வளாகத்துக்குள் எல்லோரும் கூடி உணவருந்தினோம். அடுத்தமுறை இதைச்சுற்றியுள்ள மற்ற மலைகளுக்கும் வரவேண்டுமென்ற நினைவுடன் கிளம்பினோம்.

படங்கள் உதவி – க்ரூஸ் அந்தோணி ஹூபர்ட்

தென்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத்தலங்கள் அருகருகே கொண்ட சமயநல்லிணக்கத் தலம். சங்க இலக்கியங்களாம் அகநானூறு, பரிபாடல் தொடங்கி திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்களில் பாடப்பட்டு குறிஞ்சிமலர், காவல்கோட்டம் போன்ற நாவல்களில் பேசப்பட்ட திருப்பரங்குன்றம் மதுரையின் தொன்மையான இடம்.

திருப்பரங்குன்றத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் போற்றுவோம் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகையை சமீபத்தில் சுத்தம் செய்ததாக நாளிதழில் வாசித்தேன். அதன்பொருட்டு முன்பு எழுதிவைத்த திருப்பரங்குன்றத்தில் சமணநடை என்ற பதிவை சுந்தர்ராஜன் அவர்கள் எடுத்த படங்களுடன் இரண்டாண்டுகளுக்கு பிறகு பதிவிடுகிறேன். சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அக்டோபர் 30, 2011 அன்று பசுமைநடையாக திருப்பரங்குன்றம் சமணப்படுகை மற்றும் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றதைக் குறித்த பதிவு:

பயணத்திற்கு முதல்நாள் மாலையிலிருந்து மழை பெய்துகொண்டேயிருந்தது. அதனால் இம்முறை பசுமைநடை ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் மழை பெய்து கொண்டிருந்தது. மழை விட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். நினைத்தது போல மழை ஆறுமணிப்போல வெறித்துவிட்டது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் எங்கு வருவது என அலைபேசியில் கேட்ட போது திருப்பரங்குன்றம் சுகாதார நிலையம் அருகில் வரச்சொன்னார். திருப்பரங்குன்றத்திலிருக்கும் சகோதரன் வந்ததும் மலை நோக்கி நடந்தோம்.

அமன்பாழி

பசுமைநடை குழுவினரை திருப்பரங்குன்ற ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள அமண்பாழிகிட்ட சந்தித்தோம். எல்லோரும் கூடியதும் மலை ஏறத்தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாகயிருந்தது. மலையேற பாதி தூரத்திற்கு கட்டிய படிகள் உள்ளன. பிறகு பாறையை படிபோல் செதுக்கியிருக்கிறார்கள். மலை மேல் ஏறி குகைகளைப் பார்த்தோம்.

பசுமைநடை_1

சாந்தலிங்கம் அய்யாவிடம் இந்த படுகையில் கல்வெட்டுகள் எங்கு உள்ளன என்று கேட்ட போது எங்களுக்கருகில் இருந்த கல்வெட்டை காண்பித்தார். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.

சமணப்படுகை

முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது.

 ‘ அந்துவன் கொடு பிதவன் ‘

 இதில் அந்துவன் என்பவன் இக்கல்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன் என்ற பெயர் சங்க காலத்தில் ஒரிரு புலவர்களுக்கு வழங்கியுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது கல்வெட்டு இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.

 ‘ மாரயது கய(ம்) ‘

மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம்.

 மூன்றாவது கல்வெட்டு வரிசையாக உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டுள்ளது.

 ‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘

எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் எனப் பொருள் கொள்ளலாம். எருகாட்டூர் என்பது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலை பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார். எக்காட்டூர், எருக்காட்டூர் இரண்டும் ஒன்றே எனக்கருதலாம். இங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது.

இம்முறை மழைபெய்தும் நிறையப்பேர் வந்திருந்தனர். மலையிலிருந்து கீழே பார்க்கும் போது ரயில் வந்தது. அங்கிருந்து அதைக்காணும் போது மிக அழகாக தெரிந்தது. இந்த குகையிலிருந்து காணும் பொழுது தொலைவிலுள்ள சமண மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவ மலை தெரிந்தது. கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தால் தொலைவில் யானைமலை, மற்றும் அதன் பின்னால் உள்ள அழகர்மலை, மாங்குளம் மலைகள் எல்லாம் தெரிந்தன.

குடைவரை

மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரையைக் காணச் சென்றோம். அனைவரும் கூடியதும் அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை.

கல்வெட்டுக்கோயிலில் சரியான கூட்டம். ஷஷ்டி விரத காலம் என்பதால் ஏராளமான முருகபக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். நிறையப்பேர் இந்த சமயத்தில் ஷஷ்டி முடியும் வரை இங்கேயே தங்கி இருப்பர். பஜனைக்குழு முருகனது பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். கல்வெட்டுக்கோயிலுக்கருகில் உள்ள ஓரிடத்தில் கூடி அனைவரும் உணவருந்தினோம். பலமுறை திருப்பரங்குன்றம் வந்திருந்தும் அதன் வரலாற்றுத் தொன்மையை இந்நடையில் அறிய முடிந்தது பெருமகிழ்வைத் தந்தது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களின் இந்நடை குறித்த  பதிவு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் போற்றுவோம் நிகழ்வில் ஜனவரி 26 அன்று மாலை சமணப்படுகையில் ஜோதி ஏற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகளுடன் ரதவீதிகளில் உலாப் போகிறார்கள். அனைவரும் வருக. திருப்பரங்குன்றம் குறித்த முந்தைய பதிவுகள்.

திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

குன்றிலிருந்து குன்றம் நோக்கி

மூவர் கோயில்

விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைதிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம்.

இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளோடு தொடர்ந்த மதுரைப் பயணத்தின் போது ‘கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே’ தங்கியதாகச் சிலம்பிலே குறிப்பு உண்டு. கொடும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று பெருவழிகள் சிவபெருமானின் மூவிலைச் சூலம் போலப் பிரிந்து செல்வதாகவும் அக்குறிப்புக் கூறும். எனவே, நீண்ட காலமாகச் சோழநாட்டையும் பாண்டியநாட்டையும் இணைத்த பெருவழியில் அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் தலைநகராக அமைந்தது. அவர்கள் இங்கு தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து எல்லை காவலர்களாகவும் விளங்கினர். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் பெரும்பங்காற்றினர்.

சோழ அரச குடும்பத்தினரோடு மண உறவும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பூதிவிக்கிரம கேசரி என்னும் பெரும்வீரன். இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன். அவனுக்கு இருமனைவியர். கற்றளிபிராட்டி, வரகுண நங்கை என்பது அவர்களின் பெயர்கள். பூதிவிக்கிரமகேசரியும், அவன் மனைவியர் இருவரும் சேர்ந்து எடுத்த கோயிலே மூவர் கோயில் என்பது. மூன்றும் சிவன் கோயில்களே. மூன்றும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளிவிட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை. மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்றும் கட்டப்பட்டது. ஆனால், இன்று முதல் கோயிலும், திருச்சுற்றும் முற்றிலும் அழிந்து இரண்டு கோயில்கள் மட்டுமே அதுவும் விமானம்(கருவறை உள்பட) மட்டுமே எஞ்சியுள்ளன. பிறமண்டபங்கள் எல்லாம் அழிந்துபட்டன. இவை சோழர்கோவில் கலைவரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாய்த திகழ்கின்றன.

சோழர்களின் கோயில்கட்டடக் கலைப்பாணியை ஆராய்ந்தவர்கள் அதனை முற்சோழர்பாணி, இடைச்சோழர்பாணி, பிற்சோழர்பாணி என மூவகைப் படுத்துவர். இதில் முற்சோழர்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்வது மூவர்கோயில். அதிட்டான வரியில் விரிந்த தாமரை இதழ்களும், உருள் குமுதமும், அதற்கும் மேலாக வரிசையாக அமைந்த யாளி வரியும் அமைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கோயில்களில் தேவகோட்டச் சிற்பங்களின் எழிலும் கலைநேர்த்தியும் கண்டோரைக் களிப்படையச் செய்வன. ஸ்தூபி வரை கல்லிலேயே கட்டப்பட்டுள்ளன. விமானத்தின் உள்கட்டமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடியாய் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. இங்குள்ள தமிழ், கிரந்தக் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற பெயரில் தமிழகமெங்கும் வணிகம் செய்த குழுவினர் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. இதன் முக்கியத்துவம் கருதி இது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

–    சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.

பசுமைநடை குழுவும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து ஒருநாள் பயணமாக வரலாற்றுச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இந்த ஆய்வு மையத்தின் செயலராகயிருக்கிறார். மதுரையிலிருந்து கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை, திருமெய்யம் செல்வதாகத் திட்டம். 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை காளவாசல் அருகிலுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய அலுவலக வாசலிலிருந்து ஒரு பேருந்து மற்றும் ஒரு சிற்றுந்திலும் கிளம்பினோம். கிட்டத்தட்ட எண்பதுபேர் குழுவாகச் சென்றோம். சென்னை, கோவையிலிருந்தெல்லாம் நண்பர்கள் வந்திருந்தார்கள். செல்லும் இடங்களைக் குறித்த வரலாற்றுத்தகவல்கள் அடங்கிய குறிப்பேடு எல்லோருக்கும் பேருந்திலேயே வழங்கப்பட்டது. மூவர்கோயில் குறித்து சாந்தலிங்கம் அய்யா எழுதிய அக்குறிப்பை முன்புள்ள பத்திகளில் வாசித்திருப்பீர்கள்.

கொடும்பாளூர் கோயில்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ கட்டுரைத் தொகுப்பில் மூவர்கோயில் குறித்து வாசித்திருக்கிறேன். அன்றிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுச்சுவடுகளைக் காண வேண்டுமென்று ஆசை. அந்த ஆசை இப்பயணம் மூலம் நிறைவேறியது. மதுரையிலிருந்து முதலில் கொடும்பாளூர் சென்றோம். என்னோடு இம்முறை சகோதரர்களும் வந்திருந்தனர்.

விமானம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வேளிர்மன்னர்களின் தலைநகரமாகயிருந்த கொடும்பாளூர் இன்று சிறு கிராமமாக ஒடுங்கி ஆழ்ந்த மோனத்தில் உள்ளது. மூவர்கோயிலைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் விழிகள் அகன்றன. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரையிலுள்ள இரட்டைக் கற்கோயிலின் ஞாபகம் வந்தது. சுற்றி சிதிலமடைந்துள்ள கோட்டை, புல்வெளித் தோட்டம் என மாமல்லையை நினைவுபடுத்தியது வேளிர்களின் கலைக்கோயில். தொல்லியல் துறையின் பராமரிப்பில் இன்று இக்கோயில் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

அ.மு.கியும் அய்யாவும்

கோயிலைச் சென்று காண்பதற்குமுன் ஒரு மரத்தடியில் எல்லோரும் கூடினோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரையும் வரவேற்று பேசினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் துறையில் அனுபவமுள்ள சாந்தலிங்கம் அய்யா நம்முடன் இப்பயணத்திற்கு வருவது நமக்கு இன்னும் பெருமை தருவதாகக் கூறினார். சாந்தலிங்கம் அய்யா மூவர்கோயில் குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். குறிப்பேட்டிலுள்ள தகவல்களோடு மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சைவத்தில் உள்ள காளாமுகம் என்னும் பிரிவைச் சேர்ந்த துறவிகளுக்கான மடம் இந்த ஊரில் இருந்துள்ளது. மல்லிகார்ஜூனர் என்ற துறவி இங்கு தங்கியிருந்ததாகவும் மடத்தை பராமரிக்க மதுரையிலிருந்தெல்லாம் நன்கொடை வழங்கப்பட்டதாகவும் சொல்வார்கள். காளாமுகர்கள் முகத்தில் கரிய மையை பூசி மேனியெங்கும் திருநீறு அணிந்து மண்டையோட்டு மாலை சூடியிருப்பார்கள். இவர்களுக்கு மது, மாமிசம் எல்லாம் விலக்கில்லை. வேளிர்கள் ஆட்சிக்குப் பின் இப்பகுதியை பாண்டியர்கள், அதன்பின் நாயக்க மன்னர்கள் ஆண்டனர். மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது இந்த ஊர் மங்கம்மா சமுத்திரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரை ஒரு பாளையக்காரருக்கு மங்கம்மா தானமாக வழங்கியதாக குறிப்பு உள்ளது. இங்கு ஐந்தளி என்ற கோயில் இருந்துள்ளது அது முற்றிலும் அழிந்து போய்விட்டது. இந்த ஊருக்கு வரும் வழியில் முசுகுந்தேஸ்வரம் என்ற கோயில் உள்ளது. (முதுகுன்றம் என்பது சிதைந்து வடமொழியாக்கப்பட்டு இருக்கிறது) இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழநாட்டுக்கும் பாண்டியநாட்டுக்கும் நடுவில் இருந்ததால் வணிக மையமாக கொடும்பாளூர் இருந்திருக்கிறது. மூவர்கோயிலின் உள்விமானம் கூடு போல உள்ளது. இந்த முறையைப் பின்பற்றி தஞ்சைப் பெரிய கோயில் கட்டியிருக்கிறார்கள்.

வதம் புரியும் சிவன்

சிவன் சன்னிதி

விமானத்தின் உள்ளமைப்பு

சாந்தலிங்கம் அய்யாசாந்தலிங்கம் அய்யாவுடன் சேர்ந்து மூவர்கோயிலை நோக்கி நடந்தோம். கோயிலின் அமைப்பு, அங்குள்ள சிலைகள், புராணத்தகவல்கள், கல்வெட்டுகள், வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு சிலையின் கலையழகையும், அதன் வரலாறு, புராணக்கதைகளுடன் சேர்த்துக் கேட்கும்போது மனதில் பதிகிறது.   இங்கிருந்த கோயில் சிற்பங்கள் கொஞ்சம் சென்னை அருங்காட்சியகத்திலும், புதுக்கோட்டை அருங்காட்சியகத்திலும் உள்ளது. இங்கு முன்பு நூறு சிற்பங்களுக்கு மேல் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இப்பொழுது அது திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாம்.

பாடப்புத்தகங்களில் வரலாற்றை மனனம் செய்து படித்து பரிட்சை எழுதி மறைந்து போனதுபோலில்லாமல் நேரடியாய் பயணித்து காட்சியாய் காணும்போது ஏற்படும் பரவசத்தை சொல்லில் அடக்க முடியாது. கல்கியின் பொன்னியின் செல்வனின் நாயகியான  வானதி கொடும்பாளூரைச் சேர்ந்தவள் என்பது வாசித்த அனைவருக்கும் நினைவிலிருக்கும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும், பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

சிற்ப வேலைப்பாடு

 யாளி

 
பசுமை நடை முகநூல்முகநூலில் பசுமைநடையில் இணைய http://www.facebook.com/groups/251761754837926