எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் ஒன்றிணைந்து பசுமைநடை என்ற பெயரில் மாதம் ஒரு முறை, மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர்குகைகள், படுகைகள், கல்வெட்டுகள், மற்றும் கலைச்செல்வங்களைப் பாதுகாக்கவும் மதுரையின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் பயண இயக்கம் ஒன்றை நடத்திவருகிறார்கள். மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் சமண குகைத்தளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வரிச்சியூர், கருங்காலக்குடி, கொங்கர்புளியங்குளம், மேட்டுப்பட்டி, மாங்குளம், நாகமலை, யானைமலை, பெருமாள்மலை, அரிட்டாப்பட்டி, விக்கிரமங்கலம், கீழவளவு, குரண்டி, அணைப்பட்டி, சித்தர்மலை, கீழகுயில்குடி, திருப்பரங்குன்றம், திருவாதவூர், உத்தமபாளையம் போன்ற இடங்களில் சமண சின்னங்கள் காணப்படுகின்றன.
– எஸ்.ராமகிருஷ்ணன், சமணநடை
எஸ்.ரா’வின் தேசாந்திரி நூல் குறித்த பதிவு எழுதிய போது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசையிருந்ததாக எழுதியிருந்தேன். அந்த ஆசை பசுமைநடை மூலம் நிறைவேறியது. மேலும், பல ஆளுமைகளுடன் பயணிக்கும் வாய்ப்பும் பசுமைநடை மூலம் கிட்டியது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. எழுத்தாளர். அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.
பசுமைநடை பயணமாக வரிச்சூர்-குன்னத்தூர் என்று கேள்விப்பட்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வருத்தமும் தோன்றியது. மகிழ்ச்சிக்கு காரணம் மாங்குளம் மீனாட்சிபுரத்தில் அ.முத்துக்கிருஷ்ணன் சொல்லும் போதே அடுத்த முறை பசுமைநடைக்கு நம்முடன் எழுத்தாளர்களும் வருகிறார்கள் என்றதுதான். வருத்தம் எதற்கு என்று கேட்கிறீர்களா வரிச்சூரில்தான் நான் தொழில்நுட்பவியல் படித்தேன். அந்தப் பகுதியில் படித்தபோது அங்கு இதுபோன்ற மலையிருக்கிறது என்றே தெரியாது. இரண்டு வருடம் அங்கு திரிந்தும் இது குறித்து அறியாமல் போய்விட்டோமே என்ற வருத்தம்தான்.
04.09.2011 அன்று அதிகாலை நண்பரிடம் வாங்கிய இருசக்கரவாகனத்தில் கிளம்பிசென்றேன். மதுரை ஆவின் பால்பண்ணை வாசலில் எல்லோரும் கூடுவதாக குறுந்தகவல் வந்திருந்தது. அங்கு நான் செல்லும் போதே நிறைய பேர் வந்துவிட்டார்கள். தேநீர்அங்காடி வாசலில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்ததும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் போய் வணக்கம் சொல்லி இந்த பசுமைநடைக்கு அவர் வந்தது எங்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக கூறினேன். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரிச்சூர் நோக்கி சென்றோம். படிக்கும் போது இந்த வழிநெடுக பலமுறை பேருந்தில் சென்றிருக்கிறேன். இப்பொழுது நிறைய மாறிவிட்டது. படித்த கல்லூரியை பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை. வரிச்சூர் போய் களிமங்கலம் பிரிவு வழித்திரும்பிச்சென்றோம். கொஞ்ச தூரத்தில் குன்று வந்தது.
எல்லோரும் வண்டியை நிறுத்திவிட்டு உதயகிரிஸ்வரர் குடைவரைக் கோயிலை நோக்கிச் சென்றோம். எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கால குடைவரைக்கோயில். சூரிய உதயம் இக்குடைவரையில் உள்ள சிவலிங்கத்தின் மீது காலையில் படும்படி அமைத்திருக்கிறார்கள். மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரை. மிகச்சிறிய கோயில். வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் மிகஎளிமையாய் நின்று கொண்டிருக்கிறார்கள். இடதுபுறம் குடைவரையோரம் பிள்ளையாரை செதுக்கியுள்ளார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த தகவலைக்கூறினார். இக்குடைவரை எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம் எல்லாம் இதற்கு முந்தியவை. பல்லவர்கள் காலத்தில்தான் இதுபோன்ற குடைவரைகள் அமைக்கப்பட்டன. அதே காலத்தில் பாண்டியர்களும் குடைவரையை அமைத்திருக்கிறார்கள். இதுபோல பல கோயில்கள் மதுரையை சுற்றியிருக்கின்றன். கணபதி வழிபாடு பல்லவர்கள் காலத்தில்தான் தமிழகத்திற்கு வந்தது. வணிகர்கள் கணபதியை வைத்து வழிபட்டுவந்தனர். மேலும், அந்தக்காலத்தில் நடுகற்கள் இறந்தவர்களுக்கு எடுத்ததால் கல்லில் கோயில்கள் இறைவனுக்கு எடுக்கப்படவில்லை. பின்னர்தான் இந்த வழக்கம் பரவத்தொடங்கியது. இந்த குடைவரையை விட இம்மலைக்கு பின்னால் உள்ள குடைவரையை சற்று நன்றாக செதுக்கியிருக்கிறார்கள். மேலும், இக்குன்றுக்கு அருகில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச்சார்ந்த சமணர்படுகைகள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வாறு சாந்தலிங்கம் அய்யா கூறினார்.
பின் அங்கிருந்து அருகில் சமணர்படுகை இருந்த இடத்தை நோக்கி நடந்து சென்றோம். அந்த இடத்தில் வேறுகடவுளை வைத்து தற்போது பொதுமக்கள் வழிபடும் இடமாக உள்ளது. இந்த இடத்தில் படுகைக்கு மேலே முகப்பில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன். இதில் ஒரு கல்வெட்டு அந்தக்காலத்தில் நூறுகலம் நெல் கொடையாக வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இந்த மூன்று கல்வெட்டுகளையும் சாந்தலிங்கம் அய்யா வாசித்துக்காட்டினார்.
பிறகு பேராசிரியர் சுந்தர்காளி இந்தநடை குறித்து உரையாடினார். இந்த நடைக்கு பலர் வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எங்களுடன் இதுபோன்ற இடங்களுக்கு வருவதைக் குறித்தும், அதைப் பதிவு செய்ய வேண்டிய கடமை குறித்தும் விரிவாக பேசினார். சமணநடை என்ற அவரது பதிவை வாசியுங்கள். அங்கிருந்து அஸ்தகீரிஸ்வரர் குடைவரை நோக்கி நடந்தோம். மிக அழகாக குடைவரை செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம்.
அங்கிருந்து அருகிலுள்ள பழமையான கோயிலைப் பார்க்க சென்றோம். மிக அருமையான இடம். பசுமைநடை குறித்த அனுபவங்களை சில நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். சு.வேணுகோபால் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அவருடைய வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு வாசித்ததை சொன்னேன். அங்கிருந்து மதுரை சரவணனுடன் பேசிக்கொண்டே கீழ்குயில்குடி ஆலமரத்தடிக்கு வலசை கூட்டத்திற்கு சென்றேன். மாலை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது பெற்றதற்காக பாராட்டுவிழா நடந்தது. அருமையான நிகழ்வு. இந்த நாள் இனிய நாள்.
கவிஞர் தேவதேவன், ஆவணப்பட இயக்குனர் இளங்கோவன், அவரது துணைவியார் கீதா இளங்கோவன். தமிழினி வசந்தகுமார், எழுத்தாளர் வேணுகோபால். எழுத்தாளர் அர்ஷியா, குறும்பட இயக்குனர் அருண்பிரசாத், பேராசியர் சுந்தர்காளி, ஓவியர் பாபு என நிறைய ஆளுமைகள் இப்பயணத்தில் கலந்து கொண்டார்கள்,
படங்கள் பசுமைநடை முகநூல் பக்கத்திலிருந்தும், அ.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய பதிவிலிருந்தும் எடுத்தேன். நன்றி. இது மீள்பதிவல்ல, முதல்பதிவுதான். இதுபோல எழுத்தாளுமைகள் பலரையும் சந்திக்க பசுமைநடை 25 விருட்சத்திருவிழாவிற்கு கீழக்குயில்குடி சமணமலையடிவார ஆலமரத்தடிக்கு வாருங்கள். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் மற்றும் பல ஆளுமைகள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
அனைவரையும் அன்புடன் விருட்சத்திருவிழாவிற்கு அழைக்கிறோம்.