Posts Tagged ‘சமணம்’

தென்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத்தலங்கள் அருகருகே கொண்ட சமயநல்லிணக்கத் தலம். சங்க இலக்கியங்களாம் அகநானூறு, பரிபாடல் தொடங்கி திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்களில் பாடப்பட்டு குறிஞ்சிமலர், காவல்கோட்டம் போன்ற நாவல்களில் பேசப்பட்ட திருப்பரங்குன்றம் மதுரையின் தொன்மையான இடம்.

திருப்பரங்குன்றத்தின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக ஜனவரி 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் திருப்பரங்குன்றம் போற்றுவோம் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்திலுள்ள சமணப்படுகையை சமீபத்தில் சுத்தம் செய்ததாக நாளிதழில் வாசித்தேன். அதன்பொருட்டு முன்பு எழுதிவைத்த திருப்பரங்குன்றத்தில் சமணநடை என்ற பதிவை சுந்தர்ராஜன் அவர்கள் எடுத்த படங்களுடன் இரண்டாண்டுகளுக்கு பிறகு பதிவிடுகிறேன். சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றிகள் பல.

அக்டோபர் 30, 2011 அன்று பசுமைநடையாக திருப்பரங்குன்றம் சமணப்படுகை மற்றும் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றதைக் குறித்த பதிவு:

பயணத்திற்கு முதல்நாள் மாலையிலிருந்து மழை பெய்துகொண்டேயிருந்தது. அதனால் இம்முறை பசுமைநடை ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருந்தது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் மழை பெய்து கொண்டிருந்தது. மழை விட்டுவிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். நினைத்தது போல மழை ஆறுமணிப்போல வெறித்துவிட்டது. எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் எங்கு வருவது என அலைபேசியில் கேட்ட போது திருப்பரங்குன்றம் சுகாதார நிலையம் அருகில் வரச்சொன்னார். திருப்பரங்குன்றத்திலிருக்கும் சகோதரன் வந்ததும் மலை நோக்கி நடந்தோம்.

அமன்பாழி

பசுமைநடை குழுவினரை திருப்பரங்குன்ற ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள அமண்பாழிகிட்ட சந்தித்தோம். எல்லோரும் கூடியதும் மலை ஏறத்தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாகயிருந்தது. மலையேற பாதி தூரத்திற்கு கட்டிய படிகள் உள்ளன. பிறகு பாறையை படிபோல் செதுக்கியிருக்கிறார்கள். மலை மேல் ஏறி குகைகளைப் பார்த்தோம்.

பசுமைநடை_1

சாந்தலிங்கம் அய்யாவிடம் இந்த படுகையில் கல்வெட்டுகள் எங்கு உள்ளன என்று கேட்ட போது எங்களுக்கருகில் இருந்த கல்வெட்டை காண்பித்தார். இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அங்கிருந்த கல்வெட்டுக்கள் குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.

சமணப்படுகை

முதல் கல்வெட்டு கற்படுக்கையின் தலைப்பகுதியில் தலைகீழாக ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ளது.

 ‘ அந்துவன் கொடு பிதவன் ‘

 இதில் அந்துவன் என்பவன் இக்கல்படுக்கையை செய்து கொடுத்தவன் என்பது பொருள். அந்துவன் என்ற பெயர் சங்க காலத்தில் ஒரிரு புலவர்களுக்கு வழங்கியுள்ளதைக் காணலாம்.

இரண்டாவது கல்வெட்டு இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டில் இரண்டு துண்டுகளாக உள்ளது.

 ‘ மாரயது கய(ம்) ‘

மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம். மாராயம் என்னும் பட்டும் பெற்ற ஒருவர் ஒரு நீர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியைக் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. கயம் என்றால் குளம், நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம்.

 மூன்றாவது கல்வெட்டு வரிசையாக உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதிக்கு பின்புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டுள்ளது.

 ‘ எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன நெடுசாதன் ‘

எருகாடூர் இழகுடும்பிகன் போலாலயன் சார்பாக ஆய்சயன் நெடுஞ்சாத்தன் இந்தக் கற்படுக்கையை செய்து கொடுத்தான் எனப் பொருள் கொள்ளலாம். எருகாட்டூர் என்பது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலை தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. திருப்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு ஊராக இருக்கலாம். சங்க இலக்கியமான புறநானூறு 397 ஆம் பாடலை பாடியவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் புலவர் ஆவார். எக்காட்டூர், எருக்காட்டூர் இரண்டும் ஒன்றே எனக்கருதலாம். இங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்குகைத்தளத்தினருகில் சிறிய சுனை ஒன்று காணப்படுகிறது.

இம்முறை மழைபெய்தும் நிறையப்பேர் வந்திருந்தனர். மலையிலிருந்து கீழே பார்க்கும் போது ரயில் வந்தது. அங்கிருந்து அதைக்காணும் போது மிக அழகாக தெரிந்தது. இந்த குகையிலிருந்து காணும் பொழுது தொலைவிலுள்ள சமண மலை, கொங்கர் புளியங்குளம் பஞ்சபாண்டவ மலை தெரிந்தது. கொஞ்சம் இறங்கி வந்து பார்த்தால் தொலைவில் யானைமலை, மற்றும் அதன் பின்னால் உள்ள அழகர்மலை, மாங்குளம் மலைகள் எல்லாம் தெரிந்தன.

குடைவரை

மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள குடைவரையைக் காணச் சென்றோம். அனைவரும் கூடியதும் அந்த இடம் குறித்த வரலாற்றுத் தகவல்களை சாந்தலிங்கம் அய்யா கூறினார். நான்கு தூண்களுடன் கூடிய முன்மண்டபத்துடன் இக்குடைவரை அமைந்துள்ளது. இது எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் குடைவரை. கி.பி.1223ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் பாரமரிப்புக்காக புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை தானமளித்த செய்தி இங்குள்ள கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கருவறையில் அர்த்தநாரியின் சிற்பம் உள்ளது. முன்பிருந்த சமணத்தீர்த்தங்கரர் சிற்பத்தை மாற்றி இதைச் செய்திருக்கிறார்கள். சிற்பத்தின் தலைக்கு மேலாக காணப்படும் சுருள் சுருளான கிளைகள் அசோக மரத்தைக் குறிக்கும். இக்கோயிலை அமைக்க பிரசன்னதேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், 13ஆம் நூற்றாண்டில் குடைவரைக்கோயில் எடுக்கும் வழக்கம் இல்லை.

கல்வெட்டுக்கோயிலில் சரியான கூட்டம். ஷஷ்டி விரத காலம் என்பதால் ஏராளமான முருகபக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். நிறையப்பேர் இந்த சமயத்தில் ஷஷ்டி முடியும் வரை இங்கேயே தங்கி இருப்பர். பஜனைக்குழு முருகனது பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். கல்வெட்டுக்கோயிலுக்கருகில் உள்ள ஓரிடத்தில் கூடி அனைவரும் உணவருந்தினோம். பலமுறை திருப்பரங்குன்றம் வந்திருந்தும் அதன் வரலாற்றுத் தொன்மையை இந்நடையில் அறிய முடிந்தது பெருமகிழ்வைத் தந்தது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்களின் இந்நடை குறித்த  பதிவு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் போற்றுவோம் நிகழ்வில் ஜனவரி 26 அன்று மாலை சமணப்படுகையில் ஜோதி ஏற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலைநிகழ்ச்சிகளுடன் ரதவீதிகளில் உலாப் போகிறார்கள். அனைவரும் வருக. திருப்பரங்குன்றம் குறித்த முந்தைய பதிவுகள்.

திருப்பரங்குன்றத்தில் பசுமைநடை

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

குன்றிலிருந்து குன்றம் நோக்கி

முத்துக்கிருஷ்ணன்

குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள். கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.             

– பூமணி (அஞ்ஞாடி)

மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு 23.06.2013 ஞாயிறன்று சென்ற அனுபவப் பதிவு.

மந்தை

அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.

காரைவீடு

கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.

அன்பின் பாதை

வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.

ஊருணி

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.

சமணமுனி

சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது. ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.

தமிழிக்கல்வெட்டு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

அச்சணந்தி செய்வித்த திருமேனி

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாததால் இது சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். நாகர்கோயில் சிதறால் மலையிலிருந்து வேலூர் வள்ளிமலை வரையிலான பல மலைகளில் அச்சணந்தி செய்த சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் காணலாம். கழுகுமலையில் இவர் செதுக்கிய சிற்பமெதுவுமில்லை.

மலையின் மீதுள்ள படுக்கையொன்றில் நாலு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் பள்ளித்தரையன் என்ற வரி காணப்படுகிறது. அரையன் என்பவர் பாண்டியர்களின் கீழிருந்த சிற்றசர்களில் ஒருவராயிருக்கலாம்.

வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அச்சமயம் மக்கள் வழக்கத்திலிருந்த தமிழ் மிகவும் எளிமையாய் இருந்ததால் வட்டெழுத்து மறைந்து போனது. வட்டெழுத்து மேற்கே நாகர்கோயில், கேரளா பகுதிகளில்  பதினாறாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இன்றும் சுசீந்தரம் கோயிலிலும், கேரளப்பகுதியிலுள்ள பாறைகளிலும் காணப்படுகிறது. வட்டெழுத்து கேரளத்தில் கிரந்தத்தோடு இணைந்து மலையாளமாகியது.

பாண்டியர்களுக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி காலத்தில் லிங்கம நாயக்கர் நத்தம் பகுதியை ஆண்டார். மகாபாரதக் கண்ணனின் நினைவாக இப்பகுதி அப்போது துவராபதிவளநாடு என்றழைக்கப்பட்டது. நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிராக உள்ள மண்கோட்டை, சத்திரம் எல்லாம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் மக்கள் குடிநீர் வசதிக்கு கிணறு, பொது செக்கு ஆகியவைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதன்பின் இராவுத்தர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட போது கொடைகளை செய்துள்ளார்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள திருச்சுனை என்னும் ஊரில் பிற்கால பாண்டியர்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. சூழும் அரசர் கண்டம் என்ற வரலாற்று பெயர் எப்படி திருச்சுனை என்றானது எனத் தெரியவில்லை.

பசுமைநடை

கருங்காலக்குடி குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற படிகள் செதுக்கியுள்ளனர். குகை போன்றமைந்த பாறையின் அடியில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பாறைஓவியம்

பாறை ஓவியங்கள் குறித்து ஓவியர் பாபு பேசினார். இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள altamira, chauvet குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஓவியங்கள் குறித்தும் பசுமைநடைப் பயணம் குறித்தும் பேசினார். இதுபோன்ற மலைகள் நம் வீட்டு சமையலறை மேடையாகவோ, தளமாகவோ மாறாமலிருக்க நாம் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் தமிழை செம்மொழியாக நிரூபிக்க உதவியதுபோல இதுபோன்ற பாறை ஓவியங்கள் நம் நீண்ட வரலாற்றை அறிய உதவுகிறது. ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள தனிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யலாம். அடுத்த நடை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிட்டாபட்டி என்றார். சுற்றிலும் மலைகள், மழைமேகம் சூழ்ந்த வானம், சிலுசிலுவென காத்து அடிக்க அங்கிருந்து வர மனசேயில்லை. மெல்ல இறங்கினோம்.

மலைகள்

எல்லோரும் ஊருணிக்கருகிலிருந்த மலைக்குன்றைச் சுற்றி உணவருந்தினோம். தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் அய்யாவும், இராஜேந்திரன் அவர்களும் எழுதிய கல்வெட்டுக்கலை என்னும் நூல் வாங்கினேன். கருங்காலக்குடி மந்தைக்கருகிலுள்ள பழைய கோயிலொன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சப்பேர் தேனீர் கடையிலும், மந்தையில் விற்ற மாம்பழங்களையும் வாங்கி அந்த ஊரோடு ஐக்கியமாயினர். வருகையில் பேருந்தில் நண்பர்களோடு கதைத்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு பசுமைநடையும் நிறைய புதிய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. கருங்காலக்குடி பசுமைநடை குறித்து நண்பர்கள் இளஞ்செழியன்(கதிர்), வேல்முருகன்(நெடுஞ்சாலை) பதிவுகளையும் வாசியுங்கள்.

படங்களை எடுத்துத் தந்த சகோதரன் செல்லப்பாவிற்கு நன்றிகள் பல.

பசுமைநடையில் முகநூல் பக்கத்தில் இணைய http://www.facebook.com/groups/251761754837926
மின்னஞ்சல் : greenwalkmdu@gmail.com

அற்புத மரங்களின் அணைப்பில்

நான் ஒரு காற்றாடி

வேப்ப மரக்கிளைகளின் இடையே

நான் ஒரு சூரியரேகை.

பப்பாளிச் செடிகளின் நடுவே

நான் ஒரு இனிமை

சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்  

நான் ஒரு நட்சத்திரம்.

–    ஆத்மாநாம்

பசுமைநடை குழுவும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வுமையமும் இணைந்து புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருநாள் வரலாற்றுப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். முதலில் கொடும்பாளூர் மூவர்கோயிலைப் பார்த்துவிட்டு பிறகு குடுமியான்மலை வந்தோம்.

சாந்தலிங்கம்

குகைத்தளத்தில் குழு

குடுமியான்மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி நடந்தோம். கொஞ்சம் சறுகலாக இருந்தாலும் ஏறுவதற்கு சிரமமில்லாமல் இருந்தது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா குகைத்தளத்தில் வெட்டப்பட்டிருந்த தமிழ்பிராமிக்கல்வெட்டை சுட்டிக்காட்டினார். பின் அங்கிருந்த படுகைகளைப் பார்த்தோம்.

படுகை

தமிழ் பிராமி கல்வெட்டு

எல்லோரும் அக்குகைத்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் சாந்தலிங்கம் அய்யா அவ்விடம் குறித்த தகவல்களை கூறத்தொடங்கினார்.

இந்த ஊரின் பெயர் சங்க காலப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் பெயரால் அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. (நிலவிவரும் இன்னொரு கருத்து பற்றி அடுத்த பதிவில் காண்போம்) சமணர்கள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளுக்கு அருகில் உள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டில் ‘நாழள் கொற்றந்தய் பளிய்’ என்றுள்ளது. இக்கல்வெட்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இம்மலைமீது குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன்கோயில் ஒன்று உள்ளது. இது எழுநூறு ஆண்டுகள் பழமையானது.

மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள். மலையைச்சுற்றி முன்பு முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகயிருக்கலாம்

மலையிலிருந்து மெல்ல இறங்கினோம். அங்கிருந்து குடுமிநாதர்கோயில் சென்றோம். (குடுமிநாதர்கோயிலைக் குறித்து அடுத்த பதிவில் காண்போம்) குடுமிநாதர்கோயிலுக்குள் சென்று மலையின் கிழக்குச்சரிவில் வெட்டப்பட்டுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றோம்.

குடுமியான்மலை

வாயிலோன்சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். இக்குடைவரையிலுள்ள ஈசனுக்கு திருமூலட்டானத்து எம்பெருமான் என்று பெயர். இக்குடைவரை மேலைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்குடைவரை ஒரு கருவறையும், முன்மண்டபமும் கொண்டுள்ளது. இங்குள்ள வாயில் காவலர் உருவங்கள் மிகவும் எழிலார்ந்தவை. இங்குள்ள தூண்களில் கி.பி.எட்டாம்நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையன் மாறனின் கல்வெட்டு உள்ளது.

தேவதூதர்கள்வாயில்காவலர் சிலை ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையை ஒரு தூணில் சாய்ந்து ஒயிலாக நிற்கிறார். மிகவும் அழகாகயிருந்தது. சிவலிங்கம் இருக்கும் கருவறையின் வாசலில் படிபோல செதுக்கப்பட்டுள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். கருவறை வாசல் முகப்பில் மேலே தேவதூதர்கள் பறந்து வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள் மிகவும் அழகாக வெட்டப்பட்டுள்ளது. அதிலும் கல்வெட்டுகள் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

பிள்ளையார்வாயில்காப்போன் சிலைக்கு இடதுபுறம் ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

குடைவரையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். குடைவரைக்கு இடதுபுறம் மலையில் ஒரு பெரிய பிள்ளையார் சிலையும் அதனருகில் இசைக்கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏழுபத்திகளில் சமஸ்கிருதக்கல்வெட்டு உள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். இதைக் குறித்து இசைப்பேராசிரியர் ராமநாதன் போன்றோர் எழுதியிருப்பதையும் குறிப்பிட்டார். இங்குள்ள இசைக்கல்வெட்டுகள் மிகவும் புகழ் பெற்றவை. ஏழுசுவரங்களையும், ஏகப்பட்ட ராகங்களையும் இக்கல்வெட்டில் அந்தக்காலத்தே பதிவு செய்திருக்கிறார்கள்.

(பெரிய தேன்கூடு இருந்ததால் கலைந்துவிடும் அபாயம் கருதி கூட்டமாக மிக அருகில் செல்லவில்லை)

இசைக்கல்வெட்டு உள்ள மண்டபம்

மலைமீது மலைப்பாறையில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் சிலைகளுக்கு மத்தியில் சிவன் உமையுடன் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது போல சிலை வெட்டப்பட்டிருக்கிறதைப் பார்த்தோம். மலைமீது வரிசையாக அச்சிற்பங்களைப் பார்த்ததும் அக்காலச் சிற்பிகளை எண்ணி வியப்பாகயிருக்கிறது. இந்த சிற்பங்களின் படத்தை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் சகோதரன் அனுப்பியிருந்தான். பதில் மின்னஞ்சலாக கழுகுமலை-சங்கரன்கோயில் பசுமைநடைப் பயண நிழற்படங்களுடன் டிசம்பர் மாதத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை பயணம் நிகழவுள்ள தகவலையும் அனுப்பினேன். படங்களையும் பதிவையும் வாசித்து இம்முறைப் வரலாற்றுப் பயணத்திற்கு மிக ஆர்வமுடன் கலந்துகொண்டான். (சகோதரன் அனுப்பிய நிழற்படத்தை எடுத்த முகமறியாத அந்தக் கலைஞனுக்கு நன்றி) சிற்பங்களின் அழகைக் கண்டுவிட்டு சித்திரங்களின் அழகைக் காண சித்தண்ணவாசல் சென்றோம்.